ஞாயிறு, 31 மார்ச், 2024

தொல்காப்பியப் பூங்கா

 

தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் கருணாநிதி

எழுத்து – முதல் நூற்பா

தொல்காப்பியப் பூங்கா என்ற நூலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப் புதுமையான முறையில் விளக்கம் அளிக்கின்றார். அவற்றுள் எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவிற்குக் கலைஞர் இயற்றியுள்ள கற்பனை நயத்தைப் பின்வருமாறு காணலாம்.

தொல்காப்பியரின் கனவில் அணிவகுத்த எழுத்துகள்

தொல்காப்பியர் “எழுத்து“ என ஓலையில் எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் இருந்தார். எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதால் தொல்காப்பியரின் கனவில் ஒலி எழுப்பியவாறு எழுத்துகள் நடந்து வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அணிவகுத்து நின்றன. முன்வரிசையில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துகளும், பின்வரிசையில் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய எழுத்துகளும் அணிவகுத்தன.

குற்றியலிகரமும் குற்றியலுகரமும்

அப்போது சுவர் ஓரமாக இரு நிழல்கள் தோன்றி ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால் தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல் – என் பெயர் இகரம் என்றது

மற்றொரு நிழல் – என் பெயர் உகரம் என்றது.

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து “நீங்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற வரிசையில் இடம் பெறுவீர்கள். முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் உங்களை அமர வைக்க முடியாது” என்று கூறிவிட்டார்.

ஆய்த எழுத்து

அப்போது கம்பு ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு புதுமையான உருவம் தோன்றி, “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது. தொல்காப்பியர், “நீ ஆயுதம் ஏந்தி ஆய்த எழுத்தாக வந்தாலும் உன்னை முதல் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?” என்று கேட்டார். அவரது கோபம் உணர்ந்த ஆய்த எழுத்து, “ஐயனே என்னை முதல் வரிசையில் வைக்காவிட்டாலும், முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்றாயா? நல்ல வேடிக்கை” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என்று மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர் தாம் எழுதியதைத் திரும்பப் படித்தார்.

“எழுத்தெனப் படுப

அகர முதல் னகர ஈறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1)

“அவைதாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் அவற்றோர் அன்ன” (எழுத்து, நூல் மரபு – 2)

அதில் “முப்பஃ தென்ப” என்ற தொடரில் ஆய்த எழுத்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

விளக்கம்

தமிழ் எழுத்துகளுள், உயிர் எழுத்துப் பன்னிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. குறுகிய ஒலியைக் கொண்ட இகரம் குற்றியலிகரம் என்றும், குறுகிய ஒலியைக் கொண்ட உகரம் குற்றியலுகரம் என்றும், “ஃ“ என்ற எழுத்து ஆய்த எழுத்து என்றும் கூறப்படுகின்றன. இவை மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

இதழியல் - முரசொலி கடிதம்

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

தமிழின் சிறப்புகளை உலகோர் அறியும் வண்ணம் “உலகத் தமிழ் மாநாடு” என்ற பெயரில் பல மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு“ என்ற பெயரில் முதன் முதலாக கோவையில் தமிழ்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும். இம்மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் ஜூன் மாதம் 23 ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. அம்மாநாடு நடப்பதற்கு முன்னர் தம் முரசொலி இதழில் “உடன்பிறப்பே“ என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகளை வழங்கினார் கலைஞர்.  “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற முதல் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு காணலாம்.

கட்டுரையின் கருப்பொருள்

தமிழ் மொழியைச் செம்மொழி என அடையாளப்படுத்துவதற்கு உழைத்த அறிஞர்கள் பலர். அவர்களுள் தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த முதல் அறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். தமிழைச் செம்மொழி என அறிவிக்க அவர் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் இக் கட்டுரையில் விவரிக்கின்றார்.

பரிதிமாற் கலைஞரின் கருத்துகள்

1902 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்னும் இதழில் “உயர்தனிச் செம்மொழி“ என்ற தலைப்பில், “தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி எவ்வாற்றால் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியே என்பது திண்ணம்” என்று விளக்கியுள்ளார். 1903 ஆம் ஆண்டு “தமிழ் மொழியின் வரலாறு“ என்ற தமது நூலில், “தமிழ் – தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழி என்க” என்று பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்தக் கருத்துகள் அறிஞர் பலரின் கவனத்திற்குச் சென்றன. தமிழைச் செம்மொழி என அழைக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் வாதிட்டனர். ஆயினும், தமிழ் மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே உறுதியாக நிலைநாட்டிய பெருமை பரிதிமாற்கலைஞரையே சாரும்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த அரசு மரியாதை

