திங்கள், 29 ஜனவரி, 2024

ஆர்.சூடாமணி - அந்நியர்கள்

 

ஆர்.சூடாமணி 

 அந்நியர்கள்

"வா...வா" என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணறவெத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.

"ஹலோ ஸவி, என்ன ப்ளெசன்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷ னுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே" என்று முகமலர்ச்சி யுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

"எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டே ஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது" என்றாள் ஸவிதா.

ஸௌம்யா சிரித்தாள். "அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு."

இரண்டு நிமிஷங்கள் வரையில் ஒரு மௌனமுகங்களாய்ச் சகோ தரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமய மான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், "எப்படியிருக்கே? உங்காத்துக்கார், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?" எனபதற்கு மேல் உரை யாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், "நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!" என்று சிரித்தார்.

சௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம். புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.

"இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறேதும் வித்தியாசமில்லே" என்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக்கொண்டாள். 'காலம் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!' என்று சொல் வது போல் இருந்தது, அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டு விடமுடிகிறது! சௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரிய வில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோர் ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இரு வரும் ஒன்றாய் வாழ்ந்துகொண்டிருந்தது போலவே தோன்றியது.

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களி லிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்குகொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத் துக்கு திரும்பிவிட்டார்கள்.

அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம் யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக்கொள்வ தாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்கா விடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண் டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற் போல் இருந்தது. முதல் நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச் சில் உடைப்பெடுத்துக் கொண்டன. "அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!" என்று ஸவிதாவின் கணவர் பரிக சிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றாள் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது. ஒரு நாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன் றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக் காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழை கள் இயல்பாய் கலந்துக்கொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியை விடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப் பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்துகொள்ளல்.

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும் போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலை விட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக் கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக் கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதாவுக்கு நாற்பது வயதாகப் போகிறது. சௌம்யா அவளை விட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

வைத்தியமும் நடந்தது, ஒரு கடமை போல.

ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். "உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே."

"உன் கைபாகந்தான்!இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?"என்று ஸௌம்யா சிரித்தாள்.

தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தார்கள்.அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.

"இங்கே யாருக்கும் இது பிடிக்கறதில்லே.இப்போத்தான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே"என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.

மாலை நாலரை மணி இருக்கும்.ஸவிதாவின் மூத்த மகன் ராஜு, பத்தொன்பது வயதான எம்.எஸ்ஸி முதல் ஆண்டு மாணவன், கல்லூரிலிருந்து திரும்பி வந்தான்.

"அம்மா,நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்ஸி முடிச்சுட்டுப் போற ஸ்டூடன்ஸுக்கெல்லாம் 'ப்ரேக்-அப்'பார்ட்டி நடக்கிறது. நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன்.ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்"என்றான்.

"சரி"என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜு? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?"

"ஆகணும்னு ஒன்னுமில்லே சித்தி.ஆனா எனக்கு ஆசையா யிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா."

அவ‌ன் அங்கிருந்து சென்ற‌ பின் ஸௌம்யா."இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?" என்றாள்.

"ஆமாம்."

"நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?"

"எதுக்குச் சொல்லணும்?"

"இப்ப‌டியெல்லாம் வீட்டை விட்டு வெளியே த‌ங்க‌ ஆர‌ம்பிச்சு தான் இந்த‌ நாள் ப‌ச‌ங்க‌ எல்லா வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் க‌த்துக்க‌றா. இல்லையா?சுருட்டு,க‌ஞ்சா,குடி அப்புற‌ம் கோ-எட் வேற.... நான் இப்போ ராஜுவை ஏதும் ப‌ர்ச‌ன‌லாய்ச் சொல்ல‌லே."

"புரியற‌‌து ஸௌமி.ஆனா கால‌ம் மாற‌ர‌தை நாம் த‌டுத்து நிறுத்திட‌ முடியுமா?

"குழந்தை‌க‌ளை நாம் த‌டுத்துக் காப்பாத்த‌ல‌மே?"

"உல‌க‌ம்னா இப்ப‌டியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த‌ நாள் ப‌ச‌ங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல் ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்க‌றது அவா கையில‌ இருக்கு."

"பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லேங்கற‌யா?"

"கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்."

"குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?"

"தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?"

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடறலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கணநேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

"இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு, போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பாத்துட்டியா?"

"இன்னும் பார்க்கலே, போகலாம்."

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப்பற்றி விவாதித்தார்கள். ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. "இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத் திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமா யிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?" என்றாள்.

"நாம் அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்."

"முதல்லே விஷத்தை கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்."

அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.

ஸவிதாவின் கண்கள் விரிந்தன. "அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதைகூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?"

"வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்னு தான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்ப வானும், சும்மா ஆசைக்கு, படிச்சுப் பாரேன்."

படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

"ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமானநடை."

"நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?"

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, "நல்ல கதைதான், ஆனா... நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு" என்றாள்.

"நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கறது என் லட்சியம்."

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம் போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவி விட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது. அப்பாடா! எல்லாம் முன்புபோல் ஆகிவிட்டது.

ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், "ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்துகொண்டது அவ்வளவுதானா?

"ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப் படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறயே, ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?" என்றார் அவள் கணவர்.

"பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?"

"ஓரா" என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்குமட்டும் மகிழ்ச்சியாயிருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச் சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்தப் பிரத்தியேக அகராதியில் 'ஓரா' என்றால் ஆமாம் என்று பொருள், திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

"சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?" என்றாள் ஸவிதா.

அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறை கள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப் பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக் கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பொருமை ததும்பியது.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்கவேண் டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகி லிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம் பிடிக் கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத் தலைவி நிதி திரட்டிக்கொண்டிருந்தாள். "உங்களாலானதைக் கொடுங்க" என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். "நீங்க...?" என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒரு தரம் சகோதரியை ஏறிட்டுவிட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, "பாவம், இல்லே அந்தப் பையன்?" என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

"என்ன ஸௌமி பேசாமலிருக்கே?"

"என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கறியா? ஆனா .."

"ஆனா...?"

"இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்னை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது, அதனால், போட்டு என்ன பிரயோசனம்?"

"அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்."

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிகையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.

"குட்ரீ அதை என்கிட்ட!"

"போடா தடியா, நான் பாத்துட்டுத்தான்"

"அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டா தலை வெடிச்சுடுமோ?"

இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபா வுக்குப் பின்னிருந்து வேகமாய்த் திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன் கண் ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான 'கட்கிளாஸ்' ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழே விழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. "கடன்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?" என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.

பையன் தலை கவிழ்ந்தது. "ஸாரிம்மா!" வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள். ஸவிதாவின் படபடப்பு அடங்க சிறிது நேரம் ஆயிற்று, ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பாரேன் ஸௌமி, நம்ம அப்பா அம்மா கொடுத்ததுன்னு நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?"

ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.

"இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந் திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா?"

"பத்திரமாய்த்தான் இருக்கு."

"இதேமாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்?"

"வச்சிருந்தேன்"

"அப்படின்னா?"

"மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்."

ஸவிதா அதிர்ந்து நின்றாள்.

என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?”

ஏன் வரக்கூடாது?”

அப்பா அம்மா நினைவாய்...”

அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”

மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.

நான் போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வெச்சுட்டு வா.”

ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப் போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப் போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடி வந்து உட்கார்ந்துகொள்வதிலும் 'இது அவளுக்குப் பிடிக்கும்' என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், 'அடுத்த சந்திப்பு எப்போதோ?' என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டை யடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்துகொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம் புக்கு இப்பாலேயே இருக்கவேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.

அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால்மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், ”அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! 'நான்தான் ஸௌம்யா' என்று நெற்றியில் அச்சடித்துக்கொண்டு வா என்று எழுதியிருந் தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்தபோதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேம்டியதுதான்.

தாம் இனி இப்படி வருஷக்கண்க்காகப் பிரிந்திராமல் ஆண்டுக் கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக்கொண்டார்கள்.

"நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!" என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் தண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப் பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல்,மஞ்சளில் அகல மான கோபுரக் கரை.

"எதுக்கு இதெல்லாம் ஸவி? "

"பேசப்படாது,வைச்சுக்கோ."

"உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?"

"இதோ எனக்கும்."

மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக் கரை. மீண்டும் புன்னகைகள் பேசின.

நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம்.. சாமான் கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.

"கிளம்பிட்டாயா ஸௌமி? " ஸவிதாவின் குரல் கம்மியது.

" நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி? "

ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. "கட்டாயம்."

"எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறத்துக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்."

ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யா. ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"ஆனா இங்கேபூஜை அறையே இல்லையே? " என்றாள் தொடர்ந்து.

"இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?"

"நம்பிக்கை இருந்தால்' னா? உன் நம்பிக்கை அந்தமாதிரின்னு சொல்றயா? " திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. " அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லேன்னு அர்த்தமா?"

"நான்...நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடை யாது." ஸவிதாவுக்குச் சங்கடம் மேலோங்கியது. " இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?"

"என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்பிராயம் இல்லையா?"

"இதை ஒரு பெரிய விஷயம்னு நான நினைக்கலே."

ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களு டைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்தி மயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாங்காலமானால், ' போய்ச் சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி' என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். 'வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக் கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்' என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

"தெய்வ நம்பிக்கையை இழக்கறமாதிரி உனக்கு அப்படி என்ன அநுபவம் ஏற்பட்டுது ஸவி?"

"அந்த நம்பிக்கையை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அநுபவம் நமக்கே ஏற்பட்டால் தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்னைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்னையாய் எனக்குத் தோண லேன்னு வச்சுக்கோயேன்."

"எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய் வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது."

பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவ்ற்றில் பதைப்பு, மருள், ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை 'இவள் யார்?' என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.

ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள் தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவான வைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு?

ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் கடைசியில் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டு மல்ல.

அன்பு ... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதனாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத்தான் அது இருக்கிறது.

மன்னிக்கவும், ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத் தான் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.

"நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வாணாமா? வாசலில் டாக்ஸி ரெடி" என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, "உங்க பேச்சுக்கு ஒரு 'தொடரும்' போட்டுட்டு வாங்கோ, அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக் கலாம்" என்றார் சிரித்துக்கொண்டே.

"இதோ வரோம், வா ஸௌமி!" ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக்கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

 

 

 

                                                       

ஜெயகாந்தன் – வாய்ச்சொற்கள்

 

ஜெயகாந்தன் – வாய்ச்சொற்கள்

சத்திரத்துத் திண்ணையில் கவிந்திருந்த இருளில் யாருடைய வருகைக்காகவோ – யாருடைய காலடிச் சத்தத்தைக் கிரகிப்பதற்காகவோ – தன் காதுகளை வழி மீது வைத்துக் காத்திருக்கிறாள் ருக்குமணி.

அந்தச் சத்திரம் ஊருக்கு வெளியே – கிராமத்தின் எல்லையில் தலைகாட்டிவிட்டுப் பிறகு திசை மாறிச் செல்லும் – டிரங்க் ரோடின் ஓரத்தில் ரொம்ப காலம் வாழ்ந்து இப்போது பாழடைந்து கிடக்கிறது.

பகல் நேரத்தில் அந்தச் சத்திரத்தின் அருகே இருகு்கும் ஆலமரத்துப் பிரதேசம் மிகவும் கலகலப்பாக இருக்கும். வழிப்போக்கர்களும் பஸ் பிரயாணிகளும் சத்திரத்துக்கு நேர் எதிரே இருக்கும் அரசங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வரும் ரயில் பிரயாணிகளும் அங்கு வந்து சாப்பிடுவதற்கும், இளநீர் குடிப்பதற்கும் வசதியாய் ஒரு டீக்கடை உண்டு. அந்த டீக்கடையும் வெற்றிலை பாக்குக் கடையும் இரவு நேரத்தில் சத்திரத்துக்குப் பின்னால் பர்லாங்கு தூரத்தில் உள்ள பொட்டைத் திடலில் அமைந்திருக்கும் டூரிங் டாக்கீஸ் கொட்டகை அருகே வியாபாரம் செய்தவற்காக ஆலமரத்துப் பிரதேசத்தைக் காலி பண்ணிவிட்டுப் போய்விடும்.

பகலில் ஆலமரத்தடியில் முறுக்கு மசால்வடை விற்கும் முனியம்மாளிடம் புகையிலை அடைத்த வாயோடு சிரித்துச் சிரித்துக் கதை பேசியவாறு கூடைகள் முடைவதிலும் தடுக்குகள் பின்னுவதிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள் ருக்குமணி. அவளருகே ஒரு கட்டுப் பனை ஓலையும், மூங்கில் கம்புகளும் இருக்கும். அநேகமாக எப்பொழுதும் அவளைச் சுற்றி ஒரு கூட்டம் அவள் கூடை முடைவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். யாருடன் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் அவள் விரல்கள் ஓய்வில்லாமல் பின்னிக் கொண்டே இருக்கும். அவள் கையிலிருக்கும் அந்தக் கத்தி.. மூங்கிலைப் பிளக்கும்போதோ, ஓலைகளைக் கிழிக்கும்போதோ சற்றே விரல் மீது பட்டால்போதும்! இரண்டு துண்டுதான். அத்தனை கூர்மை. ஆனால் அவள் ஒரு போதும் லேசாகக்கூட விரல்களை வெட்டிக் கொண்டதில்லை. அவளுக்கு விரலில் கண் உண்டு. விரலில் மட்டும்தானா? செவியில், நாவில், உடலெங்கும் கண்கள்தான். ஆனால் முகத்தில் எல்லோருக்கும் கண்கள் இருக்கின்ற இருக்க வேண்டிய இடத்தில் இமைகள் மட்டுமே..

அவள் பிறவிக் குருடு.

பத்து வருஷங்களுக்கு முன் பத்து வயதுச் சிறுமியான ருக்குமணியை அழைத்துக் கொண்டு ஆலமரத்துச் சத்திரத்தில் குடிபுகுந்த செங்கேணி என்கிற நெல்லிக் குப்பத்தான், தன்னைத் தவிர வேறு ஆதரவு இல்லாத ருக்குமணியின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு “இந்தாம்மா ருக்கு.. நீயோ கண்ணில்லாத கொழந்தை..எனக்குப் பிறகு ஒனக்கு யாரும் ஆதரவு கிடையாது. கண்ணே இல்லாத ஒனக்கு யாரு இருந்து என்ன பிரயோசனம். அவங்களுக்கு நீ சொமையாத் தான் இருப்ப. நாளைக்கி இந்தக் கிழவன் மண்டையெப் போட்டுட்டா,“ஐயா கண்ணில்லாத கபோதிங்க”ன்னு நீ கையேந்தக்கூடாது. கஷ்டப்பட்டு இந்தத் தொழிலைக் கத்துக்க.. உசிர் உள்ளவரைக்கும் கால் வயித்துக் கஞ்சியாவது குடிக்கலாம்” என்று தினசரி புலம்பிப் புலம்பி அவளது சின்னஞ்சிறு விரல்களுக்கு ஒரு தொழிலைப் பழக்கிக் கொடுத்திருந்தான்.

ருக்குமணிக்குப் பகலெல்லாம் ஆலமரத்தடியில் தொழில். டீக்கடையில் சாப்பாடு. இரவில் ஜனசந்தடி அடங்கிக் கடைகள் அனைத்தும் இடம் மாறிய பின் சத்திரத்துக் தனிமையில் படுக்கை. இருளும் தனிமையும் தானே அவளுக்குப் பழக்கமானவை. அவளுக்குப் பயம் தெரியாது. இருட்டில் தனியாய் இருந்தால் என்ன? இன்னொருவர் துணையுடன் இருந்தால் என்ன? ஆனால் போன வாரத்தில் ஏதோ ஒரு நாள் இரவில் பேச்சுத் துணையாக இருந்த அவன் – கண்ணப்பன் – அதன் பிறகு வரவே இல்லை. அதன் பிறகு அவளுக்கு இந்த இருளும் தனிமையும் பயம் தராவிட்டாலும், வெறுப்பைத் தந்தன.

இன்று முன்னேரத்திலேயே ஏதேதோ நினைத்துக் கொண்டே படுத்து உறங்கிப்போன ருக்குமணி ஒரு கனவு கண்டு திடீரென்று விழித்துக் கொண்டாள்.

கனவா?

ஆமாம். பிறவிக் குருடியும் கனவு காண முடியும். தூக்கமும் விழிப்பும் இருக்கிறதே, கண்கள் இல்லாதிருந்தும் கனவு மட்டும் இல்லாதிருக்குமா? ஆனால் அவளது கனவுகள் ஒலி மயமானவை..சப்த ஜாலங்கள் தான். யாராருடைய குரல்கள் எல்லாமோ கேட்கும்.! குரலும் மெய்யுணர்வும் தான்.. குரலைக் கொண்டுதான் ஆட்களைக் காணமுடியும் அவளுக்கு. தாத்தா செங்கேணிக் கிழவன் சில சமயங்களில் கனவில் வந்து ஆதரவோடு தலையைத் தடவிக் கொண்டு கொஞ்சுவார். இன்றைக்கு அவள் புதுவிதமான கனவு ஒன்று கண்டாள்…

தூரத்திலிருந்து மெல்லெனப் புல்லாங்குழலின் நாதம்…கொஞ்சம் கொஞ்சம் அருகே நெருங்கி ஒலித்தும், திடீரென விலகி மெல்லன மங்கியும், சப்த விளையாட்டு! அந்த ஜாலம் அதிகமாகி, பிறகு மறைந்த பின் காதருகே நெருங்கி கணீரென்ற குரலில்,“ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே”.. என்ற பாட்டு!

“யாருடைய குரல்“? என்று சந்தேகம் பிறக்கவே இல்லை.

ஆமாம்.. கண்ணப்பாதான் வந்திட்டியா, ஏன் நீ அன்னிக்கு அப்புறம் வரவே இல்லை… புல்லாங்குழல் செஞ்சுட்டியா… எனக்குப் பயமா இருந்திச்சு. நீ எங்கே வராமலே இருந்துடுவியோன்னு. இந்தக் குருடியைக் கட்டிக்கிட்டு நாம்ப எதுக்கு அழணும்னு போயிட்டீயோன்னு நெனச்சேன்..கண்ணப்பா நீ வந்துட்டியா? என்று அவன் முகத்தை, தலையை, தோளை, மார்பெல்லாம் தடவித் தடவி மகிழ்கிறாள்.

குருடியா..யார் குருடி? என்று கேட்டுவிட்டு மறுபடியும் பாடுகிறான் அவன், உள்ளங்கைகளில் அவள் முகத்தை ஏந்திக் கொண்டு….

“ஆன பிருந்தாவனமும் அதோ தெரியுதே, ஆனந்தக் கண்ணன் உருவம் அதோ தெரிவதாலே..” என்ற கண்ணப்பனின் இனிமையான குரல் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து முழங்குகிறது.

“எங்கே தெரியுது? கண்ணப்பா…கண்ணப்பா.” என்று அழைக்கிறாள். – விழிப்பு! யாரையும் காணோம்.

தூரத்தில் டூரிங் டாக்கீஸில் பாண்டு வாத்திய இசைதான் ஒலிக்கிறது.

“இன்னம் நேரம் ஆகலே….ஆட்டம் ஆரம்பிக்கலியே.”

“இன்னைக்காவது கண்ணப்பன் வருமா.” என்ற யோசனை, ஏக்கம்!

அதன் பிறகு அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

அரசங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இரவு பத்து மணிக்குக் கடைசிப் பாசஞ்சர் வரும். இரண்டு நிமிஷத்திற்கும் குறைவாகத்தான் நிற்கும். போகும்போது ஷ்டேஷனில் உள்ள வெளிச்சத்தைக் கூட வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடும். ஆலமரப் பொந்திலிருந்து ஆந்தைகள் அலறும். சுடுகாட்டிலிருந்து நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும். சில சமயங்களில், டிரங்க் ரோடில், சத்திரம் அதிர்வதுபோல் பேரிரைச்சலிட்டுக் கொண்டு லாரிகள் ஓடும். டூரிங் டாக்கீஸில் ஆட்டம் ஆரம்பிப்பதற்காகப் பாண்டு வாத்தியம் முழங்கும்.

ஒரு வாரத்துக்கு முன் இந்த இரவு நேரச் சப்தம் எதுவும் காதில் விழாதவாறு, திடீரென்று பெருகி வந்த கோடை மழை ஒரு மணி நேரம் விளாசி நின்ற பிறகு, சத்திரத்துக் கூரையிலிருந்தும் திண்ணையோரமாய் மண்டியிருந்த அரளிச் செடியின் இலைகளிலிருந்தும், சொட்டுச் சொட்டாய் நீர் முத்துக்கள் பூமியில் தேங்கி நின்ற நீர்க்குட்டத்தில் விழுந்து எழுப்பும் ஓசையில் லயித்தவாறு புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தபோது மழையில் நனைந்து வந்த நாய் ஒன்று ஆதரவோடு அவள் காலடியில் உரசிக்கொண்டு படுத்ததும், மூலையில் கிடந்த மூங்கில் கம்பை எடுத்து “சீ“ “ஓடு“ என்று அடித்து விரட்டினாளே..அப்போது அவன் வந்தான்.

கொட்டுகின்ற மழையில் நனைந்து எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் எதிலும் போய் மோதிக் கொள்ளக் கூடாதே என்று ஜாக்கிரதை உணர்வோடு இரண்டு கைகளையம் முன்னால் நீட்டி இருளைத் துழாவியவாறு மெல்லத் தடுமாறிக் கொண்டே வந்தான் அவன்.

ருக்குமணி நாயை விரட்டிய சப்தம் கேட்டு, “பாரம்மா அது? இங்கே ஒரு சத்திரம் இருக்குதாமே இதுதானா.? என்ற கேள்வியோடு சத்திரத்துப் படிகளைப் பாதத்தால் தடவித் தடவிப் பார்த்து மேலே ஏறி வந்தான் அவன்.

“ஆமா. இதுதான் நீ எந்த ஊரு? என்று விசாரித்தாள் ருக்குமணி.

“எனக்கு விழுப்புரம். உம்.. ஊரென்ன ஊரு? எல்லா நம்ம ஊருதான் டிக்கட்டில்லாம ரயில்லே வந்தேன். இங்கே புடிச்சி எறக்கி உட்டுட்டான்.. இப்ப இதான் சொந்த ஊரு. டேசன்லே ஒரு புண்ணியவான் சொன்னாரு. இங்கே சத்திரம் இருக்குதுன்னு. இராப் பொழுதே இங்கே கழிக்கலாமில்லே” என்று கேட்டுக் கொண்டே நனைந்திருந்த சட்டையை அவிழ்த்துப் பிழிந்து தலையைத் துடைத்துக் கொண்டான்.

“ராப்பொழுதென்ன? நாளு பூராத்தான் இரேன். யாரு கேக்கப்போறா? என்று ரொம்ப அசுவாரசியமாகப் புகையிலையைத் திருகி வாயிலிட்டுக் கொண்டு சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்தாள் ருக்குமணி.

அவன் தூணில் சாய்ந்து கொண்டு மடியிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைப்பதற்காகத் தீக்குச்சியை உரசினான்.

தீக்குச்சியிலிருந்து எழுந்து பீடிக்குத் தாவிய நெருப்பின் மங்கிய வெளிச்சம். இருவரும் பார்கக் முடியாத இருவர்தம் முகத்தையும் பாரத்துவிட்டு, ஒரு நொடிக்குள் இருளில் மறைந்தது.

புகையையே ஆதாரமாக உட்கொள்வதுபோல் வாய் நிறையப் புகையை இழுத்து இரண்டு “தம்“ அடித்தவுடன் குளிருக்கு இதமாக இருந்தது. மூன்றாவது இழுப்புக்கு அந்தத் துண்டுப் பீடியின் லேபிள்  கரிந்து மொடமொடவென ஒலி எழுப்பியதும் அவன் அதை அணைத்து அடுத்த வேளைக்காகத் தீப்பெட்டிக்குள் வைத்துவிட்டு, தீப்பெட்டியில் தாளமிட்டவாறு குஷியாகப் பாட ஆரம்பித்தான்.

“ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே”.. அந்த அமைதியான இரவில் அவன் குரல் கணீரென்று ஒலித்தது. ருக்குமணி நிமிர்ந்து உட்கார்ந்து பாட்டைக் கேட்டாள். பாட்டும், பாடுகின்ற குரலும் அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அவன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும் தொண்டையைச் செருமினான். அந்தச் செருமலைக் கேட்டுத்தான் ருக்குமணி இந்த உலகிற்குத் திரும்பி வந்தாள். “நீ நல்லாப் பாடுறியே.. ரொம்ப நல்லா இருந்திச்சு. இன்னொரு பாட்டுப் பாடேன்?“ என்று கொஞ்சம் நெருங்கி வந்து உட்கார்ந்தாள்.

அவள் புகழ்ச்சி – அவள் புகழ்ந்த விதம், உணர்ச்சி மயமாகித் தடுமாறிய குரல் – அவனுக்கு ஒரு தெம்பையும் பெருமையையும் தந்தது.

“இன்னொரு பாட்டா? உம் – கொஞ்சம் தண்ணி இருந்தா குடுக்கிறியா? – இங்கே கிடைக்குமா?”

“தண்ணியா? அந்த மூலையிலே இருக்கு. எடுத்துக் குடியேன் ..அது சரி நீ என்ன சாதி?

படையாச்சிம்மா. எந்த மூலையில் இருக்கு தண்ணி? என்று தரையைத் துழாவினான்.

“தோ வர்ரேன்” என்று பழகிய பழக்கத்தால் தடுமாற்றம் சிறிதும் இல்லாமல் மூலையில் வைத்திருந்த தகர டப்பாவை எடுத்து அவனிடம் நீட்டினாள். “இதோ நாங்களும் படையாச்சிதான்”.

குரல் வந்த திக்கில் இருகைகளையும் அவன் ஏந்த, அவள் நீட்டிய தகரக் குவளை கைமாறும்போது இருவரின் விரல்களும் ஸ்பரிசித்தின.

“உம் சாதி என்ன சாதி” என்று முணுமுணுத்தான் அவன்.

“ஆமா. நீ என் டிக்கட் இல்லாம ரயில்லே வந்தே.. எந்த ஊருக்குப் போறே” என்றாள் ருக்குமணி.

“நாலு வருசமா நா அப்படித்தான்.. ரயில்லே பாட்டுப் பாடுவேன். சில நாளு ஒரு ரூவா கூடக் கெடைக்கும். அப்பல்லாம் விழுப்புரத்துக்கு வடக்குதான். தெக்கே வந்ததில்லே. அங்க இருக்கிறவங்களுக்கு என்னை நல்லாத் தெரியும். விட்டுடுவாங்க. இவன் யாரோ ஒரு புது ஆளு எறக்கி விட்டுட்டான்.

“ஆமா ஒனக்கு ஊடு வாச பொண்டாட்டி புள்ளு ஒண்ணும் கிடையாதா?“

அவன் அதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான். வறண்ட கைத்த சிரிப்பு. அவன் சிரித்த சிரிப்பிலிருந்து, அவன் சிரித்த தோரணையிலிருந்து,“ஒரு வேளை ரொம்பச் சின்னப் பிள்ளையோ? இவன் கிட்ட போயி பொண்டாட்டி பிள்ளைன்னு பேசினா? என்று நினைத்த அவளுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“ஒனக்கு என்னா வயசாச்சி”

“வயசுக்கென்ன கொறச்சல்? அது ஆகுது கழுதை வயசு?“

“நான் உன் வயசைக் கேட்டா நீ கழுதை வயசைச் சொல்றியே?

“வயசானால் போதுமா? இருவத்திரண்டு வயசாச்சு.. பெத்தவ இல்லாம..வீடு இருந்து என்னா..வாச இருந்து என்னா? அம்மா செத்தப்பறம் சித்தாத்தாக்காரி ஒருத்தி வந்தா…கொடுஞ் சூலி..அவளுக்கும் பிள்ளைக் குட்டின்னு ஆயிடுச்சி..அப்பாவுக்கு நியாயாம் தெரியலை..சரி இந்த வீட்டிலே நமக்கு இன்னா இருக்குன்னு தெய்வத்தைத் துணையா நம்பிப் பொறப்பட்டுட்டேன். வருஷம் நாலாச்சு. இன்னக்கி இங்கே இருக்கணும்னு இருக்கு. நாளைக்கி எங்கயோ? எல்லாம் நமக்குச் சொந்த ஊருதான். எல்லாரும் நம்ம சாதிதான்.. ஒலகத்திலே யாரை நம்பி யாரு இருக்கா? ஆனா பாரு எல்லாரையும் நம்பித்தான் எல்லாரும் இருக்காங்க” என்று கூறிப் பெருமூச்செறிந்தான் அவன்.

“நீ ஏதாவது சாப்பிட்டியா?“

“இல்லே மடியிலே ரெண்டனா இருகு்கு..எங்கு போயி என்ன வாங்கிச் சாப்பிடறது. இந்த வனாந்தரத்திலே?

“இந்தா.. கொஞ்சம் மல்லாக் கொட்டை இருக்கு.. தின்னுப்பிட்டு இன்னொரு பாட்டுப் பாடு. நீ ரொம்ப நல்லாப் பாடறே” என்று கந்தல் துணியில் முடிந்து வைத்திருந்த வேர்க்கடலையைக் கையில் கொட்டி அவன் முன் நீட்டினாள். அவன் இருளில் நீண்ட அவள் கைகைளப் பிடித்து கடலை சிதறாமல் தன் கையில் கொட்டிக் கொண்டான்.

“சரி என்னா பாட்டு வேணும்“?

