கோயம்புத்தூர் கல்லூரி பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயம்புத்தூர் கல்லூரி பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஏப்ரல், 2024

திருமந்திரம்

 திருமந்திரம்

உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

விளக்கம்

சூரியக் காந்தக் கல், பஞ்சு இவற்றை ஒன்றாக சுற்றினால், சூரியக்காந்தகல் பஞ்சை எரித்து விடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் குற்றங்களை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாகிய இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் குற்றங்கள் நீங்கும்.

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

விளக்கம்

இறைவனின் திருமேனி காண்பதும், நாளும் இறைவின் திருப்பெயரை கூறுவதும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கேட்பதுமே சிறந்த அறிவாகும்.

யாக்கை நிலையாமை

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்

ஒருவருடைய உடலில் இருந்து உயிர் போன பின்பு, அதுவரை அவனுடன்  வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர்  என யாவரும் ஒன்றாகக்கூடி அழுகின்றனர். அவனுடைய பேரை நீக்கிவிட்டுப் பிணம் என்று பெயர் இடுகின்றனர். பின்பு அவனுடைய உடலை எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு நீரினில் மூழ்கி எழுகின்றனர். மெல்ல மெல்ல அவன் நினைவுகளையும் மறந்து விடுகின்றனர். இதுவே உலக இயல்பு.

 

மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம தேறிப்

பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி

மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே

விளக்கம்

ஒருவன் இறந்து விட்டால், அவனுடைய மனைவி, சேகரித்த செல்வங்கள் என யாவும் வீட்டிலேயே தங்கிவிட, அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டுவான். அங்கே அவன் பிள்ளைகளும் உறவினர்களும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விடுவார்கள். இதுவும் உலக இயல்பே.

செல்வம் நிலையாமை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே

விளக்கம்

உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் கேட்டுத் தெளிவடையுங்கள். தெளிவடைந்துவிட்டால் துன்பங்கள் இருக்காது. ஆற்று வெள்ளம் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு அறிவிழந்து நிற்காதீர்கள். அந்தச் செல்வங்களை பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். ஏனென்றால், நீங்கள் இறக்கும்போது இறைவன் வந்து அழைக்கும்போது, இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்க முடியாது. இந்தச் செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே

கிவழ்கின்ற நீர்மிசைச் சலெ்லும் கலம்போல்

அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபேறாகச்

சிமிழொன்று வைத்தனை தேர்ந்தறி யாரே

விளக்கம்

நாம் சேமித்து வைக்கின்ற செல்வங்களும், சொத்துக்களும் நிலையில்லாதவை. ஆற்றில் வெள்ளம் வந்தால் படகுகள் எவ்வாறு மூழ்கிவிடுமோ அது போல செல்வங்களும் போய்விடும். அலை வீசுகின்ற கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்குத் துன்பங்கள் ஏற்படுவது இல்லை. அதுபோலவே அழிந்து போகின்ற இந்த உடலுக்கு உள்ளே முக்தியை அடையும் வழியாக குண்டலினி சக்திளை இறைவன் வைத்திருப்பதை ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்வதே சிறந்த ஞானமாகும்.

அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

 

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண் ணாதே.

விளக்கம்

உயிர்கள் யாவும் தம் உடலை வருத்திக் கொண்டு தவம் புரிந்தாலும், தமது உடலைத் தீயில் இட்டு யாகம் புரிந்தாலும், உண்மையான அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய்மையான அன்பே இறைவனை அடையும் மிகச் சிறந்த வழியாகும்.

நடுவு நிலைமை

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை

நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

விளக்கம்

தன் வாழ்வில் எது நடந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எண்ணி, விருப்பு வெறுப்பு இல்லாமல், இறை நெறியில் இருந்து சிறிதும் மாறாமல் நடுநிலைமையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. நடுநிலைமையான மனம் கொண்டவர்களுக்கு நரகமும் இல்லை. அவர்கள் தேவர்களைப் போன்று இருப்பர். அவர்களின் வழியில் நானும் நிற்கின்றேன்.

 

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்

நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்

நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்

நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

விளக்கம்

எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலைமையான மனதுடன்  இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே வாழ்கின்றார்கள். நானும் அத்தகைய நடுநிலைமையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.