ஞாயிறு, 28 மார்ச், 2021

எட்டுத்தொகை நூல்கள்

 

எட்டுத்தொகை

சங்க இலக்கியங்களுள் ஒன்று எட்டுத்தொகை. இது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் எழுதியவரின் பெயர் காணப்படவில்லை. அகம், புறம் என இந்நூல்களைப் பகுக்கின்றனர். அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள்

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.ஐங்குறுநூறு

4.பதிற்றுப்பத்து

5.பரிபாடல்

6.கலித்தொகை

7.அகநானூறு

8.புறநானூறு

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை:

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.


புறப்பொருள் பற்றியவை

புறநானூறு, பதிற்றுப்பத்து.


அகமும் புறமும் கலந்து வருவது

பரிபாடல்.


நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. இதைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணை புரிகின்றன.


குறுந்தொகை
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.  205 புலவர்களால் பாடப்பெற்றது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை  எழுதியுள்ளார்கள். 4 அடிச் சிற்றெல்லையும் 8 அடிப் பேரெல்லையும் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.  


ஐங்குறுநூறு
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந்நூல். இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந்நூல் ஐங்குறுநூறு என்னும் பெயர் பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரவேந்தன். இந்நூலில் ஐந்து திணைகளும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

மருதம்     - ஓரம்போகி

நெய்தல்  - அம்மூவனார்

குறிஞ்சி  - கபிலர்

பாலை     - ஓதலாந்தையார்

முல்லை  - பேயனார்

கலித்தொகை

150 கலிப்பாக்களை கொண்டது. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.
        பாலை     -     பெருங்கடுங்கோ          - 35 பாடல்கள்
        குறிஞ்சி  -     கபிலர்                               - 29 பாடல்கள்
        மருதம்    -     மருதனிளநாகனார்      - 35 பாடல்கள்
        முல்லை  -     சோழன் நலுருத்திரன் - 17 பாடல்கள்
        நெய்தல் -     நல்லத்துவனார்              - 33 பாடல்கள்

இந் நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். பா வகையால் பெயர்பெற்ற இந்நூலில் அமைந்துள்ள பல பாடல்கள் நாடக அமைப்புடன் காணப்படுகின்றன.

 அகநானூறு
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு.  பாடிய புலவர்கள் எண்ணிக்கை 146. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். 13 அடி முதல் 31 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பகுப்புகளைக் கொண்டுள்ளது.

  • களிற்றியானை நிரை - 1 முதல் 120வரை
  • மணிமிடைப்பவளம்    - 121 முதல் 300 வரை
  • நித்திலக்கோவை         - 301 முதல் 400 வரை

அகநானூற்றின் பாடல்களைத் தொகுத்த உருத்திரசன்மன் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றியுள்ளார். அவை,

  • 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணாக வரும் பாடல்கள் பாலைத் திணைக்குரியன.
  • 4, 14, 24 என நான்கு எனும் எண்ணுடன் முடிபவை முல்லைத்திணைக்குரியவை.
  • 6, 16, 36 என ஆறு எனும் எண்ணில் முடிவன மருதத்திணைக்குரியவை.
  • 2, 8 என இரண்டையும் எட்டையும் இறுதியாக முடிவன குறிஞ்சித்திணைக்குரியவை.
  • 10, 20 என முடிபவை நெய்தல் திணைக்குரியவை என்றும் வகுத்துள்ளார்.

பதிற்றுப்பத்து
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.

  • 2ஆம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
  • 3ஆம் பத்து – பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது
  • 4ஆம் பத்து – களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
  • 5ஆம் பத்து – கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது
  • 6ஆம்பத்து – ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் பாடியது
  • 7ஆம் பத்து – செல்வக்கடுங்குா வாழியாதனைக் கபிலர் பாடியது.
  • 8ஆம் பத்து - தகடூர் எறிந்த பெருஞ்சுரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
  • 9ஆம் பத்து – இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

புறநானூறு
புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார். 4 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளது. 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ மன்னர்களையும், 18 சேர மன்னர்களையும் பாடுகின்றது.

பரிபாடல்
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரைஎழுதியுள்ளார். 25 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூலில் திருமால், செவ்வேள் பெருமைகளும், வையை ஆற்றின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.


 

குறுந்தொகை - ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன, ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,

 

குறுந்தொகை

1

ஆசிரியர் - மாமிலாடன்

திணை – மருதம்

துறை

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

துறைவிளக்கம்

“தலைவனின் பிரிவை தலைவி ஆற்ற மாட்டாள்” என்று வருத்தம் கொண்ட தோழிக்குத் தலைவி, “மாலைக்காலமும், தனிமையும் தலைவன் சென்ற நாட்டிலும் இருக்கும். அதனால் விரைவில் அவர் வந்துவிடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறுகின்றாள்.

கூற்று – தலைவி

பாடல்

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து

எருவின் நுண் தாது குடைவன ஆடி

இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும்  

புன்கண் மாலையும் புலம்பும்

இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே

விளக்கம்

ஆம்பல் பூவின் இதழ் போன்று கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவிகள், முற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்கின்றன. தெருவில் உள்ள காய்ந்த சாணத்தின் நுண்ணிய துகளில் குடைந்து விளையாடுகின்றன. வீட்டுக் கூரையில் தன் குஞ்சுகளுடன் தங்கி இனிதாகத் துயில்கின்றன. காலத்தாலும், இடத்தாலும் ஏற்படும் பிரிவுத் துயரம் மனையில் வாழும் குருவிகளுக்கு இல்லாமையை உணர்ந்து தலைவன் தன்னைக் காண விரைவில் வருவான் என்று நம்பிக்கைக் கொள்கின்றாள் தலைவி. அதனால், “புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும் அவர் சென்ற இடத்திலும் இருக்குமல்லவா தோழி” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றாள் தலைவி.



2

ஆசிரியர் - மதுரை கதக்கண்ணன்

திணை – குறிஞ்சி

துறை

இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமட்குச் சொல்லியது.

துறை விளக்கம்

இரவு நேரத்தில் பல துன்பங்களைக் கடந்து தலைவன் தலைவியைக் காண வருவதால், அவன் காதலை ஏற்குமாறு தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்.

பாடல்

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்

சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி

தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடு நாணலமே தோழி நாமே

விளக்கம்

ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய உயர்ந்த மலையில் உள்ள பெரிய களிறானது, வலிமையுள்ள புலியைத் தாக்கி, தன் வலிமையை இழக்கும்.  அதனால், யாரும் எளிதில் அடையமுடியாத அந்த மலைச் சரிவில் நள்ளிரவில் உன்னைக் காணத் தலைவன் வருவான். அங்ஙனம் அவன் வருவதால் தோன்றும் குற்றத்திற்கு நாணம் கொண்டு அவன் காதலை மறுத்தல் அழகன்று என்று தலைவியிடம் தோழி கூறுகின்றாள்.


3

ஆசிரியர் – பரணர்

திணை – மருதம்

துறை  

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயில் மறுத்ததூஉம் ஆம்.

துறை விளக்கம்

தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாள். அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றினர் என்பதைத் தோழி, தலைவன் சிறைப்புறத்திலிருக்கும்பொழுது புலப்படுத்தி, விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.

பாடல்

பா அடி உரல பகு வாய் வள்ளை

ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப

அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய           

நல் இயல் பாவை அன்ன,

மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே

விளக்கம்

அச்சத்தைத் தருகின்ற கொல்லி மலை சேரனுக்கு உரியது. அம்மலையின் மேற்குப்புறத்தில் உருவாக்கப்பட்ட பெண் தெய்வமான கொல்லிப் பாவையைப் போன்று மெல்லிய இயல்புடையவள் தலைவி. அவள் பரந்த அடிப்பகுதியை உடைய உரலில், உலக்கையை ஓச்சி வள்ளைப் பாட்டைப் பாடினாள். அப்பாடலைக் கேட்டவர்கள் தலைவி உன் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, அலர் தூற்றத் தொடங்கினர். அதனால் தலைவியை மணந்து கொள்ள விரைவில் வர வேண்டும் என்று தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது அவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.



பதிற்றுப்பத்து - விழவு வீற்றிருந்த, ஓடாப் பூட்கை மறவர்

 

பதிற்றுப்பத்து

1

திணை – தும்பை

தங்கள் வலிமையையே பொருளாகக் கொண்டு இரு பெரும் அரசர்களும் தும்பைப்பூவைச் சூடிப் போர் புரிவர். இதனை விளக்குவது தும்பைத்திணையாகும்.

துறை - ஒள் வாள் அமலை

வெற்றி பெற்ற மன்னன், குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூர்மையான வாள்களைச் சுழற்றிக்கொண்டு வீரர்களோடு கூடி ஆடுவது.

வண்ணம் - ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும். அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.

தூக்கு - செந்தூக்கு

தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.

பெயர் - வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

பகை வேந்தர்கள் தங்களுடன் போர் செய்ய வந்த மன்னனைக் கண்டு அஞ்சி தங்கள் மெய்யை மறந்து செயல்படுவதை விளக்குவது வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சியாகும்.

பாடியவர் - காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

தெருவிலும் போர்க்களத்திலும் ஆடும் கோட்பாடு கொண்டவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

பாடல்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,

கோடியர் முழவின் முன்னர், ஆடல்

வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!

வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,

இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்,   

மடம் பெருமையின் உடன்று மேல் வந்த

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.     

விளக்கம்

தெருவில் கோடியர் என்னும் யாழிசைக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுபவன் மட்டும் அல்லன், சேரலாதன். போர்க்களத்தில் வெற்றி முரசம் முழங்க ஆடுபவன். வெற்றி வாளை உயர்த்திக்கொண்டு ஆடுபவன்.  கோட்டைகளைத் தாக்கி வென்ற மகிழ்வில் உழிஞைப் பூவையும், மின்னும் போர்-அணிகலன்களையும் சூடிக்கொண்டு ஆடுபவன். பகை வேந்தர்கள் இறந்து விழுகின்ற போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் ஆதலால், இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆயினான். அவன் தலையில் அணிந்திருக்கும் பனம்பூ மாலை வாழ்க.



2

துறை - விறலி ஆற்றுப்படை

வள்ளலிடம் பரிசு பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப்படை ஆகும். விறலி என்பவள் மன்னன் புகழ் பாடுபவள். யாழிசை மீட்டுவதில் வல்லவள். தம்முடன் இசைக்கருவிகளைக் கொண்டு செல்பவள்.

வண்ணம் - ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும். அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.

தூக்கு – செந்தூக்கு

தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.

பெயர் - சில் வளை விறலி

ஆடல், பாடல் கலைகளுக்குரிய இளம் பருவத்தைச் சேர்ந்த விறலி என்ற பொருள்பட, இப்பாட்டிற்குச் சில்வளை விறலி என்ற பெயர் வழங்குவதாயிற்று.

பாடியவர் - காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.

 

பாடல்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,

இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,

குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,

துணங்கை ஆடிய வலம் படு கோமான்:

மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்  

செல்லாமோதில்- சில் வளை விறலி!-

பாணர் கையது பணி தொடை நரம்பின்

விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,

குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;

இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,   

வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,

ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,

ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,

இரவலர் புன்கண் அஞ்சும்

புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?          

விளக்கம்

  • சேரலாதன் போர்க்களத்தில் இருக்கிறான். காயம் பட்டோர் குருதி நடுங்க வைக்கும் போர்க்களம் அது. தலையில் பனம்பூ மாலை அணிந்திருக்கிறான். காலில் உயர்ந்த வீரக்கழல் அணிந்திருக்கிறான். புறமுதுகிடாத கோட்பாட்டினை உடைய பகைவீரர்களின் வலிமையைத் தகர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறான்.  
  • நம்முடன் சேர்ந்து துணங்கை ஆடிய கோமகன் அவன். மென்மையான தளிர் போன்ற சிறிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து போர்க்களத்தில் அவனைக் காணச் செல்லலாமா, விறலி! நம் கையிலுள்ள வளையல்கள் சில ஒலிக்கும்படிச் செல்லலாமா, விறலி!
  • பாணர் கையிலுள்ள பேரியாழில் நம் வறுமை தோன்றப் பாலைப்பண் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி! தோற்றவர் மேல் வாள் வீசாத இவனது தழிஞ்சிப் போரைப் பாராட்டிப் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி!
  • சேரலாதனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் (இளந்துணைப் புதல்வர்). அவன் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள். அவள் அடக்கமே உருவானவள். பரந்த அறிவால் புகழ் பெற்றவள். அவள் ஊடல் கொள்ளும் பார்வையைப் பொருட்படுத்தாமல், தன்னை நாடி வந்தவரின் துன்பத்தைப் போக்குவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன். அவனைக் கண்டு வருவதற்குச் செல்லலாமா, விறலி!  

என்றவாறு மன்னன் புகழ் பாடி விறலியை ஆற்றுப்படுத்துகின்றமையாக இப்பாடல் அமைகின்றது.



 

 

புதன், 24 மார்ச், 2021

அகநானூறு - உழுந்து தலைப்பெய்த

 

அகநானூறு

திணை - மருதம்

துறை - வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉம் ஆம்)

கூற்று - தலைவன்

ஆசிரியர் - நல்லாவூர் கிழார் 

பாடல்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;     

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,     

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி   

பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,

வதுவை நல் மணம் கழிந்த பின்றை,

கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,

''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர,

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  

கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,

அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என,           

இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,

செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,

அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,

ஒய்யென இறைஞ்சியோளே மாவின்

மடம் கொள் மதைஇய நோக்கின்,       

ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

பாடல் விளக்கம்

தலைவனுடன் ஊடல் கொள்கிறாள் தலைவி. அவளின் கோபத்தை நீக்குவதற்காகப் பலரைத் தூது அனுப்புகின்றான் தலைவன். அவர்களும் தலைவனுக்கு ஆதரவாகப் பேசி, தலைவியிடம் தலைவனை ஏற்குமாறு வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுகோளை மறுக்கின்றாள் தலைவி. இறுதியில் தலைவனே நேரில் சென்று, சிறிது நாட்களுக்கு முன் தங்களுக்குள் நிகழ்ந்த இனிய நிகழ்வைக் கூறி அவள் மனதை மாற்ற முயற்சிக்கின்றான்.

