ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

குகப்படலம் - கம்பராமாயணம்

 

கம்பராமாயணம்

அயோத்தியா காண்டம் - குகப்படலம்

இராமனது வரலாற்றைக் கூறும் கம்பராமாயணம் எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு வழி நூலாக இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர்.

கம்பராமாயணத்தின் குகப்படலம் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 குகப்படலம்

வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு

நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,

தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,

காயும் வில்லினன், கல் திரள் தோளினான். 1

விளக்கம்

இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.

துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்-

அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான்,

நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்

இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். 2

விளக்கம்

அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.

கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை

பம்பை பம்பு படையினன், பல்லவத்து

அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள்

தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். 3

விளக்கம்

ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.

காழம் இட்ட குறங்கினன், கங்கையின்

ஆழம் இட்ட நெடுமையினான், அரை

தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்

சூழ விட்ட தொடு புலி வாலினான். 4

விளக்கம்

காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.

பல் தொடுத்தன்ன பல் சூழ் கவடியன்,

கல் தொடுத்தன்ன போலும் கழலினான்,

அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்

நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். 5

விளக்கம்

பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.

பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி

வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,

கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 6

விளக்கம்

பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.

கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,

நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,

பிச்சாரம் அன்ன பேச்சினன், இந்திரன்

வச்சிராயுதம் போலும் மருங்கினான். 7

விளக்கம்

தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.

ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்

நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,

சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,

கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 8

விளக்கம்

விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.

சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்

மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,

ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், -

இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 9

விளக்கம்

சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை

வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,

அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,

நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 10

விளக்கம்

பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ

ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;

நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான். 11

விளக்கம்

வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

'நிற்றி ஈண்டு' என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,

'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்

சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;

எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்' என்றான். 12

விளக்கம்

இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

அண்ணலும் விரும்பி, 'என்பால் அழைத்தி நீ அவனை' என்ன,

பண்ணவன், 'வருக' என்ன, பரிவினன் விரைவில் புக்கான்;

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி

மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து நின்றான். 13

விளக்கம்

இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த

அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்

திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்

விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14

விளக்கம்

“இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?

பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்

உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான். 15

விளக்கம்

“மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், 'யாம்

இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்

பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில்

தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்' என்றான். 16

விளக்கம்

ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான்,

பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை

ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித்

தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை' என்றான். 17

விளக்கம்

இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்;

சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, 'தீராக்

காதலன் ஆகும்' என்று, கருணையின் மலர்ந்த கண்ணன்,

'யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு' என்றான். 18

விளக்கம்

மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.

அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன

துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி,

வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி,

இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். 19

விளக்கம்

இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

'திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி' என்ன,

பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி,

இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், 'என்னே!

பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்' என்னா. 20

விளக்கம்

“மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

விரி இருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல் நின்று,

ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும்

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து, அருள்புரிந்து வீந்த

செரு வலி வீரன் என்னச் செங் கதிர்ச் செல்வன் சென்றான். 21

விளக்கம்

இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல்,

வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்

மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக்

காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். 22

விளக்கம்

         மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,

வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்

தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,

அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். 23

விளக்கம்

யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்

மறக்குமா நினையல் அம்மா!- வரம்பு இல தோற்றும் மாக்கள்

இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள்,

பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன்-பிறவா வெய்யோன். 24

விளக்கம்

உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்

வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர்

அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய

வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 25

விளக்கம்

சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்

தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,

ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, 'ஐய!

கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்' என்றான். 26

விளக்கம்

பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான்,

ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான்,

காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத்

தேவியொடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: 27

விளக்கம்

இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.

'பொய்ம் முறை இலரால்; எம் புகல் இடம் வனமேயால்;

கொய்ம் முறை உறு தாராய்! குறைவிலெம்; வலியேமால்;

செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை

இம் முறை உறவு என்னா இனிது இரு நெடிது, எம் ஊர்; 28

விளக்கம்

“ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”

'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்

ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்

கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?

நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; 29

விளக்கம்

“எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”

'தோல் உள, துகில்போலும்; சுவை உள; தொடர் மஞ்சம்

போல் உள பரண்; வைகும் புரை உள; கடிது ஓடும்

கால் உள; சிலை பூணும் கை உள; கலி வானின்-

மேல் உள பொருளேனும், விரைவொடு கொணர்வேமால்; 30

விளக்கம்

உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.

'ஐ-இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை

செய்குநர், சிலை வேடர்-தேவரின் வலியாரால்;

உய்குதும் அடியேம்-எம் குடிலிடை, ஒரு நாள், நீ

வைகுதி எனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது' என்றான். 31

விளக்கம்

“எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

அண்ணலும் அது கேளா, அகம் நிறை அருள் மிக்கான்,

வெண் நிற நகைசெய்தான்; 'வீர! நின்னுழை யாம் அப்

புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று

எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது' என்றான். 32

விளக்கம்

குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்;

தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான்

அந்தணர்தமை எல்லாம், 'அருளுதிர் விடை' என்னா,

இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33

விளக்கம்

இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.

'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,

முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;

கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்

இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

விளக்கம்

ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,

சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;

தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,

காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35

விளக்கம்

பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.

சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை,

காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின்

சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்,

ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36

விளக்கம்

சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி,

'சித்திர கூடத்தின் செல் நெறி பகர்' என்ன,

பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா,

'உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது' என்றான். 37

விளக்கம்

கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.

'நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல்,

நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;

உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்

பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்; 38

விளக்கம்

“நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.

'தீயன வகை யாவும் திசை திசை செல நூறி,

தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்;

மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும்

ஏயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; 39

விளக்கம்

“தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.

'கல்லுவென் மலை; மேலும் கவலையின் முதல் யாவும்;

செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்;

வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்-

மல்லினும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்; 40

விளக்கம்

மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.

திரு உளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு,

ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார்

மருவலர் எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்;

பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்' என்றான். 41

விளக்கம்

“ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;

'என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்

நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.' 42

விளக்கம்

குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.

'துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43

விளக்கம்

“துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.

'படர் உற உளன், உம்பி, கான் உறை பகல் எல்லாம்;

இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ;

சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்;

வட திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். 44

விளக்கம்

ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”

'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி;

இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரைசெய்யாய்;

உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ?

என் கிளை இது கா, என் ஏவலின் இனிது' என்றான். 45      

விளக்கம்

உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான்,

பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்;

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்

திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். 46

விளக்கம்

இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக