இரண்டாம் ஆண்டு நான்காம் பருவம் புதிய பாடப்பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் ஆண்டு நான்காம் பருவம் புதிய பாடப்பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஏப்ரல், 2023

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் - வருகைப்பருவம்

 

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்

வருகைப்பருவம்

அறிமுகம்

இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர். ஐந்து வயது வரை பேசாதிருந்தமையால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டினர். முருகன் அருளால் பேசியதன் காரணமாக முதற்கண் கந்தர் கலிவெண்பா என்னும் பாமாலையை இயற்றினார்.  திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் படைத்தார். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. 102 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், முருகன், விநாயகன், திருமகள், கலைமகள் ஆகியோரிடம் மீனாட்சியம்மையைக் காக்குமாறு 11 பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகின்றார். இந்நூலில் இடம்பெற்றுள்ள வருகைப் பருவத்தின் முதல் ஐந்து பாடல்களின் விளக்கத்தைப் பின்வருமாறு காண்போம்.

பாடல் 1

அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி

                அரற்றுசெஞ் சீறடிபெயர்த்து

        அடிஇடும் தொறும்நின் அலத்தகச் சுவடுபட்டு

                அம்புவி அரம்பையர்கள் தம்

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி

                வளர்இளம் பிறையும்நாற

        மணிநூ புரத்துஅவிழும் மென்குரற் கோஅசையும்

                மடநடைக் கோதொடர்ந்துஉன்

செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு

                சிறைஓதி மம்பின்செலச்

        சிற்றிடைக்கு ஒல்கிமணி மேகலை இரங்கத்

                திருக்கோயில் எனஎன்நெஞ்சக்

கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட

                காமர்பூங் கொடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிர்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

அழகிய சிலம்பு ஒலிக்க, சிறிய அடி வைத்து நீ பூமியில் கால் வைத்து நடக்கும்போது, உன் செம்மையான பாதத்தின் தழும்புகள், தேவமகளிர் கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையிலும், சிவபெருமானின் சடைமுடியில் உள்ள இளம் பிறையிலும் தோன்றுகின்றன. நீ அணிந்திருக்கும் சிலம்பில் இருந்து வெளிவரும் ஓசையினால், தளர்கின்ற உன் இளநடையினால் மனம் பறி கொடுத்து, உன்னைப் பின்பற்றி வருகின்ற தெய்வப் பெண்கள் வருகின்றனர். அவர்களின் கூட்டத்தினுள்ளே அன்னப்பறவைகளும் தொடர்ந்து வருகின்றன. மணிமேகலை என்னும் அரையணி ஒலிக்க என் மனமாகிய தாமரை மலரையும், தமிழ்மொழி பழகும் மதுரை மாநகரையும் திருக்கோயிலாகக் கொண்டிருக்கும் அழகிய மலர்க்கொம்பு போன்றவளே வருக. கற்பகக் காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே வருக.

பாடல் 2

குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்

                கோதையும் மதுரம்ஒழுகும்

        கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக்

                கூந்தல்அம் பிடியும் அறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ

                மணங்கமழ விண்டதொண்டர்

        மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட

                மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல

                தொல்உரு எடுத்துஅமர்செயும்

        தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந்

                துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்

                கலாபமா மயில்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய இலக்குமியும், பெண் யானை போன்றவளாகிய கலைமகளும், வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் புகுந்து கொண்டனர். அதுபோல, சிவமணம் கமழ தொண்டர்களின் மதியாகிய மலர்கள் பூத்திருக்கும் பொய்கை என்னும் கோயிலில் புகுந்துள்ள மாணிக்க வல்லியே! மன்மதன் தன் மனைவி ரதி தேவியுடன் பலவகையான பழைய வடிவங்களைத் தாங்கிப் போர் புரிவதற்கு எடுத்திருக்கும் பல வில்களைப் போல, வானத்தின் உச்சியை எட்டிப் பார்க்கின்ற கரும்புக் காடுகள் நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும் தோகையுடைய மயில் போன்றவளே வருக.

பாடல் 3

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்

                முள்பொதி குடக்கனியொடு

        முடவுத் தடம்தாழை முப்புடைக் கனிசிந்த

                மோதிநீர் உண்டுஇருண்ட

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்கள் அன்றிஏழ்

                பொழிலையும் ஒருங்குஅலைத்துப்

        புறம்மூடும் அண்டச் சுவர்த்தலம் இடித்துஅப்

                புறக்கடல் மடுத்துஉழக்கிச்

செயல்பாய் கடல்தானை செங்களம் கொள அம்மை

                திக்குவிச யம்கொண்டநாள்

        தெய்வக் கயல்கொடிகள் திசைதிசை எடுத்துஎனத்

                திக்குஎட்டும் முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை

                காவலன் மகள் வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே.

பாடல் விளக்கம்

பாண்டியனின் மதுரை நகரத்தின் சோலைகளில், சந்திரன் சூழ்ந்திருக்கின்ற பலாமரத்தில் முட்கள் நிறைந்த பழங்கள் காணப்படுகின்றன. நீண்டு வளர்ந்த தென்னை மரங்களில் மூன்று பக்கமும் புடைத்திருக்கின்ற தேங்காய்கள் நீரைச் சிந்துகின்றன. அந்நீரைப்பருகிய மேகங்கள் கருநிறமாக வானத்தைச் சூழ்ந்துள்ளன. அதுபோல, கடல் போன்ற சேனைகளைக் கொண்டு, ஏழு உலகங்களையும் வென்று, நீ திசையெங்கும் வெற்றியடைந்தாய். வெற்றியடைந்ததன் காரணமாக, வெற்றிக் கொடிகளைத் திசையெங்கும் எடுத்து வந்ததுபோல, பாண்டியனின் மதுரையில் அனைத்துத் திசைகளிலும் கயல்மீன்கள் பாய்கின்றன. வரம்புகள் நெருங்கிய பெரிய வயல்கள் காணப்படுகின்றன. அத்தகு சிறப்பு மிக்க தமிழ் வளர்த்த மதுரைக்குக் காவலனாக விளங்கும் பாண்டியன் மகளே! வருக.

பாடல் 4

வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு

                மதுரஅமு துண்டுகடைவாய்

        வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி

                மருப்பில் பொருப்புஇடித்துத்

தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்

                தலத்துஅணிவது ஒப்பஅப்பிச்

        சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின்

                தானநீ ரால்நிரப்பி

முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன

                முகடுகை தடவிஉடுமீன்

        முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு

                முகில்படாம் நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்

                களிறுஈன்ற பிடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

மணி வடங்கள் பொருந்திய உன் மார்பில் பாலருந்தி, கிம்புரிப் பூண் அணிந்த தந்தங்களினால் மலையை இடித்து, செந்தூளை மத்தகத்தில் பூசி, ஏழு கடலையும் தன் பெரிய கையால் முகந்து, குறைத்து, பின் மத நீரினால் நிறைத்து, வானத்து உச்சியைத் துதிக்கையால் தடவி, நட்சத்திரங்கள் ஆகிய முத்துக்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு, ஏழு முகில்கள் என்ற கூட்டங்களை நெற்றியில் சுற்றி, மதம் பொருந்திய சிறிய கண்களையும் பெரியகொலைத் தொழிலையுமுடைய பிள்ளையாரைப் பெற்ற பெண் யானையே! வருக.

பாடல் 5

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு

                செம்பஞ்சி யின்குழம்பால்

        தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்

                செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை

                வாணிநதி யாச்சிவபிரான்

        மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு

                மரகதக் கொம்புகதிர்கால்

மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்

                வேழத்தின் மத்தகத்து

        வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு

                வெண்கவரி வீசும்வாசக்

கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்

                கவுரியன் மகள்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

உன் சிறிய பாதங்கள் செம்பஞ்சு குழம்பினால் பூசப்பட்டுள்ளன. அச்சீறடிகள் சிவபெருமானின் தலை மீது படுவதால், அங்குள்ள வெண்மை நிறமுடைய சந்திரன் சிவந்த நிறம் பெறுகின்றான். சிவனின் தலையில் உள்ள கங்கையாறு சோணை நதியாக உருப்பெருகின்றது. சிவபெருமானுடைய மகுடமான சடையில் உன் பாதத்தின் சுவடுபட அழுத்துகின்ற பச்சை நிறமுள்ள பூங்கொம்பே! (ஊடல் காலத்தில் சிவபெருமானின் முடி மீது பார்வதி தேவியின் சீறடி படும் என்பது புராணச் செய்தி) ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நடக்கின்ற பெரிய வானத்தில் ஐராவதமாகிய யானையின் முதுகில் வீற்றிருக்கின்ற இந்திராணிக்கு, பாண்டியனின் நாட்டில் உள்ள பச்சைநிற கமுகமரம் வெண்கவரி வீசுவது போல உயர்ந்து நிற்கின்றது. அச்சிறப்பு மிக்க பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கூடலில் வளர்கின்ற பாண்டியன் மகளே! வருக.

 

 

சனி, 7 மே, 2022

சீறாப் புராணம் - உடும்பு பேசிய படலம்

 

சீறாப் புராணம்

உடும்பு பேசிய படலம்

முகமது நபியின் வருகை

முகமது நபி அவர்களுடன் உமறு கத்தாப் என்ற வள்ளலும் தீன் என்ற இஸ்லாம் மார்க்கத்திற்கு உடையவர்கள் ஆனபின், இஸ்லாமியர்கள் யாவரும் தைரியமுடையவர்களாய், மகிழ்ச்சி அடைந்தனர். முகமது நபியை இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின்  ஜீவனைப் போல் விரும்பினர். முகமது நபி, உமறு கத்தாப், அபுபக்கர் ஆகியோர்கள் மக்கா நகரத்திற்கு வெளியே சென்று ஒரு சோலையின்கண் தங்கியிருந்தார்கள்.

நபிகளை இயற்கை வணங்குதல்

அப்போது முகமது நபியின் அழகைப் பார்த்து அங்குள்ள கற்களும், மரங்களும், காடுகளும், பறவைகளும், விலங்கினங்களும் காட்டில்  திரியும் உயிரினங்களும் முகமது நபியைப் போற்றின. முகமது நபி அவர்கள் தங்கள் கூட்டத்தை விட்டு நீங்கி மறுநாள் வேலை கையில் ஏந்திய இஸ்லாமியர்கள் சூழ்ந்து வர வேறு ஓர் இடத்தில் சென்று தங்கினார்கள்.

வேடன் உடும்பைப் பிடித்தல்

அப்போது வில்லையும் வலையையும் உடைய ஒரு வேடன் தனது கையில் தடியுடன் காட்டில் சென்றான். வேடன் காட்டில் அலைந்து திரிந்தான்.  மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டிப் பார்த்தான். மலைகளின் குகைகளிலும் தேடிப் பார்த்தான். உணவுக்காக எந்த ஒரு விலங்கும் அவனுக்குக் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் சோலைகளில் தேடிய போது ஒரு பொந்தில் ஓர் உடும்பானது புகுவதைப் பார்த்து அவ்வுடும்பை வலையில் பிடித்து, கல் உடையும் வண்ணம் அடித்து தனது மார்போடு பிடித்தான்.

வேடன் நபிகளைக் கண்டு வியத்தல்

              அவ்வாறு பிடித்த உடும்பை அவ்வேடன் வலையில் கட்டி மன மகிழ்ச்சியோடு முட்கள் தங்கிய காடுகளையும், பாறைகளையும் கடந்து நடந்து வந்தபோது, இஸ்லாமியர்கள் நடுவில் வருகின்ற முகமது நபி அவர்களைக் கண்டான். அறிவையுடையவர்களான இஸ்லாமியர்களின் நடுவில் இவர் ஏன் வருகின்றார்? இவருக்குத் தொழில் என்ன? என்று  வேடன், இஸ்லாமியர்களிடம் கேட்க, அதற்கு அவர்கள், “இவர் யாவற்றிற்கும் முதன்மையான நன்மை பொருந்திய முகமது நபி” என்று கூறினர்.

முகமது நபி – வேடன் உரையாடல்

              அதைக் கேட்ட வேடன், முகமது நபியின் முன்னர் வந்து நின்று ‘நீங்கள் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? நீங்கள் நடத்துவது எந்த மார்க்கம்? அவற்றை எனக்குத் தெளிவாகக் கூறுங்கள்’ என்று கேட்டான். முகமது நபி வேடனைப் பார்த்து, “அழகான வேடனே, நான் இந்த உலகத்திற்குக் கடைசியாக வந்த நபி, எனக்குப் பிறகு இனிமேல் இந்த பூமியில் நபிமார்கள் யாரும் இல்லை. எனது வார்த்தையைப் பின்பற்றி தீன் என்ற இஸ்லாமிய மார்க்கத்தில் நின்றவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். இந்த வார்த்தைகளைக் குற்றமென்று சொல்பவர்கள் அக்கினி குழிகளையுடைய நரகத்தில் விழுந்து மயங்குவார்கள் என்றார். ஆதலால் இதனை நன்மை என்று உனது மனதில் நினைத்து என் நாவினில் சொல்லும் கலிமாவை ஓதி, நல்ல பதவியை அடைவாய்” என்று முகமது நபி கூறினார்.

வேடன் முனகது நபியைப் பார்த்து ‘நான் உங்களின் வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு நீங்கள் தான் நபி என்று சொல்லும்படியாக மெய்யான சாட்சி வேண்டும்’ என்று கேட்டான். 

அதைக் கேட்ட முகமது நபி அவர்கள் ‘இந்த பூலோகத்தில் உள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாக நீ கேட்பது யாது?” என்று கேட்டார். அவ்வாறு கேட்ட முகமது நபியைப் பார்த்து வேடன் “காட்டில் அகப்பட்ட ஒரு உடும்பு என்னிடம் உள்ளது. அந்த உடும்பு கூர்மையான பற்களைக் கொண்ட தன் வாயைத் திறந்து உங்களுடன் பேசினால் அதன் பின் நான் மறுத்து சொல்ல மாட்டேன்” என்று கூறினான்.

முகமது நபி அவர்கள் நல்லதென்று சிரித்து, “மலைகளில் திரிந்து நிற்கும் அந்த உடும்பை இந்தச் சபையில் விடுவாயாக” என்று கூறினார். வேடன், “நான் இந்த உடும்பைப் பிடிப்பற்குக் காட்டின் கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இதை அவிழ்த்து விட்டால் எளிதில் நம்மிடத்தில் வராது. அதனால் அதை என் மடியில் இருக்கும்படி செய்தேன்” என்று கூறினான்.

நபிகள் நாயகம் “உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்பு விட்டால், அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாது” என்று கூறினார். உடனே அந்த வேடன் தன் மடியில் நிற்கும் அவ்வுடும்பைக் கீழே விட்டான். அவ்வாறு விட்டவுடன் அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப் போன்ற தன்னுடைய நகங்களை பூமியில் பதித்து ஊன்றி, அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாமல் முகமது நபியைப் பார்த்து மகிழ்ந்தது.

நபிகள் நாயகம் – உடும்பு உரையாடல்

அவ்வாறு பார்த்த உடும்பை நோக்கி முகமது நபி அவர்கள், தன் வாயைத் திறந்து உடும்பை அழைத்தார். அவ்வுடும்பானது கண்களைத் திறந்து நபியைப் பார்த்துப் பிளவுடைய தன் நாக்கைத் தூக்கி பதில் பேசிற்று.

“முன்னர்  தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இந்த உலகத்தில் அவதரித்து, மூன்று உலகங்களும் துதிக்கும் வண்ணம் தகுதியான நீதியை உடையவரே! தேவர்கள் வணங்கும் தங்களின் பாதங்களை தினமும் வணங்குகிறேன். தங்களின் வாயைத் திறந்து என்னை அழைத்ததற்கான காரணத்தைக் கூறுங்கள்” என்றது.

