முல்லைப்பாட்டு
– நப்பூதனார்
பத்துப்பாட்டில் நான்கு
ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு.
இது
அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக்
கொண்டது. பத்துப்பாட்டு
நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன்
ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
இந்நூல்
ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன்
நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில்
கூறப்படவில்லை. இந்நூல்
நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.
பாட்டின் உள்ளுறை
போர் காரணமாகத் தலைவியைப்
பிரிந்து செல்லும் தலைவன், தலைவியிடம்
கார்காலம் தொடங்குவதற்கு முன் திரும்பி வந்துவிடுவேன் என்று உறுதியளித்துப் பிரிகின்றான்.
அவன்
வரும்வரை தலைவி அவன் பிரிவை ஆற்றியிருக்கின்றாள்.
கார்காலம்
தொடங்குகின்றது. தலைவன்
வரவில்லை. தலைவி
துயரம் கொள்கின்றாள். தோழியர்
தேற்றுகின்றனர். ஆறுதல்
பெறாத தலைவி கண்ணீர் விடுகின்றாள். தலைவன்
போர் முடிந்து திரும்ப வருகின்றான். தலைவி
தன் துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைகின்றாள்.
இச்செய்தியைக்
கருவாகக் கொண்டு முல்லைப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது.
முல்லைத்திணையின்
உரிப்பொருளான இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இதன்பாற் விளக்கம் பெறுகிறது.
கார்காலத்தின் சிறப்பு
முல்லைத்திணையின் பெரும்பொழுது
கார்காலம். சிறுபொழுது
மாலைக்காலம். கார்கால
மாலைக்காலம் தலைவியின் துன்பத்தை மிகுதிப்படுத்தும் தன்மை கொண்டது.
எனவேதான், தலைவன் கார்காலம் தொடங்கும்முன், தான் வந்து விடுவதாக உறுதியளிக்கின்றான்.
நிலம்,
காலம்,
பொழுது
ஆகிய இயற்கைகளின் அடிப்படையில் எழும் மன உணர்வுகளை இம்முல்லைப்பாட்டு நன்கு சித்திரிக்கின்றது.
முல்லையும் வஞ்சியும்
இந்நூல்
“வஞ்சிதானே முல்லையது புறனே”
என்ற
தொல்காப்பியரின் கூற்றுப்படி முல்லைத்திணைக்குப் புறனாக அமையும் வஞ்சித்திணையைத் தொடுத்துச்
செல்கின்றது. முல்லைத்திணைக்கு
நிலம் காடு, வஞ்சித்திணையின்
நிலமும் காடு. தலைவனைப்
பிரிந்த தலைவி முல்லைத்திணைக் காட்டில் தங்கியிருத்தல் போல,
தலைவனும்
தன் போர்ப்படையுடன் பகைவர் நாட்டின் காட்டில் பாசறை அமைத்துத் தங்கியிருக்கின்றான். இதனால்
அகத்திணையாகிய முல்லைக்குப் புறத்திணையாகிய வஞ்சி புறனாக அமைகின்றது.
முதல்,
கரு,
உரி
ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முல்லை,
வஞ்சி
என்னும் இவ்விரண்டு திணைகளையும் நப்பூதனார் தம் முல்லைப்பாட்டில் அடுத்து அடுத்துத்
தொடுத்துச் சென்றாலும் முல்லைத்திணை ஒழுக்கமே முதன்மை பெறுகிறது.
சிறப்பு
இப்பாட்டில் முதல்
23 அடிகள் கார்காலத்தின் மாலைப் பொழுதையும்,
தலைமகளின்
பிரிவாற்றாமையையும் பாடுகின்றன. அடுத்த
57 அடிகள் பாசறை அமைப்பு,
தலைவனின்
நிலையை எடுத்துரைக்கின்றன. அடுத்த
9 அடிகள் தலைவியின் துயரத்தைக் கூறுகின்றன.
இறுதி
14 அடிகள் மழைக்காலச் சிறப்பை,
தலைவனின்
வருகையை உணர்த்துகின்றன. இவ்வாறு
காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டி இறுதியில் அவற்றை கலைநயத்துடன் இணைக்கும் திறன் முல்லைப்பாட்டின்
மிகப் பெரும் சிறப்பாகும்.
நூலின் ஆசிரியர்
முல்லைப்பாட்டின் ஆசிரியர்
காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகன் நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றது.
இதனால்
நப்பூதனார் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதும்,
இவர்
வணிக்குடியில் பிறந்தவர் என்பதும், இவருடைய
தந்தை பொன்வாணிகம் செய்தவர் என்பதும் அறியப்படுகின்றது.
பூதன்
என்பது இவருடைய இயற்பெயர். அப்பெயர்
முன்பு சிறப்புப்பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய
“ந” என்பதைச்
சேர்த்தும், “ஆர்”
என்ற
உயர்வு குறித்த விகுதியும் சேர்ந்து நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றார்.
நக்கீரனார்,
நத்தத்தனார்,
நக்கண்ணையார்,
நப்பசலையார்,
நச்செள்ளையார்
முதலிய சங்ககாலப் புலவர்களின் பெயர்களைப்போல இப்பெயரும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பாட்டைத்
தவிர இவர் பாடியதாக வேறு எந்தப் பாடலும் பண்டைய இலக்கியங்களில் காணப்படவில்லை.
முல்லைப்பாட்டின் பொருள்
மழைப் பொழிவு
(1-6)
அலை
ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம்.
அகன்ற
உலகை வளைத்தது. வலப்பக்கமாக
உயர்ந்தெழுந்தது. மலையில்
தங்கியது. மாலைக்காலத்தில்
பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி
திருமால் வாமன அவதாரம் கொண்டபோது,
மாவலிசக்கரவர்த்தியிடம்
மூன்றடி மண் கேட்க, மாவலி
மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர் வார்த்தார்.
அந்நீர்
வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும் மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக்
காட்சியளித்தது.
தெய்வத்தை வணங்குதல் (7-11)
மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு வெளியே
உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர். யாழிசை போன்று முரலுகின்ற
வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள் மலர்ந்தன.
அம்மலர்களையும்,
நெல்லையும்
கொண்டு வந்து தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.
நற்சொல்
(விரிச்சி)
கேட்டல்(12
-16)
ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச்
சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி வைத்திருந்தாள்.
அது
தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது.
அந்தக்
கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டு
“கோவலர் பின்னிருந்து ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு
இப்பொழுதே வந்துவிடும்” என்று
ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.
இந்நற்சொற்கள் தெய்வத்தை
வணங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது.
இதுவே
தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.
தலைவியைத் தேற்றுதல்(17 – 23)
நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின்
காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை நோக்கிச்
சென்றனர். தாங்கள்
கேட்ட நற்சொற்களைக் கூறி “தலைவன்
தான் மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து வந்து உன்னைச்
சந்திப்பார். ஆதலால்,
நீ
உன் மனத்தடுமாற்றத்தால் அடையும் துன்பத்தைப் போக்கிக் கொள்”
எனப்
பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின்
சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள்
விழுந்தன.

காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில்,
மணம்
வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய
அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும்
விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை
வீடு உருவாக்கப்பட்டது. அது
பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில்
தலைவன் தங்கியிருந்தான்.

போர் யானையும் யானைப் பாகனும் (29 - 35)
பாசறை
அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன.
தெருக்கள்
பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
அந்த
யானைகளுக்குக் கம்பும், கதிரோடு
கூடிய நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத்
தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. அந்த
யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக்
கொண்டன. கையில்
அங்குசம் வைத்திருந்த இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக்
கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.
அரண் (36 - 42)
தவம் பூண்ட அந்தணர் மூன்று
கோல்கள் இணைந்த முக்கோலைக் கையில் வைத்திருப்பர்.
அந்தக்
கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க விடுவர்.
அதுபோல போர் வீரர்கள் தங்கள்
வில்லினை நிலத்தில் ஊன்றி அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர்.
தங்கள்
வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம் அமைத்தனர். பின்னர் எறிகோல்களை அதன்மீது
நட்டு தோலால் ஆன கருவிகளை வரிசையாகப் பரப்பிப்
பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு
வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.
அரசனுக்கு அமைத்த பாசறை (43- 44)
பல்வேறு
படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே, வேறு
ஒரு தனி இடத்தில் தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர்.
பலநிறமுடைய
மதில் திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர்.
பல்வேறு
படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
மங்கையர் விளக்கு ஏற்றுதல் (45- 49)
முதுகில் கூந்தல் புரள,
கையில்
வளையலுடன், தன் கச்சோடு வாளினைச் சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள பாவை விளக்கில்
நீண்ட திரியை இட்டனர். நெய்
வார்த்து விளக்கேற்றினர். விளக்கின்
சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.
மெய்க்காப்பாளர் காவல் புரிதல் (50
-54)
நீண்ட நாக்கினை உடைய
மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது.
புனலிப்பூக்கள்
பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று,
தம்
தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக் கட்டியிருக்கும் வயது
முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து
காவலாக நின்றனர். அவர்கள் மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் (55-58)
பிழையின்றி காலத்தைக்
கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம் கையால் தொழுது வணங்கினார்.
மன்னனை
வாழ்த்திவிட்டு “கடல்
சூழ்ந்த உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இதுவே.
காண்பாயாக” என்று
மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை
வட்டில் – வட்டிலில்
நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரை அளந்து
காணும் கருவி)
யவனர் செயல் (56- 66)
வலிமையான
கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின் பாசறையில் உள் அறை,
புற
அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை
புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன.
உள்
அறையாகிய பள்ளி அறையில் அரசன் படுத்திருந்தான்.
அவனருகில்
வாய் பேச முடியாத ஊமை வீரர்கள் பாதுகாவலுக்காக நின்றனர்.
அவர்களின்
தோற்றம் அச்சம் கொள்ளத்தக்கதாக இருந்தது.
மடங்கிப்
புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக் கட்டின ஆடை அணிந்திருந்தனர்.
அவ்
ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது.
வலிமை
மிக்க உடம்பில் தங்கள் உடம்பில் சட்டை அணிந்திருந்தனர்.
பாசறையின்
மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.
மன்னன் நிலை (67
- 76)
மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும் முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான்.
- போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம் பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான்.
- அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல
களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
- தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு
வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக்
கடன் தீர்த்து போரில் இறந்த வீரரை நினைக்கின்றான்.
- கூர்மையான அம்பின் நுனிகள்
தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும்
குதிரைகளை நினைக்கின்றான்.
இவற்றையெல்லாம் நினைத்துக்
கொண்டே உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான்.
பாசறையில் வெற்றி முழக்கம் (77
- 79)
மறுநாள் போரில்,
படைக்கருவியால்
பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த போர் வீரர்கள் பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி
முரசை முழங்கினர். பாசறையில்
அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான்
மன்னன்.
தலைவியின் துயரம் (80 - 88)
பாவை விளக்குகள் ஒளி வீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம் வருந்துகின்றாள். “நான் வரும் வரை பிரிவை ஆற்றியிரு” எனக் கூறிச் சென்ற தலைவனின் சொல்லை மீறுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத் தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீண்டும் தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள் காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.
அரசன் மீண்டு வருதல் (89
- 92)
பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான் தலைவன்.
மழையால் செழித்த முல்லைநிலம் (93-100)அரசன் வரும் வழியில்
காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை
மலர்கள் பூத்திருக்கின்றன. வெண்
காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன. தோன்றி
மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன.
அதனருகில்
கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்)
மடப்பம்
பொருந்திய மான்கள் (பெண்)
துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை
மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.
தேர் வருகை (101 – 103)
வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும்
முல்லைக் காட்டில் அரசனது தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அந்த
ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.
Priyadharshini N S
பதிலளிநீக்குB.com(general)-B
BHAVANI S (BCA)
பதிலளிநீக்குFinished mam
Musarath Thanjeer. M
பதிலளிநீக்குBCA
Finished mam
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு