ஞாயிறு, 24 டிசம்பர், 2023

முக்கூடற்பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை

 

முக்கூடற்பள்ளு

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

          போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே.

விளக்கம்

  • நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கு உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னலும், தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும், சூழ வளைத்து மின்னுகின்றன;
  • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றிக் காற்று அடிக்கின்றது;
  • கிணற்று நீரிலே இருக்கின்ற கசொறித்தவளைகள் கூப்பிடுகின்றன; சேற்றிலே வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாதபடி சேற்றினால் வளை வாயில்களை அடைக்கின்றன;
  • நீர்த்துளியை உண்ண ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் ஒரு மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றன;
  • உலகமெல்லாம் போற்றும் திருமாலாகிய அழகருக்குப் பெரியபபண்ணையைச் சேர்ந்த சேரியிலுள்ள பள்ளர் வகையினரெல்லாம் மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோம் வாருங்கள்!

 

 

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

தாய்மொழிப்படலம் - இராவண காவியம்

 

இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம்

பாடல் 1

ஏடுகை யில்லார் இல்லை இயலிசை கல்லார் இல்லை

பாடுகை யில்லார் இல்லை பள்ளியோ செல்லா ரில்லை

ஆடுகை யில்லார் இல்லை அதன்பயன் கொள்ளார் இல்லை

நாடுகை யில்லார் இல்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

விளக்கம்

         இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.

பாடல் 2

தமிழெனது ருகட் பார்வை தமிழெனது உருவப் போர்வை

தமிழெனது உயிரின் காப்புத் தமிழெனது உளவே மாப்புத்

தமிழெனது உடைமைப் பெட்டி தமிழெனது உயா்வுப் பட்டி

தமிழெனது உரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.

விளக்கம்

அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.

பாடல் - 3

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்

பாடெலாந் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமிழ் அகத்து மாதோ.

விளக்கம்

அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.

பாடல் - 4

உண்டியை உண்ணார் பொன்பட் டுடையினை எண்ணார் கன்னற்

கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்

செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்

தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.

விளக்கம்

தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.

பாடல் - 5

பாடுபவ ருக்கும் உரை பண்ணுபவ ருக்கும்

ஏடதுவி ரித்துஉரை யிசைப்பவர் தமக்கும்

நாடுநக ரோடு அவர் நயப்பவை கொடுத்தும்

தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.

விளக்கம்

தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.

 

 

பாபஞ்செய் யாதிரு மனமே - கடுவெளிச்சித்தர்

 

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

விளக்கம்

மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.

1

சாபங்கொடுத்திட லாமோ – விதி

தன்னைநம் மாலே தடுத் திடலாமோ

கோபந் தொடுத்திட லாமோ - இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

விளக்கம்

ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.

2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் - எந்த

நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

விளக்கம்

சூது என்பது சூதாட்டம். பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும், உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள், உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.

3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

விளக்கம்

தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.

4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

விளக்கம்

 ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.

5

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே

ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

விளக்கம்

யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.

6

நல்ல வழிதனை நாடு - எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

விளக்கம்

நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

7

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட

பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

விளக்கம்

உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.

8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

விளக்கம்

வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.

9

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னை யாளாதே - சிவன்

இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

விளக்கம்

ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.

10

மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டி னோர்க் கானந்த மாம் வழி கூறு

விளக்கம்

மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.

காடே திரிந்து, தாயும் பகை - பட்டினத்தார்

பட்டினத்தார்

இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர்

பாடல்

காடே திரிந்து என்ன காற்றே புசித்து தென்ன கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்

நாடே இடைமருதீசர்க்கு மெய் அன்பர் நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டு இன்பம் மேவும் வரை (1)

விளக்கம்

உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.

பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டிர் பெரும் பகை தன்னுடைய

சேயும் பகை உறவோரும் பகை இச் செகமும் பகை

ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்

தோயும் நெஞ்சே மருதீசர் பொன் பாதஞ் சுதந்தரமே (2)

விளக்கம்

வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.


ஈர் ஒற்று, ஒரு, ஓர், அது, அஃது, தான், தாம் வரும் இடங்கள்

 

ஈர் ஒற்று வரும் இடங்கள்

இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

சான்று - புகழ்ச்சி (இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது)

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – காய்ச்சல், மெய்ஞ்ஞானம், மேய்த்தல், வாய்ப்பு

‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – பார்க்கிறாள், உயர்ச்சி, பார்த்தல்,

‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

சான்று – வாழ்க்கை, வாழ்த்து, வாழ்ந்து, தாழ்ப்பாள்


அது, அஃது வரும் இடங்கள்

அது என்ற சொல்லுக்கும், அஃது என்ற சொல்லுக்கும் பொருளில் வேறுபாடு கிடையாது.

அது – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அது புலி, அது வண்டி, அது மாட்டு வண்டி.

அஃது – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: அஃது இல்லை, அஃது ஆமை, அஃது ஏணி


ஒரு, ஓர் வரும் இடங்கள்

ஒரு – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஒரு வீடு,  ஒரு சிங்கம்

ஓர் – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.

சான்று: ஓர் ஆசிரியர்,  ஓர் ஆடு.


தான் தாம் வரும் இடங்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

சான்று - கன்று தனது தலையை ஆட்டியது.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

சான்று - தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

சான்று - மாடுகள் தமது தலையை ஆட்டின.

 


நன்றி

https://theenthamizhchaaral.wordpress.com/2016/09/11/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-9/

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

 

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம்

தமிழின் தொன்மைக்கும், தமிழரின் மேன்மைக்கும் சான்றாக விளங்குவது தொல்காப்பியம். ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல்கள் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்திருக்க, வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியது தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவர் பாயிரம் பாடியுள்ளார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு.

 

எழுத்ததிகாரம்

சொல்லதிகாரம்

பொருளதிகாரம்

1

நூல் மரபு

கிளவியாக்கம்

அகத்திணையியல்

2

மொழிமரபு

வேற்றுமையியல்

புறத்திணையியல்

3

பிறப்பியல்

வேற்றுமை மயங்கியல்

களவியல்

4

புணரியல்

விளி மரபு

கற்பியல்

5

தொகை மரபு

பெயரியல்

பொருளியல்

6

உருபியல்

வினையியல்

செய்யுளியல்

7

உயிர் மயங்கியல்

இடையியல்

உவமவியல்

8

புள்ளி மயங்கியல்

உரியியல்

மெய்ப்பாட்டியல்

9

குற்றியலுகரப் புணரியல்

எச்சவியல்

மரபியல்

 தொல்காப்பியர் – குறிப்பு

          தொன்மை வாய்ந்த காப்பியக் குடியில் தோன்றியமையால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்று இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். இவர் அகத்தியரின் மாணவர். அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூலை முதன்மையாகக் கொண்டே தொல்காப்பியத்தை இயற்றினார் என்பதை அவருடைய தொல்காப்பிய நூற்பாக்கள் சான்று கூறுகின்றன. இவர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன எனினும், கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்ற கருத்துப் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இறையனார் களவியல் உரை

தமிழர்களின் அக வாழ்க்கையைப் பற்றிய இலக்கணநூல். இறையனார் அகப்பொருள் என்றும் கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுந்த நூல். இதனை இயற்றியவர் நக்கீரர். காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு.

நம்பியகப் பொருள்

இந்நூலை இயற்றியவர் நாற்கவிராசநம்பி. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். புளியங்குடியில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்தில் காணப்படும் அகப்பொருள் கருத்துகளைக் காலத்திற்குப் பொருந்திய வகையில் இந்நூல் விரிவாக விளக்குகின்றது. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை என்றும் நூலின் 400 பாடல்களும் நம்பியகப் பொருளின் சான்று பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்பர். இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல் கற்பியல், ஒழிபியல் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.

புறப்பொருள் வெண்பா மாலை

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஐயனாரிதனார் என்பரால் இயற்றப்பட்டது. புறப்பொருளைப் பற்றிக் கூறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை பெருந்திணை  ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. 19 சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையும் ஈரடி நூற்பா ஒன்றால் விளக்கப்படுகிறது. இதனை இதன் உரையாசிரியர் கொளு என்று குறிப்பிடுகிறார். இந்நூலில் 342 கொளுக்கள் உள்ளன.

நன்னூல்

நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இருபெரும் பிரிவுகளை உடையது. ஒவ்வோர் அதிகாரமும் ஐந்து இயல்களைப் பெற்றுள்ளன. 462 நூற்பாக்களை உடையது. இந்நூலுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவர் மயிலைநாதர். சிவஞான முனிவர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர் ஆகியோரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.

எழுத்ததிகாரம் – இயல்கள்

சொல்லதிகாரம் - இயல்கள்

எழுத்தியல்

பெயரியல்

பதவியல்

வினையியல்

உயிரீற்றுப் புணரியல்

பொதுவியல்

மெய்யீற்றுப் புணரியல்

இடையியல்

உருபு புணரியல்

உரியியல்

தண்டியலங்காரம்

    தண்டி என்பவர் வடமாழியில் எழுதிய காவ்யதர்ஸம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பே தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் ஆகும். இது அணி இலக்கணம் பற்றியது. 125 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. இந்நூலின் ஆசிரியர் காஞ்சிபுரத்தில் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியில் வாழ்ந்தவர். இந்நூலின் உரையாசிரியர் குணசாகரர். ஐந்திலக்கணங்களுள் யாப்பிலக்கணம் பற்றி கூறுகின்றது. காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம். “காரிகைக் கற்றுக் கவி பாடுவதைவிட பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது இந்நூலுக்குக் கூறப்படும் பழமொழி ஆகும்.

 

புதன், 11 அக்டோபர், 2023

சமயக் காப்பியங்கள்

சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர். அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார். இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்

4.இயேசு காவியம்

இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப் படைத்தார் என்பர். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறித்துவ இறையியல் அறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய இக்காவியத்தை இயற்றினார். 1982ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் வெளியிடப்பட்டபோது, அன்றைய தமிழக முதல்வர் திரு எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது.

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.  சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 

  ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம் முதலான காப்பியங்களையும், ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை முதலான சிறுகதைகளையும், அரங்கமும் அந்தரங்கமும், கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி முதலான உரைநடை நூல்களையும் இயற்றியவர். இவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற இந்து சமய நூல் மிகவும் புகழ்ப் பெற்றது.

 5.இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

புலவர் குழந்தை

இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.