வியாழன், 29 ஜனவரி, 2026

பாளையாம் தன்மை செத்தும் - குண்டலகேசி

 

குண்டலகேசி

பாளையாம் தன்மை செத்தும்,

பாலனாம் தன்மை செத்தும்,

காளையாம் தன்மை செத்தும்,

காமுறும் இளமை செத்தும்,

மீளும்இவ் இயல்பும் இன்னே

மேல்வரும் மூப்பும் ஆகி,

நாளும்நாள் சாகின்றோமால்,

நமக்குநாம் அழாதது என்னோ?

விளக்கம்

“தாயின் வயிற்றில் கருவாக உருவானோம். பின் பாலன் என்ற பருவம் தோன்றியது. பாலன் என்ற பருவம் இறந்து காளைப் பருவம் வந்தது. காளை என்ற பருவம் இறந்து இளமைப் பருவம் உண்டாது. இளமைப் பருவம் அழிந்து முதுமைப் பருவம் எய்தியது. இவ்வாறு ஒவ்வொரு பருவமும் இறந்துபோகும் போது நாம் அழவில்லை. ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே இருக்கிறோம் என்று வருத்தப்படவில்லை. இறந்துபோகும்போது மட்டும் ஏன் அழவேண்டும்” என்று வாழ்வின் நிலையாமையை உணர்த்துகின்றார் ஆசிரியர்.

வஞ்சிக் காண்டம் - காட்சிக் காதை - சிலப்பதிகாரம்

 

சிலப்பதிகாரம்

வஞ்சிக் காண்டம் - காட்சிக் காதை

சிலப்பதிகாரம்

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இயற்றியவர் இளங்கோவடிகள். கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் இக்காப்பியத்தின் கதை மாந்தர்கள். சிலம்பை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியக் கதை அமைவதால் சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்றது. இது முத்தமிழ்க் காப்பியம், புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

·       அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்

·       உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

·       ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

என்ற மூன்று உண்மைகளைக் கூறுகின்றது. மதுரைக் காண்டம், புகார் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது.

வஞ்சிக்காண்டம்

சேர மன்னன், வட நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டு, கண்ணகிக்குச் சிலை எடுத்து வழிபட்ட செய்திகளை வஞ்சிக் காண்டம் கூறுகின்றது.

காட்சிக்காதை

சேர மன்னன் தன் பட்டத்து அரசியோடு மலை நாட்டில் உள்ள இடங்களைக் கண்டு மகிழ்கின்றான். கண்ணகி தன் கணவன் கோவலனுடன் தேவர் உலகம் சென்ற நிகழ்ச்சியைக் கண்ட குறவர்கள் சேர மன்னனிடம் கூறுகின்றனர். சேர மன்னனின் மனைவி வேண்மாள், கண்ணகிக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று விரும்புகின்றாள். அவள் விருப்பத்திற்கு இசைந்த சேர மன்னன், கண்ணகியின் சிலைக்குரிய கல்லை இமயத்தில் இருந்து எடுத்து வருவது என்று உறுதி செய்தான். இச்செய்தியைக் காட்சிக்காதை உரைக்கின்றது.

 

காட்சிக் காதை

சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணச் செல்லுதல்

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும்,இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-

குறவர்கள் கண்ணகி குறித்து சேரனிடம் கூறுதல்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,
தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,
பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்:
ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,
கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,
வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-
ஆங்கு,"
ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;
எந் நாட்டாள்கொல்? யார் மகள்கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!’ என
சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை உரைத்தல்
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்:
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;
வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
அம் சில் ஓதி! அறிகஎனப் பெயர்ந்து,
முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,
மயங்கினன்கொல்என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றுஎனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கைஎன்று,
ஒழிவு இன்றி உரைத்து, ‘ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்என-
கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்மாள் விருப்பம்
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்:
எம்மோரன்ன வேந்தற்குஉற்ற
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது:
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து
ஆங்கு,"
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?’ என,
மன்னவன் உரைப்ப- மா பெருந்தேவி,"
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்என-

இமயமலையில் இருந்து கல் கொண்டு வர விரும்புதல்
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,
நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்துஎன-
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்குஎன,
குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்என-
சேரனின் சிறப்பை அமைச்சர் கூறுதல்
பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!’என,
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல்கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,
எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்:
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
செய்தியை அறிவித்தல்
நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறைஎன்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-
வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்கஎன,
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;
தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்!’ என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

காட்சிகாதை சுருக்கம்

மன்னன் மலை வளம் காணுதல்

சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளுடன் மலைப் பகுதிகளின் வளத்தைக் காண்பதற்காக வஞ்சி நகரத்திற்கு யானையின் மீது ஏறிச் சென்றான். வழியில் வேங்கை, கொன்றை, சந்தனம் ஆகிய மரங்கள் உதிர்த்த பூக்கள் ஆற்று நீரோடு கலந்து செல்வதைக் கண்டு மகிழ்ந்து மலை அருவி வீழும் ஆற்றின் கரையில் தங்கினான்.

