திங்கள், 22 ஏப்ரல், 2024

திருமந்திரம்

 திருமந்திரம்

உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

விளக்கம்

சூரியக் காந்தக் கல், பஞ்சு இவற்றை ஒன்றாக சுற்றினால், சூரியக்காந்தகல் பஞ்சை எரித்து விடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் குற்றங்களை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாகிய இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் குற்றங்கள் நீங்கும்.

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

விளக்கம்

இறைவனின் திருமேனி காண்பதும், நாளும் இறைவின் திருப்பெயரை கூறுவதும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கேட்பதுமே சிறந்த அறிவாகும்.

யாக்கை நிலையாமை

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்

ஒருவருடைய உடலில் இருந்து உயிர் போன பின்பு, அதுவரை அவனுடன்  வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர்  என யாவரும் ஒன்றாகக்கூடி அழுகின்றனர். அவனுடைய பேரை நீக்கிவிட்டுப் பிணம் என்று பெயர் இடுகின்றனர். பின்பு அவனுடைய உடலை எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு நீரினில் மூழ்கி எழுகின்றனர். மெல்ல மெல்ல அவன் நினைவுகளையும் மறந்து விடுகின்றனர். இதுவே உலக இயல்பு.

 

மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம தேறிப்

பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி

மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே

விளக்கம்

ஒருவன் இறந்து விட்டால், அவனுடைய மனைவி, சேகரித்த செல்வங்கள் என யாவும் வீட்டிலேயே தங்கிவிட, அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டுவான். அங்கே அவன் பிள்ளைகளும் உறவினர்களும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விடுவார்கள். இதுவும் உலக இயல்பே.

செல்வம் நிலையாமை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே

விளக்கம்

உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் கேட்டுத் தெளிவடையுங்கள். தெளிவடைந்துவிட்டால் துன்பங்கள் இருக்காது. ஆற்று வெள்ளம் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு அறிவிழந்து நிற்காதீர்கள். அந்தச் செல்வங்களை பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். ஏனென்றால், நீங்கள் இறக்கும்போது இறைவன் வந்து அழைக்கும்போது, இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்க முடியாது. இந்தச் செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே

கிவழ்கின்ற நீர்மிசைச் சலெ்லும் கலம்போல்

அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபேறாகச்

சிமிழொன்று வைத்தனை தேர்ந்தறி யாரே

விளக்கம்

நாம் சேமித்து வைக்கின்ற செல்வங்களும், சொத்துக்களும் நிலையில்லாதவை. ஆற்றில் வெள்ளம் வந்தால் படகுகள் எவ்வாறு மூழ்கிவிடுமோ அது போல செல்வங்களும் போய்விடும். அலை வீசுகின்ற கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்குத் துன்பங்கள் ஏற்படுவது இல்லை. அதுபோலவே அழிந்து போகின்ற இந்த உடலுக்கு உள்ளே முக்தியை அடையும் வழியாக குண்டலினி சக்திளை இறைவன் வைத்திருப்பதை ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்வதே சிறந்த ஞானமாகும்.

அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

 

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண் ணாதே.

விளக்கம்

உயிர்கள் யாவும் தம் உடலை வருத்திக் கொண்டு தவம் புரிந்தாலும், தமது உடலைத் தீயில் இட்டு யாகம் புரிந்தாலும், உண்மையான அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய்மையான அன்பே இறைவனை அடையும் மிகச் சிறந்த வழியாகும்.

நடுவு நிலைமை

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை

நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

விளக்கம்

தன் வாழ்வில் எது நடந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எண்ணி, விருப்பு வெறுப்பு இல்லாமல், இறை நெறியில் இருந்து சிறிதும் மாறாமல் நடுநிலைமையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. நடுநிலைமையான மனம் கொண்டவர்களுக்கு நரகமும் இல்லை. அவர்கள் தேவர்களைப் போன்று இருப்பர். அவர்களின் வழியில் நானும் நிற்கின்றேன்.

 

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்

நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்

நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்

நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

விளக்கம்

எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலைமையான மனதுடன்  இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே வாழ்கின்றார்கள். நானும் அத்தகைய நடுநிலைமையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

 

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தனிப்பாடல்

 

தனிப்பாடல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

ஔவையார்

            தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார் பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள் காணப்படுகின்றன.

காளமேகப் புலவர்

கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம் போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில் (நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இரட்டைப் புலவர்கள்

இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும்.  தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சத்தி முத்தப் புலவர்

            கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன் மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின் அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத் தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.

           

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

 

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கத்தால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.  மேடைத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சித்தமிழ் உள்ளிட்ட என்ற புதிய இலக்கியச் சிந்தனைகள் உருப்பெற்றன.

திராவிட இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள்

திராவிட இயக்கத்தை வளர்த்தெடுக்க கவிதைகள், உரைகள், மேடைப் பேச்சுகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய இலக்கிய வகைகள் பயன்பட்டன. அவ்வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா, நாஞ்சில்நாதன், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், நிர்மலா சுரேஷ், கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா உள்ளிட்ட பலர் திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் தங்கள் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சான்றோர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்து பின்வருமாறு காணலாம்.

பெரியாரும் மொழிச் சீர்த்திருத்தமும்.

பெரியார் என்று மதிப்புடன் அழைக்கப்படுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களால் தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உயிர் எழுத்தான “ஐ“ என்பதை “அய்“ என்றும், “ஔ“ என்பதை “அவ்“ என்றும் எழுதுமாறு வலியுறுத்தினார். சான்றாக, “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும், “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதி, அவ்வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும், மெய் எழுத்துகளில் சில உயிர்மெய்க் குறியீடுகளான ஐ, உ, ஊ, ஒ, ஓ என்ற எழுத்துகளுடன் கூடி வருகின்ற எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழ்க் கற்பதும் தட்டச்சு செய்வதும் எளிதாகும் என்றும் அறிவித்து, அதற்கான வரி வடிவங்களைத் தானே உருவாக்கி தன்னுடைய அச்சகத்திலும் பயன்படுத்தினார். இவருடைய இச்சீர்த்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு 1978ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்தியது. மேலும், பெரியாரின் சிந்தனைகள் பல இதழ்களில் தலையங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மேடையிலும், தலையங்கக் கட்டுரையில் அவர் பயன்படுத்திய எளிய தமிழ், படிப்போரைக் கவர்ந்தது.

மேடைத்தமிழும் பேரறிஞர் அண்ணாவும்

அண்ணாவின் மேடைப் பேச்சுகள் இலக்கியமாக மதிக்கப்படுகின்றன. அவருடைய உரைகள் கவிதை நடையில், இலக்கியச் செழுமை மிக்கதாக அமைந்திருப்பது சிறப்பு. இன்று மேடைப் பேச்சு ஒரு கலையாக மதிக்கப்படுவதற்கு அண்ணாவின் உரைகளும் ஒரு காரணமாகும். மேடைப் பேச்சில் தனக்கென்று ஓரு புதிய வழியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தார். வேலைக்காரி, ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம் உள்ளிட்ட புரட்சி மிகுந்த நாடகங்களையும், செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பிடி சாம்பல் முதலிய சிறுகதைகளையும், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ முதலிய நாவல்களையும் எழுதித் தமிழுலகிற்குப் புத்துயில் அளித்தார். “தம்பிக்கு“ என்ற பெயரில் அவர் எழுதிய கடிதங்கள் சமுதாயத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையை வௌிப்படுத்துகின்றன. திரைப்படங்களில் இவரது உரையாடல் அடுக்கு மொழியில் அமைந்து மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதனால் “அடுக்கு மாழி அண்ணா” என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

திரைத்தமிழும் கலைஞரும்

            தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல்வேறு படைப்புகள் மூலம் தொண்டாற்றியவர் கலைஞர் கருணாநிதி. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய நாவல்கள் அவரது சமத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டின. விஷம் இனிது, சித்தார்த்தன் சிலை உள்ளிட்ட சிறுகதைகள் சமய மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தின. இவருடைய “அணில் குஞ்சு” என்ற சிறுகதை மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. நாடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கலைஞர் நாடகத்தைப் படைப்தோடன்றி நடிக்கவும் செய்தார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை மையமாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தைப் படைத்தார். பிற்காலத்தில் இது திரைப்படமாகவம் வெளிவந்தது. உதயசூரியன், நானே அறிவாளி, புனித ராஜ்யம் உள்ளிட்ட நாடகங்கள் அரசியல் பிரச்சார நாடகங்களாக வெளிவந்தன. இவருடைய நாடகங்கள் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அங்கத வகையில் அமைந்தவை. திரைத்துறையில் வசனங்களின் மூலம் புதிய வரலாறு படைத்தவர் கலைஞர். மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், பராசக்தி முதலிய திரைப்படங்களின் வசனங்கள் மாறுபட்ட கோணத்தில் தமிழை அடையாளம் காட்டின. அவருடைய “குறளோவியம்“ மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுகின்றது. எளிய முறையில் பாமர மக்களும் படித்து இன்புற, “தொல்காப்பியப் பூங்கா“ என்ற நூலை எமுதியுள்ளார்.

மூவரின் தமிழ் மாநாடுகள்

            பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் தங்களின் படைப்பால் தமிழுக்குத் தொண்டு செய்ததோடு, பல்வேறு மாநாடுகளை நடத்தித் தமிழ் மொழியை உலகரங்கிற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். பெரியாரின் திருக்குறள் மாநாடு, அறிஞர் அண்ணாவின் உலகத்தமிழ் மாநாடு, கலைஞரின் செம்மொழி மாநாடு ஆகியவை தமிழின் மொழி வளமையை, இலக்கணச் சிறப்பை, இலக்கியச் செழுமையை உலக அறிஞர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக, இன்றைய கணினி உலகில் தமிழை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் “தமிழ் இணையம் 1999” என்ற பெயரில் மாநாட்டை நடத்திய பெருமை கலைஞரையே சாரும். கணினித்தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில் “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. இதனால் அறிவியல் துறையில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.