இப்பாடல் சங்கத் தமிழர்களின் திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

திருமண விருந்தும், திருமண நிகழ்வும்

தீய கோள்களின் தொடர்பு நீங்கிய ரோகிணி என்னும் நாளில், அழகிய காலை நேரத்தில், உளுந்த வடையுடன் விருந்துணவு படைக்கப்பட்டது. பந்தற்கால் நட்டுப் பந்தல் போடப்பட்டது. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மாலைகள் தொங்கவிடப்பட்டன.

மணமகள் அழைப்பு

நிறைகுடம் கொண்ட பெண்டிர் மணப்பெண்ணுக்கு முன்னே சென்றனர். புதுப்பானை ஏந்திய பெண்டிர் மணப்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்தனர். பொது வகையான ஆரவாரத்துடன் அவர்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.

 மகளிர் வாழ்த்து

மகனைப் பெற்ற வரிவயிறு கொண்டவரும், தாலி அணிந்தவருமான மகளிர் நான்கு பேர் கூடிநின்று, ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்தி வைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றெல்லாம் வாழ்த்தினர். 


தனியறை புகுதல்

’கல்’ என்ற சிரிப்பொலியுடன் மகளிர் சிலர் புகுந்து, “மக்களுடன் பெரிய இல்லக் கிழத்தி ஆவாயாக என்று பெற்றவர்கள் கூறினார்கள்” என்று கூறிவிட்டு என்னிடம் அவளைத் தந்தனர். நாங்கள் இருவரும் தனித்திருந்தோம். அவ்வேளையில், புத்தாடையை வளைத்துத் தன் உடம்பை மூடிக்கொண்டு அவள் ஒடுங்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு பக்கம் அணைத்தேன். பின் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தைத் திறந்தேன். அவள் அஞ்சினாள். பெருமூச்சு விட்டாள்.

இருவரும் மகிழ்தல்

“உன் நெஞ்சில் இருப்பதை ஒளிக்காமல் சொல்” என்றேன். அவள் அமர்ந்து கொண்டே இனிமையாகப் புன்னகை பூத்தாள். நான் பின்னும் அதே கேள்வியைக் கேட்டேன். பெண்மானைப் போன்ற மருண்ட பார்வையும், சீவி முடித்து ஒடுங்கிக் கிடக்கும் கூந்தலும், மாந்தளிர் போன்ற மேனியும் கொண்ட அவள், நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியுடன் அவள் காதுகளில் இருந்த செவ்விய குழையணி ஆட, விரைந்து தலைகுனிந்தாள். திடீரென என் காலில் விழுந்து வணங்கினாள். இருவரும் இன்பத்தில் திளைத்தோம்.

நன்றி

http://vaiyan.blogspot.com/2016/05/agananuru-86.html

 

திங்கள், 22 மார்ச், 2021

கலித்தொகை - 11 - அரிதாய அறன் எய்தி


கலித்தொகை

பாடியவர் – பெருங்கடுங்கோ

திணை - பாலை


பாடல் 

'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,

பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்

வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,        

கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள்,

துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே

 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,

துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,       

அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை

மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே

 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,

துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் 

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே என

ஆங்கு

 இனை நலம் உடைய கானம் சென்றோர்

புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.

பாடல் விளக்கம்

தலைவி தன் தோழியிடம், “தலைவன் பொருளீட்டச் சென்றார். பொருள் ஈட்டிக் கொண்டு வந்து அறம் செய்து இன்பம் துய்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அற ஒழுக்கத்தை முழுவதும் ஏற்றுத் தவறாமல் நடப்பது மிக அரிது. அவ் ஓழுக்கத்துடன் வாழ்ந்து, அருள் பெறாமல் வாடுபவர்களுக்கு உதவுதல் வேண்டும். பகைதான் எல்லாவற்றிலும் பெரியது. பகைவரை வென்று பிறரைப் பேணாதவர்களை அழித்தல் வேண்டும். இப்படி இல்லாதவர்க்கு அளிக்கும் அறம், எதிரியை அழிக்கும் பொருள், இனியவரைத் துய்க்கும் இன்பம் ஆகிய மூன்றையும் செல்வமாகிய பொருள் தரும் என்று கூறிவிட்டு என்னைப் பிரிந்து சென்றார். அவர் வரவேண்டிய நாள் நெருங்குகின்றது. அவர் வருவதை அறிவிக்கும் அறிகுறியாக பல்லி சப்தமிடுகின்றது. என் இடக்கண் துடிக்கின்றது” என்று கூறுகின்றாள்.  

