உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மார்ச், 2024

தொல்காப்பியப் பூங்கா

 

தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் கருணாநிதி

எழுத்து – முதல் நூற்பா

தொல்காப்பியப் பூங்கா என்ற நூலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப் புதுமையான முறையில் விளக்கம் அளிக்கின்றார். அவற்றுள் எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவிற்குக் கலைஞர் இயற்றியுள்ள கற்பனை நயத்தைப் பின்வருமாறு காணலாம்.

தொல்காப்பியரின் கனவில் அணிவகுத்த எழுத்துகள்

தொல்காப்பியர் “எழுத்து“ என ஓலையில் எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் இருந்தார். எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதால் தொல்காப்பியரின் கனவில் ஒலி எழுப்பியவாறு எழுத்துகள் நடந்து வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அணிவகுத்து நின்றன. முன்வரிசையில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துகளும், பின்வரிசையில் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய எழுத்துகளும் அணிவகுத்தன.

குற்றியலிகரமும் குற்றியலுகரமும்

அப்போது சுவர் ஓரமாக இரு நிழல்கள் தோன்றி ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால் தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல் – என் பெயர் இகரம் என்றது

மற்றொரு நிழல் – என் பெயர் உகரம் என்றது.

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து “நீங்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற வரிசையில் இடம் பெறுவீர்கள். முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் உங்களை அமர வைக்க முடியாது” என்று கூறிவிட்டார்.

ஆய்த எழுத்து

அப்போது கம்பு ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு புதுமையான உருவம் தோன்றி, “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது. தொல்காப்பியர், “நீ ஆயுதம் ஏந்தி ஆய்த எழுத்தாக வந்தாலும் உன்னை முதல் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?” என்று கேட்டார். அவரது கோபம் உணர்ந்த ஆய்த எழுத்து, “ஐயனே என்னை முதல் வரிசையில் வைக்காவிட்டாலும், முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்றாயா? நல்ல வேடிக்கை” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என்று மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர் தாம் எழுதியதைத் திரும்பப் படித்தார்.

“எழுத்தெனப் படுப

அகர முதல் னகர ஈறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1)

“அவைதாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் அவற்றோர் அன்ன” (எழுத்து, நூல் மரபு – 2)

அதில் “முப்பஃ தென்ப” என்ற தொடரில் ஆய்த எழுத்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

விளக்கம்

தமிழ் எழுத்துகளுள், உயிர் எழுத்துப் பன்னிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. குறுகிய ஒலியைக் கொண்ட இகரம் குற்றியலிகரம் என்றும், குறுகிய ஒலியைக் கொண்ட உகரம் குற்றியலுகரம் என்றும், “ஃ“ என்ற எழுத்து ஆய்த எழுத்து என்றும் கூறப்படுகின்றன. இவை மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

இதழியல் - முரசொலி கடிதம்

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

தமிழின் சிறப்புகளை உலகோர் அறியும் வண்ணம் “உலகத் தமிழ் மாநாடு” என்ற பெயரில் பல மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு“ என்ற பெயரில் முதன் முதலாக கோவையில் தமிழ்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும். இம்மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் ஜூன் மாதம் 23 ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. அம்மாநாடு நடப்பதற்கு முன்னர் தம் முரசொலி இதழில் “உடன்பிறப்பே“ என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகளை வழங்கினார் கலைஞர்.  “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற முதல் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு காணலாம்.

கட்டுரையின் கருப்பொருள்

தமிழ் மொழியைச் செம்மொழி என அடையாளப்படுத்துவதற்கு உழைத்த அறிஞர்கள் பலர். அவர்களுள் தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த முதல் அறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். தமிழைச் செம்மொழி என அறிவிக்க அவர் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் இக் கட்டுரையில் விவரிக்கின்றார்.

பரிதிமாற் கலைஞரின் கருத்துகள்

1902 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்னும் இதழில் “உயர்தனிச் செம்மொழி“ என்ற தலைப்பில், “தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி எவ்வாற்றால் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியே என்பது திண்ணம்” என்று விளக்கியுள்ளார். 1903 ஆம் ஆண்டு “தமிழ் மொழியின் வரலாறு“ என்ற தமது நூலில், “தமிழ் – தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழி என்க” என்று பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்தக் கருத்துகள் அறிஞர் பலரின் கவனத்திற்குச் சென்றன. தமிழைச் செம்மொழி என அழைக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் வாதிட்டனர். ஆயினும், தமிழ் மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே உறுதியாக நிலைநாட்டிய பெருமை பரிதிமாற்கலைஞரையே சாரும்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த அரசு மரியாதை

தனியார் பொறுப்பில் இருந்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தி, புதுப்பித்து நினைவு இல்லமாக்கினார். நினைவு இல்லத்தின் முகப்பில் பரிதிமாற் கலைஞரின் மார்பளவு சிலையை நிறுவினார். அந்த இல்லத்தைத் திறந்து வைத்து, “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக் குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் புகழ் வாழ்க” என்று பார்வையாளர் புத்தகத்தில் கையொப்பமிட்டார். பரிதிமாற்கலைஞரின் அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்கினார். அவரது மரபுரிமையாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கினார். 2007 ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பணி

தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க “நாடகவியல்“ என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டபோது, திரு பூர்ணலிங்கம் அவர்களோடு இணைந்து, தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று, முயன்று பல்கலைக்கழகத்தின் திட்டத்தைத் தடுத்தார். தமிழ்மொழி தொடர்ந்து பல்கலைக்கழகப் பாடமொழியாக நீடித்தது. தமிழ் மொழியின் வரலாறு என்ற தம் நூலில், வடமொழியாளர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுடைய வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.  அக்கருத்துகள் யாவும், தமிழர் அனைவராலும், குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் அனைவராலும் நினைவு கூரத்தக்கதாகும். ஆகவேதான், சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களை முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று தன் நெஞ்சத்து உணர்வு கலந்து வாழ்த்துவதாக இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.


குறிப்பு - முரசொலி இதழில் கலைஞர் கருணாநிதி அவர்கள் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட கடிதம், மாணவர்கள் தேர்வுக்கு எளிதாகப் படிப்பதற்காகச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலப்பகுதி பின்வரும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காண்க.

https://library.cict.in/uploads/files/books/4.pdf

இந்நூலை வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

 

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாடகம், 1949ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கே.ஆர்.இராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், எம்.வி.இராஜம்மா, வி.என்.ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

வட்டியூர் ஜமீன்தார் வேதாச்சலம் பணவெறியும் ஜாதி வெறியும் பிடித்தவர். அவருக்கு சரசு, மூர்த்தி என இரண்டு பிள்ளைகள். சரசு தான் செல்வந்தரின் மகள் என்ற ஆணவம் கொண்டு, தன் வீட்டு வேலைக்காரியாகிய அமிர்தத்தை எப்போதும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். மூர்த்தி நல்ல பண்புள்ளம் கொண்டவன். சரசு அமிர்தத்தைக் குறை கூறும்போதெல்லாம் மூர்த்தி அவளுக்காகப் பரிந்து பேசுகின்றான்.

அமிர்தம் – மூர்த்தி காதல் கொள்ளுதல்

அமிர்தத்தின் தந்தை முருகேசன் வேதாச்சலத்தின் நம்பிக்கையான பணியாள். அவர் தன் மகளுக்கு வயதான ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கின்றார். அமிர்தம் அத்திருமணத்தை மறுக்கின்றாள். வேதாச்சலமும், சரசுவும் முருகேசனுக்கு ஆதரவாக பேச, மூர்த்தி அமிர்தத்திற்கு ஆதரவாக பேசுகின்றான். மாப்பிள்ளை வீட்டினர் அமிர்தத்தைப் பெண் பார்க்க வருகின்றனர். அப்போது மூர்த்தி தந்த யோசனையின் பேரில் தன் முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு நிற்கின்றாள் அமிர்தம். இப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்தை நிறுத்துகின்றனர். நாளடைவில் மூர்த்தியும் அமிர்தமும் காதல் கொள்கின்றனர்.

சுந்தரம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளுதல்

          அந்த ஊரில் மானத்திற்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுந்தரம் பிள்ளை வேதாச்சலத்திடம் கடன் வாங்குகின்றார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் வேதாச்சலம் சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு வந்து அவரைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்ட, சுந்தரம்பிள்ளை அவரிடம் கெஞ்சுகின்றார். வேதாச்சலம் மனம் இரங்காதது கண்டு, அவமானம் தாங்காமல் தன் வீட்டு மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார்.

சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன் வருகை

          தேயிலைத் தோட்டத்தில் இரவும் பகலும் உழைத்து, 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, தன் தந்தை சுந்தரம் பிள்ளைக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கும் ஆவலோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பும் ஆனந்தன் வழியில் தன் நண்பன் மணியோடு உரையாடிக் கொண்டு வருகின்றான். வீட்டிற்குச் சென்றபோது தன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறுகின்றான். தன் தந்தையின் கையில் இருநு்த கடிதத்தைக் கண்டு, இதற்கெல்லாம் காரணம் வேதாச்சலம் என்பதை அறிகின்றான். அவரைப் பழிவாங்கத் துடிக்கின்றான்.

மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுதல்

ஆனந்தன் வேதாச்சலத்தைக் கொலை செய்வதற்காகக் கத்தியைத் தீட்டுகின்றான். இதைக் கண்ட மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுகின்றான். “பழி வாங்கும் திட்டத்தை விட்டுவிடு. அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் முன்பாக அவனைத் தலைகுனிய வைக்க வேண்டும். அதற்கான வழியை நாம் செய்ய வேண்டும்” என்று கூற, ஆனந்தனும் மணி சொல்வது சரி என்று ஒப்புக் கொள்கின்றான்.

ஆனந்தன் தற்கொலைக்கு முயலுதல்

வேலை செய்யும் இடத்தில் ஆனந்தன் ஒருவனிடம் கடன் வாங்க, கடன் கொடுத்தவர் ஆனந்தனைத் தகாத வார்த்தையில் பேசி, உன் தந்தைபோல நீயும் எங்கேயாவது சாக வேண்டியதுதானே” என்று கூற மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கின்றான் ஆனந்தன். ஆனால் அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்கின்றது. அந்த சமயத்தில் மணியும் வந்து விட, மணியிடம் புலம்புகின்றான் ஆனந்தன். அப்போது “காளியின் அருள் வேதாச்சலம் போன்ற செல்வந்தனுக்குத் தான் கிடைக்கும் உன்னைப்போன்ற ஏழைக்கு எப்படி கிடைக்கும்” என்று கூற, ஆனந்தன் நேரே காளியின் கோயிலுக்குச் சென்று, காளியிடம் ஆவேசமாகப் பேச ஆட்கள் வந்து அவனை விரட்டுகின்றனர். பொதுமக்கள் ஆனந்தனை துரத்துகின்றனர். இதைக் கண்ட மணி, ஒரு பாழுங்கிணற்றைக் காண்பித்து அதில் நீ ஒளிந்து கொள் என்று கூற ஆனந்தனும் ஒளிந்து கொள்கின்றான்.

ஆனந்தனைத் தேடி மணியும் வர, இருவருக்கும் ஒரு மூட்டை கண்ணில் படுகின்றது. அம்மூட்டையில் இறந்த உடல் ஒன்றைக் காண்கின்றனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் உள்ள மனிதன் ஆனந்தன் மாதிரியே இருக்கின்றார். கூடவே அவரது நாட்குறிப்பும் கிடைக்கின்றது. அதன் மூலம் அவருடைய பெயர் பரமானந்தம் என்றும், அவர் மிகப் பெரும் செல்வந்தர் என்றும், அவருடைய தாயார் கண் பார்வை அற்றவர் என்றும், விலை உயர்ந்த வைரங்கள் அவனிடம் இருந்தததால் அதை அறிந்த எவனோ அவனைக் கொலை செய்துள்ளான் என்றும் அறிகின்றனர்.

ஆனந்தன் பரமானந்தனாக மாறுதல்

வேதாச்சலத்தைப் பழிவாங்க இதுவே சரியான வழி என்று எண்ணிய மணி, ஆனந்தனைப் பரமானந்தனாக மாற்றுகின்றான். இருவரும் பரமானந்தன் வீட்டிற்குச் செல்கின்றனர். பரமானந்தனின் தாயாரைச் சந்திக்கின்றனர். வெளியூருக்குச் சென்ற மகன் திரும்பிவிட்டான் என்று எண்ணி அந்தத் தாய் மகிழ்ச்சி கொள்கின்றாள். தன் மகனுக்கு வேதாச்சலத்தின் மகள் சரசாவை மணம் பேச வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அதனை ஏற்ற மணி, வெளிநாட்டுக்குச் சென்ற பரமானந்தன் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றான் என்பதைச் செல்வந்தர் பலருக்குத் தெரியப்படுத்த ஒரு பார்ட்டி நடத்தலாம் என்று யோசனை கூற, தாயும் சம்மதிக்கின்றாள். அதன்படி வேதாச்சலம் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கின்றார். அவனுடைய செல்வமும், பரமானந்தனின் அழகும் அவரை ஈர்க்கின்றது. தன் மகள் சரசாவைப் பரமானந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்.  

பரமானந்தன் வேதாச்சலத்தைப் பழி வாங்குதல்

 பரமானந்தன் வேடத்தில் இருக்கும் ஆனந்தன் வேதாச்சலத்தின் மீதான தன் பழியைத் தீர்த்துக் கொள்ள தன் மனைவியைப் பலவாறு கொடுமைப்படுத்துகின்றான். பொய்யாகக் குடித்து, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல நடித்துத் தன் மாமனார் வேதாச்சலத்தின் நற்பெயரைக் கெடுக்கின்றான். அமிர்தத்திடம் தவறாக நடப்பதுபோல காட்டி, மூர்த்திக்கும் தன் மாமனாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகின்றான். இதனால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுகின்றான். சென்னை சென்று தன் நண்பரின் உதவியைப் பெற்ற பிறகு அமிரத்தத்தைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டுச் செல்கின்றான்.

அமிர்தம் பாலுவின் மகளாக மாறுதல்

அமிர்தத்தைத் தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காவது மணமுடிக்கலாம் என்று அவரது தந்தை திட்டமிடுகின்றார். அதைக் கவனித்த அமிர்தம் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தான் ஏறி வந்த லாரியின் முதலாளி சொல்லுக்கிணங்க பழம் விற்கும் தொழிலைச் செய்கின்றாள். அப்போது ஒரு நாள் தெருவில் பழம் விற்றுக் கொண்டிருக்கும்போது, பாலு முதலியார் என்பவர், அவளைக் கண்டு தன் மகள் சுகிர்தம் நீதான் என்று கூறி, வலுக்கட்டாயமாக அவளை ஒரு மருத்துவமனைக்கு இழுத்துச் செல்கின்றார். அங்கே மருத்துவர் இருவரையும் புரிந்து கொண்டு, அமிர்தத்திடம், “இவர் ஒரு விபத்தில் தன் மகளை இழந்து விட்டார். அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு உன்னைத் தன் மகளாக எண்ணுகின்றார்” என்று கூற, அமிர்தம் அவரைத் தன் தந்தைபோல பாவித்து, தன்னால் ஆன உதவி செய்து அவரைக் குணமாக்குகின்றாள். குணமான பின்பு பாலு முதலியார் அவளுடைய வாழ்க்கையின் அவல நிலையைக் கேட்டு, தன் மகளாக அவளை ஏற்றுத் தன் வீட்டிலேயே வாழச் செய்கின்றார்.

மூர்த்தியின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்றல்

தங்களிடம் உதவி கேட்டு வந்த மூர்த்தியை அவனுடைய  நண்பர்கள் நிராகரிக்கின்றனர். அமிர்தம் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியைக் கேள்விப்படுகின்ற மூர்த்தி மனமுடைந்து போகின்றான். நண்பர்களின் நிராகரிப்பும், காதலித்தவளின் மரணமும் அவனைத் துன்புறுத்துகின்றது. அதனால் மன அமைதி பெற யோகி நடத்துகின்ற ஆசிரமத்திற்குச் செல்கின்றார். யோகி உண்மையான ஆன்மிகவாதி அல்ல என்பதைக் கண்டுபிடிக்கின்றார். இருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் யோகி இறந்து விட, மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார். இதை அறிந்த ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து, “யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்றும், நடந்தது கொலை அல்ல தற்காப்புக்காக நடந்த சண்டையில் அவர் உயிரிழக்க நேரிட்டது“என்று வாதிடுகின்றார். நீதிமன்றம் மூர்த்தியை விடுதலை செய்கின்றது.

மகிழ்ச்சியான முடிவு

பாலு முதலியாரின் வீட்டில் இருக்கும் சுகிர்தம், வேதாச்சலம் வீட்டின் பணிப்பெண் அமிர்தம்தான் என்பதை மணியின் மூலமாக ஆனந்தன் தெரிந்து கொள்கின்றான். ஆனந்தன் தன் வழக்காடியதற்குக் கட்டணமாக பாலுவின் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். சுகிர்தம் என்ற பெயரில் இருக்கும் அமிர்தத்தை மூர்த்தி திருமணம் செய்து கொள்கின்றார்.

இறுதியாக, வேதாச்சலத்திடம், தான் யார் என்பதையும், தன் தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்பதற்காகவே சரசாவை திருமணம் செய்து கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தியதாகவும், ஜாதி வெறியை அடக்கவே, அமிர்தத்திற்கும் மூர்த்திக்கும் திருமணத்தை நடத்தினேன் என்றும் ஆனந்தன் விவரிக்கின்றான். இவற்றையெல்லாம் கேட்ட வேதாச்சலம் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கின்றார். யாரும் தன்னை ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறி, தன் ஜாதி வெறியும், பணத்திமிரும் ஒழிந்து விட்டது என்பதை வெளிப்படுத்த, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நாட்டு மக்களுக்கு உரைப்போம்” என்று கூறுவதோடு நாடகம் நிறைவுறுகின்றது.

 

சாக்ரடீஸ்

 

சாக்ரடீஸ்

ராஜா ராணி என்ற திரைப்படம் 1956 ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் அவர்களின் இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களால் திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகிய ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

கதைச் சுருக்கம்

ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இந்த நாடகம் மூன்று காட்சிகளைக் கொண்டது. முதல் காட்சியில், சாக்ரடீஸ், கிரேக்க இளைஞர்களிடம் “சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அறிவை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று கூறி பிரச்சாரம் செய்கின்றார். இரண்டாம் காட்சியில், அணிடஸ் மற்றும் மெலிடஸ் இருவரும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுக்கின்றனர். நீதிபதி சாக்ரடீஸிற்கு விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரணதண்டனை வழங்குகின்யறார்.  மூன்றாம் காட்சியில், சாக்ரடீஸ் தன்னுடைய நண்பனையும் மனைவியையும் தேற்றி இறுதி உரை ஆற்றுகின்றார்.

முதல் காட்சி – கிரேக்க நகரத்தில் சாக்ரடீஸ் அறைகூவல்

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் வீதியில், “இளைஞர்களே! உங்களையே நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தில் இருக்கும் குறைகளை மறைப்பது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடிப் பெறவேண்டும். இதற்காகத்தான் நான் உங்களை அழைக்கின்றேன். விவேகம் இல்லை என்றால் ஈட்டியோ வாளோ போதாது.  நான் தரும் அறிவாயுதமும் உங்களுக்குத் தேவை. ஏனெனில் அறிவாயுதமே உலகின் அணையாத ஜோதியாகும்” என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் இந்த உரை அரசுக்கும் ஆட்சிக்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது. அரசியல்வாதியான அணிடஸும் அவன் நண்பனான கவிஞன் மெலிடஸும், கிரேக்க மக்களுக்கு அறிவை வழங்கி கொண்டிருக்கும் சாக்ரடீஸ், குமுறும் எரிமலையை விட கொந்தளிக்கும் கடலை விட ஆபத்தானவன் என்று கருதி, கிரேக்க மக்கள் அறிவைப் பெறுவதற்குள் சாக்ரடீஸை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சாக்ரடீஸை கைது செய்கின்றனர்.

இரண்டாம் காட்சி-நீதிமன்ற காட்சி

நீதிமன்றத்தில் அணிடஸ் சாக்ரடீஸைப் பார்த்து, “அரசாங்கத்திற்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்” என்று கேலி செய்கின்றான். சாக்ரடீஸோ தலை நரைத்த அணிடஸைச் சுட்டிக் காட்டி, “கடல் நுரை போல் நரைத்துவி்ட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே” என்று சிரிக்கின்றார். தன்னை அடக்க எண்ணிய மெலிடஸைப் பார்த்து, “என் தலையில் இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு, உன் தலையில் இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனை, அரசியல்வாதி அணிடஸின் தலையில் இருந்து பீறிடும் அதிகார ஆணவம், இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டத்தின் விளைவுதான் இந்த வழக்கு” என்று விளக்குகின்றார்.

உடனே மெலிடஸ், சாக்ரடீஸ் இப்படிப் பேசித்தான் கிரேக்கத்தின் வாலிபர்களை கெடுப்பதாக குற்றம் சாட்டினான். உடனே சாக்ரடீஸ், “ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா?” என்று வாதிடுகின்றார். மேலும், “நீங்கள் எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மை செய்யும் போது நான் ஒருவன் எப்படி அவர்களைக் கெடுக்க முடியும்?’ என்று எதிர்வாதம் புரிகின்றார். அணிடஸ் குறுக்கிட்டு “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்“ என்று கூற, சாக்ரடீஸ் “அதை இருண்ட வீட்டிற்கு ஒரு விளக்கு” என்றும் கூறலாமே? இளைஞர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையாத கருத்துகள், தரம் குறையாத கொள்கைகள்” என்று விளக்கினார்.  இதற்கு மேல் அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்று கருதிய நீதிபதி விஷம் அருந்தும் மரண தண்டனையை சாக்ரடீஸுக்குத் தீர்ப்பளிக்கின்றார்.

மூன்றாம் காட்சி – சிறைச்சாலைக் காட்சி

முப்பது நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விஷம் அருந்தவேண்டிய நாளில் தன் மனைவி எக்ஸ்சேந்துபியிடம், “நான் வீண் வாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்று கோபித்துக் கொண்டாயே. இப்போது பார். உன் கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். நீ மிகவும் பாக்கியசாலி. பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப் போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி. குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறினால் நான் உங்களைத் திருத்த முயன்றது போலவே, நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள். நேரமாகின்றது. காவலர்கள் கோபித்துக் கொள்வார்கள். சென்று வா” என்று கூறி தன் மனைவியையும், பிள்ளைகளையும் தேற்றி தன் நண்பன் கிரீடோவிடம் அவர்களை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்.

பிறகு சிறைக் காவலனிடம் விஷம் அருந்தும் முறையைக் கேட்டறிகின்றார். சிறைக் காவலன், “பெரியவரே, விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக் கொண்டே வரும். பிறகு படுத்து விட வேண்டும்” என்று விவரிக்கின்றான்.

இதைக் கேட்ட சாக்ரடீஸ் “ஆனந்தமான நித்திரை. கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை” என்று கூறி, காவலனிடம் விஷத்தை ஆனந்தமாகப் பெறுகிறார். நண்பன் கிரீடோ சாக்ரடீஸிடம், “நண்பா, சிறிது நேரம் பொறுத்துக் கூட சாப்பிடலாம். சிறைச்சாலையில் அதற்கு அனுமதி உண்டு” என்று கூற, சாக்ரடீஸோ, “இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக் கொள். அதற்குள் என் இதயம் வெடித்து இறந்து விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது? இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல. இந்த உடலைத்தான்” என்று கூறினார்.

 அவரின் வார்த்தைகளைக் கேட்ட கிரீடோ சாக்ரடீஸிடம், “ஏதென்சின் எழுச்சிமிகு சிங்கமே! எனக்குக் கடைசியாக ஏதாவது சொல்” என்று கேட்க, சாக்ரடீஸ் இறுதி உரை ஆற்றுகின்றார்.  

 “உன்னையே நீ அறிய வேண்டும். எதற்கு? ஏன்? எப்படி? என்று கேள்! அப்படிக் கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும் இந்த உலகத்தும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார்.

கிரீடோ சாக்ரடீஸிடம் ”உன் பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?” என்று கேட்க, “புதைப்பதாயிருந்தால் இந்நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளை என்னோடு புதைத்து மண்ணாக்கிவிடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கி தண்ணீரில் கரைத்து விடு” என்று வீரம் பொங்கக் கூறுகின்றார். இறுதியாக, “எனதருமை ஏதென்சு நகரத்துப் பெருமக்களே! உண்மையாகவே நான் இளைஞர்களைக் கெடுப்பதாக யாராவது நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். வருகிறேன். வணக்கம்” என்று கூறி கூறி விஷமருந்தி மரணத்தைத் தழுவினார் சாக்ரடீஸ்.


reference : https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s

வியாழன், 14 மார்ச், 2024

நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி ரத்தமின்றி

 

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!

விளக்கம்

   நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார். 

    கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.

    ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை.  உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. 

    தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

    இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.  முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

 

சனி, 9 மார்ச், 2024

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஏழாவது சுரம்

கதவை இழுத்து மூடியதால்

எட்டாவது சுரம்

ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை

ஆலாபனை நிறுத்திவிட்டுக்

கதவைத் திறக்க

ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்

எழுதி வைத்திருக்கலாம் வாசலில்

“எட்டாவது வண்ணத்திற்கு

இங்கு இடம் இல்லை“!

அதற்காக

உறங்க முடியாத வானம்

நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்

வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத்து துடித்த

எட்டாவது கிழமை

ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால்

மாதத்தின் மார்பு துடித்து

வெடித்திருக்காதா?

வள்ளுவ!

எட்டாவது சீர்

உன்னைத் தேடி வந்தபோது

என்ன செய்தாய்?

“போடுவதற்கு ஒன்றுமில்லை

போ”

என்று

வாசல் யாசகனை

வீடுகளில் விரட்டுவதுபோல்

விரட்டி விட்டாயா?

எட்டாவது சீர்

ஏன் உனக்கு தேவைப்படவில்லை?

யாப்பு

கூப்பிட்டு மிரட்டியதால்

ஏற்பட்ட அச்சமா?

ஏழு சீர்களிலேயே

ஒளி தீர்ந்து போனதா? – ஈற்று

முச்சீரடியில் உனக்கும்

மூச்சு முட்டியதா?

“காசும்” “பிறப்பும்”

உன்முன் வந்து கண்களைக்

கசக்கினவா?

“நாளும்” மலரும்”

நச்சரித்தனவா?

இல்லை

எட்டாவது சீர்தான்

அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்

கடைசிக் குறளின் காலடியே

எட்டாவது சீர் ஒன்று

தோளில் என்னைத் தூக்கிக்கொள்

என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்

கடைசி அலையின்

தாகத்தைத் தணிப்பது என்வேலை

இல்லை என்கிறாயா?

சிந்தனைகளை எண்ணியவனே?

நீ

சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு

எண்ணங்களே முக்கியம்

எங்களுக்கோ

எண்ணிக்கையே முக்கியம்

ஏழு சீர்களில்

சொன்னதே எதற்கு என்று

எண்ணிக் கொண்டிருக்கிறேன்

ஏன்

எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு

என்கிறாயா?

போதைப் “பொருளுக்கு”

அறத்தையும் இன்பத்தையும்

அவசரமாய் அடகு வைப்பவர்கள்

நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

வீடு தேடுகிற

வெறியில்

அறம் பொருள் இன்பத்தை

மிதித்துக் கொண்டு

ஓடுகிறவர்கள் நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

இலக்கணக்காரன்

இப்போது எப்படி ஏங்குகிறான்

தெரியுமா?

எட்டாவது சீருக்கு

இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்

சொல்லியிருப்பாயே!

வாய்ப்புள்ளவன்

அந்த ஒரு சீரில் சிந்தித்து

வரிகளைச் சமப்படுத்தட்டும்

என நான்தான்

விட்டு வைத்திருக்கிறேன்” என்கிறாயா?

என்னோடு

நிறைவடைந்து விடவில்லை

சிந்திக்க இடம்

இன்னும் உண்டு என்பதைக்

கோடி காட்டுகிறாயா?

உண்மையின்

உள்ளத்திலிருந்து பேசுபவர்

எவரோ அவரே – நீ

எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்

வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்

இப்போது உன் சிலை முன்

உண்ணாவிரதம் இருக்கின்றன

என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்

நீ வந்து இன்னொரு திருக்குறள்

எழுதும்போது

ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

விளக்கம்

உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமடளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

இசையின் சுரங்கள் ஏழு

இசையின் சுரங்கள் ஏழு. எட்டாவது சுரம் அனுமதிக்கப் படாததால் இசையின் தேவதை தன் ஆலாபனையை நிறுத்தி விட்டுக் கதவை திறக்க ஓடியிருப்பாள். ஏனெனில் இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை.

வானவில்லின் நிறம் ஏழு

வானவில்லின் நிறம் ஏழு. எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால் வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம். நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை என்பதை வானவில் உணர்ந்திருக்கும்.

வாரத்தின் நாட்கள் ஏழு

வாரத்தின் நாட்கள் ஏழு. எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

வள்ளுவத்தின் சீர் ஏழு

எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடி போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

ஏழு சீர்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் ஒளி தீர்ந்திருக்கலாம்.

அலகிடும் வாய்ப்பாடுகளான காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதல் அடியாக இருக்கின்றதோ என்று எண்ணினால் இல்லை. ஏனெனில், கடைசி குறளின் காலடி என்னைத் தோளில் வைத்துக் கொள் என்று கெஞ்சியிருக்க வாய்ப்புண்டு.

கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்க்க முடியாது என்பதுபோல   கடைசிக் குறளின் வேண்டுகோளை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

சிந்தனைகளை எண்ணிய வள்ளுவர் சீர்களை எண்ணவில்லை. ஆனால் நமக்கோ எண்ணிக்கைதான் முக்கியம். அவர் தந்த கருத்துகளை ஆராய்வதை விட்டு, ஏன் அவர் ஏழு சீர்களுக்குள் திருக்குறளை அமைத்திருக்கின்றார் என்று ஆராய்கின்றோம்.

ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

பணம் என்ற போதைக்கு அடிமையாகி அறத்தையும், இன்பத்தையும் அடகு வைக்கின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

வீடுபேறு தேடுகின்ற வெறியில் அறம், பொருள், இன்பத்தை எல்லாம் மதிக்காமல் மிதித்துக் கொண்டு ஓடுகின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

வாய்ப்புள்ளவர்கள் சீர்களைச் சமப்படுத்தட்டும் என்று வள்ளுவர் அதை விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்.

உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

மீண்டும் அவர் வந்து இன்னொரு திருக்குறள் படைக்கும்போது ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டும் என்று எட்டாவது சீர்கள் எல்லாம் திருவள்ளுவரின் சிலை முன் உண்ணாவிரதம் இருக்கின்றன.

என்று கவிநயத்தோடு இக்கவிதையைப் படைத்திருக்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

 

 

 

தமிழ்ஒளி – மீன்கள்

தமிழ்ஒளி – மீன்கள்

வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ – ஏழை

வாழும் குடிசையின் பொத்தல்களோ?

மாநில மீதில் உழைப்ப வர்கள் – உடல்

வாய்ந்த தழும்புகளோ அவைகள்?

செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம் – அங்குச்

சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?

சொந்த உரிமை இழந்திருக்கும் – பெண்கள்

சோக உணர்ச்சிச் கிதறல்களோ?

இரவெனும் வறுமையின் கந்தல் உடை தனில்

எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?

அருந்தக் கூழின்றியே வாடுபவர் – கண்ணீர்

அருவித் துளிகளோ வான்குன்றிலே?

காலம் உழுதும் எழுத்துக்களோ – பிச்சைக்

காரர் இதயத்தின் விம்மல்களா?

நீலக் கண்ணாடியின் கோட்டையிலே – மின்னல்

தெளிவை இறைத்திட்ட அற்புதமோ?

வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும் – இருள்

வேலிகட்டி யிங்கு வைத்திடினும்

பொய்யில் தொழிலாளர் எண்ண மெலாம் – அங்குப்

பொங்கிக் குமுறி இறைத்தனவோ?

விளக்கம்

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குமுறல்கள் எல்லாம், வானில் விண்மீன்களாக அமைந்திருப்பதாகக் கற்பனை செய்கின்றார் கவிஞர்.

  • கடல் போன்று விரிந்த வானத்தில் தோன்றுகின்ற முத்துகளாக,
  • ஏழைகளின் குடிசையில் இருக்கின்ற ஓட்டைகளாக,
  • உழைப்பவர்களின் உடலில் உள்ள தழும்புகளாக,
  • உரிமை இழந்த பெண்களின் உணர்ச்சிச் சிதறல்களாக,
  • உணவின்றி வாடுபவர்களின் கண்ணீர்த் துளிகளாக,
  • வாழ வழியின்றி பிச்சையெடுப்பவர்களின் விம்மல்களாக

விண்மீன்கள் காணப்படுவதாகக் கவிஞர் காட்சிப்படுத்துகின்றார். இதன் மூலம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். கோடைகாலத்து வெயில் போல அரசாங்கம் துன்புறுத்தினாலும், தங்கள் வாழ்க்கை இருளாகக் காட்சியளித்தாலும் பொய்யாக உழைக்கத் தெரியாதவர்கள் தொழிலாளர்கள். அவர்களின் எண்ணங்கள் எல்லாம் வானில் பொங்கி இறைந்துள்ளன என்றும் பாடுகின்றார். தங்கள் துன்பங்களுக்கு அரசால் என்றாவது ஒருநாள் முடிவு கிடைக்கும் என்ற தொழிலாளர்களின் எண்ணங்களை இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

 


வியாழன், 29 பிப்ரவரி, 2024

சிறுத்தையே வெளியில்வா - பாரதிதாசன்

சிறுத்தையே வெளியில்வா

பாரதிதாசன்

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!

சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்

பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்

புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்

வையம் ஆண்ட வண்டமிழ் மரபே

கையிருப்பைக் காட்ட எழுந்திரு!

குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?

மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!

பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!

மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!

கைக்குள திறமை காட்ட எழுந்திரு!

வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!

வாழ்க திராவிட நாடு!

வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

பாடல் விளக்கம்

தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் இப்பாடலில் வலியுறுத்துகின்றார். இளைஞர்களைப் பார்த்து,

  • “இதுவரை அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டன. அதனால் சிறுத்தை போன்ற இளைஞர்களே! வெளியே வாருங்கள்! எலி என நினைத்து இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாக புறப்படுங்கள்!
  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்!
  • சிங்கம் போன்ற இளைஞர்களே! உங்கள் சிந்தனைகளை, தாய் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கச் செயல்படுத்துங்கள்! உங்கள் அறிவுக் கண்களைத் திறந்து பாருங்கள்!
  • தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா? 
  • வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள், பொய்களை உரைத்து, அறிவை மழுங்கச் செய்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து, நாட்டைக் கைப்பற்றி விட்டனர். 
  • நம் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் அதைக் கேட்டுக் கொண்டு இருக்கலாமா? உங்கள் மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!
  • மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். அப்படிப்பட்ட வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே! உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்!
  • கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து இணைத்து வாருங்கள்! அதன் மூலம் தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!” என்று இளைஞர்களைத் தம் பாடல் மூலம் வீறு கொள்ளச் செய்கின்றார் பாரதிதாசன்.

 


திங்கள், 29 ஜனவரி, 2024

ஆர்.சூடாமணி - அந்நியர்கள்

 

ஆர்.சூடாமணி 

 அந்நியர்கள்

"வா...வா" என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணறவெத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.

"ஹலோ ஸவி, என்ன ப்ளெசன்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷ னுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே" என்று முகமலர்ச்சி யுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

"எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டே ஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது" என்றாள் ஸவிதா.

ஸௌம்யா சிரித்தாள். "அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு."

இரண்டு நிமிஷங்கள் வரையில் ஒரு மௌனமுகங்களாய்ச் சகோ தரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமய மான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், "எப்படியிருக்கே? உங்காத்துக்கார், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?" எனபதற்கு மேல் உரை யாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், "நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!" என்று சிரித்தார்.

சௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம். புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.

"இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறேதும் வித்தியாசமில்லே" என்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக்கொண்டாள். 'காலம் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!' என்று சொல் வது போல் இருந்தது, அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டு விடமுடிகிறது! சௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரிய வில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோர் ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இரு வரும் ஒன்றாய் வாழ்ந்துகொண்டிருந்தது போலவே தோன்றியது.

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களி லிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்குகொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத் துக்கு திரும்பிவிட்டார்கள்.

அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம் யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக்கொள்வ தாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்கா விடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண் டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற் போல் இருந்தது. முதல் நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச் சில் உடைப்பெடுத்துக் கொண்டன. "அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!" என்று ஸவிதாவின் கணவர் பரிக சிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றாள் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது. ஒரு நாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன் றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக் காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழை கள் இயல்பாய் கலந்துக்கொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியை விடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப் பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்துகொள்ளல்.

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும் போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலை விட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக் கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக் கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதாவுக்கு நாற்பது வயதாகப் போகிறது. சௌம்யா அவளை விட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

வைத்தியமும் நடந்தது, ஒரு கடமை போல.

ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். "உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே."

"உன் கைபாகந்தான்!இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?"என்று ஸௌம்யா சிரித்தாள்.

தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தார்கள்.அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.

"இங்கே யாருக்கும் இது பிடிக்கறதில்லே.இப்போத்தான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே"என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.

மாலை நாலரை மணி இருக்கும்.ஸவிதாவின் மூத்த மகன் ராஜு, பத்தொன்பது வயதான எம்.எஸ்ஸி முதல் ஆண்டு மாணவன், கல்லூரிலிருந்து திரும்பி வந்தான்.

"அம்மா,நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்ஸி முடிச்சுட்டுப் போற ஸ்டூடன்ஸுக்கெல்லாம் 'ப்ரேக்-அப்'பார்ட்டி நடக்கிறது. நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன்.ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்"என்றான்.

"சரி"என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜு? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?"

"ஆகணும்னு ஒன்னுமில்லே சித்தி.ஆனா எனக்கு ஆசையா யிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா."

அவ‌ன் அங்கிருந்து சென்ற‌ பின் ஸௌம்யா."இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?" என்றாள்.

"ஆமாம்."

"நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?"

"எதுக்குச் சொல்லணும்?"

"இப்ப‌டியெல்லாம் வீட்டை விட்டு வெளியே த‌ங்க‌ ஆர‌ம்பிச்சு தான் இந்த‌ நாள் ப‌ச‌ங்க‌ எல்லா வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் க‌த்துக்க‌றா. இல்லையா?சுருட்டு,க‌ஞ்சா,குடி அப்புற‌ம் கோ-எட் வேற.... நான் இப்போ ராஜுவை ஏதும் ப‌ர்ச‌ன‌லாய்ச் சொல்ல‌லே."

"புரியற‌‌து ஸௌமி.ஆனா கால‌ம் மாற‌ர‌தை நாம் த‌டுத்து நிறுத்திட‌ முடியுமா?

"குழந்தை‌க‌ளை நாம் த‌டுத்துக் காப்பாத்த‌ல‌மே?"

"உல‌க‌ம்னா இப்ப‌டியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த‌ நாள் ப‌ச‌ங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல் ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்க‌றது அவா கையில‌ இருக்கு."

"பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லேங்கற‌யா?"

"கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்."

"குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?"

"தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?"

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடறலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கணநேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

"இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு, போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பாத்துட்டியா?"

"இன்னும் பார்க்கலே, போகலாம்."

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப்பற்றி விவாதித்தார்கள். ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. "இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத் திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமா யிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?" என்றாள்.

"நாம் அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்."

"முதல்லே விஷத்தை கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்."

அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.

ஸவிதாவின் கண்கள் விரிந்தன. "அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதைகூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?"

"வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்னு தான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்ப வானும், சும்மா ஆசைக்கு, படிச்சுப் பாரேன்."

படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

"ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமானநடை."

"நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?"

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, "நல்ல கதைதான், ஆனா... நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு" என்றாள்.

"நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கறது என் லட்சியம்."

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம் போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவி விட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது. அப்பாடா! எல்லாம் முன்புபோல் ஆகிவிட்டது.

ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், "ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்துகொண்டது அவ்வளவுதானா?

"ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப் படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறயே, ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?" என்றார் அவள் கணவர்.

"பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?"

"ஓரா" என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்குமட்டும் மகிழ்ச்சியாயிருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச் சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்தப் பிரத்தியேக அகராதியில் 'ஓரா' என்றால் ஆமாம் என்று பொருள், திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

"சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?" என்றாள் ஸவிதா.

அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறை கள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப் பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக் கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பொருமை ததும்பியது.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்கவேண் டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகி லிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம் பிடிக் கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத் தலைவி நிதி திரட்டிக்கொண்டிருந்தாள். "உங்களாலானதைக் கொடுங்க" என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். "நீங்க...?" என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒரு தரம் சகோதரியை ஏறிட்டுவிட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, "பாவம், இல்லே அந்தப் பையன்?" என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

"என்ன ஸௌமி பேசாமலிருக்கே?"

"என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கறியா? ஆனா .."

"ஆனா...?"

"இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்னை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது, அதனால், போட்டு என்ன பிரயோசனம்?"

"அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்."

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிகையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.

"குட்ரீ அதை என்கிட்ட!"

"போடா தடியா, நான் பாத்துட்டுத்தான்"

"அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டா தலை வெடிச்சுடுமோ?"

இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபா வுக்குப் பின்னிருந்து வேகமாய்த் திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன் கண் ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான 'கட்கிளாஸ்' ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழே விழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. "கடன்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?" என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.

பையன் தலை கவிழ்ந்தது. "ஸாரிம்மா!" வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள். ஸவிதாவின் படபடப்பு அடங்க சிறிது நேரம் ஆயிற்று, ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பாரேன் ஸௌமி, நம்ம அப்பா அம்மா கொடுத்ததுன்னு நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?"

ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.

"இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந் திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா?"

"பத்திரமாய்த்தான் இருக்கு."

"இதேமாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்?"

"வச்சிருந்தேன்"

"அப்படின்னா?"

"மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்."

ஸவிதா அதிர்ந்து நின்றாள்.

என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?”

ஏன் வரக்கூடாது?”

அப்பா அம்மா நினைவாய்...”

அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”

மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.

நான் போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வெச்சுட்டு வா.”

ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப் போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப் போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடி வந்து உட்கார்ந்துகொள்வதிலும் 'இது அவளுக்குப் பிடிக்கும்' என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், 'அடுத்த சந்திப்பு எப்போதோ?' என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டை யடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்துகொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம் புக்கு இப்பாலேயே இருக்கவேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.

அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால்மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், ”அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! 'நான்தான் ஸௌம்யா' என்று நெற்றியில் அச்சடித்துக்கொண்டு வா என்று எழுதியிருந் தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்தபோதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேம்டியதுதான்.

தாம் இனி இப்படி வருஷக்கண்க்காகப் பிரிந்திராமல் ஆண்டுக் கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக்கொண்டார்கள்.

"நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!" என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் தண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப் பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல்,மஞ்சளில் அகல மான கோபுரக் கரை.

"எதுக்கு இதெல்லாம் ஸவி? "

"பேசப்படாது,வைச்சுக்கோ."

"உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?"

"இதோ எனக்கும்."

மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக் கரை. மீண்டும் புன்னகைகள் பேசின.

நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம்.. சாமான் கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.

"கிளம்பிட்டாயா ஸௌமி? " ஸவிதாவின் குரல் கம்மியது.

" நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி? "

ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. "கட்டாயம்."

"எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறத்துக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்."

ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யா. ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"ஆனா இங்கேபூஜை அறையே இல்லையே? " என்றாள் தொடர்ந்து.

"இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?"

"நம்பிக்கை இருந்தால்' னா? உன் நம்பிக்கை அந்தமாதிரின்னு சொல்றயா? " திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. " அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லேன்னு அர்த்தமா?"

"நான்...நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடை யாது." ஸவிதாவுக்குச் சங்கடம் மேலோங்கியது. " இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?"

"என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்பிராயம் இல்லையா?"

"இதை ஒரு பெரிய விஷயம்னு நான நினைக்கலே."

ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களு டைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்தி மயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாங்காலமானால், ' போய்ச் சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி' என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். 'வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக் கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்' என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

"தெய்வ நம்பிக்கையை இழக்கறமாதிரி உனக்கு அப்படி என்ன அநுபவம் ஏற்பட்டுது ஸவி?"

"அந்த நம்பிக்கையை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அநுபவம் நமக்கே ஏற்பட்டால் தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்னைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்னையாய் எனக்குத் தோண லேன்னு வச்சுக்கோயேன்."

"எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய் வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது."

பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவ்ற்றில் பதைப்பு, மருள், ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை 'இவள் யார்?' என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.

ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள் தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவான வைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு?

ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் கடைசியில் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டு மல்ல.

அன்பு ... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதனாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத்தான் அது இருக்கிறது.

மன்னிக்கவும், ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத் தான் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.

"நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வாணாமா? வாசலில் டாக்ஸி ரெடி" என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, "உங்க பேச்சுக்கு ஒரு 'தொடரும்' போட்டுட்டு வாங்கோ, அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக் கலாம்" என்றார் சிரித்துக்கொண்டே.

"இதோ வரோம், வா ஸௌமி!" ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக்கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.