ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

குறுந்தொகை - கழனிமாஅத்து, யாரும் இல்லை தானே, காலையும் பகலும்

 

குறுந்தொகை

1

பாடியவர் - ஆலங்குடி வங்கனார்

திணை - மருதம்

துறை        

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை  அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

துறை விளக்கம்

ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, “இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான்என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

பாடல்

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல       

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

விளக்கம்    

வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்துபழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன்என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான்இப்பொழுதுதன்னுடைய வீட்டில்முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல்தன் புதல்வனின் தாய் (மனைவிவிரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்” என்று பழித்துரைக்கின்றாள் பரத்தை. தலைவி என்று குறிப்பிடாமல் புதல்வன் தாய் என்று குறிப்புப பரத்தையின் கோபத்தைக் காட்டுகின்றது.

 

2

பாடியவர் - கபிலர்

திணை – குறிஞ்சி

துறை - வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

துறை விளக்கம்

தலைவன் தன்னை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான் என்பதை உணர்ந்த தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பாடல். (வரைவு – திருமணம்)

பாடல்

யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

விளக்கம்    

“தலைவன் பிறர் அறியாதவாறு என்னைக் காண வந்தபோது, களவில் என்னை மணந்தான். என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரில் ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது” என்று உரைக்கின்றாள் தலைவி.



3

பாடியவர் – அள்ளூர் நன்முல்லையார்

திணை – குறிஞ்சி

துறை- பின்னின்றான் கூறியது

துறை விளக்கம்

தலைவியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவனிடம், அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள் என்று தோழி கூற, தலைவன் தன் காதல் உண்மையானது என்று இரக்கத்துடன் கூறி நின்றான். (பின்னின்றான் – இரக்கத்துடன் நின்றான்)

பாடல்

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே   

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

விளக்கம்

காலைப்பொழுதுபகல்மாலைப் பொழுது ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும்  காதல் தோன்றுமாயின்அத்தகைய காதல் உண்மையானது அன்று. ஆனால், என்னுடைய காதல் உண்மையானதுதலைவி  என்னை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன் பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும்அதனால் பழி வரும்அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள்அதனாலும் எங்களுக்குப் பழி வரும்என்று தலைவன் தன் காதல் நிலையைத் தோழிக்கு விளக்குகின்றான்.







 

 



 

 

புறம் - இழையணி பொலிந்த, அளிதோ தானே, ஈ என இரத்தல்

 

புறநானூறு

1

பாடியவர்: அவ்வையார்.             

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : தும்பை.                         

துறை: தானை மறம்.

பாடல்

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,

மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன

சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண்கண் கேட்பின்,

அது போர்! என்னும் என்னையும் உளனே!     

விளக்கம்

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் இடையும், மை தீட்டிய கண்களும் ஒளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் பெண்ணே! உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ? என்று என்னைக் கேட்ட  அரசனே!  அடிக்கும் குச்சிக்கு அஞ்சாத பாம்பு போல வெகுண்டு எழுகின்ற இளமையும் வலிமையும் கொண்ட சிறிய, பெரிய மறவர்கள் எங்கள் நாட்டில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர் முரசில் காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டால் அதனைப் போர் எனக் கருதி வீறு கொண்டெழும் என் தலைவனாகிய அதியமானும் இருக்கிறான். ஆதலால் அவனுடன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிடுவாயாக” என்று பதிலுரைக்கின்றார் ஔவையார்.



2

பாடியவர்: கபிலர்.               

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி.         

துறை: மகண் மறுத்தல்.

பாடல்

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,      

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,       

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  

விளக்கம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், ‘மூவேந்தர்களே! நீங்கள் மூவரும் ஒன்று கூடி பறம்பு நாட்டை முற்றுகையிட்டாலும், பாரியை வெல்வது கடினம். பறம்பு நாடு வளமானது. அந்நாட்டில் உழவர் உழாமலேயே பல உணவுப் பொருட்கள் விளைகின்றன.  ஒன்று, மூங்கில் நெல். இரண்டு, பலாப்பழம். மூன்று, வள்ளிக்கிழங்கு. நான்கு, குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள்.

வானளவு பரந்த இடத்தைக் கொண்டது அவன் பறம்பு மலை. வானத்து மீன்களை ஒத்த சுனைகள் அம்மலையில் உண்டு. இப்படிப்பட்ட அவன் மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர் யானைகளைக் கட்டிவைத்தாலும், எண்ணற்ற தேரை நிறுத்தி வைத்தாலும், உங்கள் போர் முயற்சியால் அதனைப் பெற முடியாது. வாள் வீசிப் போரிட்டாலும் அவனை வெற்றி கொள்ள முடியாது. அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு வேறு வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன். யாழ் மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள். உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன் பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறுகின்றார்.

பறம்பு மலை

பறம்பு மலையின் சுனை


3

பாடியவர்: கழைதின் யானையார். 

பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.

திணை:பாடாண்.

 துறை: பரிசில்.

பாடல்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்     

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை  

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.     

விளக்கம்

ஒருவரிடம் சென்று ‘எனக்குக் கொடுஎன்று கேட்பது இழிவானது, அதற்குப் பதிலாகக் கொடுக்கமாட்டேன்என்று சொல்வது அதனைக் காட்டிலும் இழிவானது; இதனைப் பெற்றுக்கொள்என்று ஒருவருக்குக் கொடுப்பது உயர்வானது, அதற்குப் பதிலாக வேண்டாம்என்று மறுப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது;

தாகம் எடுத்தாலும் கடலின் நீரை யாரும் உண்ணமாட்டார். பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று குடித்ததினால் கலங்கிப்போய் சகதியுடன் கிடக்கும் சிறிதளவு நீரேயானாலும் அந்த இடத்தைத் தேடிச் சென்று பருகுவர்.

அதுபோல புலவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தீய சகுனங்களையும், தாம் புறப்பட்ட நேரத்தையும் பழிப்பாரேயன்றி, பரிசில் கொடுக்காதவரைப் பழிக்கமாட்டார், அதனால் ஓரியே! மழை போல அளவின்றி கொடுக்கும் கொடையாளனாகிய உன் மீது நான் வெறுப்பு  கொள்ள மாட்டேன். நீ நீடுழி வாழ்வாயாக” என்று புலவர் பாடுகின்றார்.

 

நற்றிணை -அண்ணாந்து ஏத்திய வனமுலை, பிரசம் கலந்த வெண்சுவை, பெரு நகை கேளாய்

 

நற்றிணை

1

பாடியவர் - தெரியவில்லை

திணை - பாலை

துறை  - உடன்போக்கும் தோழி கையடுத்தது.

துறை விளக்கம்

தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி, அவனிடம், ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாகஎன்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)

பாடல்

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!

இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன நின்

பிழையா நல் மொழி தேறிய இவட்கே.  

விளக்கம்

தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். “தலைவனே! இனிய கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் என்பவன் ஆவான். குறி தப்பாத வேற்படையே அவனது தனிச்சிறப்பு ஆகும்.  அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி உன்னை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !” என்று கூறுகின்றாள்.



2

பாடியவர் - போதனார்

திணை  - பாலை

துறை -  1. மனைமருட்சி         2. மகள்நிலை உரைத்தது

துறை விளக்கம்

1.  உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி நற்றாய் வருந்தி உரைத்தது. 

2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.

பாடல்

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்

விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,

புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,

'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  

அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?

கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,      

கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

விளக்கம்

“பொற்கலத்தில் தேன் கலந்த வெண்மையான சுவை பொருந்திய பாலை  ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டி ‘இதைக் குடிஎன்று அவளுடைய  செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்து, முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்க, பாய்ந்து அவள் ஓட, நடை தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்?  திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை மறுத்து, நீர் இருக்கும் பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள்” இப்பொழுது என்று வியக்கின்றாள் தாய்.

3

பாடியவர் - ஔவையார்

திணை - குறிஞ்சி

துறை - பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது

துறை விளக்கம்

தலைவன் பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரியவேண்டிய சூழல் ஏற்படப்போகிறது என்று தோழியிடம் கூறுகின்றான். அச்செய்தியைத் தலைவி தாங்கமாட்டாள் என்பதை அறிந்த தோழி, தலைவனை வெறுப்பதுபோல் கூறி, தலைவி முகம் கொடுத்தவுடன் வினையே ஆடவர்க்கு உயிர் என்பதை எடுத்துரைக்கின்றாள்.