    தலைவன் சென்ற பாலைநிலம் தாங்கமுடியாத அளவுக்கு சுடும் காடு. அந்தக் காட்டில் யானைக்கன்று, ஆர்வ மிகுதியால்மிகக் குறைவாக இருந்த நீரைக் கலக்கிவிடும். வேட்கை மிகுந்த களிறு அதற்கு ஒருபோதும் கலங்காமல், தன் வேட்கையை முதலில் தீர்க்க முயலாமல், பிடியானைக்கும், தன் கன்றுக்கும் நீர் ஊட்டிவிட்டு, எஞ்சிக் கிடக்கும் நீரை  உண்ணும் காடு அது என்று கூறியுள்ளார்.


அந்தக் காட்டில் இன்பம் இல்லை. இலைகள் காய்ந்து உதிர்ந்துபோய், பட்ட மரங்கள் நிற்பதற்கு நிழல் தராது துன்புறுத்தும் தன்மையது அக்காடு என்றார்.     

அக்காட்டில் வெம்மைத் தாங்காது ஆற்றியிருக்கும் தன் பெண்-புறாவை ஆண்-புறா தன் மென்மையான சிறகுகளால் விசிறிக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

                                            
   
மலைமேல் வளரும் மூங்கில்கள் வாடி வறண்டு போகும் அளவிற்கு வெயில் கொளுத்தும். அந்தக் காட்டில் நிழல் இல்லாமல் வருந்தும் பெண்மானுக்கு அதன் ஆண்மான் தன் உடம்பு நிழலைத் தந்து காப்பாற்றும் என்றும் கூறினார்.
                                      
                                         


இப்படிப்பட்ட காட்டு வழியில் அவர் சென்றார் எனினும், யானையும், புறாவும், மானும் தத்தம் காதலியரை அன்புடன் பேணுவதைக் காண்கின்ற நம் தலைவன், நாம் புனைந்திருக்கும் நல்லணிகளை இழந்து நாம் வாடும்படி விடமாட்டார். அதோ! வீட்டினுள் பல்லியும் நான் கூறுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கின்றது. என் இடக்கண் துடிக்கிறது. இவை இரண்டும் நல்ல நிமித்தங்கள் (சகுனங்கள்). ஆகவே தலைவன் பொருளீட்டிக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணி மகிழ்வோம். அதுவரை நாம் ஆற்றியிருப்போம்” என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

 


 


சனி, 20 மார்ச், 2021

பரிபாடல் - செவ்வேள்

 

பரிபாடல்

செவ்வேள் – கடுவன் இளவெயினனார்

பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,

சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,

தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,

நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,

வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 

கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை

மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,

நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,

குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,

மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை!        

பாடல் விளக்கம்

சூரபத்மனை அழிப்பதற்காக முருகப் பெருமான் பிணிமுகம் என்ற யானையின் மீதேறிப் போருக்குச் சென்றான். போரில் அவன் எறிந்த வேல் கடலில் புகுந்து கடற் பாறைகளைத் தூள் தூளாக்கியது. கடலை வற்றச் செய்தது. அவ்வேல் தான் சென்ற  வேகத்தில் தீயையும் ஒலியையும் எழுப்பியது. தேவர்கள் முதலாக அனைவருக்கும் துன்பம் கொடுத்து வந்த, கடலின் நடுவே மாமரமாகி நின்ற சூரபத்மனை வேருடன் வெட்டி வீழ்த்தியது. வெற்றி அவருடையானது. அதனால், புண்ணியம் செய்தவர், பாவம் செய்தவர் என்னும் இருவகையினரில் புண்ணியம் செய்தவர் என்ற பெயரைப் பெயரளவில் மட்டுமே பெற்று, பிற உயிரினங்களைக் கொன்று உண்பதையே வழக்கமாகக் கொண்டு, மாயம் செய்வதில் வல்லவர்களான அவுணர்களின் குலத்தை அவ்வேல் அழித்தது. அவ்வேல் நாவலந்தீவின் வடபகுதியில் உள்ள கிரெளஞ்சம் என்ற பறவையின் பெயரைப் பெற்ற மலையினைத் துளைத்து வழியே உண்டாக்கியது. அத்தகைய சிறப்புடைய வேலினைக் கையில் ஏந்திய வீரன் முருகப்பெருமான் ஆவான்.