“எதனாச்சும்.”

“உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே” என்று தீப்பெட்டியில் தாளம் தட்டியவாறு பாட ஆரம்பித்தான் அவன்

பாட்டில் லயித்திருந்த ருக்குமணியின் காலடியில் மறுபடியும் அந்த நாய் வந்து ஒண்டியது. பாட்டுச் சத்தத்தில் தன்னை மறந்திருந்த அவள் எரிச்சலுற்று மூங்கில் கம்பை எடுத்து வீசினாள். இந்தத் தடவை அடி நாயின் மீது விழுந்தது. நாய் அலறிக் கொண்டே ஓடிற்று.

“அது என்னா? மூங்கில் கம்பா, எங்கே காட்டு” இருட்டில் கையை நீட்டினான் அவன்.

“ஒனக்கு எதுக்கு இது..” என்று அவனிடம் கம்பைக் கொடுத்தாள் ருக்குமணி.

“நல்ல மூங்கில்தான் என்று..“ மூங்கிலைத் தடவிப் பார்த்தான்.

“என்ன செய்யறதுக்கு நல்ல மூங்கில்தான்னு சொல்றே“?

அவன் மெல்லச் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறே?“

“ஒண்ணுமில்லே, ஒவ்வொருத்தன் கையிலேருந்தா அது ஒவ்வொண்ணுக்கு உபயோகப்படும். குருடன் கையிலேதான் அது ஒண்ணும் ஆகறதில்லை”

அவன் தனக்காகத்தான் அப்படிச் சொல்லுகிறானோ என்று நினைத்த ருக்குமணி,“மூங்கில்லே என்னென்ன செய்யலாம்னு நாளைக்குப் பாரு, நான் செஞ்சி காட்றேன்” என்றாள்.

“என்ன செய்வே”

“கூடை, முறம், தடுக்கு..”

“அப்படியா எனக்குக் கூடப் புல்லாங்குழல் செய்ய வருமே”

“புல்லாங்குழலா? நீ செய்வியா, ஊதுவியா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் ருக்குமணி.

“இப்பப் பாடினேனே பாட்டு, இதெல்லாம் அப்படியே வாசிப்பேன்”

“அப்ப சரி அந்தக் கம்பைக் குடு. வேற நல்லதாப் பார்த்துத் தரேன். நாளைக்கு நீ புல்லாங்குழல் செஞ்சி எனக்கு ஊதிக் காட்டணும். என்ன சரியா? ஏன் மல்லாக் கொட்டையைத் தின்னாமக் குந்தி இருக்கே? இந்தா இந்தக் கம்பை வெச்சிக்க” என்று மூங்கில் கட்டிலிருந்து நல்ல மூங்கிலாக ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

இந்த இரவு நேரத்தில் தன் பசியறிந்து, வேர்க்கடலையும், ஊன்றுகோலும் தந்த இந்தப் புண்ணியவதியை மனசிற்குள் வாழ்த்திக் கொண்டே வேர்க்கடலையைத் தரையில் தட்டி உரித்துத் தின்றவாறு மௌனமாய்ச் சாய்ந்திருந்தான் அவன்.

சற்றுநேர மௌனத்திற்குப் பின் அவள் கேட்டாள். “ஆமா ஒன் பேரு என்னா?”

“கண்ணப்பன். ஓம் பேரு?”

“ருக்குமணி”

“அது சரி, நீ ஒரு வயசுப் பொம்புளைதானே? யாரும் துணை இல்லாம இந்தச் சத்திரத்திலே நீ ஏன் தனியாக் குந்தியிருக்கே?”

“நான் சின்னப் புள்ளையா இருக்கிறபோதே இங்கே வந்துட்டேன். எனக்கு ஒலகத்திலே இந்த ஒரு இடம் தான் பழக்கம். எங்க தாத்தா இருந்தது அப்போ.. நாலு வருசத்துக்கு முன்னே அது செத்துப் போச்சு”..  தாத்தாவின் நினைவு வந்தபோது அழுகையும் வந்தது. இரண்டு விம்மலில் வந்த துயரம் அடங்கியும் போயிற்று.

“எங்காவது கண்ணாலம் கட்டிகினு போனாலும் ஒனக்கு ஆத்தா வூடு இந்தச் சத்திரம்தான்னு சொல்லு. நீயும் என்னைப்போல் அநாதைதானா?” என்றான் கண்ணப்பன். அவள் குரலிலிருந்து அவள் வயசைக் கணித்த கண்ணப்பன், தன் கணிப்பு சரிதானா என்று தெரிந்து கொள்ளவே கலியாணத்தைப் பற்றிப் பேசினான்.

“நீயாவது ஆம்பளை. நான் பொம்பளை. ரெண்டு கண்ணுமில்லாத குருடி. எனக்கு யாரு இருக்கா? யாரு இருந்தாலும் கண்ணில்லாத நான் அவங்களுக்கு ஒரு சுமைதானே? அதனாலேதான் அனாதையாக இருக்கேன்“.

அவன் உடலெல்லாம் மின்னலைப்போல் ஓர் உணர்ச்சி விசிறிப் பாய்ந்து அவனைத் துள்ளியெழ வைத்தது.

அவன் அதற்குப் பிறகு ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் எத்தனையோ பேச்சுக் கொடுத்துங்கூட, அவன் பதில் சொல்லாதது கேட்டு “தூக்கம் வந்திடுச்சி போலிருக்கு” என்று எண்ணி அவளும் தூங்க முயன்றாள்.

அன்று இரவு வெகு நேரம் வரை அவர்கள் இருவரும் தூங்கவும் இல்லை. பேசவும் இல்லை.

மறுநாள் காலை தூக்கத்திலிருந்து எழுந்ததும் “கண்ணப்பா, கண்ணப்பா” என்று கூப்பிட்டாள். பதிலில்லை. அவன் படுத்திருந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள். இடந்தான் இருந்தது. “அவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கூடப் போய் விட்டானே” என்று நினைக்கையில், ஆத்திரமும் அழுகையும் அடைத்துக் கொண்டு வந்தது. சற்று நேரம் செத்துப் போன தாத்தாவை நினைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். சத்திரத்துக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் ஜனசந்தடி பெருக ஆரம்பித்தது. டீக்கடையில் டீ வாங்கிக் குடித்துவிட்டு ருக்குமணியும், தனது தொழிலில் முதல் நாள் செய்து வைத்திருந்த கிலு கிலுப்பை, விசிறி முதலியவற்றிற்கு வர்ணம் பூசும் வேலையில் முனைந்தாள்.

நிறங்களையே பார்த்தறியாத.. அப்படியென்றால் என்னவென்றுகூடத் தெரியாத ருக்குமணி, தான் பின்னும் கிலுகிலுப்பைகளுக்கும், தடுக்குகளுக்கும் அழகழகாக வர்ணம் பூசுவாள். பூசப்படும் நிறங்களைப் பற்றிப் பூசிக்கொள்ளும் பொருள்களுக்கு என்ன தெரியுமோ அதைவிடக் கொஞ்சம் அதிகமாக அவளுக்குத் தெரியும். அதாவது ருக்குமணியைப் பொறுத்தவரை பச்சை என்றால் அது கண்ணாடிக் குப்பியில் இருப்பது. நீலம் என்பது தகர டப்பாவில் இருப்பது. கொட்டாங்கச்சியில் இருப்பது சிவப்பு. அவ்வளவுதான்.

மனம்போன போக்காய்த் தன் மனத்திலிருக்கும் உணர்ச்சிகளை அவற்றின் மீது கிறுக்கி மகிழ்வாள். அவற்றிற்கு அர்த்தமில்லையா என்ன? அழகாக இருப்பதாய்க் கண்படைத்த புண்ணியவான்கள் கூறுகிறார்கள்.

அன்று கண்ணப்பன் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட தினம் – அவள் சரியாகவே தனது வேலைகளைச் செய்து முடிக்கவில்லை. பக்கத்தில் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் முனியம்மாளிடம் கூடச் சரியாக ஒன்றும் பேசவில்லை. அவளையறியாமல் மெல்லிய குரலில் ”உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே” என்று பாடிக் கொண்டாள். அதைக் கேட்டு முனியம்மா அவளைக் கேலி பேசினாள். முனியம்மாவுடன் ருக்குமணியும் சேர்ந்து சிரித்தாள்.

ஆமாம். ருக்குமணிக்கு வெட்கப்படக் கூடத்தெரியாது. அன்று பகல் பொழுதும் அவன் நினைவிலேயே நகர்ந்தது அவளுக்கு.

அந்த இரவு சம்பவத்திற்குப் பின் பகலும் இரவும் கண்ணப்பனைப் பற்றிய நினைவுகளிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ருக்குமணி. மானசீகமாய் அவன் குரலையும் பாட்டையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தாள். வாழ்க்கை முழுதும் அவன் பாடிக் கொண்டே இருக்க, பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்டுக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேறு ஒரு இன்பம் இருப்பதாக அவளால் நம்ப முடியவில்லை.

ஆனால் அந்தக் கண்ணப்பன்-அவனைத்தான் காணோமே!

அவன் எப்பொழுதாவது நிச்சயம் வருவான் என்று அவளுக்குத் தோன்றியது. அவனுக்காக அவள் காத்திருந்தாள்.

திடீரென்று கனவு கண்டு விழித்தெழுந்து, அவன் நினைவில் சத்திரத்துத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கையில், டூரிங் டாக்கிஸில் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. டூரிங் டாக்கீஸ் பாண்டு வாத்திய ஓசையும், பழைய காலத்தில் புகழோடு விளங்கிய கிட்டப்பாவின் சங்கீதத்தை மானபங்கப் படுத்திக் கொண்டிருந்த டீக்கடை கிராமபோனின் கூச்சலும் அடங்கிவிட்டன.

அந்த நிசப்தமான நேரத்தில் தூரத்திலிருந்து புல்லாங்குழல் ஓசை கேட்டது.

“அந்தப் பாட்டுத்தான்! கண்ணப்பன் வருதோ?” அவளுக்கு உடல் முழுவதும் சந்தோஷத்தில் பதறிற்று.

குழலின் ஓசை வரவர அதிகமாகி நெருங்கி வருவதுபோல் கேட்டது. பிறகு குழலின் நாதம் நின்று மூங்கில் கம்பொன்றின் ஓசை மட்டும்  “டக் டக்” கென்று கேட்டது. சத்திரத்துப் படிகளில் காலடிச் சப்தம் கேட்கும்போது,

“யாரது கண்ணப்பாவா? ” என்று கேட்டாள் ருக்குமணி.

“ஆமாம்”

“எங்கே இத்தினி நாளாக் காணோம்? சொல்லாமல் கூடப் போயிட்டியேன்னு எனக்கு வருத்தமா இருந்துச்சி” என்று அவள் சொல்லும்போது அவனுக்குத் துக்கமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுத் தொண்டை அடைத்தது. பதில் பேசாமல் மௌனமாய் அன்று உட்கார்ந்திருந்த இடத்திலேயே வந்து அமர்ந்தான்.

“இவ்வளவு நாள் எங்கே போயிருந்தே? ஏதாவது சாப்பிட்டியா? சோறு கூட வெச்சிருக்கேன். தண்ணி ஊத்தி..வேணுமானா சாப்பிடேன்”

“இல்லே ருக்குமணி. நான் இப்பத்தான் சாப்பிட்டேன். அன்னக்கி அந்தப் பசி நேரத்துக்கு வேர்க்கடலை குடுத்தியே, இன்னிக்கு ஒனக்கு நான் பலகாரம் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன். இந்தா.” என்று ஒரு பொட்டணத்தை அவளிடம் நீட்டினான்.

“ஒனக்கு ஏதாவது வேலை கெடச்சிருக்கா என்ன? அதான் நல்லது. ஒரு வயசு ஆம்பளை பிச்சையெடுக்கிறதாவது! எங்கே வேலை? என்ன வேலை?”

“நீ ஒரு தொழில் செஞ்சி பொழக்கல்லே. அந்த மாதிரி நானும் ஒரு தொழில் செய்ய ஆரம்பிச்சிட்டேன்”

“என்ன தொழில்“

“அன்னிக்கு நீ குடுத்தியே மூங்கில், அதிலே ஒரு புல்லாங்குழல் செஞ்சேன். அதை எட்டணாவுக்கு வித்தேன். அப்புறம் ரெண்டனாவுக்கு மூங்கில் வாங்கிச் சின்னப்பிள்ளைகளுக்கு ஊதல், புல்லாங்குழல் எல்லாம் செஞ்சி ஒரு ரூவா சம்பாதிச்சேன். அப்புறம் ஒரு பேனா கத்தி, இரும்பு ஆணி எல்லாம் வாங்கினேன். இப்ப நல்லா ஊதல் செய்யப் பழகிக்கிட்டேன். உன்னைப் பார்த்துத்தான் எனக்கும் புத்தி வந்தது” அவன் சொல்தைக் கேட்கக் கேட்க அவள் கைகள் அவனை அணைத்துக் கொள்ளத் துடித்தன. அவன் அருகே நெருங்கி நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“நான் சொல்றதைக் கேக்கிறியா? வந்து.. எனக்கு உன் பாட்டு, உன் குரல், நீ.. எல்லாம் ரொம்பப் புடிச்சிருக்கு. அதனாலே நீயும் நானும்…வந்து வந்து…

ஆமாம் அவளுக்கு வெட்கப்படக் கூடத் தெரியாது. அவள் உலகத்தையே மனிதர்களையே கண்ணால் பார்த்ததில்லை. அதனால் உலகத்தின் மனிதர்களின் பொய்யான வெட்கமும் நாணமும் என்னவென்று கூட அவளுக்குத் தெரியாது. மனத்தால் உணர்ந்ததை வாயால் கொட்டிக் கொண்டிருந்தாள்.

கண்ணப்பன் மௌனமாக பீடி புகைக்க ஆரம்பித்தான்.

“கண்ணப்பா, என்ன பேசாம இருக்கே? ஏதாவது பேசேன்.. பாட்டுப் பாடேன். உன் பேச்சையும், பாட்டையும் கேக்கணும்னு ஒரு வாரமா நான் காத்துக் கெடக்கேனே.. ஆமா, கண்ணப்பா நீ சினிமா பார்த்திருக்கியா?” என்று வலுவில் ஒரு கேள்வி கேட்டு அவனைப் பேச வைத்தாள்.

“உம் பார்த்திருக்கேன்.. அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னே”

“இப்பெல்லாம்?“

“சினிமாப் பார்க்க காசு வேணாமா?“

“என்கிட்டே காசு இருக்கு. வர்ரியா? நான் பாட்டு கேட்டுக்கிட்டுக் குந்தி இருக்கேன். நீ படம் பாரு”

“படம் பார்க்க காசு மட்டும் போதுமா? கண்ணு வேணாம்? ருக்குமணி.. நானும் உன்னை மாதிரிதான். நாலு வருசத்துக்கு முந்தி அம்மை வார்த்துக் கண்ணு போயிடுச்சி. இவ்வளவு ஆசையா இருக்கியே.. உன் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத பாவி நான். உனக்குக் கண்ணு தெரியாதுன்னு நீ சொல்றவரைக்கும், நீ நெனச்சது போலத்தான் நானும் நெனச்சேன். ஆனா நாம ரெண்டு பேரும் ஒண்ணா எப்படி வாழ முடியும்? யாருக்கும் யாரும் உதவியா இருக்க முடியாதுன்னு நெனச்சிதான் நான் சொல்லிக்காம போயிட்டேன். ஆனா உன்கிட்டே சொல்லிக்காமப் போக மனசு இடம் கொடுக்கல்லே. விடியகாலை வண்டிக்கு நான் ஊருக்குப் போறேன். எனக்குக் கண் இருந்தா உன்ன விட்டுட்டுப் போக மாட்டேன். என்ன பண்றது? நான் போறேன்! நீ என்னை மறந்திடு” என்று அழுதான் கண்ணப்பன்.

அவன் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.

“இதுக்கா அழுறே? கண்ணில்லாட்டி என்ன? எனக்கு ஒரு குறையும் தெரியலையே! சனங்களெல்லாம் என்னமோ கண்ணு கண்ணுன்னு பேசிக்கிறாங்களே அது நமக்கு இல்லேன்னு சொல்றாங்களேன்னு தோணுமே ஒழிய, அதனாலே எனக்கு ஒண்ணும் கெட்டுப் போகல்லே. நீயும் என்னை மாதிரித்தான்னா ரொம்ப சந்தோஷம்- இதுக்காகவா உன்னை நா மறந்துடணும்னு சொல்றே? ஆமா நெசமாச் சொல்லு உனக்குத்தான் எப்பவோ கண்ணு இருந்திருக்குன்னு சொல்றியே? கண்ணுன்னா என்னான்னு நீயாவது சொல்லேன். பாக்கறது பாக்கறதுன்னு சொல்றாங்களே அப்படின்னா என்னா ? சொல்லு?” என்று அவன் தோள் மீது கை வைத்து அவன் முகத்தருகே நெருங்கினாள். அவன் தேகாந்தமும் சிலிர்த்தது.

“ருக்கு.. கண்ணுன்னா என்னா தெரியுமா?

கண்ணுன்னா நீதான்! நீதான் எனக்கு கண்ணு இனிமேலே..” என்று பேசமுடியாமல் திணறினான் கண்ணப்பன்.

அவள் அவனது முகத்தை, தலையை, மார்பை, புஜங்களைத் தடவிப் பார்த்து மகிழ்ந்தாள்.

அந்தச் சத்திரத்து இரவின் தனிமையில் இருவரும் தங்கள் கதைகளை, ஆசைகளை ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதலை, இத்தனை நாள் பிரிந்திருந்த பிரிவின் சோகங்களைப் பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பேச்சு…பேச்சு…விடியும் வரை ஒரே பேச்சுத்தான்.

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்

வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல“

என்று காதலுக்கு இலக்கணம் வள்ளுவர் கூறிவிட்டால் போதுமா?

இவர்களுக்கு? வாய்ச்சொற்கள்தான்!

 

 

 

 

 

 

 

 

புதுமைப்பித்தன் - கடிதம்

 

புதுமைப்பித்தன்

கடிதம்

சிங்கார வேலு ஓர் இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை – ஏன், வாழ்க்கையையே – திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால் அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.

பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்!’ என்று அவர் ஒரு நாளும் கனவு காணவில்லை; ஆனால் பேனாவை வைத்துக் கொண்டு பிச்சையெடுக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

அவருடைய சிறுகதைகளைப் பொறுத்தவரை சமூகம் நூறு பேரில் அவரை ஒருவராக மதித்தது. முக்கால்வாசிப் பேருக்கு அழகு என்பது என்ன என்று தெரியாது. சிலருக்கு அழகாயிருக்கிறது என்று முதலில் சொல்லுவதற்குத் தைரியமில்லை.

இந்த மாதிரியான சமூகத்தினிடையே சிங்காரவேலு உயிர்வாழ வேண்டுமென்றால் வாழ்க்கை உண்ணாவிரதத்தில் முக்தியடைந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது கருணை மிகுந்த தெய்வம் அட்சய பாத்திரம் ஒன்றைக் கொடுத்து வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இயற்கையின் சட்டத்தை மீறவும், தெய்வத்தின் கருணையைப் பெறவும் முடியாத இந்தக் கலிகாலத்தில் பிறந்ததைப் பற்றி சிங்கார வேலு நொந்து கொள்வதில் பயன் இல்லை.

அவருடைய சமூகமாகவும் ரஸிகர்களாகவும் சில நண்பர்கள் இருந்தார்கள். அதனால் அவருக்குப் பசி என்ற கவலை ஏறக்குறைய இல்லையெனலாம். ஏனென்றால் அவருடைய தேவைகள் வெகு கொஞ்சம். குடும்ப பாரம் கிடையாது. கனவு கண்டுகொண்டிருப்பதற்குப் போதிய அவகாசம் இருந்தது. எனினும் அதை இலக்கியமாக வடிவெடுக்க வைக்கும் ஊக்கம் குறைந்துவர ஆரம்பித்தது.

புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லிவிட வேண்டாம். செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது! இதில் வாழும் கிரந்த கர்த்தா மனமிடிந்து பாழாய்ப் போவான்; ஆனால் சிங்காரவேலு இப்படி நாசமாவதற்குக் கோழையல்லர். தைரியத்தினால் ஏற்பட்ட மனக் கசப்பு அவரை ஒன்றும் எழுதவிடவில்லை.

அவர் சமூகத்தில் நம்பிக்கை வைத்த மனிதர். ஓடித் தளர்ந்த சிந்தனைகள் எல்லாம், ஈட்டி குத்தும் மாதிரி, கதைகளைச் சிருஷ்டித்தன.

***

அன்று

எப்பொழுதும்போல் அந்தத் தனியறையில் பாயில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிலையை மென்று மென்று துப்பியாகிவிட்டது.

என்ன செயற்கை ஊக்கம் கொடுத்தாலும் அந்தக் கதையைத் தொட முடியவில்லை.

ஏழு நாட்களாக இந்தக் கதிதான்.

கையிலிருந்த பேனாவையும் காகிதத்தையும் கீழே பொத்தென்று போட்டார்.

பின்புறமிருந்த தலையணையில் சாய்ந்துகொண்டு, வெற்றிலைச் செல்லத்தைப் பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு, வெற்றிலை போட ஆரம்பித்தார்.

அதுவும் ஒரு கலை – அவருக்கு.

தெரு வாசற்படியில் யாரோ வருவதுபோல் காலடிச் சப்தம்.

சிங்காரம்!” என்ற குரல்.

சுந்தரமா? வா!”

அவருடைய நண்பர் சுந்தரம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, “என்ன வெளியே போகலாமா? மணி ஐந்திருக்குமே!” என்றார்.

வெற்றிலையைப் போடு, முதலில்!”

என்ன, இன்னும் கதையை முடிக்கவில்லையே! ஆரம்பம் வெகு ஜோராய் இருக்கிறது. சீக்கிரம் முடியுங்கள்!”

ஆமாம், வேலையில்லை! எழுதித் தூக்கி நிறுத்துகிற அவசரம் ஒன்றுமில்லை. என்னடா, நல்ல கதையை ரஸிக்கிறதற்கு ஒரு பயலும் இல்லை. சும்மா எழுது எழுது என்றால்! நான்கு பகுத்தறிவற்ற குயில் இல்லை. எனக்கு நான் எழுதுவதைச் ‘சரி, நன்றாயிருக்கிறது என்று சொல்ல நான்கு பேர்கள் வேண்டும். சுற்றி ஒன்றுக்குமற்ற கழுதைகளை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது?” என்றார் சிங்காரம்.

ரஸிக்கிறதற்கு நாங்கள் எல்லாரும் இல்லையா?” என்றார் சுந்தரம்.

நீ எனது சிநேகிதன். உனக்கு என்மேல் பிரேமை. நான் என்ன எழுதினாலும் உனக்கு நன்றாகத்தான் தெரியும். மூன்றாவது மனிதன் எவனாவது இதுவரை என் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறானா? அதிருக்கட்டுமப்பா! நான் கதை எழுதுகிறேன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? வா, போகலாம்! கதை எழுதி…” என்று சொல்லி எழுந்து வெளியே புறப்படத் தயாரானார்.

மௌனமாகக் கையிலிருந்த புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு நண்பரும் எழுந்தார்.

அன்று பேச்சு எங்கெல்லாமோ சுற்றியும் கடைசியில் இதில்தான் வந்து விழுந்து கொண்டிருந்தது.

***

ஐந்தாறு நாட்கள் கழித்து

இரவு ஏழு மணி இருக்கும்.

சிங்கார வேலு தமது அறையில் உட்கார்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கதை அதுவும் அப்படியே அரைகுறையாகத்தான் கிடக்கிறது.

ஸார், தபால்!” என்ற சப்தம்.

சிங்காரவேலுவுக்குக் கடிதம் வருவது விதி விலக்கு. முக்கால்வாசி வேறு யாருக்காவது போகவேண்டிய கடிதம் தவறுதலாக இங்கு வந்துவிடுவது உண்டு. துணைத் தபால்காரனாக இவரும் சிரமப்படவேண்டியதிருக்கும்.

ஜன்னல் வழியாக விழுந்த கடிதத்தை எடுத்து விலாசத்தைக் கவனித்தார். அதில் தவறு ஒன்றுமில்லை. விலாசம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் கையெழுத்து அவருக்கு அறிமுகமானதாக இல்லை. தபால் முத்திரை எப்பொழுதும்போல் ஒரே கறுப்புமயமாக இருந்தது.

பிரித்து வாசித்தார்.

விசாகப்பட்டி,

10.9.33

இலக்கிய கர்த்தரான திரு.சிங்காரவேலு அவர்கள் திவ்விய சமூகத்திற்கு,

நான் பெரிய படிப்பாளி ஒன்றுமில்லை; ஆனால் கலையில் எனக்கு ஆர்வம் மிகுதியும் உண்டு.

தங்கள் சிறுகதைகளுக்கு நிகராகத் தமிழ் இலக்கியத்தில், ஏன், உலக இலக்கியத்திலேயே – எனக்கு ஆங்கிலத்திலும் சிறிது பயிற்சி யுண்டு – பெரும்பான்மையாகக் கிடையாது என்றே சொல்லுவேன். தங்கள் ‘சாலாவின் சங்கடங்கள் என்ற சிறுகதை வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியமாக இருக்கிறது.

அது ஒரு புதிய மானத உலகத்தையே திறந்து காண்பிக்கிறது. அதைப் பற்றிப் புகழ்வதற்கு, நானும் ஓரளவு எழுதும் பயிற்சி பெற்றவனாக இருந்தால் எனது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே எடுத்துரைப்பேன். ஆனால் அந்தோ, அவ்வளவும் மூங்கையன் கண்ட கனவாகவே இருக்கின்றன. இன்னும் தங்கள் எண்ணிறந்த கதைகளை விடாது படித்துவந்தவர்களில் நானும் ஒருவன். இன்னும் புதிய கற்பனைகளை, கனவு லோகங்களைச் சிருஷ்டிக்க இறைவன் தங்களுக்குப் போதிய சக்தி அருளுவானாக.

இப்படிக்கு,

தங்கள் விதேயன்,

நாகப்பன்.

கடிதத்தை வாசித்ததும் முகம் மலர்ச்சியடைந்தது. உள்ளம் பூரிப்படைந்தது. குதூகலம் பிறந்தது. மறுபடியும் வாசித்தார். இன்னொரு முறையும் வாசித்தார். அந்தக் கடிதம் அவருடைய ஒரு பெரிய தாபத்தைத் தீர்த்தது.

நீ ஒருவன் தான் – எண்ணிறந்தவர்களில் ஒருவனல்லன்! சமூகத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. முழுமோசமில்லை!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

கடிதத்தைச் சுந்தரத்திற்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதில் என்னதான் இருக்கிறதோ? மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறார். நாகப்பனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதவேண்டும் என்று நிச்சயித்தாகிவிட்டது.

மறுபடியும் படிக்க ஆரம்பித்த பிறகு மனது திடீரென்று மாறுகிறது. சில சில எழுத்துக்கள் தமக்கு அறிமுகமான யாரோ ஒருவரின் கையெழுத்து மாதிரித் தெரிகின்றன. ஆமாம்! யாரோ நமக்குத் தெரிந்த பயலுடைய வேலைதான். இல்லாவிட்டால் என் விலாசத்தை விசாகப்பட்டிக்கு யார் கொண்டுபோய்க் கொடுக்கப்போகிறார்கள். இந்தப் புளுகு மூட்டையை என்னிடமா அவிழ்க்க வேண்டும்? சீச்சீ! முட்டாள்! கோழை! தைரியமிருந்தால், உண்மையில் ரஸித்தால், பகிரங்கமாகப் பத்திரிகைக்கு ஏன் எழுதக் கூடாது? அவன் ரஸித்தது என் சிநேகத்திற்காகத்தான். சீ! இதை எழுதிவிட்டால் எனக்குத் திருப்தி, சாந்தி, எல்லாக் குட்டிச்சுவரும் வந்துவிடுமென்று எண்ணினானாக்கும்! முட்டாள்! அவனும் இந்தச் சமூகத்தில் ஒரு ஜந்துதானே! இந்த முட்டாள் கூட்டத்திற்குக் கதை எழுத வேண்டுமாம், கதை! அதைவிடக் கசையடி கொடுப்பேன்! முட்டாள்கள்! தரித்திரக் கழுதைகள்! நாளைக்கு வரட்டும்! கதை வேண்டுமாம், கதை!

இந்தப் பயல்கள் சாவகாசமே வேண்டாம். தொலைந்தால்தான் இந்தப் பீடை ஒழியும். உண்மைப் பற்றுதலைக் காண்பிக்க தைரியமில்லாத கோழைகள்! கடிதம் எழுதினானே கடிதம், என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டானா? சீச்சீ! முட்டாள்! அவனை என்ன சொல்ல?… பெற்று வளர்த்த சமூகம் இப்படிப்பட்டது. இதற்காக எழுதாமலும் இருக்கிறதில்லை.

காகிதம் எரியும் நாற்றம் அறை முழுவதும் பரந்தது.

விளக்கும் கரி பிடித்து எரிந்து, எண்ணெயற்றுச் சோர்ந்து மங்கிக் கொண்டே வந்தது. வெற்றிலைப் பெட்டியை எடுக்கும் சப்தம். சிங்காரவேலு வெற்றிலை போட்டுக்கொண்டார்.

விளக்கு அணைந்தது.

அவர் மனத்தில் புழுங்கிய தணலும் அவிந்தது.

அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை.

இந்த மாதிரி அசட்டுத்தனமான சமூகத்தை எப்படித் தூக்குவது?

கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?

இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா?

அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

எத்தனை காலமோ?

ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!