வியாழன், 15 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - வழிப்பயணம்


வழிப்பயணம்

 கவிஞர் தமிழ் ஒளி

தோள் கனக்குது சுமை கனக்குது
தொல்லை வழிப்பயணம் ! – இது
தொல்லை வழிப்பயணம் !

நாள் கனக்குது நடை கனக்குது
நைந்த வழிப்பயணம் !-இது
நைந்த வழிப்பயணம்!

 

கால் கடுக்குது கை கடுக்குது
கைத்த வழிப்பயணம்! –இது
கைத்த வழிப்பயணம் !


மேல் கடுக்குது வெயில் முடுக்குது

வெற்று வழிப்பயணம் ! –இது
சுற்று வழிப்பயணம் !

 

பள்ள மிருக்குது பாதை சறுக்குது
பார வழிப்பயணம் ! – இது
பார வழிப்பயணம் !


உள்ள மிருக்குது துள்ளி நடந்திட
ஒற்றை வழிப்பயணம் ! – இது
ஒற்றை வழிப்பயணம் !


தேகம் நடுங்குது வேகம் ஒடுங்குது
தேச வழிப்பயணம் !- இது
தேச வழிப்பயணம்!


காகம் இறங்குது கழுகு சுற்றுது
காட்டு வழிப்பயணம்! –இது
காட்டு வழிப்பயணம் !

 

நேரம் கிடக்குது தூரம் கிடக்குது
நீண்ட வழிப்பயணம் ! –இது
நீண்ட வழிப்பயணம்!


பாரம் நெருக்குது பாதை சறுக்குது
கெட்ட வழிப்பயணம்! –இது
கெட்ட வழிப்பயணம்!

 

போது குறுகுது போதை பெருகுது
போகும் வழிப்பயம்! –உயிர்
போகும் வழிப்பயம் !


வாது பெருகுது வம்பு வருகுது
வாழ்க்கை வழிப்பயணம்! - இது
வாழ்க்கை வழிப்பயணம் !


பாடலின் பொருள்

கவிஞர் தமிழ்ஒளியின் வழிப்பயணம் என்ற கவிதை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை விளக்குகின்றது.

நிலையற்ற வாழ்க்கை

மனிதனின் வாழ்க்கை நிலையில்லாதது. அவன் கொண்ட ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் நிலையில்லாதது. வாழ்க்கை என்ற பயணத்தைத் தொடர்கின்ற மனிதன் தன் பயணத்தில் பல்வேறு பரிமாணங்களை அடைகின்றான்.

தொல்லைவழிப்பயணம்

பிறந்தது முதல் இறக்கின்ற வரை ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டே இருப்பதால் வாழ்க்கை தொல்லைவழிப் பயணமாக அமைகின்றது.

நைந்த வழிப்பயணம்

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பதால் மனம் துன்பமடைகின்றது. அதனால் நைந்த வழிப்பயணமாக அமைகின்றது.

கைத்த வழிப்பயணம்

கால்களும், கைகளும் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தாலும், விரும்பியதை அடைய முடியாமல் போகும்போது வாழ்க்கை வெறுப்பாகின்றது. அதனால் கைத்த வழிப்பயணமாக அமைகின்றது. (கைத்த என்றால் அலைச்சல் என்று பொருள்)

வெற்று வழிப்பயணம்

வெயில், மழை என காலங்கள் மாறி மாறிச் சுழன்றாலும் போகின்ற இடம் எது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் அப்பயணம் வெற்று வழிப்பயணமாக அமைகின்றது.

பாரவழிப்பயணம்

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளால் விரும்பியதை அடைய முடியாத சூழல் உருவாகின்றது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையாக அமைவதால் இது பாரவழிப் பயணமாக இருக்கின்றது.

ஒற்றைவழிப்பயணம்

எத்தகைய துன்பங்கள் வந்தாலும், பல சோதனைகளைக் கடந்தாலும் இன்னும் செல்வோம் என்ற நம்பிக்கையின் வழிகளில் பயணத்தைத் தொடர மனம் விரும்புகின்றது. போனால் திரும்பி வர முடியாது என்று தெரிந்திருந்தும் அப்பயணத்தை விரும்புவதால் இது ஒற்றை வழிப்பயணம் என்பதை நினைவூட்டுகின்றார் கவிஞர்.

தேசவழிப்பயணம்

நோய்களும் முதுமையும் வாழ்க்கைப் பயணத்திற்குத் தடையாக அமைவதால் இறைவனின் தேசத்தை விரும்பி ஏற்கின்ற தேசவழிப் பயணமாக அமைகின்றது.

காட்டுவழிப்பயணம்

இளமையில் செய்த குற்றங்களையும், பாவங்களையும் முதுமையில் எண்ணிப் பார்ப்பதால் குற்ற உணர்ச்சிகளால் ஆட்படுகின்றோம். எனவே, அப்பயணம் காட்டுவழிப் பயணம்போல் அமைகின்றது. “காகம் இறங்குது கழுகு சுற்றுது” என்ற வரிகள் நாம் செய்த குற்றங்கள், பாவங்களின் குறியீடாகும்.

நீண்ட வழிப்பயணம்

நாம் எத்தனை காலம் வாழ்வோம் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆகவே நமக்குத் தெரியாத பயணத்தை நாம் மேற்கொண்டிருப்பதால் இது நீண்ட வழிப்பயணமாக இருக்கின்றது.

கெட்ட வழிப்பயணம்

குடும்பத்தின் கடமைகளால் நெருக்கப்படும்போதும், கடமைகளை நிறைவேற்றப் போராடும்போதும் தடங்கல்கள் பல ஏற்படுகின்றன. அதனால் மனம் சோர்வுறும்போது கெட்டவழிப்பயணமாகத் தெரிகின்றது.

உயிர்ப்பயம்

வாழ்நாள் குறுகும்போது மனம் அச்சம் கொள்கிறது. அந்த அச்சத்தின் போதை பெருகப் பெருக மரணத்தை எதிர்பார்த்து வாழும் பயம் ஏற்படுகின்றது. (போது என்பதற்கு வாழ்நாள் என்று பொருள்)

வாழ்க்கை வழிப்பயணம்

வாழ்நாளின் இறுதிப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கும்போது உடலும் மனமும் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதனால் நம் மனதில் நியாய தர்மங்களின் விவாதங்கள் தொடர்கின்றன. இதுவே வாழ்க்கை வழிப்பயணம் என்று குறிப்பிடுகின்றார் கவிஞர்.

 

 

 

 

 



மரபுக்கவிதை - வருங்காலம் உண்டு

 

வருங்காலம் உண்டு

பட்டுக்கோட்டை அ.கல்யாண சுந்தரம்


செய்யும் தொழிலே தெய்வம் அந்தத்

திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி- கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி

 

பயிரை வளர்த்தால் பலனாகும் அது

உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும்

இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.

 

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்

சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்

ஏழைகள் நிலைமை .

 

அந்தச் சாமி மறந்தாலும் பூமி தந்திடும்

தகுந்த பலனை இதைப்

பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல

கோடிக்கோடி முறை கும்பிடுவோம்.

 

காயும் ஒரு நாள் கனியாகும்-நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விலையாகும் நம்

கனவும் நினைவும் நிலையாகும் உடல்

வாடினாலும் பசி மீறினாலும்  - வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

 

பாடல் விளக்கம்

கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் அவர்கள் உழைப்பின்  பயனையும், விவசாயத்தின் மேன்மையையும் இக்கவிதையில் கோடிட்டுக் காட்டுகின்றார்.

உழைப்பே வெற்றி தரும்

நாம் செய்கின்ற தொழிலைத் தெய்வமாக எண்ணிப் போற்ற வேண்டும். அத்தொழிலில் திறமையுடன் நாம் செயல்படும்போது செல்வம் பெருகும். அடுத்தவர் உதவியை எதிர்பாராது நிற்காமல் இறைவன் நமக்களித்த இரு கைகளையும் இரு கால்களையும் கொண்டு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

கடமையே பதவி

செய்கின்ற தொழிலில் கடமை தவறாமல் செயல்பட வேண்டியது அவசியம். அந்தக் கடமையை நாம் கொண்ட பதவியாக எண்ணினால் வாழ்வில் உயரத்தை அடையலாம்.

வெயிலே துணை வியர்வையே விதை

விவசாயம் செய்கின்ற ஒருவனுக்குப் பயிர் வளர்ப்பது நல்ல பலனைத் தருகின்றது. அதுவே உயிரைக் காக்கின்ற உணவாக அமைகின்றது. உழைப்பவர்களுக்கு வெயிலே துணையாகவும், சிந்துகின்ற வியர்வைத்துளிகளே விதையாகவும் அமைகின்றன. வியர்வை சிந்தி உழைத்தால் மேன்மை பெறலாம் என்ற தத்துவம் இதன் மூலம் விளக்கம் பெறுகிறது.

இயற்கையின் கொடை

ஏழைகளின் துன்பத்தை இறைவன் அறிவார். விதைத்தால் பலன் தருகின்ற பூமிக்கும் அவர்களின் துயரம் புரியும். இறைவனே விளைச்சல் தர மறந்தாலும் பூமி மறப்பதில்லை. அதன் இயல்பில் இருந்து மாற்றம் கொள்வதேயில்லை. இந்த உண்மையைப் பாடி  ஆடி  பூமியை வணங்குவோம்.

கனவுகள் நனவாகும்

முழு முயற்சியுடன் உழைத்தால் காய்கள் ஒரு நாள் கனிகளாகும். அதுபோல நம் எதிர்காலக் கனவுகள் ஒரு நாள் நிஜமாகும். நாம் விதைத்த காய்களும் கனிகளும் விலையாகி செல்வத்தைக் கொடுக்கும். அதனால் நம் கனவுகளும் நனவுகளும் எப்போதும் நிலையானதாகிவிடும். எனவே, உழைப்பதால் உடல் சோர்வுற்றாலும், நம் தேவைகள் என்ற பசி அதிகரித்தாலும், நன்மை தரும் வழியில் இருந்து மாறாமல் வாழ்ந்திட வேண்டும். உழைப்பின் பெருமையை அறிந்து வியர்வை பெருக உழைப்போம். வருங்காலம் நமக்கு நிறைவான வளத்தைத் தரும் என்ற நம்பிக்கையை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.


கவிதை இடம்பெற்ற திரைப்படத்தின் இணைப்பு 

https://www.youtube.com/watch?v=OT_94-mcgUw

 

 

மரபுக்கவிதை - குடும்பம் ஒரு கதம்பம்

 

குடும்பம் ஒரு கதம்பம்

கண்ணதாசன்

குடும்பம் ஒரு கதம்பம்

பல வண்ணம் பல வண்ணம்

தினமும் மதி மயங்கும்

பல எண்ணம் பல எண்ணம்


தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை

குழந்தை ஒரு பாதை

காலம் செய்யும் பெரும் லீலை


மனையாள் பணி செய்தால்

மணவாளன் வாழலாம்அதிலே

வருமானம் ஆனாலும் அவமானம்


வீடுகள்தோறும் இங்கு

இதுதானே கேள்வி இன்று

விடிந்தால் ஒரு எண்ணம்

எல்லோர்க்கும் தனியுள்ளம்


கணவன் பெரிதென்று

மணந்தார்கள் மங்கையர்கள்

உழைப்பாள் அவளென்று

மணந்தார்கள் நாயகர்கள்


பொருளாதாரத்திலே

பொருள்தானா தாரம் இன்று

இருவர் உழைத்தால்தான்

இந்நாளிலே பசி தீரும்


இரண்டு குதிரையிலே ஒரு

மனிதன் போவதென்ன

இரண்டு நினைவுகளில் சில

மனிதர் வாழ்வதென்ன


காலங்கள்தோறும் அவர்

சிந்தனையில் மாற்றமென்ன

மனிதன் நினைக்கின்றான்

இறைவன் அதை மாற்றுகின்றான்.

 

பாடலின் பொருள் 

குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடல் குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

குடும்பம் - கதம்பம்

பலவகையான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக் கதம்பம் என்று அழைப்பர். அவ்வாறே பல வகையான மனிதர்கள் ஒரே வீட்டில் ஒன்று சேர்ந்து வாழ்வதால் குடும்பம் என்பதும் கதம்பமாகவே காட்சியளிக்கின்றது.

வெவ்வேறு ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கொண்ட மனிதர்கள் ஒரு குடும்பமாக வாழ்வதால் பல எண்ணங்களும் விவாதங்களும் தோன்றுவது இயல்பு. அதனால் குழப்பங்கள் பல ஏற்பட்டு அறிவானது மயங்கிப்போய் விடுகின்றது.

காலத்தின் கோலம்

தலைவன் ஒரு பாதையிலும், தலைவி ஒரு பாதையிலும், குழந்தை வேறு பாதையிலும்  பயணிக்கின்ற குடும்பங்களில் நிம்மதி என்பது இருப்பதில்லை. அதனால் காலம் பல வெறுக்கத்தக்க சூழ்நிலைகளை உண்டாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது.

மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டுக் கணவன் வீட்டுக்குள் அமர்ந்து உண்டால் வருமானம் வரும். ஆனால் அதனால் அழிவில்லாத அவமானம் உண்டாகும்.

குடும்பத்தில் வாழ்கின்ற எல்லோருக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் பல விதமான பிரச்சனைகள் முளைத்தெழுகின்றன.

கணவன் – மனைவி எதிர்பார்ப்பு

கணவனே கண் கண்ட தெய்வம் என்றும், தான் மணந்து கொள்ளும் கணவனாலேயே தன் உலகம் சுழலும் என்றும் நம்பிக்கைக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றனர் பெண்கள். ஆனால், வீட்டிற்கும் தனக்கும் சேர்த்து உழைப்பாள் என்ற எதிர்பார்ப்போடு பெண்களை மணந்து கொள்கின்றனர்  சில ஆண்கள். பொன்னும், பொருளும், பணமுமே அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது

பொருளாதாரச் சிக்கல்கள்

கணவன் மனைவி இருவரும் உழைத்தால்தான் பசி இன்றி வாழ முடியும் என்ற நிகழ்கால உண்மை முகத்தில் அறைகின்றது. அதனால் பணமும் வேண்டும், வாழ்க்கையும் வேண்டும் என்று இரண்டு குதிரைகளில் பயணம் செய்கின்றான் மனிதன். இதன் காரணமாக, நிலையான வாழ்வைப் பெற முடியாமல் பல்வேறு நினைவுகளுக்கு ஆட்பட்டு மாறுபட்ட சிந்தனைகளில் உழன்று துன்பத்தை அடைகின்றான்.

இறைவனின் தீர்ப்பு

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவருக்கும் பொருந்தும். இறுதியில் இறைவன ் எழுதுகின்ற தீர்ப்பின்படியே மனிதனின் வாழ்க்கை அமையும் என்ற தத்துவத்தை இப்பாடல் மூலமாக வெளிப்படுத்துகின்றார் கவிஞர் கண்ணதாசன்.


கண்ணதாசனின் இப்பாடல் வரிகள் இடம்பெற்ற திரைப்படம்.

link : https://www.youtube.com/watch?v=dkFja-bTm6A

செவ்வாய், 13 அக்டோபர், 2020

மரபுக்கவிதை - தமிழன் இதயம்

  

மிழன் இதயம்

கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை


தமிழன் என்றோர் இனமுண்டுதனியே அவற்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனுடைய வழியாகும் அன்பே அவனுடை மொழியாகும்.


அறிவின் கடலைக் கடைந்தவனாம்அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;

பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.


கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;

புவியில் இன்பம் பகர்ந்தவெலாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.


'
பத்தினி சாபம் பலித்துவிடும்பாரில் இம்மொழி ஒலித்திடவே

சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை ஓரரசன்.


சிந்தா மணி,மணி மேகலையும்பத்துப் பாட்டெனும் சேகரமும்,

நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும்.


தேவா ரம்திரு வாசகமும் திகழும் சேக்கி ழார்புகழும்

ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும்.


தாயும் ஆனவர் சொன்னவெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும்;

பாயும் துறவுகொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம்.


நேரெதும் நில்லா ஊக்கமுடன் நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்

பாரதி என்னும் பெரும்புலவன் பாடலும் தமிழன் தரும்புகழாம்.


கலைகள் யாவினும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்.


சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?

வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.


உழவும் தொழிலும் இசைபாடும்உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;

இழவில் அழுதிடும் பெண்கூட இசையோ டழுவது கண்கூடு. 


யாழும் குழலும் நாதசுரம் யாவுள் தண்ணுமை பேதமெலாம்

வாழும் கருவிகள் வகைபலவும் வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.


'
கொல்லா விரதம் பொய்யாமை கூடிய அறமே மெய்யாகும் ;

எல்லாப் புகழும் இவைநல்கும் ;' என்றே தமிழன் புவிசொல்லும்.


மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் ;

தானம் வாங்கிடக் கூசிடுவான் 'தருவது மேல்' எனப் பேசிடுவான்.


ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;

நீதியும் உரிமையும் அன்னியர்க்கும் நிறைகுறை யாமல் செய்தவனாம். 


உத்தமன் காந்தியின் அருமைகளை உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்

சத்தியப் போரில் கடனறிந்தான் சாந்தம் தவறா துடனிருந்தான்.

 

பாடல் விளக்கம்

நாமக்கல் கவிஞர் தமிழன் இதயம் என்ற கவிதையில் தமிழர்களின் தனித்தன்மை குறித்தும், அவர்தம் மாண்பு குறித்தும், தமிழிலக்கியங்களின் சிறப்பு குறித்தும் விளக்குகின்றார்.

தமிழனின் தனித்தன்மை

தரணியில் தன்னிகர் இல்லாத இனமாகத் தமிழினம் விளங்குகின்றது. தமிழர்கள் யாவரும் பிறருடன் ஒப்பிட முடியாத தனித்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். வாழ்க்கைக்கு இனிமை பயக்கும் அறச்செயல்களைச் செய்வதே தமிழனின் வழி என்றும், அன்பும் இரக்கம் கொண்ட சொற்களே அவனின் மொழி என்றும் சிறப்பிக்கின்றார்.

தமிழனின் இலக்கியங்கள்

அறிவாகிய கடலைக் கடைந்து திருக்குறள் என்ற அமிர்தத்தை அடைந்தவன். ஐம்புலன்களால் உண்டாகும் நிலையற்ற ஆசைகளை விட்டொழித்து பேரின்ப பெருவாழ்வைத் தரும் அறநூல்களை உலகுக்கு அளித்தவன்.

எதுகை, மோனை சந்தநயம், சொல்லின்பம், பொருளின்பம், தனித்தமிழ்ச் சொற்றொடர்கள் எனக் கவிதைக்குரிய அனைத்துப் பண்புகளையும் ஒருங்கமைத்து கம்பராமாயணத்தைப் படைத்துள்ளார் கம்பர். இந்த உலகில் இன்பம் தரும் வழிமுறைகளை இலக்கியங்களாகப் படைத்தளித்த பெருமைக்குரியவன் தமிழன்.

துறவு வாழ்வை விரும்பி ஏற்ற இளங்கோவடிகள், “பத்தினி சாபம் நிச்சயம் பலிக்கும்” என்ற வாய்மொழியினை இந்த உலகுக்கு உணர்த்திடவே சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றித் தந்தார்.

சீவகசிந்தாமணி, மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகியன யாவும் தமிழ்நாட்டின் நாகரிகத்தினை எடுத்துக் காட்டும் ஆவணங்கள் ஆகும்.

தேவாரம், திருவாசகம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களின் உரைகள் தமிழர் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

தமிழனின் ஞானத்தை, அவன் அறிவின் திறமையைத் தாயுமானவரின் பாடல்களால் அறியலாம்.   பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர்களின் பாடல்கள் தமிழர்களின் தனிப் பெருஞ் சொத்தாக மிளிர்கின்றன.

அச்சத்தை விடுத்து எதிர்த்து வரும் சோதனைகளை ஊக்கமுடன் எதிர்கொண்டு வாழ, பாரதியின் பாடல்கள் துணை புரிகின்றன. இவையாவும் தமிழரின் புகழைப் பறைசாற்றுகின்றன என வியந்து போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர்.

தமிழனின் திறமைகள்

          அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தவன் தமிழன். கல்வி கற்கும் யாவருக்கும் நல்லவனாக விளங்கியவன்.  அவனுடைய சிறப்புகளை எடுத்தோதுகின்ற அடையாளச் சின்னங்கள் இன்றும் காலங்கள் பல கடந்து நிலை பெற்று நிற்கின்றன.

   சிற்பங்கள் வடிப்பதிலும், சித்திரங்கள் தீட்டுவதிலும், சங்கீதம் இசைப்பதிலும் அவனுக்கு நிகர் வேறு யாருமில்லை. கருங்கல்லும், களிமண்ணும்கூட அவனுடைய திறமையால் ஒளிவீசும்.

          யாழ், குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட எண்ணற்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி, அவை தரும் பண்களை வகுத்து  இசை என்றொரு மாபெரும் கலையை உலகிற்கு அளித்தவன் தமிழன் என்றால் அது மிகையில்லை.

தமிழனின் மாண்புகள்

          கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றைக் கடைபிடித்து வாழும் வாழ்க்கையே அறம் நிரம்பிய வாழ்க்கையாகும். அவ்வாழ்க்கையே அழிவில்லாத புகழைத் தரும் என்று வாழ்ந்து காட்டியவன் தமிழன். இதை இந்த உலகம் நன்கு அறியும

    ஒழுக்கம் நிரம்பிய மானத்துடன் வாழ வேண்டும் என்பதே தமிழனின் கொள்கை. அந்த ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் தன் உயிரை விட்டுத் துணிந்து விடுவான்.

         பிறரிடம் தானம் பெற்று வாழ்வதை விரும்பாதவன். தன்னிடம் பொருள் இ்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவி செய்வதே அறம் என்பதை உணர்ந்தவன்.

   ஜாதிகளை முன்னிலைப்படுத்தித் தொழில்கள் பல செய்பவனாக இருப்பினும், வேற்றுமை பாராது ஒற்றுமை கண்டவன். நீதியும் உரிமையும் அனைவருக்கும் பொது என்பதை அந்நியருக்கும் எடுத்துக் காட்டியவன்.

      எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியின் அருமையை உணர்ந்து அவர் காட்டிய வழியில் நடந்து, சத்தியப் போரில் பங்கெடுத்து, அமைதியை விரும்பி வெற்றி கண்டவன் என மிகப் பெருமையுடன் தமிழர்தம் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.