உடும்பைப் பார்த்து முகமது நபி “நீ யாரை மாறாது வணங்குகின்றாய்? என்பதை வேறுபாடு இல்லாமல் சொல்” என்று கேட்டார். உடனே அவ்வுடும்பானது, “வள்ளலே, நான் வணங்குகின்ற நாயகன் ஏகன். அவனுடைய அழகிய  சிம்மாசனமானது வானுலகத்தில் இருக்கும். அவனது ஆட்சி பூமியிலும் இருக்கும். ஒப்பில்லாத பெரியவனான அல்லாவைத் துதித்து நான் வணங்கியது சத்தியம்” என்று சொல்லிற்று.

முகமது நபி உடும்பு பேசியதைக் கேட்டு ‘நீ தருமத்துடன் சொன்னாய். ஆனால், என்னை யார் என்று மதித்தாய்?’ என்று கேட்டார். உடனே உடும்பு தனது இரட்டை நாக்குகளைத் தூக்கி பின்வருமாறு சொன்னது.

“கடல், ஆகாயம், பூலோகம், மலைகள், சூரியன் மற்றும் யாவையும் தங்கள் ஒளியில் உள்ளன. யாவற்றுக்கும் முதன்மையாய் விளங்குகின்ற அல்லாவின் அழகிய தூதர்களில் இந்த பூமியில் வந்த நபிமார்களில் பிரகாசித்து நிற்கும் மேன்மை உடையவர் நீர். கடைசியில் வந்த நபியானவர் நீங்கள். இப்பூமியில் தங்களுடைய வாக்கினால் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதனைக் குற்றமறத் தெரிந்தவர்கள் சொர்க்கலோகத்தை அடைவார்கள். குற்றம் என்று கூறுபவர்கள் நரகலோகத்தில் விழுவார்கள். என்னுடைய காட்டிலுள்ள சாதிகள் எல்லாம் தங்களின் திருநாமத்தை உடைய கலிமாவைத் துதிக்கின்றன. மிகுந்த புகழ் பெற்ற உண்மையான நபிகள் நீங்களே. இவ்வுலகத்தில் வேறு நபிமார்கள் இல்லை” என்று உடும்பு சொல்லிற்று.

வேடனின் மனமாற்றம்

உடும்பு பேசியதைக் கேட்ட வேடன். மனதில் விருப்பம் அடைந்து தனது துன்பங்களை ஒழித்து நபிகளைப் பார்த்து “நானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் நாள்தோறும் செய்த பாவத்தை ஒழியுங்கள்” என்று சொல்லி நபிகளின் பாதங்களைப் பிடித்தான். நபிகள் நாயகம் தன் பாதங்களில் பற்றி நின்ற அவன் கையை எடுத்து கண்களில் பதித்து முத்தமிட்டு, மகிழ்ச்சி அடைந்து, மனம் நெகிழ கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

வேடனும் முகமது நபிகள் கூறிய கலிமாவை ஓதி முறைப்படி நடந்து இஸ்லாமியர் ஆனான்.  பின்னர் அந்த உடும்பைப் பார்த்து “நான் உன்னை நெருக்கி பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கிய பாவங்களை இன்று போக்கினேன். உனது வீடாகிய பெரிய வலையின்கண் செல்” என்று சொல்லி ஆசிர்வதித்தான்.

அப்போது அந்த உடும்பானது அங்குள்ள அனைவரையும் பார்த்து மகிழ்ந்து பின்னர் தாமரை மலர் போன்ற முகம் கொண்ட முகமது நபிகளின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து நின்றது.

உடும்பு அவ்விதம் நிற்பதைப் பார்த்த முகமது நபிகள், இனிமையான தன் வாயைத் திறந்து “நீ உனது இருப்பிடத்திற்குச் செல்வாய்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.  அதை உடும்பு தன் காதுகளால் கேட்டு மனம் மகிழ்ந்து விருப்பத்தோடு  சென்றது.

தேம்பாவணி - வளன் செனித்த படலம் சுருக்கம்

தேம்பாவணி - வளன் செனித்த படலம்

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். இவர் தம் பெயரை தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை, தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றைக் கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும். யோசேப்பு என்றும், சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது. அதன் நேரிய மொழிபெயர்ப்பு தமிழில் வளன் என்பதாகும்.

கதைச் சுருக்கம்:

யூதேயா நாட்டு மன்னன் சவுல். அந்நாட்டில் பிலித்தையர் என்ற இனத்தினர் திருமறையைப் பழித்தும் கடவுளை இகழ்ந்தும் வந்தனர். அரக்கன் கோலியாத் இஸ்ரேல் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான். தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

தாவீது மன்னன் சிறப்பு

  • எருசலேம் திரு நகரத்தில், தாவிது மன்னன் மகிழ்ச்சியோடு அரசு வீற்றிருந்தான். அவன் உயிர்களிடம் கருணை நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; மழைபோல் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்; மலர்களால் அணிந்த மார்பு கொண்டவன்; பொன் அணிகலன்களால் நிறைந்த மலை போல் திரண்ட புயங்களை உடையவன்.
  • அவன் மின்னலின் ஒளி தவழும் இடியை, அம்பாகப் பொழிந்த வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும் அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை மணிகள் பதித்த தேரை உடையவன்;  ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.
  • போர் முகத்தில் புறமுதுகிட்டு ஓடாத வலிமை கொண்டு ஆண் சிங்கம் போல் தோன்றுபவன்.
  • அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப் படாதவன்;  தவத்தினால் தன்னையே வென்ற தன்மை உடையவன்; வானவரும் விரும்பத்தக்க தன்மை உடையவன். தன்னை நாடி வருவோர்க்கு உதவி செய்யும் கொழு கொம்பு போன்றவன்.
  • நீதி தவறாது செங்கோல் முறையில் ஆட்சி செய்பவன்.  கல்வி நலமும், செல்வத்தின் நலமும், அறத்தின் நலமும், தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்தவன்.
  • தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில் விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும், அச்சந்தரும் தன்மை உடையவன். அத்தாவிதன் சிறுவனாய் இருந்த காலத்தில் தன்னை இகழ்ந்தவர்களுக்கு, வேல் முதலிய படைக்கருவிகள் இல்லாமலேயே தன் ஆற்றலால் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை எடுத்துக் கூறுதல் நன்றாம்.

தாவீதின் இளமைப் பருவம் - சவூல் அரசனைப் பீலித்தேயர் எதிர்த்தல்

சூதேய நாட்டில் சவூல் என்ற மன்னன் ஆண்ட போது, மலைகளில் வாழ்ந்த பிலித்தையர் வேதத்தைப் பகைத்தவராய், அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.

பீலித்தேயருள் இராக்கதன்

எருசலேம் திருநகர் முழுவதும் நடுங்குமாறு, வாளை ஏந்தி நின்ற பிலித்தையர் நடுவே, கருநிறம் பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய கோலியாத் என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.

கோலியாத்தின் தோற்றம்

  • ஒரு கரியமலை என்று சொல்லத்தக்க வகையில், வான வெளியை மூடி மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள தலையோடு, பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய சினத்தைக் காட்டிக் கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் அவனுடைய தோற்றம் இருந்தது.
  • நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டு, தோள்மீது கருமேகம் போல் பரந்த கேடயத்தைத் தாங்கி, நீண்ட ஈட்டியைக் கையில் கொண்டு, அவன் போரை எதிர் கொண்டான்.

கோலியாத்தின் கோபவுரை

நெஞ்சில் அடங்காத அகந்தை பெருகிய அவ்அரக்கன் உங்களுள் ஒருவன் இங்கு வந்து என்னுடன் போரிட வேண்டும். நானும் அவனும் தனித்தனி நின்று தாக்க வேண்டும், என்னுடன் போரிட்டுத் தோற்றவன், வென்றவனுக்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று, ஆரவார மகிழ்ச்சியால் நகைத்து, இகழ்ச்சியுடன் சொல்லி அறைகூவி அழைத்தான்.

கண்டவர் மருட்சி

அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேயோ? பூதமோ? வேறு யாதோ? என்றவாறு அவ்வுருவத்தை இசுரவேலர் கண்டு அஞ்சினர்; கோலியாத் அறைகூவிய சொல்லைக் கேட்டபோது மயங்கினர்.

கோலியாற்றின் அகந்தை நகைப்பு

இசுரவேலர் அச்சத்தைக் கண்ட கோலியாத், செருக்குற்று அவர்கள் தொழுகின்ற ஆண்டவனைப் பகைத்தான்.

சவூல் அரசன் அறிக்கை

அவனைத் தடுப்பவர் எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும் தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொண்டான். ''எவனேனும் எதிர்கொண்டு வந்து அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்றான்.

வீர இளைஞன் தாவீதன்

இவ்வாறாக நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த தாவிதன், தன் தமையன்மார் மூவர் போர் செய்யப் போயிருந்தமையால், அவர்களைக் காண ஆசையால் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்து, அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு சொல்லக் கேட்டான்.

தாவீதன் இசுரவேலரிடம் வீரமொழி விளம்பல்

அவ்வார்த்தையைக் கேட்ட தாவிதன் கொதித்து எழுந்து, ''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன் மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்றான்.

''கையின் வலிமையினால், உள்ளத்தில் ஓங்கி எழும் பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால் புகைந்து பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால் மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும் வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.

சவூல் அரசன் வினாவும், தாவீதன் விடையும்

  • தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்; அதன்படி சென்ற அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ? அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.
  • அரசனது திருவடிகளை வணங்கிய தாவிதன், ‘ஐயா, கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல மாட்டான்?என்று கூறினான்.
  • ''வலிமையோடு சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை எதிர்த்தபோது, அவற்றின் கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.
  • அரசன் அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது'' என்று இசைந்து, உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்லும் முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.

தாவீதன் போருக்குப் புறப்படுதல்

தானே தெரிந்தெடுத்த வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும் கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்; குருக்கள் யாவரும் வெற்றியின் ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர்; தன் பக்கத்துப் படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.

கோலியாத்தின் கோபமொழி

இசுரவேலர் ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்று கேட்டு, தன்னை எதிர்த்து வந்த சிறுவனைப் பழித்து, யாவரும் அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகி வந்து, அடே! நீ என் எதிரே நிற்கவுங் கூடுமோ? நாய் நின்று, மதம் பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ! அடே! சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும்! நீ சுழன்று, நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே சென்று விடுவாய் !" என்றான்.

தாவீதன் மறுமொழி

சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் தன்மையுள்ள கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை! நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்ட கடவுளின் வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொன்று, உன் உடலை விரைவில் பறவைகளுக்கு இரையாகுமாறு செய்வேன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள கவணைச் சுழற்றினான்.

கோலியாற்றின் வீழ்ச்சி

தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் சுழற்றியதையும், அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் அவன் நெற்றியில் பாய்ந்ததையும், அவன் விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

இறைவனைப் பழித்த இராக்கதன் தலை

போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கனது இடையின் ஒரு பக்கம் பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி, "என் இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!" என்று கூறி, அவனது பெரிய தலையைக் கொய்து அனைவருக்கும் தூக்கிக் காட்டினான்.

தாவீதன் அரசனாதல்

வானுலக ஆண்டவன் தந்த வல்லமையைத் தாவிதன் அடைந்து, சிறந்த அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான். செங்கோல் முறையினின்று வழுவாது நல்லாட்சி புரிந்தான். ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, " உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச் செய்வேன்’ என்றார்.

வாக்குறுதியின் வழித் தோன்றல்

  • கடவுள் வரங்களின் வளம் கொண்ட சூசையை இன்பத்தோடு தெரிந்து கொண்டார். செல்வம் ஒன்றுமே இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தார். அவனுடைய தந்தை சகோபு, தாய் நீப்பி அவள்.
  • அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை, உள்ளம் மகிழ்ந்து, நல்ல கருப்பம் உற்றாள். ஆண்டவர் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, அவளுடைய உடலினுள் செலுத்தினார்.
  • வரங்களின் தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து, தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்: பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, ஒளி நிறைந்த முகத்தோடு பிறந்த மகனின் அழகைக் கண்டு, தாயாகிய நீப்பி இன்பப் பயனை அடைந்தாள்.
  • குழந்தையைக் கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மேலான ஓர் இன்பமும் கொண்டனர்;  "இவன் கடவுளின் திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று வாழ்த்தி வெற்றி கூறினர்.
  • ஆசை மிக்க கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், மகனைக் கூர்ந்து நோக்கி,  "சூசையே! உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தினாள். வானுலகத்து ஆண்டவன், வானுலக நலங்களைச் செய்யும் நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, "இவன் அறத்தோடு என் மார்பில் வாடாத மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மழை பொழிந்தது. அத்தாய், மகனின் நலத்தைக் கேட்டறிந்து, இறைவனின் பாதத்தில் விழுந்து தொழுதாள்.
  • அக்குழந்தையின் அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களை அணிவித்தனர். மணிகள் வைத்த சதங்கையும் சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, ஒளி பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய மலர் மெத்தையில் கிடத்தி, அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு இவனே ஒரு திலகம் ஆவான், என்று போற்றினர். சூழ நின்றோர் சிலர், வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம் மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை, என்பர். இன்னும் சிலர், வேதத்தை விளக்கிக் காட்டும் சுடர் விளக்கே இம்மகன், என்பர். இவ்வாறு புகழ்ச்சிகளைக் கூறி, இன்பம் எய்தினர்.

வளன் சனித்த படலம் முற்றும்.

 


வெள்ளி, 21 ஜனவரி, 2022

வளன் செனித்த படலம் - தேம்பாவணி

 

தேம்பாவணி

வளன் செனித்த படலம்

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற் பெயர் கான்ஸ்டான் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். இவர் தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர், தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றைக் கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும். யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் அப்பெயரை வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது. அதன் நேரிய மொழிபெயர்ப்பு தமிழில் வளன் என்பதாகும்.

கதை சுருக்கம்:

யூதேயா நாட்டு மன்னன் சவுல். பிலித்தையர் என்பார் திருமறையைப் பழித்தும் கடவுளை இகழ்ந்தும் வந்தனர். அரக்கன் கோலியாத் இஸ்ரேல் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான். தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வளன் செனித்த படலம்

தாவீது மன்னன் சிறப்பு

அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்

என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,

ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்

சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ. (1)

பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு உயிர் போல, தாவிது மன்னன் மகிழ்ச்சியோடு அரசு வீற்றிருந்தான். பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும் மேலாக விளங்கினான்.

அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி

மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்

சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;

பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான். (2)

அவன் உயிர்களிடம் கருணை நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; மழைபோல் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்; மலர்களால் அணிந்த மார்பு கொண்டவன்; பொன் அணிகலன்களால் நிறைந்த மலை போல் திரண்ட புயங்களை உடையவன்.

ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;

அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;

வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;

களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான். (3)

அவன் மின்னலின் ஒளி தவழும் இடியை, அம்பாகப் பொழிந்த வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும் அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை மணிகள் பதித்த தேரை உடையவன்; மதம் பொழியும் ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.

மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,

மெய் முனர் பொய் எனா வெருவு ஒன்னார் இவன்

கை முனர் நிற்கு இலா கலங்கிப் போற்றும், போர்

செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான். (4)

போர் முகத்தில் புறமுதுகிட்டு ஓடாத வலிமை கொண்டவன். பகைவர் இவன் கை வன்மைக்குமுன் நிற்க இயலாது கலங்கித் தவிக்கும் வல்லமை கொண்டவன். 

வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்

சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி

மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான். (5)

அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப் படாதவன்;  தவத்தினால் தன்னையே வென்ற தன்மை உடையவன்; மீன்களைக் கொண்ட கடலால் சூழப்பட்ட மண்ணுலகில்தான் இருப்பினும், மேலே ஒளியைப் பொழியும் வானவரும் விரும்பத்தக்க தன்மை உடையவன்.

நீதி நல் முறை எலாம் நிறைந்த நீண் தவம்,

ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்

கோது இல் நன் உதவி செய் கொழு கொம்பு ஆகி, வான்

ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான். (6)

நல்ல நீதி முறையெல்லாம் நிறைந்த நீண்ட தவமும், ஆதிக் கடவுளின் வேதமும் ஆகிய இவை அனைத்தும் பெற்று, உதவியை நாடிவருவோர்க்கு கொழு கொம்பு போன்றவன். வானகத்திற்கு உரிய குறையற்ற நன்முறைகளெல்லாம் இவ்வுலகில் அடைந்து கொண்ட மாட்சிமை உடையவன்.

கோல் நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,

நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்

தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்

மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே. (7)

நீதி தவறாது செங்கோலின் நலம் வழுவாத முறையில் ஆட்சி செய்பவன்.  நூலால் ஆகும் கல்வி நலமும், செல்வத்தின் நலமும், அறத்தின் நலமும், தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்தவன். விண்மீன்களின் நலம் நிறைந்த வானுலகமும் வியக்குமாறு நாடெல்லாம் வாழ்ந்தவன்.

பகை செய்வார்க்கு இடி என, படிந்து போற்றிய

தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,

நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,

மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல நன்று அரோ. (8)

தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில் விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும், அச்சந்தரும் தன்மை உடையவன் அத்தாவிதன் சிறுவனாய் இருந்த காலத்தில் தன்னை இகழ்ந்தவர்களுக்கு, வேல் முதலிய படைக்கருவிகள் இல்லாமலேயே தன் ஆற்றலால் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை எடுத்துக் கூறுதல் நன்றாம்.

தாவீதின் இளமைப் பருவம் - சவூல் அரசனைப் பீலித்தேயர் எதிர்த்தல்

மறை வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட

முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று

உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,

பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார். (9)

சூதேய நாட்டில் சவூல் என்ற மன்னன் ஆண்ட போது, மலைகளில் வாழ்ந்த பிலித்தையர் வேதத்தைப் பகைத்தவராய், மேகம் நின்று மழை பொழிந்ததற்கு ஒப்பாக அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.

பீலித்தேயருள் இராக்கதன்

வேலியால் கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,

மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,

ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான். (10)

மதிலின் சிறப்பால் பகைவர் நுழைய விடாத எருசலேம் திருநகர் முழுவதும் நடுங்குமாறு, சூரிய ஒளியால் கதிர் பரப்பிய வாளை ஏந்தி நின்ற பிலித்தையர் நடுவே, மழை நீரினால் கருநிறம் பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.

கோலியாற்றின் தோற்றம்

துளி சிறைச் செயும் முகில் புகும் இரு மலை சுமந்த

ஒளி சிறைச் செயும் ஒரு கரும் பருவதம் என்னா

வெளி சிறைச் செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே,

களி சிறைச் செயும் கதம் கொடு வெரு உறத் தோன்றும். (11)

 ஒளியை மூடி மறைக்கும் ஒரு கரியமலை என்று சொல்லத்தக்க வகையில், வான வெளியை மூடி மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள தலையோடு, பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய சினத்தைக் காட்டிக் கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் தோன்றினான் கோலியாற்று.

நீண்ட வாள் புடை நெருங்கியே, படர் கரு முகில் போல்,

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து, வெஞ் சுடரைத்

தூண்டல் ஆம் எனச் சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி,

கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான். (12)

நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டு,  தோள்மீது பரந்த கேடயத்தைத் தாங்கி, நீண்ட ஈட்டியைக் கையில் கொண்டு போரை எதிர் கொண்டான்.

கோலியாற்றின் கோபவுரை

பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன,

எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு இடை அடங்காச்

செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழச் சினந்து,

தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான். (13)

 நெஞ்சில் அடங்காத அகந்தை பெருகிய அரக்கன் தீப்பொறி பறக்கச் சினந்து, ஆங்காரம் பொங்கிய கோப மொழிகளை இடிபோல் முழங்கி இடித்துக் காட்டிச் சொன்னான்.

''கூர்த்த போர் செயக் கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி,

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித் தனித் தாக்க,

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர்,'' என்னா,

ஆர்த்த ஓகையான் நகைத்து, இகழ்வு அறைந்துஅறைந்து அழைப்பான். (14)

“உங்களுள் ஒருவன் இங்கு வந்து என்னுடன் போரிட வேண்டும். சிறப்புள்ள நானும் அவனும் தனித்தனி நின்று தாக்க வேண்டும், என்னுடன் போரிட்டுத் தோற்றவன், வென்றவனுக்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று அறைகூவி அழைத்தான்.

கண்டவர் மருட்சி

பெரிய குன்றமோ? பேய் அதோ? பூதமோ? ஏதோ?

உரியது ஒன்று இலா உருவினைக் கண்டு உளி வெருவி,

கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன

அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார். (15)

அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேயோ? பூதமோ? வேறு யாதோ? என்றவாறு அவ்வுருவத்தை இசுரவேலர் கண்டு அஞ்சினர்; கோலியாற்று அறைகூவிய சொல்லைக் கேட்டு மயங்கினர்.

கோலியாற்றின் அகந்தை நகைப்பு

நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை

நல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழுக் கடுத்து,

பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான். (16)

இசுரவேலர் படை நடுக்கங் கொண்டு அஞ்சிய தன்மையைக் கண்டு, செருக்குற்று, அவர்கள் தொழும் ஆண்டவனைப் பகைத்தான்; 

சவூல் அரசன் அறிக்கை

தாங்குவார் இலா, சாற்றிய உரைகள் கேட்டு எவரும்

நீங்குவார் என, நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு

ஏங்குவான்: ''எவன் எதிர்ந்த அவ் அரக்கனை வென்றால்,

ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன்'' என்பான். (17)

அவனைத் தடுப்பவர் எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும் அயர்ந்து தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொள்வான்: ''எவனேனும் எதிர்கொண்டு வந்து அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்பான்.

வீர இளைஞன் தாவீதன்

இன்னவாய்ப் பகல் நாற்பதும் இரிந்த பின், அண்ணர்

முன்னர் மூவரே முரண்செயப்போயினர், அவரைத்

துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி,

அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான். (18)

இவ்வாறாக நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த தாவிதன், தன் தமையன்மார் மூவர் போர் செய்யப் போயிருந்தமையால், அவர்களைக் காண ஆசையால் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்து, அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு சொல்லவும் கேட்டான்.

தாவீதன் இசுரவேலரிடம் வீரமொழி விளம்பல்

கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை

ஈட்டல் ஆம் என எழுந்து, ''உளம் நினைந்தவை ஆக்கிக்

காட்ட, வாய்மையின் கடந்த, வல் கடவுளை நகைப்ப

வேட்ட லால், விளி விழுங்கிய கயவன் ஆர்?'' என்றான். (19)

அவ்வார்த்தையைக் கேட்ட தாவிதன் கொதித்து எழுந்து, ''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய தன் உள்ளம் நினைந்தவற்றை அவ்வாறே ஆக்கிக்காட்ட வல்ல கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன் மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்றான்.

''கை வயத்தினால், கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ?

மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ? கடவுள்

செய் வயத்தினால், சிறுவன் நான் வெல்லுவேன்'' என்றான். (20)

பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால் புகைந்து பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால் மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும் வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.

சவூல் அரசன் வினாவும், தாவீதன் விடையும்

என்றது அண்ணல் கேட்டு, ''இவன்தனைக் கொணர்மின்'' என்று இசைப்ப,

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும், ''நீயோ

போன்ற உன்னினாய்? பொருப்பினைப் பெயர்த்து எறிந்து, உவமை

வென்ற திண்மையான் வெகுளி முன் நீ எவன்!'' என்றான். (21)

என்று தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்; அதன்படி சென்ற அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ?  அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.

ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான்:

''காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின், மீட்டு

வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ? கடவுளைப் பகைத்து,

வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெல்லான், ஐயா?'' (22)

அரசனது இரண்டு அடிகளையும் வணங்கிய சிறுவனாகிய தாவிதன், ''ஒருவனுக்குத் தன் பாவமே  ஒரு பகையாக அமைந்து விடும், அதுவே கொல்லும் படை ஆகவும் ஆகிவிடும். அதுவல்லாது, புறத்தேயிருந்து வேறொரு படையும் வேண்டுமோ? ஐயா, கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல மாட்டான்?” என்று கூறினான்.

''திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து,

மறம் கருத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து,

கறங்கு அடுத்த கால், கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்.

அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ?'' என்றான். (23)

         ''வலிமையோடு சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை எதிர்த்தபோது, அவற்றின் கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.

அரிய ஆண்மையை அதிசயித்து அரசன், ''நன்று'' என்னா,

விரி அளாவு ஒளி வேலொடு தனதுபல் கருவி

உரிய போர் செய ஒருங்கு தந்தனன். ''அவற்றொடு'' தான்,

''திரிய வாய் முறை தெரிகிலேன்'' என மறுத்து அகன்றான். (24)

அரசன் அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது'' என்று இசைந்து, உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்ல அமைந்த முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.

தாவீதன் போருக்குப் புறப்படுதல்

தெரிந்த வாய்ந்த ஐஞ் சிலையொடு கவண் எடுத்து, எவரும்

இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க,

விரிந்த ஆசையால் வேதியர் ஆசியைக் கூற,

பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார். (25)

தானே தெரிந்தெடுத்த வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும் கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்; குருக்கள் யாவரும் வெற்றியின் ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர்; தன் பக்கத்துப் படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.

கோலியாற்றின் கோபமொழி

ஆர்த்த ஓதை கேட்டு, அரக்கன், இன்று அமர்க்கு எதிர் வருகப்

பார்த்த பாலனைப் பழித்து எழுந்து, யாவரும் அஞ்சக்

கூர்த்த வேலொடு குறுக வந்து, அகல் கரு முகிலின்

பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்: (26)

இசுரவேலர் ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்று கேட்டு, தன்னோடு போர் செய்ய எதிர்த்து வந்த சிறுவனைப் பழித்த வண்ணம் எழுந்து, யாவரும் அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகி வந்து,  பேரிடி போல முழங்கிச் சொல்லலானான்:

"நீ, அடா, எதிர் நிற்பதோ? மதம் பொழி கரி மேல்

நாய், அடா, வினை நடத்துமோ? கதம் கொடு நானே

வாய், அடா, பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்

ஆய், அடா, உலகு அப்புறத்து ஏகுவாய்!" என்றான். (27)

‘அடே! நீ என் எதிரே நிற்கவுங் கூடுமோ? நாய் நின்று, மதம் பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ! அடே! சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும்! நீ சுழன்று, நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே சென்று விடுவாய், அடா!" என்றான்.

தாவீதன் மறுமொழி

"வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல், அட! நானோ

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலாத் திறக் கடவுள்

வல் கையோடு உனை மாய்த்து, உடல் புட்கு இரை ஆக

ஒல் செய்வேன்" எனா, உடை கவண் சுழற்றினன் இளையோன். (28)

சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் தன்மையுள்ள கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை! நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்ட கடவுளின் வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொன்று, உன் உடலை விரைவில் பறவைகளுக்கு இரையாகுமாறு செய்வேன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள கவணைச் சுழற்றினான்.

கோலியாற்றின் வீழ்ச்சி

கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்

ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்

செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்

எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார். (29)

தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் சுழற்றியதையும், அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் அவன் நெற்றியில் பாய்ந்ததையும், பகலவன் பாய்ந்து வர இருள் நீங்கியதுபோல் அவன் விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

இறைவனைப் பழித்த இராக்கதன் தலை

கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்,

படை முகத்தினில் பார்பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்

புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி, "என் தெய்வம்

உடை உரத்தினை உணர்மின்!" என்று இருஞ்சிரம் கொய்தான். (30)

யுக முடிவில் கரு மேகம் இடியோடு விழுவது போல், நிலம் பதைத்து அஞ்சுமாறு போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கனது இடையின் ஒரு பக்கம் பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி, "என் இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!" என்று கூறி, அவனது பெரிய தலையைக் கொய்தான்.

கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற,

ஊன் நெடுந்திரை ஒழுக, ஆங்கு அனைவரும் கூச,

நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான், ஒன்னார்

மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட. (31)

அங்கு நின்ற இசுரவேலர், பிலித்தையர் அனைவரும் கண்டு, கூசவும், பகைவர்தம் பெருமை கொண்ட நெடும் படை மயங்கி நொந்து மனம் முறித்து ஓடவும், அவன் ஊனினின்று நெடிய திரை போல் குருதி ஒழுகவும், கரிய நெடிய மலை போன்ற தலையைத்  தாவிதன் தூக்கிக் காட்டினான்.

தாவீதன் அரசனாதல்

கார் முகத்து அசனி கூசக் கடுத்த அவ் அரக்கன் வென்ற

சீர் முகத்து இளவல், பின்னர் திறத்த தன் நாம வேலால்

போர் முகத்து எதிர் ஒன்று இல்லான், பொழி மறை பழித்த யாரும்

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே. (32)

 சினந்து வந்த அவ்வரக்கனைக் கொன்று வென்ற சிறப்பைக் கொண்டுள்ள அச் சிறுவன், பிற்காலத்தில் திறம் படைத்த, அச்சம் தரும் தன் வேலால் போர்க் களத்தில் தனக்கு நிகர் ஒன்றும் இல்லாதவனாய் விளங்கி, நலமெல்லாம் பொழியும் திருமறையை முன் பழித்த யாவரும் உலகத்தில் அதற்கு எந்நாளும் அன்பு செலுத்த வகை செய்தான்.

கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி, வெய்யில்

செய்த வாள் முடியைச் சூடி, சிறந்த ஆசனத்தில் ஓங்கி,

பெய்தவான் ஒளியோடு ஆய்ந்த பெருந் தயை பிலிற்றும்செங்கோல்

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே, அரசன்ஆனான்.(33)

வானுலக ஆண்டவன் தந்த வல்லமையைத் தாவிதன் அடைந்து, தன் வாள் கொய்த பகைவரின் தலைகள் திரண்ட குவியலைக் காலால் மிதித்து ஏறி, ஒளியைச் செய்த வாளை இடையிலும் முடியைத் தலையிலும் அணிந்து, சிறந்த அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான்.

நூல் நகத் துளங்கி, கேள்வி நுண் அறிவாளர் ஒவ்வா,

வானகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி,

கானகத்து ஒதுங்கி வைகும் கடித் தவத்தோடும் இன்ன

கோன் அகத்து இலங்கி, அங்கண் குடி என வதிந்த தாம் ஆல். (34)

நூலறிவை இகழுமாறு விளங்கி, கேள்வியால் அடைந்த நுண்ணறிவு படைத்தவரும் ஒவ்வாத வகையில், வானுலகத்திற்கே உரியதாய் அமைந்த எதிர்காலப் பொருளை முன்னரே காட்டும் தெய்வக் காட்சி, இந்த மன்னனிடத்து விளங்கிற்று. இவை அவனுக்குக் குடிகள்போல அவன்பால் தங்கியிருந்தன.

சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும், அதனைக் கூட்டி

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்கக் சேர்த்தல்

தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான். (35)

சூடிய பொன் முடியும் செங்கோலும் துறந்து, அரிய காட்டில் வாழ்ந்து சிறந்த தவம் செய்த மன்னரும் இருந்தனர். ஆயினும், இந்த நீதி மன்னன் பல மணிகள் பதிந்த அரியணையில் இருந்து தாழ்ந்த குணங்களையெல்லாம் ஒழித்தான்.

வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி, தன்னை

நூலொடு வெல்ல ஐந்து துன்புலன் அடக்கிக் காத்து,

கோலொடு வழாமை நீதிக் கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்,

சூலொடு வழங்கும் மாரித் துளி பழித்து அருளும் கையான். (36)

 இரவலர்க்கு அருளோடு கொடுக்கும் கையை உடையவனாகிய தாவிதன், தனது வேலின் ஆற்றலால் பகைவர் வெள்ளத்தை வென்று வென்று அடக்கி, நூலறிவோடு பொருந்தத் தன்னை வெல்லுமாறு நுண்ணிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்து, செங்கோல் முறையினின்று வழுவாமையால் நீதி என்னும் படர் கொடியின் கொழுந்து சேர்ந்து  தழைப்பதற்கான கொழுகொழும்பு போல் ஆனான்.

மன் அருந் தயையால் பாரில் வழங்கிய சீர்த்தி அல்லால்,

இன் அருங் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்,

முன் அருந் தவத்தோர் கொண்ட முறைதவிர் வரங்கள் எய்தி,

துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை எனப் புவியில் வாழ்ந்தான். (37)

இனிய அரிய குணங்களின் சிறப்பால் ஆண்டவனுக்கு உகந்த மன்னனாகிய தாவிதன், அரிய தவமுடையோர் கொண்ட அளவு முறைக்கு அடங்காத வரங்களும் அடைந்து, அடைவதற்கு அரிய உயர்ந்த மோட்ச வீட்டில் உள்ளவர்களுக்கு நிகராகவும் இவ்வுலகில் வாழ்ந்தான். 

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்

"வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்

சேயினால் நயப்பச் செய்வேன், சிறந்த மூஉலகில் அன்னான்

வாயினால் நவிலாக் கோன்மை வரம் பெற அளிப்பேன்" என்றான். (38)

இவ்வாறெல்லாம் அமைந்த அவன் வாழ்க்கை நடத்திய தன்மையால் ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, "மலரை ஒத்த உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச் செய்வேன். சிறந்த மூன்று உலகங்களிலும் வாயினால் சொல்ல இயலாத ஆட்சியுரிமையை அவன் பெற வரம் அளிப்பேன்" என்றார்.

வாக்குறுதியின் வழித் தோன்றல்

தந்த இவ் வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும், என்ற

இந்த நல் முறையால், மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்

அந்தரம் முதல் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ? (39)

கடவுள் தாவிதனுக்குத் தந்த இந்த வரம் இவனது சந்ததி முறையில் மகனாய் வந்த ஆண்டவனால் ஆகிய நிறைவேற்றம் என்று சொல்லலாம்.  

கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ

மேன்மையால் ஒருவன் அன்றி, விபுலையில் பிறக்கும் மாக்கட்

பான்மையில் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள,

நான்மையால் வழுவாச் செங்கோல் நல்க உள்ளினன் ஆம் நாதன். (40)

ஆட்சி முறையால் உயர்ந்த தாவிதனின் குடியில் தோன்றும் தெய்வ மேன்மையால் அமைந்த ஒருவனுமன்றி, உலகில் இயல்பாகப் பிறக்கும் மக்கள் தன்மை மட்டும் கொண்டு தோன்றிய மகன் ஒருவனும் மண்ணுலகத்தோடு வானுலகத்தையும் ஆளுமாறு, நால்வகைக் குற்றங்களாலும் வழுவாத செங்கோல் அவனுக்குக் கொடுக்கவும் ஆண்டவன் நினைத்தான் ஆகும்.

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்கும் வல்லோன்,

எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்போடு, தாவிதன் தன்

வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ உலகம் ஆள

நள்ளின வளம் கொள் ஆசை நயத்தொடு தெரிந்திட்டானே. (41)

நினைத்தலின் உறுதியால் நினைத்ததெல்லாம் ஆக்கும் வல்லமை கொண்ட ஆண்டவன், இகழத்தக்கதெல்லாம் நீக்கும் தன் இயல்புக்கு  ஏற்றவாறு, தாவிதனின் வளமான குல முறையில் மகனாய் வந்து மூன்று உலகங்களையும் ஆளுமாறு, செறிந்த வரங்களின் வளம் கொண்ட சூசையை இன்பத்தோடு தெரிந்து கொண்டான்.

ஏற்றிய முறையோடு, எந்தை, இயன்ற தன் வலிமைகாட்ட

போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை,

சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாதேனும்,

மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்கச் செய்தான் (42)

எம் தந்தையாகிய ஆண்டவன், உயர்த்திய தன்மைக்கு ஏற்பப் போற்றத் தக்க வரங்களைக் கொண்டு எவ்வுலகிற்கும் அரசனாகத் தெரிந்து கொண்ட சூசை, முன் கூறிய தாவிதனின் குடித் தலைமுறையில் வழுவாது பிறந்தானெனினும், தன்னிடம் பொருந்தியுள்ள வலிமையை உலகிற்குக் காட்டுமாறு, பரம்பரையாய்க் கைம்மாறி வரவேண்டிய செல்வம் ஒன்றுமே இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தான்.

பொய்ப் படும் உலக வாழ்வின் பொருட்டு இலாமிடிமையோடு,

கைப் படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்,

மெய்ப்படும் அறத்தின் ஆண்மை விளங்கிய முறையின், பின்னர்

ஐப் படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்கச் செய்தான். (43)

பொய்யான உலக வாழ்க்கையை முன்னிட்டு வேண்டிய பொருள் இல்லாத வறுமையோடு, தன் கையால் செய்யும் உழைப்பின் மூலமே உணவு தேடும் தன்மையாய் வந்து தோன்றிய வறியவனாகிய சூசையை, உண்மையான புண்ணியத்தின் வீரம் அவனிடம் விளங்கிய அடிப்படையில், அழகு பொருந்திய வானுகத்தோடு எவ்வுலகும் அரசனாய் அவனை வணங்குமாறு அவ்வாண்டவனே செய்தான்.

நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்

மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்

தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்,

கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே. (44)

வேத நூலுக்கு நிலைக்களனாகிய தெய்வக் காட்சியால் ஒவ்வொன்றிற்கும் கருதிய காலத்தை உணர்ந்தவனாய், விண்மீன் உலகத்தையும் கடந்து நின்று எல்லாவற்றையும் ஆளும் அரசனாகிய ஆண்டவன், தேனிலும் இனிய கருணையால் தான் தெளிந்து குறித்த சமயத்தில், தெய்வ மணத்திற்கு நிலைக்களனாய்ப் பெற்றோர் செய்த தவத்தின் பயனாகக் கருப்பம் உண்டாகியது.

கொலை முகந்து அழன்ற வேல் கொற்றத் தாவிதன்

தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்

சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு

அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள். (45)

கொலைகளை அள்ளிக்கொண்டு கொதித்த வேலின் வெற்றி படைத்த தாவிதனைத் தலையாகக் கொண்டு தொடர்ந்துவந்த குலத்தில் வந்தவன் சகோபு என்பவன். அவன் மனைவி வில்லின் வடிவங் கொண்டு ஒளிரும் நெற்றியை உடைய நீப்பி என்பவள். அவள் இன்ப அலையில் மூழ்கி மகிழ்ந்து கருப்பம் கொண்டு உள்ளத்தில் எழுச்சி கொண்டாள்.

மணி பழித்து அருங் கவின் மங்கை உள் உவந்து,

அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்,

பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ,

பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே. (46)

மணிகளைப் பழித்து அரிய அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை, உள்ளம் மகிழ்ந்து, அணிகலன்களைப் பழித்ததுபோல அணிந்த நல்ல கருப்பம் உற்றாள். அப்பொழுது கருப்பத்தால் வரும் துன்பத்தையெல்லாம் பழித்து மிக்க இன்பம் பெருகி மேல் எழுந்தது. அணிகலன்களைப் பழித்து ஒளிகொண்ட அவளது முகம் சித்திரமாகத் தீட்டிய தன்மையாய் விளங்கிற்று.

தாரொடு சனித்த தேன் தன்மையோ? வளை

ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ,

நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து, ஒரு

சீரொடு, வேற்று இல சிறந்த சூல் அதே? (47)

நீரோடும் ஐந்து பூதங்கள் தம் பகையை நீக்கி ஒரு சீராய் இணைந்து, வேற்றுமை இல்லாமல் சிறந்து அமைந்த அந்தக் கருப்பம், மாலையின் மலரோடு பிறந்த தேனின் தன்மை என்போமோ? சங்கு அழகோடு சூல் கொண்ட முத்து உள்ளிருந்து ஒளிரும் தன்மை என்போமோ?

அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என,

இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி, வெண்

பிறை வளர் நலமென வளர்ந்த பீள் உள

சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ. (48)

அறை வீடுகள் நிறைந்துள்ள ஒரு மாளிகையுள் அரசன் புகுந்தது போல், ஆண்டவன் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, வெண் பிறை வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான்.

வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே,

காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய

தீய் வழி, கரு வழி சேரும் தொல் செயிர்

ஓய் வழி பொறாது, இறை ஒழிய முன்னினான். (49)

வாய் வழியே சென்று உடலெல்லாம் பரவிய நஞ்சினைப்போல் விலக்கப்பட்ட கனியின் வழியாக முன் படைப்புக் காலத்தில் மனித இனமுதல்வனான ஆதன் மனம் இசைந்து அருந்திய பாவத்தின் வழியாக, மானிடர் அனைவர்க்கும் கருப்பத்தின் வழியாக வந்து சேரும் பழைய பாவம், திருமகனின் பாடுகளின் பயனாக ஓயும் வழி ஏற்படும் வரையில் பொறுத்திராது, அப்பொழுதே வளனுக்கு ஒழித்துவிட ஆண்டவன் நினைத்தான்.

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்

கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை

பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர்

விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ  (50)

பிறை வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான். (கருவிலுள்ள சூசையின் உறுப்புகளுக்கு அறை வீடுகளும், உடலுக்கு மாளிகையும், உயிருக்கு அரசனும் உவமை)

தீயவை விலக்கிய சிறப்பின், தேவு அருள்

தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து

ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்

தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள். (51)

பாவத்தோடு தொடர்ந்த தீயவற்றை யெல்லாம் நீக்கிய சிறப்பினோடு, தெய்வ அருளால் தூயனவாகப் பதிந்த வரங்களின் தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து, தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்:

தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு

கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,

சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,

தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ. (52)

தேனைத் தன்னில் மறைத்து, சிறப்போடு வாசனையையும் உள்ளே புதைத்து வைத்திருந்து பின் இரண்டும் புலப்பட விரியும் தாமரை மலர் போல, அத்தாயும் தனது கருப்பத்தில் மறைந்து கிடந்த சிறப்புகளின் மிகுதி உள்ளடங்கமாட்டாது வெளிப்படவே, அவ்வொளி முகமெல்லாம் மூட ஒளிர்ந்து விளங்குவாள்.

சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி

அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்

எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு

பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள்  (53)

சொற்களில் நிறைந்த ஒப்புமையெல்லாம் கெடத்தக்கதோர் அழகோடு பசும் பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, இரவில் நிறைந்துள்ள இருள் கெடுமாறு மேல் வானத்தில் தோன்றிய சந்திரன் கொண்ட அழகுபோல் ஒளி நிறைந்த முகத்தோடு பிறந்த மகனின் அழகைக் கண்டு, பலரும் கொண்டிருந்த துன்ப மயக்கமெல்லாம் கெட, தாயாகிய நீப்பி இன்பப் பயனை அடைந்தாள்.

கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்

கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்

உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும்

தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார்  (54)

குழந்தையைக் கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மேலான ஓர் இன்பமும் கொண்டனர்; தெய்வ அருள் பொறிக்கப்பட்ட முகத்தின் அழகு வீசிய கதிரை உண்டனர்; தெளிவு கொண்டனர்: "இவன் கடவுளின் திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று வாழ்த்தி வெற்றி கூறினர்.

மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி

ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா

ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க

சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள்  (55)

ஆசை மிக்க கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், பொன்னினும் மிக்க நிறமும் மணியின் சாயலுமுள்ள மகனைக் கூர்ந்து நோக்கி, பின் "சூசையே! கற்ற புலவர் இயற்றும் அரிய தொடையுறுப்புகள் கொண்ட செய்யுளின் புகழோசையினும் மிகுந்த புண்ணியத் தொகையாகிய பீடத்தில் உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தி அவனைக் கைகளில் ஏந்தி நம் தந்தையாகிய ஆண்டவனைத் தொழுகின்றாள்.  எனவே, தாய் இட்ட பெயர் சூசை என்றும், அதன் தமிழாக்கமே வளன் என்றும் அறிக.

எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல்

வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற

சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து

அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் . (56)

பகலவனின் கதிரைத் திரட்டிச் சந்திரனுக்குப் பொட்டு இட்டது போல், ஒளி பொருந்திய முகமுள்ள இனிய தாய் தன் மகனை ஏந்தி, ஆண்டவன் திருவடிகளைப் பணிந்து, "இம்மகன் புண்ணியத்தில் இரவுக்கு அரசனாகிய சந்திரன் போல் வளர்வதற்கு ஆசி அருள்வாயாக", என வேண்டினாள்.

வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்

கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி

ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்

வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே (57)

வானுலகத்து ஆண்டவன், வானுலக நலங்களைச் செய்யும் நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, ஆசி வழங்கும் ஒரு குரலில், "வாடாத அருள் கொண்ட இம் மகன் அசையாத நிலையுள்ள அறத்தோடு என் மார்பில் வாடாத மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மாரி பொழிந்தது.    ஆண்டவன் செயல் குரலின் மேல் ஏற்றப்பட்டது.

மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு

எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி

மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்

 கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் (58)

மையினால் நூற்றது போன்ற கரிய அழகிய கூந்தலை உடையவளாகிய தாய், தனக்கு வாய்ந்த மகனின் நலத்தைக் கேட்டறிந்து, இறைவனின் பாதத்தில் விழுந்து தொழுதாள். அதனைத் தொடர்ந்து, வேத முறையினின்று விலகாத சடங்குச் செயல்களையெல்லாம் ஒழுக்க நூல் முறையில் தேர்ந்த அறவோராகிய குருக்கள் நிறைவேற்றி, ஆசி மொழி கனிந்து கூறினர்.

கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ்

ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர்

சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த

தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே  (59)

சுருங்குதல் இல்லாத அழகுள்ள அம் மகனுக்குச் சோதிடக் கணித அறிவுமிக்கோர் கூறும் புகழெல்லாம் பேண வேண்டாத அழகென்று விலக்கிவிட்டு, “புகழெல்லாம் ஒருங்கு கூட்டி எம் தந்தையாகிய ஆண்டவனே இரக்கங்கொண்டு ஒப்பற்ற வாடாத மாலை என்று புகழ்ந்த தேம்பாவணியே!” என்று புகழ்ந்து, அங்குக் கூடி நின்றோர் அக்குழந்தையின் அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களைஅணிவித்தனர்.

செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ

பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர்

வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி

மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார் (60)

செந்நிறம் பொருந்திய வானத்தில் விண்மீன்கள் சூழ்ந்துள்ள பிறைச் சந்திரனின் சிறப்பிற்கு ஒப்பாக அக்குழந்தையின் முகம் விளங்கக் கண்டு நின்றோர், மணிகள் வைத்த சதங்கையும் சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, ஒளி பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய மலர் மெத்தையில் கிடத்தி, “அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு இவனே ஒரு திலகம் ஆவான்”, என்று போற்றுவர்.

வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார்

கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார்

நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார்

நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார்  (61)

சூழ நின்றோர் சிலர், “வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம் மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை”, என்பர். வேறு சிலர், “காட்டில் பொருந்த நின்ற தவத்தை இவன் இனி நாடாகிய இங்கே பொருந்தக் காட்டுவான்”, என்பர். இன்னும் சிலர், “நூல்களுக்கெல்லாம் மேலாக வைக்கப்பட்டுள்ள வேதத்தை விளக்கிக் காட்டும் நுண்ணிய மாண்புள்ள சுடர் விளக்கே இம்மகன்”, என்பர். இவ்வாறு நான்கு வகைக்கும் மேலாக புகழ்ச்சிகளைக் கூறி, இன்பம் எய்தினர்.

வளன் சனித்த படலம் முற்றும்.