 குறவர்களின் காணிக்கை

குறவர்கள் முருகனைப் போற்றும் குரவைப் பாடல்களைப் பாடியபடி மன்னனைக் காண வந்தனர். மன்னனுக்குக் காணிக்கையாக, யானைத் தந்தம், மான் கொம்புகள், மயில் தோகைகள், சந்தனத் துண்டுகள், ஏலக் கொடி, மிளகுக் கொடி, பலாப்பழம், வாழைக்குலை, கரும்பு, பாக்குக் குலைகள், சிங்கக்குட்டி, புலிக்குட்டி, யானைக் கன்று, குரங்கு, கரடி, ஆட்டுக் குட்டி, மான் கன்று, காட்டுக்கோழி ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.

கண்ணகி பற்றி உரைத்தல்           

குறவர்கள் மன்னனை வாழ்த்திவிட்டு, “மன்னனே! ஒரு மார்பகத்தை இழந்த பெண் ஒருத்தி வேங்கை மரத்தின் அடியில் நின்றாள். பின்னர் வானுலகத்தில் இருந்து வந்த தன் கணவனோடு விமானத்தில் ஏறி வானுலகத்தை நோக்கிச் சென்றாள். அவள் யார் என்று நாங்கள் அறியோம்என்று கூறினர்.

சாத்தனார் கண்ணகி வரலாறு கூறுதல்

குறவர்கள் கூறியதைக் கேட்ட சீத்தலைச் சாத்தனார், “மன்னனே! அந்தப் பெண்ணின் பெயர் கண்ணகி. அவள் கணவன் பாண்டிய மன்னனால் தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். சிலம்பைக் காரணமாகக் கொண்டு பாண்டிய மன்னனோடு கண்ணகி வழக்குரைத்தாள். பாண்டியன் தன் தவறுணர்ந்து உயிர் துறந்தான். அவள் மனைவியும் மன்னனோடு உயிர் நீத்தாள். கண்ணகி வஞ்சினம் கூறி தன் இடப்பக்கத்து மார்பைத் திருகி வீசி எறிந்து மதுரை நகரை எரித்தாள். பின்னர் சேர நாட்டை அடைந்தாள்என்று கூறினார்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்ப வேண்மாள் உரைத்தல்

சாத்தனார் கூறியதைக் கேட்ட சேரன், “பாண்டியனின் மரணத்தால் அவனுடைய செங்கோல் நிமிர்ந்ததுஎன்று கூறினான். தன் மனைவியிடம்,

·       கணவனோடு வானுலகம் சென்ற கண்ணகி

·       பாண்டியனோடு உயிர் துறந்த கோப்பெருந்தேவி

இருவரில் மேன்மையுடையவர் யார்? என்று வினவினான். அதற்கு வேண்மாள், “தன் கணவன் அடைந்த துன்பத்தைத் தாங்காது தானும் உயிர் துறந்த கோப்பெருந்தேவி தேவலோகத்தில் சிறப்புப் பெறுவாள். நம்முடைய பரந்த நாட்டினை அடைந்த கண்ணகிக்கு நாம் கோயில் எழுப்பி வழிபட வேண்டும்என்று கூறினாள்.

இமயத்தில் இருந்து கல் கொண்டு வருவேன் எனல்

வேண்மாள் உரைத்ததைக் கேட்ட அமைச்சர் மன்னனிடம், “இமயமலையில் இருந்து சிலைக்குரிய கல்லை எடுத்துக் கங்கை நீரில் நீர்ப்படை செய்யலாம்என்றார். அதற்கு மன்னன், “இமயமலையில் இருந்து கல் கொடுக்க மன்னர் விரும்பவில்லை என்றால் போர் நிகழும்என்றான். அதைக் கேட்ட வில்லவன் கோதை என்னும் அமைச்சர், மன்னனைப் புகழ்ந்து, “தெய்வச் சிலைக்குரிய கல் வேண்டும் என்ற செய்தியைத் தமிழ்ப் பெருமை கூறும் வில், புலி, மீன் ஆகிய முத்திரைகளைப் பதித்து ஓலை அனுப்புகஎன்றான். அப்போது அழும்பில் வேள் என்ற அமைச்சன், “மன்னவா! நம்முடைய ஒற்றர்கள் வஞ்சி மாநகரில் உள்ளனர். யானையின் மீது முரசு ஏற்றி வடதிசைப் பயணம் குறித்த செய்தியை வீதி தோறும் உரைத்தால் அனைவருக்கும் தெரிய வரும்என்றார். மன்னனும் அக்கூற்றை ஏற்றான்.

பறை அறிவித்தல்

முரசு முழங்குவோன், “எம் மன்னன் கண்ணகி என்னும் தெய்வத்திற்கு இமயமலையில் இருந்து கல் கொண்டு வரச் செல்கின்றான். ஆதலால் வடதிசை மன்னர்கள் திறைப் பொருளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அவ்வாறு வராதவர்கள் எம் மன்னனின் வீரத்தை மனத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். இல்லயெனில் பகை மன்னர்கள் தமது மனைவியைத் துறந்து பிரிவார்கள். எம் மன்னனின் வீரக்கழல் வாழ்கஎன்று முரசு ஒலிக்கப்பட்டது.