மரமாகி நின்ற சூரபன்மாவை அழிக்கும் முருகன்


ஐங்குறுநூறு - கிள்ளைப்பத்து

 

ஐங்குறுநூறு

கிள்ளைப்பத்து: (குறிஞ்சித்திணை)

   கிள்ளைப் பத்தின் பத்துப் பாடல்களும் குறிஞ்சித் திணையில் அமைந்தவை. குறிஞ்சித்திணையின் கருப்பொருள்களுள் ஒன்று கிளி. கிளியின் செயல்களால் அகமகிழ்ந்த தலைவனின் செயல்களை இப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளமையால் கிள்ளைப் பத்து எனப் பெயர் பெற்றது. 

1

கூற்று : தலைவன்

தலைவி தன் தோழிகளோடு சோலையில் விளையாடினாள். அப்பொழுது அங்கு வந்த தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொண்டான். பின்னர் ஒரு நாள் தன்னுடைய காதல் தலைவியைத் தினைப்புனத்தில் சந்தித்தான்.

பாடல்:

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. 

பொருள் விளக்கம்:

தலைவி கிளிகளை விரட்ட தினைப்புனக் காவலுக்கு வந்தமையால் கிளிகள் நூறாயிரம் (வெள்ளம்) ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்திற்கு வாழட்டும். கிளிகள் விளைந்திருக்கும் தினையை உண்ண வருவதால்தானே தலைவி கிளிகளை ஓட்டுவதற்காகத் தினைப்புனம் காவலுக்கு வருகின்றாள். அதனால் என்னால் தலைவியைக் கண்டு காதல் கொள்ள முடிகின்றது. எனவே இக்கிளிகளை வாழ்க என்று வாழ்த்துகின்றான் தலைவன்

வெள்ளம் - வெள்ளம் என்பது நூறாயிரம் என்னும் பேரெண் ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களில் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன பேரெண்களைக் குறிக்கின்றன. இப்பாடலிலும் வெள்ளம் என்பது நூறாயிரம் என்னும் பேரெண்ணைக் குறிக்கிறது.

2

கூற்று : தோழி

தோழி இரவுக்குறி விலக்குவதற்காகத் தலைவனிடம் கூறியது. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் வழிகளில் ஏற்படும் துன்பங்களை விளக்கிக் கூறி இரவில் வராதே என்றல். இதன் குறிப்பாகத் தலைவியை விரைவில் திருமணம் புரிந்துகொள்ள தோழி வற்புறுத்துகிறாள்.

பாடல்

சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்

பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்

சோலைச் சிறுகிளி உன்னு நாட

அரிருள் பெருகின வாரல்

கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே.   

பொருள் விளக்கம் :

தலைவியை விரும்பும் தலைவனிடம் தோழி “மலைச்சாரலில் பருத்த கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது. தலைவியாகிய கொடிச்சி அவற்றைத் தின்ன வரும் கிளிகளை ஓட்டுகிறாள். அவள் தலைவனை விரும்பும் கண்களோடு கிளிகளை ஓட்டுகிறாள். தலைவி இதே மனநிலையில் எப்பொழுதும் கிளி விரட்டவேண்டும் என்று விரும்பும் தலைவனே! தினை முற்றிய நிலையில் அறுவடை நிகழ்வதால் தலைவி தினைப்புனக் காவலுக்கு வரமாட்டாள். தலைவியைச் சந்திக்கும் பொருட்டு இருள் நிறைந்த இரவில் வரவேண்டாம். மலைச்சாரலில் கொம்புகளை உடைய காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த யானைகளால் துன்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இரவில் வந்து தலைவியைச் சந்திப்பதைத் தவிர்ப்பாயாக” என்று தலைவனிடம் வேண்டினாள்.

 

3

தோழி கூற்று

தலைமகன் கேட்கும் வகையில் தோழி கூறியது

கூற்று விளக்கம் :

தோழி வாயில் மறுக்கவும் தலைமகனின் துயரைக் கண்டு தலைவி வேண்ட, தலைவனுக்கு உணர்த்தும் பொருட்டு தோழி பாடிய பாடல்.

பாடல்:

                     வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்

பைம்புறச் சிறுகிளி கடியும் நாட

பெரிய கூறி நீப்பினும்

பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.  

