செவ்வாய், 19 அக்டோபர், 2021

முத்தொள்ளாயிரம்

 

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் (மூன்று + தொள்ளாயிரம்)  என்பது  தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. முத்தொள்ளாயிரம் சேரசோழபாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும், முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்னர் புறத்திரட்டு  என்னும் நூலின் ஆசிரியர் அந்நூலில் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். இவையே முத்தொள்ளாயிரம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு  சிலப்பதிகாரத்தில்  காணப்படுகிறது.  இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.

இந்நூலில் இருந்து மூவேந்தர்களைப் பற்றி ஒன்பது பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பாண்டியன்

புகழ்

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்

நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்

மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்

தலைபடுப தார்வேந்தர் மார்பு

விளக்கம்

பாண்டியனின் நிலத்தில் செம்பொன் விளைகின்றது. ஊர்தோறும் முத்தமிழ் பாடப்படுகின்றது. கடல்நீரில் முத்துக்களும் வெண்சங்குகளும் நிறைந்திருக்கின்றன. மலைச்சாரல் முழுவதும் யானைக்கூட்டங்கள் பெருகியிருக்கின்றன. அத்தகு வளமுடைய நாட்டை எதிர்த்து வரும் பகை மன்னர்களின் மார்புகளைப் பாண்டியனுடைய வேல் பிளந்து விடும்.

திறை

நேமிநிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம்மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள்

விளக்கம்

ஆணைச் சக்கரம் கொண்டு ஒரே வெண்கொற்றக் குடையால் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள்பவன் பாண்டியன். கண் இமைக்கும் இயல்பில்லாத தேவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மணிப்பூண் அணிந்து இருப்பர். அவர்கள் பாண்டியனுடைய ஆணைக்கு அடிபணிய நேரிடுமோ என்று பூமியில் கால் வைக்க அஞ்சுகின்றனர். தேவர்களே அஞ்சுகின்ற ஆளுமை கொண்ட பாண்டியனுக்குச் சிற்றரசர்கள் திறை செலுத்தாவிடில் அவர்களுடைய வாழ்வு அழிந்து விடும்.

கைக்கிளை

கார்நறு நீலம் கடியகத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் யாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்

விளக்கம்

குவளை மலர் நாள்தோறும் குளத்தில் நின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் பாண்டியனின் மார்பில் மாலையாகும் பேறு பெற்றது. கூர்மையான வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டுகள் அம்மாலையை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அதுபோல் தவம் செய்திருப்பின் பாண்டியனின் மார்பை அடைந்திருக்கலாமோ என்று பாண்டியன் மீது ஒருதலையாகக் காதல் கொண்ட பெண் புலம்புகின்றாள்.

சோழன்

யானைமறம்

கொடிமதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்

முடிஇடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்தோள் கிள்ளி களிறு

விளக்கம்

கல், மலை போன்ற தோற்றம் கொண்டவன் சோழன். அவனுடைய ஆண் யானை பகைவரின் கோட்டையைப் பாய்ந்து இடித்ததால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. பகை மன்னர்களின் தலைமுடியை (கீரிடம்) இடறியதால் அதன் கால் நகங்கள் தேய்ந்து போயின. அழகிழந்த தன் தோற்றத்தைத் தன் பெண் யானைக்குக் காட்டுவதற்கு நாணம் கொண்டு புறங்கடையிலேயே நின்று விட்டது. இப்படிப்பட்ட வீரம் பொருந்திய யானைகளைத் தன் படை பலமாகக் கொண்டவன் சோழன்.

களம்

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய்யாகத்

தடித்த குடல்திரியா மாட்டி எடுத்து எடுத்துப்

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன்

சேஎய் பொருத களம்

விளக்கம்

போரில் உயிரிழந்த பகை வீரர்களின் மண்டையோட்டினை அகலாகவும், சிதறி விழுந்த மூளைகளை நெய்யாகவும், பகை மன்னர்களின் குடலைத் திரியாகவும் அமைத்துப் பேய்கள் விளக்கு ஏற்றி வைத்துப் பிணங்களைத் தின்னுகின்றன. இவ்வாறு காட்சியளிக்கின்றது சோழன் போர் செய்த களம்.

கொடை

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்

மந்தரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை

இலங்குவுல் கிள்ளி இரேவதி நாள் என்னோ

சிலம்பிதன் கூடிழந்த வாறு

விளக்கம்

ரேவதி சந்திரனோடு கூடியிருக்கும் நல்ல நாளில் சோழனுக்குப் பிறந்தநாள் வருகின்றது. அவனை வாழ்த்தப் பரிசிலர்கள் வருகின்றனர். அந்தணர்கள் சோழனிடமிருந்து ஆவையும், பொன்னையும் பரிசாகப் பெற்றார்கள். நாவன்மை மிக்க புலவர்கள் மந்தரம் போன்ற யானைகைளைப் பரிசாகப் பெற்றனர். மனிதர்கள் அனைவரும் பரிசு பெற்று மகிழ்ந்திருந்த அந்த நாள், மன்னனின் அரண்மனையில் வாழும் சிலந்தி பூச்சிகளுக்கு மட்டும் துன்ப நாளாக அமைந்து விட்டது. மன்னனின் பிறந்தநாளுக்காக அரண்மனைகள் தூய்மைப்படுத்தப்பட்டதால் தன் கூடுகளை இழந்த நிலையை எண்ணி வருத்தம் கொண்டன.

சேரன்

புகழ்

வானிற்கு வையகம் வென்றது வானத்து

மீனிற்கு அனையார் மறமன்னர் வானத்து

மீன்சேர் மதியனையான் விண்உயர் கொல்லியர்

கோன்சேரன் கோதை என்பான்

விளக்கம்

சேர மன்னன் ஆள்கின்ற நிலப்பகுதி வானளவை ஒத்தது. அவனுக்குக் கீழ் அடங்கியிருக்கும் சிற்றரசர்கள் வானத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கையை ஒத்தவர்கள். அவர்களை ஆளுகின்ற சேர மன்னன் வானத்தில் உள்ள சந்திரனைப் போன்றவன். அவன் வானளவுக்கு உயர்ந்து நிற்கும் கொல்லி மலைக்குத் தலைவன்.

நாடு

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்அவிழ

வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வையுடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

விளக்கம்

சேற்று நிலத்தில் ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. அவை சிகப்பு நிறத்தில் மலர்வதைக் கண்ட பறவையினங்கள் நீர் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சித் தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளால் அணைத்துக் கொண்டன. இப்படிப்பட்ட நாட்டிற்குத் தலைவனாக இருக்கின்றான் சேரன்.

கைக்கிளை

ஏற்று ஊர்தியானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையம் ஒத்து ஒன்றின் ஒவ்வாரே

கூற்றக் கணிச்சியோன் கண்மூன்று இரண்டேயாம்

ஆற்றல்சால் வானவன் கண்.

விளக்கம்

காளை மாட்டை ஊர்தியாகக் கொண்டவன் சிவன். போர் வண்மை கொண்ட வானவன் சேரன். இருவரும் ஆற்றலாலும், ஆள்கின்ற திறத்தாலும் ஒத்துக் காணப்படுகின்றனர். என்றாலும் ஒன்றில் மட்டும் வேறுபடுகின்றனர். அவ்வேற்றுமை யாதெனில், சேரனுக்குக் கண் இரண்டு. சிவனுக்குக் கண் மூன்று. 

அருஞ்சொற்பொருள்

நேமி நிமிர்தோள் நிலவு தார் - பூமிமையத் தாங்கும் தோள்களில் விளங்குகின்ற வெற்றி மாலை, ஏம்ம் – பொன், அமையார் – தேவர், நீலம் – குவளை, வாமான் – தாவுகின்ற குதிரை, வண்டிருக்க நக்கதார் – வண்டுகள் வந்து இருப்பதனாலேயே மலர்ந்ந மலர்களால் கட்டிய மாலை, கல் – மலை, தடித்த – திரண்ட, செம்பியன் – சோழன், வென்றது – ஒத்தது, அள்ளல் – சேறு, பழனம் – நீர்ப்பொய்கை, அரக்காம்பல் – செவ்வாம்பல், ஏற்றூர்தியான் – காளை ஊர்தியுடைய சிவபெருமான், வானவன் – சேரன், கூற்றக் கணிச்சியோன் – காலனைப் போலக் கொலை செய்யும் மழுப்புடைய சிவபெருமான்.

 

வேதநாயகம் பிள்ளை - பெண்மதிமாலை

பெண்மதிமாலை

 வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 111826 - சூலை 211889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம்தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையைத் திருமணம் செய்தார்.

இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.   கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளியிட்டார். மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:

·      சித்தாந்த சங்கிரகம் (நூல்) - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்

·  பெண்மதி மாலை (நூல்) - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.

· செய்யுள் நூல்கள் - திருவருள் அந்தாதி (நூல்)திருவருள் மாலை (நூல்)தேவமாதர் அந்தாதி (நூல்)

· பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

·        ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை (நூல்) ஏறத்தாழ 200 இசைப்பாடல்கள்.

·        சுகுண சுந்தரி (நூல்) புதினம்

·        சத்திய வேத கீர்த்தனை (நூல்)

·        பொம்மைக் கலியாணம் (நூல்)பெரியநாயகியம்மன் (நூல்) என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய பெண்மதி மாலை நூலில் மாதா பிதா வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்

1.    மாதா பிதாவை வணங்கு – நாளும்

ஆதாரமாகவே யவர்சொல்லுக்கிணங்கு

2.    தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர்

சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் நில்லாது

3.    மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும்

பாதகரைச் சுற்றும் பாவம் அநேகம்

4.    பெற்றவர் நேசத்தைத் தேடு அவர்

குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு

5.    தாய்தந்தைக் குதவாத பிள்ளை – தனது

ஆயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை

6.    கட்டியுனை ளாக்க தாமே முன்பு

பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே

7.    உள்தாய் தந்தைக்குத் தீங்கு செய்யும்

பிள்ளையைத் தன்பிள்ளை யேபழிவாங்கும்

8.    கடலைப் போல்மாதா சகாயம் – அதற்கு

உடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ஞாயம்

மதியிது மதியிது பெண்ணே – புண்ணிய

வதியல்லவோ நல்ல மகராசி கண்ணே.

விளக்கம்

பெண் மதி மாலை என்ற நூல் அக்காலப் பெண்களுக்குப் பல அறிவுரைகளை வழங்குகின்றது. கணவன் நல்வார்த்தையைத் தட்டாது, மாமிமேல் வன்மம் காட்டாதே, தலையணை மந்திரம் தீது என்பன போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்டுகின்றன. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளது. இந்நூலில் அவற்றுள் தாய் தந்தை வணக்கம் என்ற பகுதியில், தாயையும் தந்தையையும் எவ்வாறு போற்ற வேண்டும் என்பது குறித்த பாடல்களே நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

1.மதியுள்ள பெண்ணே! பெற்ற தாயையும் தந்தையையும் எப்போதும் வணங்க வேண்டும். அவர்களின் சொற்களுக்கு நாள்தோறும் அடிபணிந்து செயல்பட வேண்டும்.

2. அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டு, அவர்களின் சாபத்தைப் பெறக் கூடாது. பெற்றோர்களின் மனம் நோகும்படிச் செயல்படும் பிள்ளைகளின் செல்வங்கள் நிலைபெறாமல் அழிந்து விடும்.

3. தாய்க்கும் தந்தைக்கும் துரோகம் செய்யும் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாவங்கள் தொடரும்.

4. பெற்றவர்கள் செய்யும் தவறுகளை நீக்கிவிட்டு அவர்களின் நற்குணத்தைக் கொண்டாட வேண்டும். அவர்களின் உள்ளத்தில் மறைந்திருக்கும் நேசத்தைத் தேட வேண்டும்.

5.தாய்க்கும் தந்தைக்கும் உதவாத பிள்ளை வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவனாகவே கருதப்படுவான். அதனால் அவன் ஆயுட்காலமும் குறைந்துபோகும்.

6. சமூகத்தில் தன் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு உயர்த்த பெற்றோர் செய்யும் தியாகங்களையும், துன்பங்களையும் கூற முற்பட்டால் ஒரு பாரதமே எழுதிவிடலாம்.

7.பெற்றோர்க்குத் தீங்கு செய்யும் பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளே பழி வாங்குவர்.

8.தாயின் அரவணைப்பும், அவர்களின் சேவையும் கடலைப்போல பரந்தது. அதனை உணர்ந்து நம் தாயின் காலுக்குத் நம் உடம்பை செருப்பாகத் தைத்துப் போடுதலே நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையாகும் என்று அறிவுரை கூறுகின்றார் ஆசிரியர்.


குணங்குடிமஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி

பராபரக்கண்ணி

குணங்குடிமஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டின் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய சமயத்தைக் குறித்தும், இறைவனைக் குறித்தும் இவர் இயற்றிய தமிழ் இலக்கியங்கள் புகழ் பெற்றவை ஆகும். இல்வாழ்க்கையைத் துறந்து துறவியாக வாழ்ந்த இவரைத் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் மக்கள் போற்றுகிறார்கள்.

குணங்குடி மஸ்தான் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் சுல்தான் அப்துல்காதிர் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே குர் ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவர் திருமண வயதை அடைந்த போது, உறவினர்கள், இவருடைய தாய்மாமன் மகளான மைமூன் என்ற பெண்ணை இவருக்குத் திருமணம் செய்வதற்கு ஆலோசித்தனர். அப்துல்காதிருக்குத் திருமணம் மற்றும் இல்லறத்தில் நாட்டமில்லை. எனவே பெரியவர்களுக்குத் தன் நிலையை எடுத்துரைத்த பின்பு தன்னுடைய பதினேழாவது வயதில் தன் தந்தையின் ஆசியுடன் துறவறத்தை மேற்கொண்டார். உலகப்பற்றை அறவே நீக்கினார். பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாமல் இஸ்லாமிய இறைப் பித்தரானார். நாடு, நகரம், மொழி இனம் என அத்தனையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். வடசென்னையில் இராயபுரத்தில் பாவாலெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற பகுதியில் தங்கினார். முட்புதர்களும், சப்பாத்திக் கள்ளியும் அடர்ந்த குப்பைமேட்டில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் பெற்று சித்தர்களின் வழியில் சித்துக்கள்என்னும் அற்புதங்களையும் புரிந்தார்.

இவர் புரிந்த அற்புதச் சித்துக்களை எல்லாம் கண்ணுற்ற பொதுமக்கள் இவரை மஸ்தான்என்று அழைத்தனர். பிற்காலத்தில் குணங்குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில் குணங்குடி மஸ்தான்என்ற பெயரே நிலைத்துவிட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதலால் இவரைத் “தொண்டியார்என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் இவர் வாழ்ந்த பகுதி “தொண்டியார்பேட்டைஎன்று பெயர்பெற்றது. இப்பகுதியே இன்று வடசென்னையின் புறநகர்ப் பகுதியான தண்டையார்பேட்டை ஆகும்.
இவர் பல இசையுடன் கூடிய  உணர்ச்சி மிக்க பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இந்தப் பாடல்கள் மதங்களைக் கடந்தவை. கி.பி. 1838 ஆம் ஆண்டு தன்னுடைய நாற்பத்து ஏழாம் வயதில் இறந்தார்.

குணங்குடி மஸ்தான் படைப்புகள்

1. அகத்தீசர் சதகம்

2. ஆனந்தக் களிப்பு

3. நந்தீசர் சதகம்

4. நிராமயக்கண்ணி

5. பராபரக்கண்ணி

6. மனோன்மணிக்கண்ணி

குணங்குடி மஸ்தானைப் போற்றி  எழுதப்பட்டவை

1. குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி ஐயாசாமி

2. நான்மணி மாலை சரவணப் பெருமாளையர்

இவர் இயற்றிய பராபரக்கண்ணியில் இருந்து பத்துக் கண்ணிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்

1.    அண்ட புவனமென்று டுதிருக் கூத்தினையான்

கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!

2.    ஆதியா யாண்டவனா யஃபாதுவாய் நின்றபெருஞ்

சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!

3.    வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை

ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!

4.    அண்ட புவனம் உடனஆகாச மென்றுசும்பிக்

கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!

5.    நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம்

பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!

6.    பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்

ரா ரிருந்துபல னாமோ பராபரமே!

7.    மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே

பாராயோ வையா பகராய் பராபரமே!

8.    ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத்

தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!

9.    நாதாந்த மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு

மாதவத்தோர்க் கான மருவே பராபரமே!

10. உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பத்தைக்

கடலும்மலை யும்திரிந்தும் காணேன் பராபரமே!

விளக்கம்

1.    எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே!

2. உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய், அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே! பராபரமே!

3.வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின் உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே!

4.அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும், வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே!

5. நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே!நாகந்த பூவாய் மலர்ந்நதிருக்கின்றவனே! பராபமே!

6.பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு யார் இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே!

7.ஐயனே! எனக்கு அம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண் திறந்து அருள வேண்டும். பராபரமே!

8.எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக் கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே!

9. நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே!

10.என் உடலில் இருக்கின்ற உயிரே! என் மனமே! உன் திருவடிகளைக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண முடியவில்லை. பராபரமே!


திருமூலர் - திருமந்திரம்

 

திருமந்திரம்

திருமூலர்

திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும்பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளதுஎன்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 

வேறு பெயர்கள்:

திருமந்திர மாலைமூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

நூல் பெருமை:

இந்நூல் பண்டைய இந்திய சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புகளையும், வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம்ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதிபசுபாசம் என்பனவற்றின் இணைப்பையும்உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளையும் விளக்குகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம், குண்டலினி யோகம், மருத்துவம், நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகவும் திகழ்கிறது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர்பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூறியுள்ளார்.

வேறு நூல்கள்

  • திருமூலர் அறுநூற்றொன்று
  • திருமூலர் வைத்தியம்,
  • திருமூலர்ஞானம்
  • திருமூலர் வழலைச் சூத்திரம்,
  • திருமூலர் பல திரட்டு
  • திருமூலர் வாதம் இருபத்தொன்று 

போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். 

திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் அன்புடைமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 270, 271, 274, 275, 285 ஆகிய பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

 

அன்புடைமை

பாடல் - 1

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 270.

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.


பாடல்  - 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 271

விளக்கம்

பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.


பாடல்  - 3

என்அன்பு ருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே. 274

விளக்கம்

உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.


பாடல் - 4

தான்ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேன் ஒரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தான் ஒரு வண்ணம்என் அன்பில்நின் றானே

விளக்கம்

தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.


பாடல் - 5

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரி உரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழல்அது என் அன்பினுள் யானே. 285.

விளக்கம்

கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.

 

https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/first-tantra/first-tantra-19-shiva-knows-those-who-love-others/