பாடல்

பெரு நகை கேளாய், தோழி! காதலர்

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்

பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்

செல்ப என்ப, தாமே; சென்று,

தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை

வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-

கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,

படு மழை உருமின் உரற்று குரல்

நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.    

விளக்கம்

“தோழி! இதைக் கேள். தலைவன் ஒருநாள் உன்னைப் பிரிந்து சென்றாலும் உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்ததுபோலத் துன்பப்படுவாய். அப்படி இருக்கையில் உன்னை இங்கே தனியே விட்டுவிட்டு அவர் மட்டும் பொருளீட்டச் செல்ல இருக்கிறார். அவர் பொருளீட்டிக்கொண்டு திரும்பும் வரையில், படமெடுத்து ஆடும் பாம்பு நடுங்கும்படியாக, நள்ளிரவில் முழங்கும் இடி ஒலியைக் கேட்டுக்கொண்டே உயிர் வாழ வேண்டுமாம். இது என்ன கொடுமை” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

 


 

நெடுநல்வாடை

நெடுநல்வாடை

பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்        

நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

கூதிர்க் கால நிலை

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை       

கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்

குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்      

ஊரின் செழிப்பு

புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்

பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்

பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி       

இருங்களி பரந்த ஈர வெண்மணற்

செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்

கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்

பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை

அகலிரு விசும்பில் துவலை கற்ப   

அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த

வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க

முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்

கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை

நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு  

தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற

நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்

குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க

முழுவலி மாக்கள் 

மாட மோங்கிய மல்லன் மூதூர்

ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்    

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்

முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு

தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத்

தண்துளி பேணார் பகலிறந்து

இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர  

மாலைக் கால வழிபாடு

வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்

மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்

பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து   

அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து

இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ

நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது

மல்லல் ஆவணம் மாலை யயர     

மனையுறை புறாக்கள்

மனையுறை புறவின் செங்காற் சேவல்     

இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது

இரவும் பகலும் மயங்கிக் கையற்று

மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்        

 குளிர் காலத்தில் பயன்படா பொருட்கள்

கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்

கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக  

வடவர் தந்த வான்கேழ் வட்டம்

தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்

கூந்தல் மகளிர் கோதை புனையார்

பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்

தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து    

இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த

செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்

சிலம்பி வானூல் வலந்தன தூங்க

வானுற நிவந்த மேனிலை மருங்கின்        

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்

போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்

கல்லென் துவலை தூவலின் யாவரும்

தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்        

பகுவாய்த் தடவில் செந்நெருப் பார

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்

தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை

கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து

கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்       

அரசியின் அரண்மனை

மனை வகுத்த முறை

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்

பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து   

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து   

கோபுர வாயில்

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்

பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத்  

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு

நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்

போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்

தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்

கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து          

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்

குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில் 

முற்றமும் முன்வாயிலும்

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து    

நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை

குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்        

அரண்மனையில் எழும் ஓசைகள்

பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி

புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் 

கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்

கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல

ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்

கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை

நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில    

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினைமாண் பாவை

கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து

பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி

அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்

பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் 

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது

ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு

வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்

வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ     

மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்

செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்

கருவொடு பெயரிய காண்பி னல்லில்     

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்        

இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்

பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து

சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்

கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு

தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்   

புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு

உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்

பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்        

கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு

முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்       

புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்

தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து

ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்

வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து

முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த       

மெல்லிதின் விரிந்த சேக்க மேம்படத்      

 அரசி மலரணையில் வீற்றிருத்தல்

துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி

இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்

தோடமை தூமடி விரித்த சேக்கை  

ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்

பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து

நன்னுதல் உலறிய சின்மெல் லோதி

நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்

வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்       

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்

பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்      

அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு

புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்     

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

தளிரேர் மேனித் தாய சுணங்கின்

அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை

வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்         

மெல்லியல் மகளிர் நல்லடி வருட

நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்

குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி

இன்னே வருகுவர் இன்துணை யோரென 

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து 

தலைவியின் வருத்த மிகுதி

நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்

ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்

புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக    

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்   

புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு         

இன்னா அரும்படர் தீர விறறந்து

இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்       

பாசறையில் அரசன் நிலை

ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை

நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்       

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்

ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்

தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்

பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல       

வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு

முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்

மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு

பருமங் களையாப் பாய்பரிக் கலிமா

இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப

புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ

வாள்தோள் கோத்த வன்கட் காளை

சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து

நூல்கால் யாத்த மாலை வெண்குடை

தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப       

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. 

 பாடல் விளக்கம்

கோவலர் வாடையால் துன்புறுதல்

பருவம் தவறாமல் பெய்யும் கார்காலத்து மேகம் தான் கிடந்த மலையை வலப்பக்கமாகச் சுற்றிச் சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழையைப் பெய்தது. மழை மிகுதியாகப் பெய்தமையால் கோவலர் அம்மழையை வெறுத்துத் தம் ஆநிரைகளை மேட்டுநிலம் நோக்கி ஓட்டிச் சென்றனர். தாம் பழகிய இடத்தை விட்டு வந்ததற்காக வருந்தினர். அவர்கள் அணிந்திருந்த வெண்காந்தள் மலரில் இருந்து நீரை்த்துளி அவர்களின் உடம்பின் மீது பட்டு, குளிரை அதிகப்படுத்தியது. பனியோடு சேர்ந்து வாடைக்காற்றும் வீசியதால் நெருப்பை மூட்டி அதன் அருகே தம் பற்கள் கொட்ட நடுங்கியவண்ணம் குளிர் காய்ந்தனர். 

கூதிர்க் கால நிலை

  மழையின் காரணமாக விலங்குகள் மேய்ச்சல் தொழிலைக் கைவிட்டன. குரங்குகள் குளிரால் நடுங்கித் மரத்திற்கு மரம் தாவ முடியாமல் நடுங்கின. மரத்தில் வாழும் இயல்புடைய பறவைகள் காற்று மிகுதியால் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் தம் கன்றுகள் பால் உண்ணாதபடி உதைத்தன. மலையையும் குளிர்விப்பதைக் போன்றிருந்தது அக்கூதிர் காலம்.

ஊரின் செழிப்பு

முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்து வந்தது.  வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள்  முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன. 

முழுவலி மாக்கள்

பழமையான வளமான அவ்வூரில் மாடமாளிகைகள் ஓங்கியிருந்தன. ஆறு போன்ற அகன்ற தெருக்கள் காணப்படுகின்றன. முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட காவல் புரியும் மக்கள், படலைப் பூ மாலையைத் தலையில் சூடியுள்ளனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள். தம் மேல் சிந்தும் பனித் துளிகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்னும் பின்னும் தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்தவர்களாய், மாலைப் பொழுதில் தம் மனம் விரும்பிய இடத்தில் திரிகின்றனர்.

மாலையில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

சங்கு வளையல்களை அணிந்த முன்கையினையும், மூங்கில் போன்ற தோள்களையும், மென்மையான சாயலையும் , முத்துப் போன்ற பற்களையும் உடைய பெண்கள் பிச்சிப் பூவைப் பறித்து வைக்க, தட்டில் உள்ள அரும்புகள் மலர்ந்து மணம் கமழ்வதைக் கண்டு மாலைப்பொழுது வந்துவிட்டது என்பதை அறிந்தனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி, மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.

மனையுறைப் புறாக்கள்

வீட்டில் இருக்கும் புறாக்கள் தான் இன்புறும் பெண்புறாவுடன் வெளியு சென்று இரை தேடி உண்ணாமல் இரவு பகல் அறியாமல் மயங்கின. மதலைப் பள்ளியில், மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன. இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன.

குளிர் காலத்தில் பயன்படா பொருட்கள்

காவல் பொருநு்திய அகன்ற வீடுகளில் பணி செய்யும் பணியாளர்கள் வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருட்களை அரைக்கின்றனர். வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும், தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது) மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை. சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர்.  நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து உலர்த்திக் கொண்டனர். கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. மேல்மாடத்தில் தென்றல் வீசும் சன்னல்கள் திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை. மாறாக அகன்ற வாயை உடைய தடவில் (தடா வட்டி) சுடச்சுட வெந்நீரைப் பருகினர். ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது, பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில், யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால், அவற்றைச் சூடாக்கும் பொருட்டு, யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர். காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர். பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது.

அரசியின் அரண்மனை

மனை வகுத்த முறை

அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான். நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை. ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான்.  தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்.

கோபுர வாயில்

வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன். தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.

முற்றமும் முன்வாயிலும்

அரசி அரண்மனைக்குத் ‘திருநகர்என்று பெயர். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம். அதில் வெண்ணிற எகினமும், அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.

அரண்மனையில் எழும் ஓசைகள்

கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் விரும்பாமல் தம் துணையை எண்ணிக் கனைத்தன. நிலா முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய். அதன் வழியாக ‘அம்பணம்என்னும் தொட்டியில் விழும் ஒலி அருவியின் ஒலி போன்றிருந்தது. அருகே தோகை மயில்களின் ஆராவார ஒலி கொம்பூதும் ஒலி போல் இருந்தது.  

அந்தப்புரத்தின் அமைப்பு

அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது. ஐந்து திரிமுனைகள் கொண்டது. பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது. அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது. அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன. அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை. அது மலை போல் தோன்றும் மனை. அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான். இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன. மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும், வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன. அந்தக் கட்டிலைப் ‘பாண்டில்என்று வழங்கினர்.


கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின. மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள். படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மெத்தையின் துணியில் வயமான் (சிங்கம்) வேட்டையாடுவது போலவும், முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்.

படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்

மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை. மேல்மெத்தையில் அன்னத்தின் சிறகுகள் திணிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுகள் அவை. அதன் மீது தலையணை, சாயணை முதலியவற்றை இட்டு நன்குக் கஞ்சியிட்டுத் தேய்க்கப்பட்ட துணியை, விரித்திருந்தனர். 

கோப்பெருந்தேவியின் நிலை

அரசியின் முலைமேல் முத்தாரம் என்னும் அணிகலன் இருந்தது. அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள். அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை. சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன. குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது. பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது. முன்கையில் சங்கு-வளையலும், காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன. வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது. வடிவம் மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்படாத புனையா ஒவியம் (sketch) போலக் காணப்பட்டாள் அரசி.

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர். அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர், “உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார்என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர். அவற்றைக் கேட்டு ஆறுதலடையாமல் கலங்கினாள் அரசி.

தலைவியின் வருத்த மிகுதி

அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேல்கட்டியின் கால்கள் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள். 

கொற்றவையை வேண்டல்

மன்னன் பணி முடித்துத் திரும்பினால் அன்றித் தலைவியின் துன்பம் நீங்காது. ஆதலால் தலைவியின் துயர் தீரும் பொருட்டு பாசறைத் தொழில் விரைவில் முடிக எனக் கொற்றவையைத் தோழியர் வேண்டினர்.

பாசறையில் அரசன் நிலை

    போர்த்தொழில் திறம் பெற்ற யானை, தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி  போரிட்ட ஆடவர், புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான். வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது. வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான். அரசன் பெருஞ்செய் ஆடவரைக் கண்டான். முதுகில் மணி தொங்கும் பெண் யானைகளைக் கண்டான். இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான். சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்தான். காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டு, மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்றான். அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அந்த நள்ளிரவு நேரத்தில், அவன் தன் படுக்கையில் இல்லாமல் சிலரோடு திரிந்து கொண்டிருந்தான். இதுவே அவன் பாசறைத் தொழில். இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப் பெற வேண்டும். தலைவியின் துன்பம் தீர வேண்டும்.


நன்றி  - 

தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்ச்சுரங்கம், தமிழ்நூலகம்