இரண்டாமாண்டு நான்காம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாமாண்டு நான்காம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மார்ச், 2024

சமயக் காப்பியங்கள் - கம்பராமாயணம், பெரியபுராணம், தேம்பாவணி, சீறாப்புராணம்

 சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர்அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறதுவடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர்இக்காப்பியம் கம்பநாடகம்கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனஇந்நூலில்பாலகாண்டம்அயோத்தியா காண்டம்ஆரணிய காண்டம்கிட்கிந்தா காண்டம்சுந்தர காண்டம்யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர்தந்தையார் பெயர் ஆதித்தன்காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர்இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றதுஇவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார்இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபதுதிருக்கை வழக்கம்சரசுவதி அந்தாதிசடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டதுசைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறதுசுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகைநம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும்சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டதுஇதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றதுபன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார்இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில்சேக்கிழார் குடியில் தோன்றிவர்இயற்பெயர் அருண்மொழித் தேவர்சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன்சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.

                                        4.தேம்பாவணி 

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.

·       தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.

·       தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான்டைன் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். தமிழ் மீது கொண்ட பற்றால்  தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும், தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

புதன், 21 ஏப்ரல், 2021

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

“நாலடி நான்மணி நாநாற்பது ஐந்திணை

முப்பால் கடுங்கோவை பழமொழி - மாமூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பனவே

கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு

என வரும் பாடல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் அறநூல்கள் 11, அகநூல்கள் 6, புறநூல் 1.

அறநூல்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம்,       

ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள், முதுமொழிக்காஞ்சி  

அகநூல்கள்

 ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை                   

புறநூல்

களவழி நாற்பது

 

நூல்களின் சிறப்புகள்

நாலடியார்

1.திருக்குறளுக்கு அடுத்தப்படியாகப் போற்றப்படும் நீதி நூல். 

2.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி இதன் சிறப்பை விளக்குகின்றது.

3.சமண முனிவர்களால் பாடப்பட்டது. இதனைத் தொகுத்தவர்  பதுமனார்.

4.கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களும், 12 இயல்களும், 400 வெண்பாக்களும் உள்ளன.

5.வேளாண் வேதம், நாலடி நானூறு, குட்டித்திருக்குறள் என்றும் அழைக்கப்படுகின்றது.

6.திருக்குறள் போலவே அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.

அறத்துப்பால்       -     13 அதிகாரங்கள்

பொருட்பால்        -     24 அதிகாரங்கள்

காமத்துப்பால்      -     3 அதிகாரங்கள்

7.G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

8.கல்வியின் சிறப்பு குறித்த நாலடியார் பாடல் ஒன்று பின்வருமாறு.

                  குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

                 மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

                 நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்

                 கல்வி அழகே அழகு

நான்மணிக்கடிகை

1.இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார்.

2.கடிகை என்பதற்குத் துண்டு என பொருள். நான்கு மணித்துண்டுகள் இணைந்த மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரைப் பெற்றது.

3.கடவுள் வாழ்த்து உட்பட 104 வெண்பாக்கள் உள்ளன.

4.இந்நூலின் 7 மற்றும்100 வது பாடலை ஜி.யூ.போப் மொழிபெயர்த்துள்ளார்.

5.எக்குடியிலும் நன்மக்கள் பிறப்பர் என்ற கருத்தை,

                 கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்

                 ஒள்ளரிதாரம் பிறக்கும் பெருங்கடலுள்

                 பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

                 நல்லாள் பிறக்கும் குடி

என்ற பாடலால் விளக்குகின்றார் விளம்பி நாகனார்.

இன்னா நாற்பது

1.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.

2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களைக் கொண்டது.

3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இன்னாதவை என வற்புறுத்துவதால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

4.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று முடிவதாலும் இப்பெயர் பெற்றது எனலாம்.

5.கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

5.இந்நூலில் மொத்தம் 164 இன்னாத பொருட்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சில….

                 ஆற்றல் இல்லாதான் பிடித்த படை இன்னா

                 தீமையுடையார் அயலிருத்தல் இன்னா

                 உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா

                 கடுமொழியாளர் தொடர்பு இன்னா

                 திருவுடையாரைச் செறல் இன்னா

இனியவை நாற்பது

1.இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.

2.கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

3.ஒவ்வொரு பாடலும் இவை இவை இனியவை என்று கூறப்படும் காரணத்தால் இது இனியவை நாற்பது என்ற பெயர் பெற்றது.

                 மானமிழந்தபின் வாழாமை முன் இனிதே

                 வருவாயறிந்து வழங்கல் இனிதே

                 குழவி தளிர்நடை காண்டலினிதே

                 கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே

என்பன போன்ற இனியவைகளை இந்நூலில் காணலாம்

திரிகடுகம்

1.திப்பிலி, சுக்கு, மிளகு எனும் மூன்றினால் ஆன பொருளுக்குத் திரிகடுகம் என்று பெயர். இவை உடல்நோயைப் போக்க வல்லது.

2.அதேபோன்று இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் வரும் மூன்று அறக்கருத்துகள் மக்களின் மனமயக்கத்தைப் போக்குகின்றன.

3.இது 100 வெண்பாக்களைக் கொண்டது.

4.இதன் ஆசிரியர் நல்லாதனார்.

5.ஒரு பெண் தன் கணவனுக்கு நண்புடையவாய், தாயாய், மனைவியாய் விளங்குவாள் என்ற பொருளில்,

                 நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்

                 இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் தொல்குடியின்

                 மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்

                 கற்புடையாள் பூண்ட கடன்

என்ற பாடல் தெரிவிக்கின்றது.

ஆசாரக்கோவை

1.ஆசாரம்    -     ஒழுக்கம். நாள்தோறும் செய்யவேண்டிய கடமைகள் பற்றிக் கூறுகிறது.

2.இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.

3.100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

4.வடமொழி மரபை ஒத்துள்ளது.

5.நீராடுதல், உண்ணும் முறை, துயிலும் முறை ஆகியவற்றை விரிவாகப் பேசுகின்றது.

                    நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்

                    இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்

                    அசையாது நிற்கும் பழி

என்ற பாடல் பெரியார் முன் செய்யக்கூடாத செயல்களை வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.

                நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

                 இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

                 ஒப்புரவாற்ற அறிதல் அறிவுடைமை

                 நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்

                 சொல்லிய ஆசார வித்து

என்ற பாடல் ஒழுக்கத்திற்கு எவை முதன்மை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பழமொழி

1.இதன் ஆசிரியர் முன்றுரை அரையனார்.

2.நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில் அமைந்த நூல்.

3.திருக்குறள், நாலடியாரோடு ஒருங்கே வைத்து எண்ணத்தக்க பெருமை உடைய நூல்.

4.தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக் குறிப்பிடுகிறார்.

5. இதன் வேறுபெயர்கள் - பழமொழி நானூறு, உலக வசனம், முதுமொழி

6. இது 400 பாடல்களை உடையது.

7. பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பல அறியப்படுகின்றன.

                    உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

                    நரைமுது மக்கள் உவப்ப நரை முடித்து

                    சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்

என்ற பாடலின் சொற்சுருக்கமும், பொருள் ஆழமுடையதாக இருக்கின்றன.

சிறுபஞ்சமூலம்

1. இதன் ஆசிரியர் காரியாசான்.

2. இந்நூல் கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களைக் கொண்டது.

3. சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த ஐந்து கருத்துகள் மக்களின் மனதிற்கு வலிமை கொடுக்கின்றன.

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்

இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்

கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு

வாடாத வன்கண் வனப்பு.

சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும் என்பது இப்பாடலின் பொருள்.

ஏலாதி

1. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.

2.ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 6 மருந்துப்பொருட்களால் ஆன கலவையை ஏலாதி என்பர். அவை உடல் நோய்க்கு மருந்தாகும்.

3.அதுபோல இந்நூல் நான்கு அடியில் ஆறு அறக்கருத்துகளைக் கூறுகிறது. இக்கருத்துக்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்றன.

4.இந்நூல் சிறப்பாயிரம் (முன்னுரை), தற்சிறப்பாயிரம் (முடிவுரை) உட்பட 81 வெண்பாக்களை உடையது.

                 கொலைபுரியான் கொல்லான் புலான் மயங்கான்

                 அலை புரியான் வஞ்சியான் யாதும் – நிலை திரியான்

                 மண்ணவர்க்கு மன்றி மதுவலி பூங்கோதாய்

                 விண்ணவர்க்கு மேலாய் விடும்

என்பன போன்ற அறக் கருத்துக்களை இந்நூலில் காணலாம்.

முதுமொழிக்காஞ்சி

1.இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.

2.பத்து அதிகாரங்களையும், 100 செய்யுட்களையும்  கொண்டது.

3.உலக நிலையாமையை எடுத்துக் காட்டிச் சான்றோர் தம் அறிவுடைமையால் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும்.

4.இளமைப்பருவத்தில் கல்லாமை குற்றம், ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்பன போன்ற நற்செய்திகள் இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றன.

                    ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்

                    ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை

                    மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை

                    நசையிற் பெரியதோர் நல்குரவில்லை

                    வண்மையிற் சிறந்தன்று வாய்மையுடைமை

என்பன போன்ற முதுமொழிகளை இந்நூலில் கற்கலாம்.

திருக்குறள்

1.இதன் ஆசிரியர் திருவள்ளுவர்.

2.133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.

3.அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பரும் பகுப்புகள் கொண்டது.

        அறத்துப்பால்  - 38 அதிகாரங்கள்

        பொருட்பால்   - 70 அதிகாரங்கள்

        காமத்துப்பால் – 25 அதிகாரங்கள்

4.இந்நூலின் பெருமைகளைத் திருவள்ளுவமாலை என்ற நூல் எடுத்துரைக்கின்றது.

5.உலகப் பொதுமறை, பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனப் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது.

6. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

கார்நாற்பது

1.இதன் ஆசிரியர் கண்ணங்கூத்தனார்.

2.கார்காலத்தைச் சிறப்பிக்கும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டமையால் இந்நூல் கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.

3.முல்லை நிலத்தின் அழகும், அதன் முதல், கரு, உரிப் பொருட்களும் அழகுற விளக்கப்படுகின்றன.

ஐந்திணை ஐம்பது

1.ஆசிரியர் பொறையனார்.

2.அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

3. இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

4. “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.

                 சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்

                 பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்

                 கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர்

                 உள்ளம் படர்ந்த நெறி

என்ற பாடல் காதலுணர்வை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஐந்திணை எழுபது

1.ஆசிரியர் மூவாதியார்.

2.ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 வெண்பாக்கள் அமைந்துள்ளன.

3.குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன.

4.இது அகப்பொருள் துறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.

திணைமொழி ஐம்பது

1.ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.

2.அகத்திணை ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாக்கள் அமைந்த நூலாதலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.

3.இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.

4.குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள அமைக்கப்பட்டுள்ளன.

திணைமாலை நூற்றைம்பது

1.ஆசிரியர் கணிமேதாவியார்.

2.ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.

3.அகத்திணைக் கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.

4.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.

5.குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற முறையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன.

 கைந்நிலை (ஐந்திணை அறுபது)

1.ஆசிரியர் புல்லங்காடனார்.

2.ஐந்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு.

3.அறுபது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

4. இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.

களவழி நாற்பது

1.ஆசிரியர் பொய்கையார்

2.போர்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் 40 வெண்பாக்களைக் கொண்டது.

3.கீழ்க்கணக்கு நூல்களுள் புறம் பற்றிக் கூறும் நூல் இது ஒன்றே ஆகும்.

4.யானைப்போரைப் பற்றி மிகுதியாகப் பேசுகின்றது.

 

 

 

 

 

 

சனி, 3 ஏப்ரல், 2021

பத்துப் பாட்டு நூல்கள்

 

பத்துப் பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. இத்தொகை நூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு, வரலாற்றுக் குறிப்புகள், அரசர்கள் மற்றும் வள்ளல்களின் இயல்புகள், காதல் வாழ்க்கை, கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இத்தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பழம் பாடல்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

என வரும் பழம்பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

பத்துப்பாட்டு நூல்கள்

அ.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

மதுரைக்காஞ்சி

ஆ.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

இ.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

நெடுநல்வாடை


பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகள்

திருமுருகாற்றுப்படை

இந்நூலின் ஆசிரியர் நக்கீரர். 317 அடிகளைக் கொண்டுள்ளது. பாடப்பட்டவர் முருகப் பெருமான்.  ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால் (முருகன்) பெயர் பெற்றது. ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவனாகக் கொண்டிருக்க, இந்நூல் முருகனைத் தலைவனாகக் கொண்டுள்ளது. புலவராற்றுப்படை என்றும், முருகு என்றும் வழங்கப்படுகின்றது.  முருகப் பெருமானின் பெருமையைப் பேசுகின்ற இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவேரகம்(சுவாமிமலை), திருவாவினன்குடி(பழனி), திருத்தணி, பழமுதிர்ச்சோலை  உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இந்நூல் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருநராற்றுப்படை

இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். 248 அடிகளைக் கொண்டது. கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய மற்றொரு பொருநனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துகின்றது. இந்நூலில் யாழின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் உவமை கூறி வருணிக்கப்படுகின்றது.

சிறுபாணாற்றுப்படை

இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.  269 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது. அடி அளவால் சிறிய நூல். இந்நூலில் விறலியின் முடி முதல் பாதம் வரை விவரிக்கும் வர்ணனை, மூவேந்தர்களின் தலைகரங்களின் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் அருஞ்செயல்கள், பாட்டுடைத்தலைவனின் வீரம், கொடை, புகழ், விருந்தோம்பும் பண்பு, யாழ் வர்ணனை ஆகியன சிறப்பிக்கப்படுகின்றன.

பெரும்பாணாற்றுப்படை     

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 500 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது. பாணாறு எனவும் அழைக்கப்படுகின்றது.

மலைபடுகடாம்        

இதன் ஆசிரியர் பெருங்கௌசிகனார். 583 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன். ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது. நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படை எனவும் வழங்கப்படுகின்றது.

குறிஞ்சிப்பாட்டு       

இதன் ஆசிரியர் கபிலர்.  261 அடிகளைக் கொண்டது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இந்நூலை இயற்றினார் என்பர். அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. 99 வகையான மலர்களை இந்நூலில் கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப்பாட்டு       

இந்நூலின் ஆசிரியர் நப்பூதனார். 103 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பத்துப்பாட்டுள் அளவில் சிறிய நூல் இதுவே. முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் இந்நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. இந்நூல் நெஞ்சாற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.

பட்டினப்பாலை       

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 301 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.  பட்டினப்பாலை பாடியமைக்காகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் எனக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இந்நூலுக்கு வஞ்சிநெடும்பாட்டு என்ற பெயர் உண்டு. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர். இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளன.

நெடுநல்வாடை       

இதன் ஆசிரியர் நக்கீரர். 188 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். வாடைக்காற்று  தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடு வாடையாகவும், போரில் வெற்றி பெற்றதால் தலைவனுக்கு அவ்வாடைக்காற்று நல்வாடையாகவும் அமைக்கப்பெற்று பாடப்பட்டுள்ளது. கூதிர் காலத்தின் அழகும், அரண்மனை வகுக்கும் திறமும், அரசியின் கட்டில் அழகும், தலைவனின் பாசறை காட்சியும் அழகுற விளக்கம் பெற்றுள்ளன.

மதுரைக்காஞ்சி        

இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். 782 அடிகள் கொண்டது. பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். காஞ்சித்திணையின் நிலையாமை பற்றிப் பேசுகின்றது. மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்களான திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா ஆகியவற்றை விவரிக்கின்றது. பத்துப் பாட்டிலேயே அளவில் மிகப் பெரிய பாடல் இது.

ஞாயிறு, 28 மார்ச், 2021

எட்டுத்தொகை நூல்கள்

 

எட்டுத்தொகை

சங்க இலக்கியங்களுள் ஒன்று எட்டுத்தொகை. இது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் எழுதியவரின் பெயர் காணப்படவில்லை. அகம், புறம் என இந்நூல்களைப் பகுக்கின்றனர். அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள்

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.ஐங்குறுநூறு

4.பதிற்றுப்பத்து

5.பரிபாடல்

6.கலித்தொகை

7.அகநானூறு

8.புறநானூறு

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை:

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.


புறப்பொருள் பற்றியவை

புறநானூறு, பதிற்றுப்பத்து.


அகமும் புறமும் கலந்து வருவது

பரிபாடல்.


நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. இதைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணை புரிகின்றன.


குறுந்தொகை
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.  205 புலவர்களால் பாடப்பெற்றது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை  எழுதியுள்ளார்கள். 4 அடிச் சிற்றெல்லையும் 8 அடிப் பேரெல்லையும் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.  


ஐங்குறுநூறு
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந்நூல். இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந்நூல் ஐங்குறுநூறு என்னும் பெயர் பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரவேந்தன். இந்நூலில் ஐந்து திணைகளும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

மருதம்     - ஓரம்போகி

நெய்தல்  - அம்மூவனார்

குறிஞ்சி  - கபிலர்

பாலை     - ஓதலாந்தையார்

முல்லை  - பேயனார்

கலித்தொகை

150 கலிப்பாக்களை கொண்டது. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.
        பாலை     -     பெருங்கடுங்கோ          - 35 பாடல்கள்
        குறிஞ்சி  -     கபிலர்                               - 29 பாடல்கள்
        மருதம்    -     மருதனிளநாகனார்      - 35 பாடல்கள்
        முல்லை  -     சோழன் நலுருத்திரன் - 17 பாடல்கள்
        நெய்தல் -     நல்லத்துவனார்              - 33 பாடல்கள்

இந் நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். பா வகையால் பெயர்பெற்ற இந்நூலில் அமைந்துள்ள பல பாடல்கள் நாடக அமைப்புடன் காணப்படுகின்றன.

 அகநானூறு
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு.  பாடிய புலவர்கள் எண்ணிக்கை 146. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். 13 அடி முதல் 31 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பகுப்புகளைக் கொண்டுள்ளது.

  • களிற்றியானை நிரை - 1 முதல் 120வரை
  • மணிமிடைப்பவளம்    - 121 முதல் 300 வரை
  • நித்திலக்கோவை         - 301 முதல் 400 வரை

அகநானூற்றின் பாடல்களைத் தொகுத்த உருத்திரசன்மன் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றியுள்ளார். அவை,

  • 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணாக வரும் பாடல்கள் பாலைத் திணைக்குரியன.
  • 4, 14, 24 என நான்கு எனும் எண்ணுடன் முடிபவை முல்லைத்திணைக்குரியவை.
  • 6, 16, 36 என ஆறு எனும் எண்ணில் முடிவன மருதத்திணைக்குரியவை.
  • 2, 8 என இரண்டையும் எட்டையும் இறுதியாக முடிவன குறிஞ்சித்திணைக்குரியவை.
  • 10, 20 என முடிபவை நெய்தல் திணைக்குரியவை என்றும் வகுத்துள்ளார்.

பதிற்றுப்பத்து
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.

  • 2ஆம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
  • 3ஆம் பத்து – பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது
  • 4ஆம் பத்து – களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
  • 5ஆம் பத்து – கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது
  • 6ஆம்பத்து – ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் பாடியது
  • 7ஆம் பத்து – செல்வக்கடுங்குா வாழியாதனைக் கபிலர் பாடியது.
  • 8ஆம் பத்து - தகடூர் எறிந்த பெருஞ்சுரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
  • 9ஆம் பத்து – இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

புறநானூறு
புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார். 4 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளது. 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ மன்னர்களையும், 18 சேர மன்னர்களையும் பாடுகின்றது.

பரிபாடல்
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரைஎழுதியுள்ளார். 25 அடி முதல் 40 அடி வரை பாடப்பட்டுள்ளன. இந்நூலில் திருமால், செவ்வேள் பெருமைகளும், வையை ஆற்றின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.