தனியார் பொறுப்பில் இருந்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தி, புதுப்பித்து நினைவு இல்லமாக்கினார். நினைவு இல்லத்தின் முகப்பில் பரிதிமாற் கலைஞரின் மார்பளவு சிலையை நிறுவினார். அந்த இல்லத்தைத் திறந்து வைத்து, “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக் குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் புகழ் வாழ்க” என்று பார்வையாளர் புத்தகத்தில் கையொப்பமிட்டார். பரிதிமாற்கலைஞரின் அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்கினார். அவரது மரபுரிமையாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கினார். 2007 ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பணி

தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க “நாடகவியல்“ என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டபோது, திரு பூர்ணலிங்கம் அவர்களோடு இணைந்து, தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று, முயன்று பல்கலைக்கழகத்தின் திட்டத்தைத் தடுத்தார். தமிழ்மொழி தொடர்ந்து பல்கலைக்கழகப் பாடமொழியாக நீடித்தது. தமிழ் மொழியின் வரலாறு என்ற தம் நூலில், வடமொழியாளர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுடைய வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.  அக்கருத்துகள் யாவும், தமிழர் அனைவராலும், குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் அனைவராலும் நினைவு கூரத்தக்கதாகும். ஆகவேதான், சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களை முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று தன் நெஞ்சத்து உணர்வு கலந்து வாழ்த்துவதாக இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.


குறிப்பு - முரசொலி இதழில் கலைஞர் கருணாநிதி அவர்கள் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட கடிதம், மாணவர்கள் தேர்வுக்கு எளிதாகப் படிப்பதற்காகச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலப்பகுதி பின்வரும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காண்க.

https://library.cict.in/uploads/files/books/4.pdf

இந்நூலை வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

 

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாடகம், 1949ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கே.ஆர்.இராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், எம்.வி.இராஜம்மா, வி.என்.ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

வட்டியூர் ஜமீன்தார் வேதாச்சலம் பணவெறியும் ஜாதி வெறியும் பிடித்தவர். அவருக்கு சரசு, மூர்த்தி என இரண்டு பிள்ளைகள். சரசு தான் செல்வந்தரின் மகள் என்ற ஆணவம் கொண்டு, தன் வீட்டு வேலைக்காரியாகிய அமிர்தத்தை எப்போதும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். மூர்த்தி நல்ல பண்புள்ளம் கொண்டவன். சரசு அமிர்தத்தைக் குறை கூறும்போதெல்லாம் மூர்த்தி அவளுக்காகப் பரிந்து பேசுகின்றான்.

அமிர்தம் – மூர்த்தி காதல் கொள்ளுதல்

அமிர்தத்தின் தந்தை முருகேசன் வேதாச்சலத்தின் நம்பிக்கையான பணியாள். அவர் தன் மகளுக்கு வயதான ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கின்றார். அமிர்தம் அத்திருமணத்தை மறுக்கின்றாள். வேதாச்சலமும், சரசுவும் முருகேசனுக்கு ஆதரவாக பேச, மூர்த்தி அமிர்தத்திற்கு ஆதரவாக பேசுகின்றான். மாப்பிள்ளை வீட்டினர் அமிர்தத்தைப் பெண் பார்க்க வருகின்றனர். அப்போது மூர்த்தி தந்த யோசனையின் பேரில் தன் முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு நிற்கின்றாள் அமிர்தம். இப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்தை நிறுத்துகின்றனர். நாளடைவில் மூர்த்தியும் அமிர்தமும் காதல் கொள்கின்றனர்.

சுந்தரம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளுதல்

          அந்த ஊரில் மானத்திற்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுந்தரம் பிள்ளை வேதாச்சலத்திடம் கடன் வாங்குகின்றார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் வேதாச்சலம் சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு வந்து அவரைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்ட, சுந்தரம்பிள்ளை அவரிடம் கெஞ்சுகின்றார். வேதாச்சலம் மனம் இரங்காதது கண்டு, அவமானம் தாங்காமல் தன் வீட்டு மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார்.

சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன் வருகை

          தேயிலைத் தோட்டத்தில் இரவும் பகலும் உழைத்து, 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, தன் தந்தை சுந்தரம் பிள்ளைக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கும் ஆவலோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பும் ஆனந்தன் வழியில் தன் நண்பன் மணியோடு உரையாடிக் கொண்டு வருகின்றான். வீட்டிற்குச் சென்றபோது தன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறுகின்றான். தன் தந்தையின் கையில் இருநு்த கடிதத்தைக் கண்டு, இதற்கெல்லாம் காரணம் வேதாச்சலம் என்பதை அறிகின்றான். அவரைப் பழிவாங்கத் துடிக்கின்றான்.

மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுதல்

ஆனந்தன் வேதாச்சலத்தைக் கொலை செய்வதற்காகக் கத்தியைத் தீட்டுகின்றான். இதைக் கண்ட மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுகின்றான். “பழி வாங்கும் திட்டத்தை விட்டுவிடு. அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் முன்பாக அவனைத் தலைகுனிய வைக்க வேண்டும். அதற்கான வழியை நாம் செய்ய வேண்டும்” என்று கூற, ஆனந்தனும் மணி சொல்வது சரி என்று ஒப்புக் கொள்கின்றான்.

ஆனந்தன் தற்கொலைக்கு முயலுதல்

வேலை செய்யும் இடத்தில் ஆனந்தன் ஒருவனிடம் கடன் வாங்க, கடன் கொடுத்தவர் ஆனந்தனைத் தகாத வார்த்தையில் பேசி, உன் தந்தைபோல நீயும் எங்கேயாவது சாக வேண்டியதுதானே” என்று கூற மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கின்றான் ஆனந்தன். ஆனால் அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்கின்றது. அந்த சமயத்தில் மணியும் வந்து விட, மணியிடம் புலம்புகின்றான் ஆனந்தன். அப்போது “காளியின் அருள் வேதாச்சலம் போன்ற செல்வந்தனுக்குத் தான் கிடைக்கும் உன்னைப்போன்ற ஏழைக்கு எப்படி கிடைக்கும்” என்று கூற, ஆனந்தன் நேரே காளியின் கோயிலுக்குச் சென்று, காளியிடம் ஆவேசமாகப் பேச ஆட்கள் வந்து அவனை விரட்டுகின்றனர். பொதுமக்கள் ஆனந்தனை துரத்துகின்றனர். இதைக் கண்ட மணி, ஒரு பாழுங்கிணற்றைக் காண்பித்து அதில் நீ ஒளிந்து கொள் என்று கூற ஆனந்தனும் ஒளிந்து கொள்கின்றான்.

ஆனந்தனைத் தேடி மணியும் வர, இருவருக்கும் ஒரு மூட்டை கண்ணில் படுகின்றது. அம்மூட்டையில் இறந்த உடல் ஒன்றைக் காண்கின்றனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் உள்ள மனிதன் ஆனந்தன் மாதிரியே இருக்கின்றார். கூடவே அவரது நாட்குறிப்பும் கிடைக்கின்றது. அதன் மூலம் அவருடைய பெயர் பரமானந்தம் என்றும், அவர் மிகப் பெரும் செல்வந்தர் என்றும், அவருடைய தாயார் கண் பார்வை அற்றவர் என்றும், விலை உயர்ந்த வைரங்கள் அவனிடம் இருந்தததால் அதை அறிந்த எவனோ அவனைக் கொலை செய்துள்ளான் என்றும் அறிகின்றனர்.

ஆனந்தன் பரமானந்தனாக மாறுதல்

வேதாச்சலத்தைப் பழிவாங்க இதுவே சரியான வழி என்று எண்ணிய மணி, ஆனந்தனைப் பரமானந்தனாக மாற்றுகின்றான். இருவரும் பரமானந்தன் வீட்டிற்குச் செல்கின்றனர். பரமானந்தனின் தாயாரைச் சந்திக்கின்றனர். வெளியூருக்குச் சென்ற மகன் திரும்பிவிட்டான் என்று எண்ணி அந்தத் தாய் மகிழ்ச்சி கொள்கின்றாள். தன் மகனுக்கு வேதாச்சலத்தின் மகள் சரசாவை மணம் பேச வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அதனை ஏற்ற மணி, வெளிநாட்டுக்குச் சென்ற பரமானந்தன் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றான் என்பதைச் செல்வந்தர் பலருக்குத் தெரியப்படுத்த ஒரு பார்ட்டி நடத்தலாம் என்று யோசனை கூற, தாயும் சம்மதிக்கின்றாள். அதன்படி வேதாச்சலம் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கின்றார். அவனுடைய செல்வமும், பரமானந்தனின் அழகும் அவரை ஈர்க்கின்றது. தன் மகள் சரசாவைப் பரமானந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்.  

பரமானந்தன் வேதாச்சலத்தைப் பழி வாங்குதல்

 பரமானந்தன் வேடத்தில் இருக்கும் ஆனந்தன் வேதாச்சலத்தின் மீதான தன் பழியைத் தீர்த்துக் கொள்ள தன் மனைவியைப் பலவாறு கொடுமைப்படுத்துகின்றான். பொய்யாகக் குடித்து, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல நடித்துத் தன் மாமனார் வேதாச்சலத்தின் நற்பெயரைக் கெடுக்கின்றான். அமிர்தத்திடம் தவறாக நடப்பதுபோல காட்டி, மூர்த்திக்கும் தன் மாமனாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகின்றான். இதனால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுகின்றான். சென்னை சென்று தன் நண்பரின் உதவியைப் பெற்ற பிறகு அமிரத்தத்தைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டுச் செல்கின்றான்.

அமிர்தம் பாலுவின் மகளாக மாறுதல்

அமிர்தத்தைத் தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காவது மணமுடிக்கலாம் என்று அவரது தந்தை திட்டமிடுகின்றார். அதைக் கவனித்த அமிர்தம் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தான் ஏறி வந்த லாரியின் முதலாளி சொல்லுக்கிணங்க பழம் விற்கும் தொழிலைச் செய்கின்றாள். அப்போது ஒரு நாள் தெருவில் பழம் விற்றுக் கொண்டிருக்கும்போது, பாலு முதலியார் என்பவர், அவளைக் கண்டு தன் மகள் சுகிர்தம் நீதான் என்று கூறி, வலுக்கட்டாயமாக அவளை ஒரு மருத்துவமனைக்கு இழுத்துச் செல்கின்றார். அங்கே மருத்துவர் இருவரையும் புரிந்து கொண்டு, அமிர்தத்திடம், “இவர் ஒரு விபத்தில் தன் மகளை இழந்து விட்டார். அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு உன்னைத் தன் மகளாக எண்ணுகின்றார்” என்று கூற, அமிர்தம் அவரைத் தன் தந்தைபோல பாவித்து, தன்னால் ஆன உதவி செய்து அவரைக் குணமாக்குகின்றாள். குணமான பின்பு பாலு முதலியார் அவளுடைய வாழ்க்கையின் அவல நிலையைக் கேட்டு, தன் மகளாக அவளை ஏற்றுத் தன் வீட்டிலேயே வாழச் செய்கின்றார்.

மூர்த்தியின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்றல்

தங்களிடம் உதவி கேட்டு வந்த மூர்த்தியை அவனுடைய  நண்பர்கள் நிராகரிக்கின்றனர். அமிர்தம் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியைக் கேள்விப்படுகின்ற மூர்த்தி மனமுடைந்து போகின்றான். நண்பர்களின் நிராகரிப்பும், காதலித்தவளின் மரணமும் அவனைத் துன்புறுத்துகின்றது. அதனால் மன அமைதி பெற யோகி நடத்துகின்ற ஆசிரமத்திற்குச் செல்கின்றார். யோகி உண்மையான ஆன்மிகவாதி அல்ல என்பதைக் கண்டுபிடிக்கின்றார். இருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் யோகி இறந்து விட, மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார். இதை அறிந்த ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து, “யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்றும், நடந்தது கொலை அல்ல தற்காப்புக்காக நடந்த சண்டையில் அவர் உயிரிழக்க நேரிட்டது“என்று வாதிடுகின்றார். நீதிமன்றம் மூர்த்தியை விடுதலை செய்கின்றது.

மகிழ்ச்சியான முடிவு

பாலு முதலியாரின் வீட்டில் இருக்கும் சுகிர்தம், வேதாச்சலம் வீட்டின் பணிப்பெண் அமிர்தம்தான் என்பதை மணியின் மூலமாக ஆனந்தன் தெரிந்து கொள்கின்றான். ஆனந்தன் தன் வழக்காடியதற்குக் கட்டணமாக பாலுவின் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். சுகிர்தம் என்ற பெயரில் இருக்கும் அமிர்தத்தை மூர்த்தி திருமணம் செய்து கொள்கின்றார்.

இறுதியாக, வேதாச்சலத்திடம், தான் யார் என்பதையும், தன் தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்பதற்காகவே சரசாவை திருமணம் செய்து கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தியதாகவும், ஜாதி வெறியை அடக்கவே, அமிர்தத்திற்கும் மூர்த்திக்கும் திருமணத்தை நடத்தினேன் என்றும் ஆனந்தன் விவரிக்கின்றான். இவற்றையெல்லாம் கேட்ட வேதாச்சலம் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கின்றார். யாரும் தன்னை ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறி, தன் ஜாதி வெறியும், பணத்திமிரும் ஒழிந்து விட்டது என்பதை வெளிப்படுத்த, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நாட்டு மக்களுக்கு உரைப்போம்” என்று கூறுவதோடு நாடகம் நிறைவுறுகின்றது.

 

சாக்ரடீஸ்

 

சாக்ரடீஸ்

ராஜா ராணி என்ற திரைப்படம் 1956 ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் அவர்களின் இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களால் திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகிய ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

கதைச் சுருக்கம்

ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இந்த நாடகம் மூன்று காட்சிகளைக் கொண்டது. முதல் காட்சியில், சாக்ரடீஸ், கிரேக்க இளைஞர்களிடம் “சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அறிவை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று கூறி பிரச்சாரம் செய்கின்றார். இரண்டாம் காட்சியில், அணிடஸ் மற்றும் மெலிடஸ் இருவரும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுக்கின்றனர். நீதிபதி சாக்ரடீஸிற்கு விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரணதண்டனை வழங்குகின்யறார்.  மூன்றாம் காட்சியில், சாக்ரடீஸ் தன்னுடைய நண்பனையும் மனைவியையும் தேற்றி இறுதி உரை ஆற்றுகின்றார்.

முதல் காட்சி – கிரேக்க நகரத்தில் சாக்ரடீஸ் அறைகூவல்

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் வீதியில், “இளைஞர்களே! உங்களையே நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தில் இருக்கும் குறைகளை மறைப்பது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடிப் பெறவேண்டும். இதற்காகத்தான் நான் உங்களை அழைக்கின்றேன். விவேகம் இல்லை என்றால் ஈட்டியோ வாளோ போதாது.  நான் தரும் அறிவாயுதமும் உங்களுக்குத் தேவை. ஏனெனில் அறிவாயுதமே உலகின் அணையாத ஜோதியாகும்” என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் இந்த உரை அரசுக்கும் ஆட்சிக்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது. அரசியல்வாதியான அணிடஸும் அவன் நண்பனான கவிஞன் மெலிடஸும், கிரேக்க மக்களுக்கு அறிவை வழங்கி கொண்டிருக்கும் சாக்ரடீஸ், குமுறும் எரிமலையை விட கொந்தளிக்கும் கடலை விட ஆபத்தானவன் என்று கருதி, கிரேக்க மக்கள் அறிவைப் பெறுவதற்குள் சாக்ரடீஸை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சாக்ரடீஸை கைது செய்கின்றனர்.

இரண்டாம் காட்சி-நீதிமன்ற காட்சி

நீதிமன்றத்தில் அணிடஸ் சாக்ரடீஸைப் பார்த்து, “அரசாங்கத்திற்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்” என்று கேலி செய்கின்றான். சாக்ரடீஸோ தலை நரைத்த அணிடஸைச் சுட்டிக் காட்டி, “கடல் நுரை போல் நரைத்துவி்ட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே” என்று சிரிக்கின்றார். தன்னை அடக்க எண்ணிய மெலிடஸைப் பார்த்து, “என் தலையில் இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு, உன் தலையில் இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனை, அரசியல்வாதி அணிடஸின் தலையில் இருந்து பீறிடும் அதிகார ஆணவம், இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டத்தின் விளைவுதான் இந்த வழக்கு” என்று விளக்குகின்றார்.

உடனே மெலிடஸ், சாக்ரடீஸ் இப்படிப் பேசித்தான் கிரேக்கத்தின் வாலிபர்களை கெடுப்பதாக குற்றம் சாட்டினான். உடனே சாக்ரடீஸ், “ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா?” என்று வாதிடுகின்றார். மேலும், “நீங்கள் எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மை செய்யும் போது நான் ஒருவன் எப்படி அவர்களைக் கெடுக்க முடியும்?’ என்று எதிர்வாதம் புரிகின்றார். அணிடஸ் குறுக்கிட்டு “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்“ என்று கூற, சாக்ரடீஸ் “அதை இருண்ட வீட்டிற்கு ஒரு விளக்கு” என்றும் கூறலாமே? இளைஞர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையாத கருத்துகள், தரம் குறையாத கொள்கைகள்” என்று விளக்கினார்.  இதற்கு மேல் அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்று கருதிய நீதிபதி விஷம் அருந்தும் மரண தண்டனையை சாக்ரடீஸுக்குத் தீர்ப்பளிக்கின்றார்.

மூன்றாம் காட்சி – சிறைச்சாலைக் காட்சி

முப்பது நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விஷம் அருந்தவேண்டிய நாளில் தன் மனைவி எக்ஸ்சேந்துபியிடம், “நான் வீண் வாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்று கோபித்துக் கொண்டாயே. இப்போது பார். உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். நீ மிகவும் பாக்கியசாலி. பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப் போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி. குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறினால் நான் உங்களைத் திருத்த முயன்றது போலவே, நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள். நேரமாகின்றது. காவலர்கள் கோபித்துக் கொள்வார்கள். சென்று வா” என்று கூறி தன் மனைவியையும், பிள்ளைகளையும் தேற்றி தன் நண்பன் கிரீடோவிடம் அவர்களை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்.

பிறகு சிறைக் காவலனிடம் விஷம் அருந்தும் முறையைக் கேட்டறிகின்றார். சிறைக் காவலன், “பெரியவரே, விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக் கொண்டே வரும். பிறகு படுத்து விட வேண்டும்” என்று விவரிக்கின்றான்.

இதைக் கேட்ட சாக்ரடீஸ் “ஆனந்தமான நித்திரை. கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை” என்று கூறி, காவலனிடம் விஷத்தை ஆனந்தமாகப் பெறுகிறார். நண்பன் கிரீடோ சாக்ரடீஸிடம், “நண்பா, சிறிது நேரம் பொறுத்துக் கூட சாப்பிடலாம். சிறைச்சாலையில் அதற்கு அனுமதி உண்டு” என்று கூற, சாக்ரடீஸோ, “இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக் கொள். அதற்குள் என் இதயம் வெடித்து இறந்து விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது? இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல. இந்த உடலைத்தான்” என்று கூறினார்.

 அவரின் வார்த்தைகளைக் கேட்ட கிரீடோ சாக்ரடீஸிடம், “ஏதென்சின் எழுச்சிமிகு சிங்கமே! எனக்குக் கடைசியாக ஏதாவது சொல்” என்று கேட்க, சாக்ரடீஸ் இறுதி உரை ஆற்றுகின்றார்.  

 “உன்னையே நீ அறிய வேண்டும். எதற்கு? ஏன்? எப்படி? என்று கேள்! அப்படிக் கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும் இந்த உலகத்தும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார்.

கிரீடோ சாக்ரடீஸிடம் ”உன் பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?” என்று கேட்க, “புதைப்பதாயிருந்தால் இந்நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளை என்னோடு புதைத்து மண்ணாக்கிவிடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விடு” என்று வீரம் பொங்கக் கூறுகின்றார். இறுதியாக, “எனதருமை ஏதென்சு நகரத்துப் பெருமக்களே! உண்மையாகவே நான் இளைஞர்களைக் கெடுப்பதாக யாராவது நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். வருகிறேன். வணக்கம்” என்று கூறி கூறி விஷமருந்தி மரணத்தைத் தழுவினார் சாக்ரடீஸ்.


reference : https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s

வியாழன், 14 மார்ச், 2024

சமயக் காப்பியங்கள் - கம்பராமாயணம், பெரியபுராணம், தேம்பாவணி, சீறாப்புராணம்

 சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர்அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறதுவடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர்இக்காப்பியம் கம்பநாடகம்கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனஇந்நூலில்பாலகாண்டம்அயோத்தியா காண்டம்ஆரணிய காண்டம்கிட்கிந்தா காண்டம்சுந்தர காண்டம்யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர்தந்தையார் பெயர் ஆதித்தன்காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர்இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றதுஇவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார்இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபதுதிருக்கை வழக்கம்சரசுவதி அந்தாதிசடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டதுசைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறதுசுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகைநம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும்சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டதுஇதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றதுபன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார்இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில்சேக்கிழார் குடியில் தோன்றிவர்இயற்பெயர் அருண்மொழித் தேவர்சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன்சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.

                                        4.தேம்பாவணி 

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.

·       தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.

·       தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான்டைன் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். தமிழ் மீது கொண்ட பற்றால்  தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும், தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி ரத்தமின்றி

 

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!

விளக்கம்

   நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார். 

    கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.

    ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை.  உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. 

    தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

    இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.  முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

 

சனி, 9 மார்ச், 2024

தம்பிக்கு - மு.வரதராசனார்

 

தம்பிக்கு - மு.வரதராசனார்

முதல் கடிதம்

முன்னுரை

            டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார். அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் கடிதத்தில் அவர் இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகளைப் பின்வருமாறு காணலாம்.

நன்மை - வன்மை

 நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் வாழ்க்கையில் துன்புற்று வீழ்கின்றர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர். இதற்கு நாடு, வீடு எதுவும் விதிவிலக்கல்ல. அதன்படி தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உடல் - உள்ளம்

வாழ்க்கையில் ஒன்றை மட்டும் போற்றுகின்றவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றி வாழ்ந்தால், உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்தி அழிக்கின்றது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றுகின்றவனுக்கு, உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து, அவனுடைய உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அழிக்கின்றது. எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

அறநெறி – பொருள்நெறி

வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறத்தை நினைத்து பொருளை மறக்கும்படியாகவோ, பொருளைப் போற்றி அறத்தை மறக்கும்படியாகவோ அவர் கூறவில்லை. வாழ்க்கையின் பல பகுதிகளைப் போற்றி வாழ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. திருக்குறளைப் பெற்ற நாம், திருவள்ளுவரையும் போற்றவில்லை. திருக்குறளையும் போற்றவில்லை. போற்றினால் நம் வாழ்வு வளம் பெறும்.

தமிழ்மொழி – வன்மை மொழி

நல்ல மொழியான தமிழை வன்மை பொருந்திய மொழியாக நாம் ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது. நல்ல இசை தந்த யாழ் என்னும் இசைக்கருவி புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மக்கள் மனதில் இருந்து நீங்கிவிட்டது. தற்போது தமிழ் மொழிக்கும் அதே நிலைதான் இருக்கின்றது.

பொதுமக்கள் - களிமண்

பொதுமக்களின்  விருப்பம்போலவே ஆட்சி நடக்கின்றது என்று கூறுவது தவறு. காரணம் பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அணுகுண்டை விரும்பவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை, வறுமையை விரும்பவில்லை. தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

கடமை – மேடைப் பேச்சு

களிமண் பிசைகின்றவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவதுண்டா? இல்லை. அவர்களை மாற்றுவதற்காக, நாம் ஏதேனும் செய்தோமா? அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதைச் சற்று நிறுத்திவிட்டால் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது. “இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக” என்று கூறிய வள்ளுவரை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முடிவுரை

இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு என்று இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் கடிதம்

முன்னுரை

மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது என்பது ஆசிரியரின் கூற்று. ஆகையால் உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார் மு.வரதராசனார்.

வீண் கனவு அல்ல

            “திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும். அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆளுநர் தமிழில் கையாப்பம் இட வேண்டும்“ என்ற இவை யாவும் வீண் கனவு என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால் அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; அவற்றின் பெருமை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; வங்காளத்திற்குத் தொண்டு செய்ய சென்றபோது, அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

தமிழரின் குறை

பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தான் உணர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்றுகின்றனர். தமிழர் நெஞ்சம், உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டு வந்தது. அதனால் சொல்கின்றவர் யார்? உண்மையாக சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.  விளைவு “புறமுதுகு காட்டாத தமிழர்களை இதோ என் சொல்லால் வீழ்த்தி விட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்து விட்டேன். இனி, தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம். அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்ப வேண்டும் என்று வள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.

மொழிப்பற்று

            மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும் நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள்.  இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். நாட்டுப் பற்றையும், இனப்பற்றையும், பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப் பற்று அங்கே ஒழிந்தால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுப் பாடத்தை வாழ்ந்து காட்டத் தொடங்கிவிடுவான் தமிழன். எனவே, தமிழன் மற்றவர் சொல் கேட்கும் பேதை ஆகிவிடக்கூடாது. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

முடிவுரை

            இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

 

 

 

 

 

 

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஏழாவது சுரம்

கதவை இழுத்து மூடியதால்

எட்டாவது சுரம்

ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை

ஆலாபனை நிறுத்திவிட்டுக்

கதவைத் திறக்க

ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்

எழுதி வைத்திருக்கலாம் வாசலில்

“எட்டாவது வண்ணத்திற்கு

இங்கு இடம் இல்லை“!

அதற்காக

உறங்க முடியாத வானம்

நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்

வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத்து துடித்த

எட்டாவது கிழமை

ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால்

மாதத்தின் மார்பு துடித்து

வெடித்திருக்காதா?

வள்ளுவ!

எட்டாவது சீர்

உன்னைத் தேடி வந்தபோது

என்ன செய்தாய்?

“போடுவதற்கு ஒன்றுமில்லை

போ”

என்று

வாசல் யாசகனை

வீடுகளில் விரட்டுவதுபோல்

விரட்டி விட்டாயா?

எட்டாவது சீர்

ஏன் உனக்கு தேவைப்படவில்லை?

யாப்பு

கூப்பிட்டு மிரட்டியதால்

ஏற்பட்ட அச்சமா?

ஏழு சீர்களிலேயே

ஒளி தீர்ந்து போனதா? – ஈற்று

முச்சீரடியில் உனக்கும்

மூச்சு முட்டியதா?

“காசும்” “பிறப்பும்”

உன்முன் வந்து கண்களைக்

கசக்கினவா?

“நாளும்” மலரும்”

நச்சரித்தனவா?

இல்லை

எட்டாவது சீர்தான்

அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்

கடைசிக் குறளின் காலடியே

எட்டாவது சீர் ஒன்று

தோளில் என்னைத் தூக்கிக்கொள்

என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்

கடைசி அலையின்

தாகத்தைத் தணிப்பது என்வேலை

இல்லை என்கிறாயா?

சிந்தனைகளை எண்ணியவனே?

நீ

சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு

எண்ணங்களே முக்கியம்

எங்களுக்கோ

எண்ணிக்கையே முக்கியம்

ஏழு சீர்களில்

சொன்னதே எதற்கு என்று

எண்ணிக் கொண்டிருக்கிறேன்

ஏன்

எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு

என்கிறாயா?

போதைப் “பொருளுக்கு”

அறத்தையும் இன்பத்தையும்

அவசரமாய் அடகு வைப்பவர்கள்

நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

வீடு தேடுகிற

வெறியில்

அறம் பொருள் இன்பத்தை

மிதித்துக் கொண்டு

ஓடுகிறவர்கள் நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

இலக்கணக்காரன்

இப்போது எப்படி ஏங்குகிறான்

தெரியுமா?

எட்டாவது சீருக்கு

இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்

சொல்லியிருப்பாயே!

வாய்ப்புள்ளவன்

அந்த ஒரு சீரில் சிந்தித்து

வரிகளைச் சமப்படுத்தட்டும்

என நான்தான்

விட்டு வைத்திருக்கிறேன்” என்கிறாயா?

என்னோடு

நிறைவடைந்து விடவில்லை

சிந்திக்க இடம்

இன்னும் உண்டு என்பதைக்

கோடி காட்டுகிறாயா?

உண்மையின்

உள்ளத்திலிருந்து பேசுபவர்

எவரோ அவரே – நீ

எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்

வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்

இப்போது உன் சிலை முன்

உண்ணாவிரதம் இருக்கின்றன

என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்

நீ வந்து இன்னொரு திருக்குறள்

எழுதும்போது

ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

விளக்கம்

உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமடளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

இசையின் சுரங்கள் ஏழு

இசையின் சுரங்கள் ஏழு. எட்டாவது சுரம் அனுமதிக்கப் படாததால் இசையின் தேவதை தன் ஆலாபனையை நிறுத்தி விட்டுக் கதவை திறக்க ஓடியிருப்பாள். ஏனெனில் இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை.

வானவில்லின் நிறம் ஏழு

வானவில்லின் நிறம் ஏழு. எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால் வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம். நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை என்பதை வானவில் உணர்ந்திருக்கும்.

வாரத்தின் நாட்கள் ஏழு

வாரத்தின் நாட்கள் ஏழு. எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

வள்ளுவத்தின் சீர் ஏழு

எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடி போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

ஏழு சீர்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் ஒளி தீர்ந்திருக்கலாம்.

அலகிடும் வாய்ப்பாடுகளான காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதல் அடியாக இருக்கின்றதோ என்று எண்ணினால் இல்லை. ஏனெனில், கடைசி குறளின் காலடி என்னைத் தோளில் வைத்துக் கொள் என்று கெஞ்சியிருக்க வாய்ப்புண்டு.

கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்க்க முடியாது என்பதுபோல   கடைசிக் குறளின் வேண்டுகோளை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

சிந்தனைகளை எண்ணிய வள்ளுவர் சீர்களை எண்ணவில்லை. ஆனால் நமக்கோ எண்ணிக்கைதான் முக்கியம். அவர் தந்த கருத்துகளை ஆராய்வதை விட்டு, ஏன் அவர் ஏழு சீர்களுக்குள் திருக்குறளை அமைத்திருக்கின்றார் என்று ஆராய்கின்றோம்.

ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

பணம் என்ற போதைக்கு அடிமையாகி அறத்தையும், இன்பத்தையும் அடகு வைக்கின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

வீடுபேறு தேடுகின்ற வெறியில் அறம், பொருள், இன்பத்தை எல்லாம் மதிக்காமல் மிதித்துக் கொண்டு ஓடுகின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

வாய்ப்புள்ளவர்கள் சீர்களைச் சமப்படுத்தட்டும் என்று வள்ளுவர் அதை விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்.

உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

மீண்டும் அவர் வந்து இன்னொரு திருக்குறள் படைக்கும்போது ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டும் என்று எட்டாவது சீர்கள் எல்லாம் திருவள்ளுவரின் சிலை முன் உண்ணாவிரதம் இருக்கின்றன.

என்று கவிநயத்தோடு இக்கவிதையைப் படைத்திருக்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.