சனி, 4 மே, 2024

இளையான்குடி மாற நாயனார் புராணம்

இளையான்குடி மாற நாயனார் புராணம்

அறிமுகம்

          வேளாளர் குலத்தினர் செய்த தவத்தின் பயனாக இளையான்குடி என்னும் நகரில் மாறனார் பிறந்தார். அவர் தில்லையில் திருநடனம் புரியும் சிவபெருமானின் திருவடியை வணங்குபவர். ஏரினால் உழுது பயிர் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர் ஆகையால் மிக அதிகமான செல்வத்தை உடையவராக விளங்கினார்.

சிவனடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டு புரிபவர்

இறைவனின் அன்பர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் கண்டவுடன் இரு கைகளையும் குவித்து வணங்கி, அவர் செவி குளிர அன்பு மிக்க வார்த்தைகளைக் கூறுவார். அவ் அடியவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து, அவரின் திருவடிகளை நீரினால் தூய்மை செய்து மிக்க அன்புடன் உரிய இருக்கையில் அமரச் செய்து, அவர்களுக்கு அறுசுவையுடன் உணவளிக்கும் தொண்டினைப் புரிந்து வந்தார்.

ஈசன் வறுமையை உண்டாக்குதல்

இத்திருத்தொண்டின் பயனாக மாறனார்க்குச் செல்வம் பெருகியது. இளையான் குடியில் அவர் குபேரனைப் போல் வாழ்ந்து வந்தார். செல்வம் இருந்த காலத்தில் மட்டுமன்றி வறுமையிலும் அடியவர்களுக்கு அமுது படைக்கும் தொண்டினைச் செய்வதில் மாறனார் மன உறுதி உடையவர் என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அதனால் மாறனார்க்கு வறுமை உண்டாயிற்று.

மன உறுதியுடன் திருத்தொண்டு புரிதல்

இறைவனின் திருவிளையாடலால் வளம் குறைந்து வறுமையுற்ற போதிலும் மாறனாரின் மனம் தான் மேற்கொண்ட திருத் தொண்டினைச் செய்வதில் சோர்வடையவில்லை. தம் பொருள்களை விற்றும், கடன் வாங்கியும் தம் தொண்டை நிறைவேற்றினார்.

ஈசன் தவ வேடம் புனைந்து வருதல்

 ஒருநாள் நள்ளிரவில் இளையான்குடி மாறனார் உண்ண உணவின்றி, பசியால் களைத்திருந்தார். உறக்கம் வராமல் நீண்ட நேரம் தனியே விழித்திருந்தார். அவ்வேளையில் சிவபெருமான் அடியவர் போல வேடம் பூண்டு மாறனாரின் வீட்டுக் கதவைத் தட்டினார். அடியவரான விருந்தினர் கதவைத் தட்ட மாறனார் உடனே கதவைத் திறந்தார். துறவியின் கோலத்தில் வந்த சிவபெருமானை உள்ளே அழைத்துச் சென்ற மாறனார் மழையில் நனைந்த அவருடைய உடலைத் துடைத்து இருக்கையில் அமரச் செய்தார்.

மனைவியுடன் ஆலோசித்தல்

அடியார்க்கு உணவு படைக்க விரும்பிய மாறனார் தன் மனைவியிடம், “இத்துறவியார் பசியால் களைத்து வந்துள்ளார். நாம் உண்பதற்கு இங்கு உணவு இல்லை. ஆனாலும், இவ்வடியவர்க்கு நாம் இனிய உணவை எவ்வாறு தருவது?“ என கவலையுடன் கேட்டார். அவருடைய மனைவி கணவரை நோக்கி, “வீட்டில் ஒரு பொருளும் இல்லை. இன்று வயலில் விதைக்கப்பட்ட நெல்லை வாரிக் கொண்டு வந்தால் கூடியவரை அமுதாக்கலாம். இதைத் தவிர வேறொரு வழியும் எனக்குத் தெரியவில்லை” என்றார். மனைவியின் சொல்லைக் கேட்ட மாறனார் பெருஞ்செல்வம் பெற்றது போல மகிழ்ந்து ஒரு கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்றார்.

