திங்கள், 22 மார்ச், 2021

கலித்தொகை - 11 - அரிதாய அறன் எய்தி


கலித்தொகை

பாடியவர் – பெருங்கடுங்கோ

திணை - பாலை


பாடல் 

'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,

பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்

வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,        

கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள்,

துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே

 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,

துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,       

அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை

மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே

 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,

துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் 

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே என

ஆங்கு

 இனை நலம் உடைய கானம் சென்றோர்

புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.

பாடல் விளக்கம்

தலைவி தன் தோழியிடம், “தலைவன் பொருளீட்டச் சென்றார். பொருள் ஈட்டிக் கொண்டு வந்து அறம் செய்து இன்பம் துய்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அற ஒழுக்கத்தை முழுவதும் ஏற்றுத் தவறாமல் நடப்பது மிக அரிது. அவ் ஓழுக்கத்துடன் வாழ்ந்து, அருள் பெறாமல் வாடுபவர்களுக்கு உதவுதல் வேண்டும். பகைதான் எல்லாவற்றிலும் பெரியது. பகைவரை வென்று பிறரைப் பேணாதவர்களை அழித்தல் வேண்டும். இப்படி இல்லாதவர்க்கு அளிக்கும் அறம், எதிரியை அழிக்கும் பொருள், இனியவரைத் துய்க்கும் இன்பம் ஆகிய மூன்றையும் செல்வமாகிய பொருள் தரும் என்று கூறிவிட்டு என்னைப் பிரிந்து சென்றார். அவர் வரவேண்டிய நாள் நெருங்குகின்றது. அவர் வருவதை அறிவிக்கும் அறிகுறியாக பல்லி சப்தமிடுகின்றது. என் இடக்கண் துடிக்கின்றது” என்று கூறுகின்றாள்.  

    தலைவன் சென்ற பாலைநிலம் தாங்கமுடியாத அளவுக்கு சுடும் காடு. அந்தக் காட்டில் யானைக்கன்று, ஆர்வ மிகுதியால்மிகக் குறைவாக இருந்த நீரைக் கலக்கிவிடும். வேட்கை மிகுந்த களிறு அதற்கு ஒருபோதும் கலங்காமல், தன் வேட்கையை முதலில் தீர்க்க முயலாமல், பிடியானைக்கும், தன் கன்றுக்கும் நீர் ஊட்டிவிட்டு, எஞ்சிக் கிடக்கும் நீரை  உண்ணும் காடு அது என்று கூறியுள்ளார்.


அந்தக் காட்டில் இன்பம் இல்லை. இலைகள் காய்ந்து உதிர்ந்துபோய், பட்ட மரங்கள் நிற்பதற்கு நிழல் தராது துன்புறுத்தும் தன்மையது அக்காடு என்றார்.     

அக்காட்டில் வெம்மைத் தாங்காது ஆற்றியிருக்கும் தன் பெண்-புறாவை ஆண்-புறா தன் மென்மையான சிறகுகளால் விசிறிக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

                                            
   
மலைமேல் வளரும் மூங்கில்கள் வாடி வறண்டு போகும் அளவிற்கு வெயில் கொளுத்தும். அந்தக் காட்டில் நிழல் இல்லாமல் வருந்தும் பெண்மானுக்கு அதன் ஆண்மான் தன் உடம்பு நிழலைத் தந்து காப்பாற்றும் என்றும் கூறினார்.
                                      
                                         


இப்படிப்பட்ட காட்டு வழியில் அவர் சென்றார் எனினும், யானையும், புறாவும், மானும் தத்தம் காதலியரை அன்புடன் பேணுவதைக் காண்கின்ற நம் தலைவன், நாம் புனைந்திருக்கும் நல்லணிகளை இழந்து நாம் வாடும்படி விடமாட்டார். அதோ! வீட்டினுள் பல்லியும் நான் கூறுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கின்றது. என் இடக்கண் துடிக்கிறது. இவை இரண்டும் நல்ல நிமித்தங்கள் (சகுனங்கள்). ஆகவே தலைவன் பொருளீட்டிக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணி மகிழ்வோம். அதுவரை நாம் ஆற்றியிருப்போம்” என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

 


 


9 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம். விளக்கத்திற்கேற்ற வரைபடங்கள்.

    பதிலளிநீக்கு