உடல் நலம் பேணல்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்த முள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே.
ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்
நாளும் நாளும் பண்டிதர்கை
நாடி பார்க்க வேண்டாமே.
கூழையே நீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி அப்பா!
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்
தினமும் பாயில் விழுந்திடுவாய்.
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்தபின் உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா!
நூறு வயதும் தரும் அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே
வையம் புகழவாழ்வாயே.
பாடல் விளக்கம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், இக்கவிதையில் உடலுக்கு நன்மை தருகின்ற வழிகளையும், தனிமனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறைகளையும் குறிப்பிட்டுச் செல்கின்றார்.
எவ்விதமான நோயும் தாக்காதவாறு உடலை உறுதியாக வைத்துக் கொள்பவர்களே இந்த உலகில் நிலையான இன்பத்தை அடைகின்றனர்.வசதி மிக்க இடங்களும், செல்வச் செழிப்பும் கொண்ட ஒருவன் நோயாளியாக இருப்பின் அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.நோய்கள் நம்மை அணுகாது இருக்க வேண்டுமாயின், நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.நம்மைச் சுற்றியுள்ள இடத்தை அனுதினமும் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகினால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.கதிரவன் உதிக்கின்ற அதிகாலையிலும், கதிரவன் மறைகின்ற மாலைப் பொழுதிலும் தூய்மையான காற்று நிரம்பி இருக்கும். அச்சமயங்களில் உடற்பயிற்சி செய்தால் நம் உடலுக்கு நன்மை விளையும். நோய்கள் நம்மை நெருங்காது.வாழ்வில் எத்தகைய உயரத்தில் இருந்தாலும், அரசனாகவே வாழ்ந்தாலும், அவரவர் வேலையை அவரவரே செய்யப் பழகிக் கொண்டால், மருத்துவரின் உதவியை நாம் நாட வேண்டிய அவசியம் இருக்காது.எத்தகைய உணவாக இருந்தாலும் குளித்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இரவில் எவ்வித சலனமும் இன்றி நன்றாக உறங்க வேண்டும்.மனம் விரும்புகின்றதே என்று எண்ணி, உணவுகளை வரைமுறையின்றி உண்ணுதல் கூடாது. அப்படி உண்டால் நோய்கள் தானாகவே நம்மை வந்தடையும்.தூய்மையான காற்றும், தூய்மையான நீரும், நன்கு பசித்த பின் உண்ணுகின்ற உணவும் நோய்களை விரட்டிவிடும். நூறு வயது வரை நோயின்றி வாழ்கின்ற வரத்தையும் தரும்.உடலுக்கு நன்மை தருகின்ற வழிகள் எதுவோ அவற்றை முறையாக கடைபிடித்தால் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்துடன் இந்த உலகம் புகழ வாழலாம்.என்று கவிமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.