நெல்விதைகளை உணவாக்குதல்

அந்நள்ளிரவில் கால்களினால் தடவி தடவிச் சென்று மாறனார் தம் வயலை அடைந்து மழை நீரில் மிதந்திருந்த நெல் முளைகளை வாரிக் கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தார். கணவரின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த துணைவியார், கணவர் கொண்டு வந்த கூடையை அன்புடன் வாங்கி நெல்முளைகளைக் கழுவி விட்டு, “அடுப்பெரிக்க விறகில்லையே” என்றார். உடனே மாறனார் தம் வீட்டுக் கூரையின் மரச்சட்டங்களை அறுத்தெடுத்துத் தம் மனைவியிடம் கொடுத்தார். துணைவியார் அவற்றை அடுப்பில் வைத்து நெல்முளைகளை வறுத்து அரிசி கொண்டு சோறாக்கினார். சோற்றுடன் கலந்துண்ணும் கறிக்கு என்ன செய்வது என கணவரை வேண்ட, மாறனார் தம் வீட்டின்கண் வளர்த்திருந்த கீரைகளைப் பறித்துக் கொண்டு வந்து தம் மனைவியிடம் கொடுத்தார். துணைவியார் அவற்றைத் தூய்மைப்படுத்தித் தம் கைத்திறத்தால் பலவகைப்பட்ட கறியமுதாக்கி விட்டுத் தம் கணவரிடம் தெரிவித்தார்.

ஈசன் உமையம்மையோடு அருள் புரிதல்

          மாறனார் உறங்கிக் கொண்டிருக்கும் அடியரை அணுகிச் சென்று, “பெரியவரே திருவமுது செய்ய எழுந்தருள்க” என்று கூறினார். அவ்வேளையில் அடியவர் சோதியாக எழுந்து தோன்ற நாயனாரும், அவர் துணைவியாரும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியுடன் எழுந்தருளி, “அன்பனே அறுசுவை உணவை அடிவர்களுக்கு நாள்தோறும் ஊட்டிய ஐயனே நீ உன் மனைவியோடு நம் உலகை அடைந்து தேவர்கள் உன் ஆணையைக் கேட்டுப் பணி செய்யும் விதத்தில் நிறைவான இன்பத்தைப் பெற்றிடுக” என்று அருள் செய்தார்.

 

 இளையான்குடி மாற நாயனார் புராணம்

1

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்

தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்

நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்

இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்

2

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்

நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்

சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்

பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் 

3       

ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்

நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்

கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து

ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்

4       

கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே

மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா

அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்

5

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே

நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்

நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்

தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்

6

செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்

அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே

மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து

ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்         

7

இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி

மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்

தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்

முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்

8

மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்

கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்

பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்

நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்  

9

மாரிக் காலத்து இரவினில் வைகியோர்

தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது

பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற

வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்

10

ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து

ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்

தார மாதரை நோக்கித் தபோதனர்

தீரவே பசித்தார் செய்வது என் என்று    

11

நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்

இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்

தமக்கு நாம் இன் அடிசில் தகவுற

அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என       

12

மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்

ஏதிலாரும் இனித் தருவார் இல்லை

போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை

தீது செய்வினை யேற்கு என் செயல்      

13

செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்

மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்

வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று

அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற       

14

மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்

பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து

உற்ற காதலினால் ஒருப் பட்டனர்

சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார்         

15

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து

அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்

கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு

உருகு கின்றது போன்றது உலகு எலாம்

16     

எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்

துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்

வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று

நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து  

17     

உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்

கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்

புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்

வள்ளலார் இளையான் குடி மாறனார்

18     

காலினால் தடவிச் சென்று கைகளால்

சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன

கோலி வாரி இடா நிறையக் கொண்டு

மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார்

19     

.வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்

அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்         

20     

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து

வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்

கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை

21

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று

குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்

பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க

22

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து

புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை

வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை

நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று

23

கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி

இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன

உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி

அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்     

24

அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்

எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று

தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்

செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்

25

மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்

சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே

ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்

சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி

26

அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்

என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே

முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப

இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்

27

இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி

முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்

அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு

மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்.


திங்கள், 22 ஏப்ரல், 2024

திருமந்திரம்

 திருமந்திரம்

உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

விளக்கம்

சூரியக் காந்தக் கல், பஞ்சு இவற்றை ஒன்றாக சுற்றினால், சூரியக்காந்தகல் பஞ்சை எரித்து விடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் குற்றங்களை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாகிய இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் குற்றங்கள் நீங்கும்.

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

விளக்கம்

இறைவனின் திருமேனி காண்பதும், நாளும் இறைவின் திருப்பெயரை கூறுவதும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கேட்பதுமே சிறந்த அறிவாகும்.

யாக்கை நிலையாமை

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்

ஒருவருடைய உடலில் இருந்து உயிர் போன பின்பு, அதுவரை அவனுடன்  வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர்  என யாவரும் ஒன்றாகக்கூடி அழுகின்றனர். அவனுடைய பேரை நீக்கிவிட்டுப் பிணம் என்று பெயர் இடுகின்றனர். பின்பு அவனுடைய உடலை எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு நீரினில் மூழ்கி எழுகின்றனர். மெல்ல மெல்ல அவன் நினைவுகளையும் மறந்து விடுகின்றனர். இதுவே உலக இயல்பு.

 

மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம தேறிப்

பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி

மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே

விளக்கம்

ஒருவன் இறந்து விட்டால், அவனுடைய மனைவி, சேகரித்த செல்வங்கள் என யாவும் வீட்டிலேயே தங்கிவிட, அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டுவான். அங்கே அவன் பிள்ளைகளும் உறவினர்களும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விடுவார்கள். இதுவும் உலக இயல்பே.

செல்வம் நிலையாமை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே

விளக்கம்

உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் கேட்டுத் தெளிவடையுங்கள். தெளிவடைந்துவிட்டால் துன்பங்கள் இருக்காது. ஆற்று வெள்ளம் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு அறிவிழந்து நிற்காதீர்கள். அந்தச் செல்வங்களை பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். ஏனென்றால், நீங்கள் இறக்கும்போது இறைவன் வந்து அழைக்கும்போது, இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்க முடியாது. இந்தச் செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே

கிவழ்கின்ற நீர்மிசைச் சலெ்லும் கலம்போல்

அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபேறாகச்

சிமிழொன்று வைத்தனை தேர்ந்தறி யாரே

விளக்கம்

நாம் சேமித்து வைக்கின்ற செல்வங்களும், சொத்துக்களும் நிலையில்லாதவை. ஆற்றில் வெள்ளம் வந்தால் படகுகள் எவ்வாறு மூழ்கிவிடுமோ அது போல செல்வங்களும் போய்விடும். அலை வீசுகின்ற கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்குத் துன்பங்கள் ஏற்படுவது இல்லை. அதுபோலவே அழிந்து போகின்ற இந்த உடலுக்கு உள்ளே முக்தியை அடையும் வழியாக குண்டலினி சக்திளை இறைவன் வைத்திருப்பதை ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்வதே சிறந்த ஞானமாகும்.

அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

 

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண் ணாதே.

விளக்கம்

உயிர்கள் யாவும் தம் உடலை வருத்திக் கொண்டு தவம் புரிந்தாலும், தமது உடலைத் தீயில் இட்டு யாகம் புரிந்தாலும், உண்மையான அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய்மையான அன்பே இறைவனை அடையும் மிகச் சிறந்த வழியாகும்.

நடுவு நிலைமை

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை

நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

விளக்கம்

தன் வாழ்வில் எது நடந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எண்ணி, விருப்பு வெறுப்பு இல்லாமல், இறை நெறியில் இருந்து சிறிதும் மாறாமல் நடுநிலைமையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. நடுநிலைமையான மனம் கொண்டவர்களுக்கு நரகமும் இல்லை. அவர்கள் தேவர்களைப் போன்று இருப்பர். அவர்களின் வழியில் நானும் நிற்கின்றேன்.

 

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்

நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்

நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்

நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

விளக்கம்

எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலைமையான மனதுடன்  இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே வாழ்கின்றார்கள். நானும் அத்தகைய நடுநிலைமையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

 

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தனிப்பாடல்

 

தனிப்பாடல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

ஔவையார்

            தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார் பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள் காணப்படுகின்றன.

காளமேகப் புலவர்

கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம் போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில் (நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இரட்டைப் புலவர்கள்

இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும்.  தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சத்தி முத்தப் புலவர்

            கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன் மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின் அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத் தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.