சனி, 5 நவம்பர், 2022

சிற்றிலக்கிய வரலாறு

 

சிற்றிலக்கிய வரலாறு

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோன்றியதாகக் கூறுவர். இக்காலத்தில் தொடர்நிலைச் செய்யுட்களான காப்பியங்கள், புராணங்கள் போன்ற இலக்கியங்கள் எழவில்லை. மாறாக, பள்ளு, குறவஞ்சி, உலா உள்ளிட்ட சிறு சிறு இலக்கியங்கள் தோன்றின. இவ்வகை இலக்கியங்கள் பிரபந்தங்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. பிரபந்தங்கள் 96 வகைப்படும் என்றும், பாட்டியல் நூல்கள் அவ்விலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன என்றும் தமிழிலக்கிய வரலாறு குறிப்பிடுகின்றது. இப்பிரபந்த நூல்களே சிற்றிலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன.

சிற்றிலக்கியம் – விளக்கம்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை உறுதிப்பொருட்களுள் எவையேனும் ஒன்றைப் பற்றியோ, இரண்டைப் பற்றி மட்டுமோ பாடப்படுபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன.
  • இவை ஒரு சில துறைகளை மட்டும் பாடுகின்றன.
  • சுருங்கிய அளவில் எளிதில் படித்து முடிக்கக் கூடியனவாக இருக்கின்றன.
  • இறைவன், மன்னன், வள்ளல், குரு ஆகியோரின் சிறப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இவ்விலக்கியங்கள் அகம் பற்றியனவாகவும், புறம் பற்றியனவாகவும், அகம் புறம் இரண்டும் பற்றியனவாகவும் வகை பிரிக்கப்படுகின்றன.

மக்கள் செல்வாக்கு பெற்ற சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கிய வகைகள் 96 என்பர். வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி 96 நூல்களைப் பட்டியலிடுகின்றது. அவற்றுள் மக்கள் செல்வாக்குப் பெற்ற சிற்றிலக்கியங்கள் சிலவேயாகும். அவை, கலம்பகம், தூது, உலா, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, பள்ளு, பரணி ஆகியனவாகும்.  இவ்விலக்கியங்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

கலம்பகம்

பல பூக்களைக் கலந்து மாலையாகத் தொடுப்பது போல பல வகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு, அகம் புறப் பொருட்களை கலந்து பாடப்படும் இலக்கியம் கலம்பகம் ஆகும். தெய்வங்கள், மன்னர்கள், மக்களுள் சிறந்து விளங்குபவர்கள் இவ்விலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்ளாவர்.

கலம்பக உறுப்புகளும் அமைப்பும்

கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை, புயவகுப்பு, அம்மானை, தவம், வண்டு, வாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் ஆகியனவாகும்.  இவ்விலக்கியம் அந்தாதித் தொடையால் 100 பாடல்கள் வரை பாடப்படும். கடவுளுக்கு 100, முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 என்னும் பாடல் எண்ணிக்கை அமைப்பைப் பெற்று பாடப்படுகின்றது.

சில கலம்பக நூல்கள் – திருவரங்கக் கலம்பகம், நந்திக் கலம்பகம், தில்லைக் கலம்பகம்.

நந்திக்கலம்பகம்

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிப் பாடியுள்ளது. கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது. இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. 144 பாடல்களைக் கொண்டுள்ளது. 44 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பர். நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் இவனை வீர்த்ிலும் அறிவிலும் கொல்ல முடியாமல் தவித்து, இறுதியாக அறம் வைத்துப் பாடல் பாட முடிவு செய்கின்றனர். அறம் வைத்துப் பாடப்பட்ட பாடலின் சொற்சுவையில் மயங்கிய நந்திவர்மன் பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும், தமிழின் மீதுள்ள தணியா காதலால் தன் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழ் அமர்ந்து பாடல் கேட்டு உயிர் துறந்தான் என்று கூறப்படுகின்றது. “நந்திக் கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும்” என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா வரி இக்கருத்திற்குச் சான்றுரைக்கின்றது.

தூது

தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும். இத்தூது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும்.

அகத்தூது – தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி, தூது உரைத்துவா என்றும், மாலை வாங்கி வா என்றும், உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூதாக அனுப்புவது அகத்தூது ஆகும்.

தூது விடுக்கும் பொருட்கள் – அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்கள் தூதுக்குரியவை எனக் கூறப்பட்டன. தற்காலத்தில் பணம், தமிழ், புகையிலை, செருப்பு, மான், நெல் ஆகிய எவையும் தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றனர்.

புறத்தூது – போர் காரணமாக மன்னனுக்காக ஒரு புலவரோ, அமைச்சரோ அல்லது வேறு யாரேனுமோ தூது செல்வது புறத்தூது ஆகும். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றமையைப் புறத்தூதிற்குச் சான்றுரைக்கலாம்.

சில தூது நூல்கள் – தமிழ்விடுதூது, நெஞ்சு விடுதூது, அழகர் கிள்ளை விடுதூது.

தமிழ்விடு தூது

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நூலின் கருத்தினைக் கொண்டு இதன் ஆசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பது, சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படுகின்றது. மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி, தன் காதல் துன்பத்தை எடுத்துக் கூற, தமிழைத் தூதாக அனுப்புவதே தமிழ்விடு தூது ஆகும்.

உலா

அனைத்துப் பண்புகளில் சிறந்து விளங்கும் ஆண்மகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய குலம், குடிப்பிறப்பு, பெருமை ஆகியனவற்றை விளங்கக்கூறி, அவன் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் உள்ளிட்ட ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதாகப் பாடப்படுவது உலா இலக்கியம் ஆகும்.

சில உலா நூல்கள் – திருக்கையிலாய ஞான உலா, மூவருலா.

பிள்ளைத் தமிழ்

இவ்விலக்கியம் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக் கவி என்றும் கூறப்படும். புலவர்கள் தாம் விரும்பும் மன்னனையோ, தலைவனையோ, வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். குழந்தையின் மூன்றாம் மாதம் ல் 21ஆம் மாதம் வரை ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்படுகின்றது. ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல், சிறு தேர் உருட்டல் ஆகிய பருவங்கள் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் ஆகிய பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

சில பிள்ளைத் தமிழ் நூல்கள் – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

பள்ளு

பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பது பள்ளு இலக்கியமாகும். இதனை உழத்திப்பாட்டு என்றும் கூறுவர். பள்ளன் ஒருவன் இரு மனைவியரை மணந்து கொள்ள, அவ்விரு மனைவியரிடையே ஏற்படும் பூசல், அதனால் பள்ளனுக்கு ஏற்படும் துன்பம் ஆகியவற்றைப் பற்றி  இந்நூல் விவரிக்கின்றது.

சில பள்ளு நூல்கள் – திருமலை முருகன் பள்ளு, சீர்காழிப்பள்ளு, முக்கூடற்பள்ளு.

குறவஞ்சி

            இந்நூல் அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு பாடப்படுகின்றது. தலைவன் உலா வரல், தலைவி காதல் கொள்ளல், குறத்தி குறி கூறல், தலைவி குறத்திக்குப் பரிசளித்தல், குறவன் குறத்தியைத் தேடி வருதல், குறத்தியின் அணிகலன் கண்டு குறவன் ஐயம் கொள்ளுதல், குறத்தி அவனுடைய ஐயத்தைத் தெளிவித்தல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகக் குறவஞ்சி நூல் அமைகின்றது.

சில குறவஞ்சி நூல்கள் – குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி.

பரணி

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைச் சிறப்பித்துப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காளி வழிபாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் பாடப்படும்.

சில பரணி நூல்கள் – கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி.

அந்தாதி

    ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின் மதலில் வருவதாக அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்று யாப்பருங்கலக்காரிகை அந்தாதிக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்தாதியைத் தனி ஒரு இலக்கியமாக உருவாக்கிய பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அவருடைய அற்புதத் திருவந்தாதி என்னும் நூலே முதல் அந்தாதி நூலாகப் போற்றப்படுகின்றது. 

சில அந்தாதி நூல்கள் - அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி,சடகோபர் அந்தாதி.