பொருள் விளக்கம்:

 தினைப்பயிர்களைக் காவல் செய்யும் தலைவி மிகவும் மென்மையான தன்மை உடையவள். தலைவன் கிளிகள் வாழும் நாட்டில் வாழ்பவன். அவன் தன் விருப்பத்தின் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வந்து தலைவியோடு சேர நினைக்கிறான். தலைவியும் தலைவனை ஏற்றுக்கொள்கின்றாள் இதனால் பலரும் தலைவனைத் தவறாகப் பேசினர். தலைவியிடம் தலைவனோடு பேசி மகிழாதே என்று சுற்றத்தினர் தலைவிக்கு உரைத்தனர். உற்றார் உறவினர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளாத தலைவி, தலைவனின் பொய்மையான அன்பில் மகிழ்ந்திருந்தாள். சங்ககால பெண்கள் கணவனின் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

4

கூற்று :தோழி

கூற்று விளக்கம்:

தினைப்பயிர்கள் முற்றியமையால் அறுவடை முடிவுற்றது. இந்நிலையில் தலைவி தினைப்புனம் காவலுக்கு வரவில்லை. ஆனால் தினந்தோறும் தலைவியை பார்த்த தலைவன் மீண்டும் தலைவியைப் பார்ப்பதற்காக வந்துள்ளான். தினைப்பயிர்கள் அறுவடை முடிந்தமையால் கிளிகளே இங்கு வரவேண்டாம் என்று கிளிகளுக்குக் கூறுவதுபோல் தலைவனுக்குக் கூறியது.

பாடல்:

அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி

குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்

இருவை நீள்புனங் கண்டும்

பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.

பொருள் விளக்கம்:

குன்றக்குறவர்கள் தங்கள் விளைநிலங்களில் உள்ள கதிர்களை அறுவடை செய்து விட்டனர். கதிர்களை எடுத்த அடிப்பகுதி மட்டுமே நிலங்களில் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் கிளிகள் வந்து செல்கின்றன. அவற்றைப் பிரிய கிளிகளுக்கு மனம் இல்லை. அறுவடை முடிந்தமையால் தலைவி தினைப்புனம் காவல் காக்க வரமுடியாது. எனினும், அக்கிளிகளைப்போல அவளும் உன்னை விட்டுப் பிரிய மனமில்லாதவளாக இருக்கின்றாள் என்பதைக் குறிப்பால் தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.

5

 

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தலைவன் தலைவியை விட்டுச் சிலகாலம் பிரிந்து சென்றான். மீண்டும் வந்த தலைவனிடம் தோழி கூறியது.

பாடல்:

பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்

மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்

ஐவனச் சிறுகிளி கடியும் நாட

வீங்குவளை நெகிழப் பிரிதல்

யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.

பொருள் விளக்கம் :

தலைவி பின்னிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடையவள். இவள் குறவர் குலத்தில் உள்ள குறமகள். இவள் மென்மையான தினையின் மாவை உண்டு வாழ்பவள். தினைப்புனம் காவலில் உள்ள தலைவிக்கு நன்மை செய்யும் வகையில் தட்டை என்னும் கருவியால் கிளியை விரட்டும் மலை நாட்டு தலைவன் நீ! இவ்வகையில் தலைவிக்கு நல்ல செயல்களைச் செய்து அன்பு காட்டிய நீ, அவள் அணிந்திருந்த கைவளையல்கள் கழன்று விழும்படி தனியே விட்டுவிட்டு பிரிந்து செல்லுதல் முறையாகுமோ? என்று தோழி தலைவனிடம் வினவுகிறாள்.

தட்டை: கிளியை விரட்டும் கருவி மூங்கில் கம்பின் தடியினைப் பிளந்து உருவாக்கிய கருவி. தட்டி ஒலியெழுப்பிக் கிளியை விரட்டும் கருவி ஆதலால் தட்டை என்னும் பெயர் பெற்றது.

தட்டை - இசைக்கருவி


6

கூற்று : தலைவி

கூற்று விளக்கம் :

திருமணத்திற்காகப் பொருள் தேடிப் பிரிந்து சென்றுள்ள தலைவன் குறித்துத் தலைவி தோழியிடம் கூறியது.

பாடல்:

சிறுதினை கொய்த இருவை வெண்கால்

காய்த்த அவரைப் படுகிளி கடியும்

யாண ராகிய நன்மலை நாடன்

புகரின்று நயந்தனன் போலும்

கவரும் தோழிஎன் மாமைக் கவினே.

பொருள் விளக்கம்:

குறவர்கள் முற்றிய தினைக்கதிர்களை அறுவடை செய்துவிட்டனர்.  தினைப்பயிர்களின் அடிப்பாகங்களின் நடுவே விதைக்கப்பட்ட அவரைச் செடிகள் காய்த்துக் காணப்படுகின்றன. இந்தச் செடிகளிலும் கிளிகள் வந்து அமர்ந்து செல்கின்றன. இவ்வாறு எப்பொழுதும் புதிய வருவாயை உடைய வளமான மலைநாட்டின் தலைவன்,  என்னை விரும்பி என் அழகு நலனைக் கவர்ந்து சென்றுவிட்டான். மீண்டும் விரைவில் வந்து என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தோழியிடம் கூறினாள் தலைவி.          

7

கூற்று: தோழி

கூற்று விளக்கம்:

திருமணத்தை விரைவில் முடிக்காமல் காலம் கடத்திய தலைவனுக்குத் தோழி கூறியது.

பாடல்:

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை

தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட

வல்லை மன்ற பொய்த்தல்

வல்லாய் மன்றநீ அல்லது செயலே.

பொருள் விளக்கம்:

உயரமான மலை மேல் வாழும் வருடைமான் குறுகிய கால்களை உடையது. கிளிகள் இம்மான்களைக் கண்டு பயந்து செல்கின்றன. இச்சூழலில் வாழும் மலை நாட்டுத் தலைவனே, நீ பொய் சொல்வதில் மட்டுமே வல்லவன். இப்பொய்க்கு மாறாக எதையும் செய்யும் ஆற்றல் உனக்கில்லை என்று இடித்துரைத்தாள். குறிப்பிட்ட நாளில் திருமணம் புரிந்து கொள்வேன் என்று உறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் மீண்டும் காலம் தாழ்த்துவது நல்லது அல்ல என்று தலைவனிடம் கூறி தலைவியைத் திருமணம் செய்ய  அறிவுறுத்துகின்றாள் தோழி.

8

கூற்று : தலைவன்

கூற்று விளக்கம்:

தலைவி தினைப்புனம் காவலுக்கு வந்துள்ளாள். இச்செய்தியைக் கேட்டு மகிழ்ந்து தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது.

பாடல்:

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து

யாம் எவன் செய்குவம் நெஞ்சே

மெல்லியல் கொடிச்சி காப்பப்

பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.

பொருள் விளக்கம்:

தினைப்பயிர்கள் கதிர்களை விரிக்கத் தொடங்கின, தினைகள் முற்ற ஆரம்பித்தன. கிளிகள் தினைப்பயிர்களை உண்பதற்காகப் பறந்து வந்தன. இதனால் தலைவி கிளி விரட்ட காவலுக்கு வந்தாள். தலைவியின் வரவு தலைவனுக்கு மகிழ்வைத் தந்தது. தலைவியின் வருகைக்குக் காரணமாக அமைந்த கிளிகளுக்கு நன்மை செய்வேன் என்று கூறினான் தலைவன். கிளிகள் செய்த உதவிக்கு எந்த பதிலுதவியும் செய்ய இயலாதே என்று தன் நெஞ்சிடம் கூறி மகிழ்ந்தான்.

9

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தோழி தலைவியின் வீட்டுக்காவல் குறித்த செய்திகளைத் தலைவனுக்குக் கூறியது. தலைவியின் சுற்றத்தினர் தலைவியை இல்லக் காவலில் வைத்தனர். இதனால் தோழி தலைவனைச் சந்தித்து விரைவில் திருமணம் முடிக்கும்படி கூறியது.

பாடல்

கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்

பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்

காவலும் கடியுநர் போல்வர்

மால்வரை நாட வரைந்தனை கொண்மோ.

பொருள் விளக்கம்:

குறமகளாகிய தலைவியின் குரலானது கிளிகளின் குரலைப் போன்றிருந்தது. தலைவி கிளி விரட்டும்போது எழுப்பும் ஓசையைக் கேட்டுக் கூட்டம் கூட்டமாகத் தினையை உண்ணக் கிளிகள் வரும் என்று அஞ்சிய உறவினர்கள், தலைவியைத் தினைப்புனம் காவலில் இருந்து விலக்குவர். எனவே தலைவியைச் சந்திப்பது அரிதாகலின் விரைவில் திருமணம் முடித்துக் கொள்க என்று அறிவுறுத்தினாள் தோழி.

 

10

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தலைவியின் காதல் நிலை உணர்ந்த உறவினர்கள் அவளை வீட்டின்கண் சிறை வைத்தனர். இந்நிலையில் இரவுக்குறி மறுத்தாள் தோழி. இதனால் வெறுப்படைந்த தலைவன் கேட்கும்படித் தோழி கூறியது.

பாடல்:

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய

பூக்கமழ் கூந்தல் கொடிச்சி

நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.

பொருள் விளக்கம்:

“அறம் செய்யும் செங்கோல் அரசனால் மக்களுக்கு நன்மை விளையும். கிளியே, நீயும் அவன் போல நன்மை செய்கிறாய். என் காதலி கொடிச்சி போல அழகுடன் திகழ்கிறாய். அவள் தினைப்புனம் காக்க வரும்படித் தினையைக் கவர்கிறாய். நறுமணம் வீசுகின்ற பூக்களை அணிந்த, கொடி போன்ற இடையை உடைய தலைவி மீண்டும் தினைப்புனம் காவல் காக்க வந்து, கிளிகளை விரட்டுவாள்” என்று தலைவன் கேட்கும் வகையில் தோழி கூறினாள்.


ஆக்கத்தில் உதவி

முனைவர் ஜா.கீதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி.