சனி, 13 மே, 2023

பராபரக் கண்ணி (11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

 

குணங்குடி மஸ்தான் சாகிபு

பராபரக் கண்ணி

(11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

முதல் பத்துப் பாடல்களின் விளக்கம்

 https://arangameena.blogspot.com/2021/10/blog-post_48.html

 11. மந்திரத்துக்கு எட்டா மறைப் பொருளே மன்னுயிரே

சேர்ந்த எழு தோற்றத்தின் சித்தே பராபரமே

விளக்கம்

எந்தவிதமான மந்திரத்திற்கும் எட்டா மறைபொருளாக விளங்குபவனே! நிலை பெற்ற உயிராக இருப்பவனே! உலகத்தின் எழுவகைப் பிறவிகளிலும் நிறைந்த சித்துப் பொருளே! பராபரமே!

12. தனியேனுக்கு ஆதரவு தாரணியில் இல்லாமல்

அனியாயம் ஆவதும் உனக்கு அழகோ பராபரமே

விளக்கம்

இந்த உலகத்தில் யாருடைய ஆதவும் இல்லாமல் தனியா இருக்கின்ற நான் உன் அருளைப் பெறாமல் அநியாயமாய் அழிவது உனக்கு அழகாகுமோ! பராபரமே!

13. ஓடித் திரிந்து அலைந்து உன்பாதம் காணாமல்

வாடிக் கலங்குகிறேன் வராய் பராபரமே

விளக்கம்

எங்கெங்கோ ஓடித் திரிந்து அலைந்து உன் திருவடியைக் காணாமல் வாடுகின்றேன். நீ வந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். பராபரமே!

 

14. தூராதி தூரம் தொலைத்து மதி உன் பாதம்

பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே

விளக்கம்

கடக்க வேண்டிய தூரங்களை எல்லாம் கடந்து, என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் அச்சம் கொண்டேன். பராபரமே!

15. தேடக் கிடையாத் திரவியமே தேன் கடலே

ஈடுனக்கு உண்டோ இறையே பராபரமே

விளக்கம்

தேடியும் கிடைக்காத திரவியம் போன்றவன் நீ! உன்னை நம்பியிருக்கும் அடியவர்களுக்கு தேன் கடலாக விளங்குபவன் நீ! இவ்வுலகில் உனக்கு ஈடாக ஒருவம் இல்லை இறைவனே! பராபரமே!

16.அரிய பெரும்பொருளே அன்பாய் ஒருவார்த்தை

பரிபூரணமாய்ப் பகராய் பராபரமே

விளக்கம்

அருமையான பெரும்பரம்பொருளே! அன்போடு என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் மகிழ்வேன்! பராபரமே!

17.  ஐயோஎனக்கு உதவும் ஆதரவை விட்டுவிட்டுத்

தையலரைத் தேடித் தவித்தேன் பராபரமே

விளக்கம்

அந்தோ! அடியேனுக்கு உதவி செய்கின்ற உன்னை வணங்காமல், பெண்களைத் தேடிச் சென்று பரிதவித்தேன்! பராபரமே!

18. எத்திசையும் நோக்கி விசையாத் திருக் கூத்தாய்

வித்தை விளையாட்டு விளைப்பாய் பராபரமே

விளக்கம்

எந்நத் திசையைப் பார்த்தாலும் பொருந்தாத திருக்கூத்தாய் வித்தை செய்யும் விளையாட்டைச் செய்கின்றவனே! பராபரமே!

19. எப்பொழுது முன்பதத்தில் என் கருத்தே பெய்துதலுக்கு

இப்பொழுதே கைப்பிடித்தான் இறையே பராபரமே

விளக்கம்

எக்காலத்திலும் உன்னுடைய திருவடிகளில் என்னுடைய மனம் பதிவடைய இப்போதே அடியேனைக் கைப்பிடித்து அருள வேண்டும்! பராபரமே!

20. வாதுக் கடாவரும் வம்பரைப்போலே் தோஷி மனம்

ஏதுக் கடாவதியான் எளியேன் பராபரமே

விளக்கம்

துன்பம் செய்யும் தொழில்களைச் செய்கின்ற வீண் வம்புக்காரர்களைப் போல என் மனம் எதை விரும்புகிறது? எதை நாடுகின்றது எனத் தெரியவில்லை. நான் எளியவனாக இருக்கின்றேன். நீ அருள் செய்வாய்! பராபரமே!

21. கண்ணே மனோன்மணியே கண்பார்வைக்கு எட்டாத

விண்ணடங்கா வெட்ட வெளியே பராபரமே

விளக்கம்

என் கண்ணாக விளங்குபவனே! மனோன்மணியே! கண்களின் பார்வைக்கு எட்டாமல் இருக்கும் ஆகாயத்திற்கு அடங்காத வெட்ட வெளியாக நிற்பவனே! பராபரமே!

22. அடக்கவரி தாமாயி லைம் பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பெனக்குப் பகராய் பராபரமே

விளக்கம்

ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது என்பது மிகக் கடினம். அதனால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவை எனக்கு அருள வேண்டும்! பராபரமே!

23.எத்தவங்கள் செய்தாலும் இன்பமுடன் துன்பத்தை

முத்தர் ஒருபோதும் உற்றார் பராபரமே

விளக்கம்

ஆன்மா முக்திநிலை அடைந்த முத்தர்கள் எப்படிப்பட்ட தவங்களைச் செய்தார்களானாலும் உன்னுடைய திருவடிகளை ஒருநாளும் மறக்க மாட்டார்கள். பராபரமே!

24. சொல்லுக்கு இணங்காத சூத்திரத்தைப் பார்த்திருக்கு

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

விளக்கம்

வார்த்தைகளுக்கு அடங்காத உம் மறைபொருளை அறிவது ஒன்றே எனக்கு இரவும் பகலும் விருப்பமாக இருக்கின்றது! பராபரமே!

25. நாற்றச் சடிலமதை நம்பார் முகத்திருக்கப்

பூத்து மலர்ந்திருக்கும் பூவே பராபரமே

விளக்கம்

நாற்றம் வீசுகின்ற உடல் நிலையற்றது. இதை உணர்ந்து உன்னை அறிந்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை இன்பமடையும். அப்படிப்பட்டோர் முகரக்கூடிய மலர்ந்திருக்கும் பூவாக இருக்கின்றவனே! பராபரமே!

26. சோற்றுப் பொதியைச் சுமந்தே திரிந்தலைந்தே

ஆற்றாமல் நின்று களைத்தழுதேன் பராபரமே

விளக்கம்

சோற்றை மட்டுமே விரும்புகின்ற இந்த உடலைச் சுமந்து திரிந்து அலைந்து, வாழ்வின் உண்மைப் பொருளை அறியாது களைத்து அழுதேன்! பராபரமே!

27. காற்றுத் துருத்திதனைக் கல்லா யணைந்திருக்கச்

சூத்திரமாய் நின்றாய் சுழியே பராபரமே

விளக்கம்

காற்றை உள்வாங்கிக் கொண்டு உயிர் பிழைத்திருக்கும் உடலை, கல் போன்று நிலையானது என்று எண்ணி நான் அதைச் சேர்ந்திருந்தேன். நீ அதன் உட்பொருளாக நின்றிருந்தாய்! பராபரமே!

28. கோலத் திருவடிவு கோதையர்கள் ஆசையினால்

ஆலைக் கரும்பு போலானேன் பராபரமே

விளக்கம்

பெண்களின் மீது கொண்ட ஆசையினால் அழகிய என்னுடைய வடிவானது ஆலையில் இட்ட கரும்பு போலச் சக்கையானது! பராபரமே!

29. கேளாயோ என்கவலை கேட்டிரங்கி அடிமைதனை

ஆளாயோ வையாபா லானேன் பராபரமே

விளக்கம்

நீ என்னுடைய துன்பத்தைக் கேட்க மாட்டாயா? அவ்வாறு கேட்டு மனம் இரங்கி அடிமையாகிய என்னை ஆண்டு அருள மாட்டாயா? நான் உன்பாற்பட்டவன் என்பதை உணர மாட்டாயா? பராபரமே

30. எத்தனைதான் குற்றம் எதிர்த்து அடிமை செய்தாலும்

அத்தனையும் நீ பொறுப்பது அழகே பராபரமே

விளக்கம்

நான் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும் அவ்வளவு குற்றங்களையும் நீ பொறுத்துக் கொள்வது அழகாகும். பராபரமே!

31. அல்லல் வியைால அறிவு கெட்டல் ஆன்மாவாய்

நெல்லும் பதரும் என நின்றேன் பராபரமே

விளக்கம்

நான் துன்பம் விளைவிக்கின்ற நல்வினை தீவினைகளால் அறிவின் கேட்டை அடைந்து ஆன்மாவாக, நல்லும் பதரும்போல நிலை கெட்டு இருந்தேன்! பராபரமே!

32. சொல்லரிய ஞானச் சுடரே ஒரு வார்த்தைச்

செல்வம் பொழிந்திட நீ செப்பாய் பராபரமே

விளக்கம்

சொல்வதற்கு அருமையான ஞான அழகாக விளங்குபவனே! ஒரு வார்த்தையால் என் செல்வம் செழிக்கும்படித் திருவருள் செய்தால் மகிழ்வேன்! பராபரமே!

33. நித்தம் உனைத் தொழா நிர்மூடனாயிருக்கும்

பித்தனாய் ஏன் காண் பிறந்தேன் பராபரமே

விளக்கம்

அனுதினமும் உன்னை வணங்காத நிர்மூடனாயிருக்கும் பித்துக் கொண்டவனாய் நான் ஏன் பிறந்தேன்! பராபரமே!

34. உற்றார்களாலும் உறவின் முறையராலும்

பெற்றார்களாலும் உனைப் பிரிந்தேன் பராபரமே

விளக்கம்

பாச பந்தத்தில் கட்டுப்பட்டு, என் சுற்றத்தார்களாலும், உறவினர்களாலும், என்னைப் பெற்றவர்களாலும் உன்னைப் பிரிந்திருந்தேன்! பராபரமே!

35. ஏழை முகம் பார்த்து எளியேனை எப்பொழுதும்

அழாமல் ஆண்டருள் என்னழகே பராபரமே

விளக்கம்

அழகின் வடிவமாக விளங்குபவனே! நீ ஏழையாகிய என்னுடைய முகத்தைப் பார்த்து அடியேனை எக்காலத்திலும் தீவினையில் அழிக்காமல் ஆண்டருள வேண்டும்! பராபரமே!

36. பாவிஉடலெடுத்துப் பாதகனாய் யான் பிறந்துஉள்

ஆவி கெடுவதுனக் கழகே பராபரமே

விளக்கம்

பாவமாகிய இந்த உடலை நான்அடைந்து உயிருக்குத் தீவினை தரும் செயல்களால் நான் மடிந்து போவது உனக்கு அழகாகுமோ? பராபரமே!

37.வாராயோ என்னிடத்தில் வந்தொருக்கால் என்றன்முகம்

பாராயோ சற்றே பகராய் பராபரமே

விளக்கம்

நீ என்னிடத்தில் எழுந்தருளி வரமாட்டாயோ? வந்து ஒருமுறை என் முகம் பார்த்து நல்வார்த்தைகளைக் கூற மாட்டாயோ? அதை நீயே சொல்லிவிடு! பராபரமே!

38. பார்க்கப் பலவிதமாய்ப் பல்லுயிருக்கு உள்ளிருந்தும்

ஆர்க்கும் தெரியால் ஆனாய் பராபரமே

விளக்கம்

இந்த உலகில் உலாவிக் கொண்டிருக்கும் பல ஆன்மாக்களுக்குள் நீயே நிறைந்திருக்கிறாய் என்ற செய்தியை யாருக்கும் தெரியாதபடி வைத்திருக்கின்றாய்! பராபரமே!

39.ஆனாலும் பொல்ல் தரும் பாவியாக உடல்

எனோ எடுத்தேன் எந்தாய் பராபரமே

விளக்கம்

என்னுடைய தந்தையாக விளங்குபவனே! பொல்லா கொடும்பாவியாக நான் ஏன் இந்த உடலைச் சார்ந்து பிறவி எடுத்தேன் என்று விளங்கவில்லை! பராபரமே!

40.கர்ப்பூர தீபக்கனல் ஒளிபோல் காட்சிதர

முப்பாழும் பாழாய் முடித்தாள் பராபரமே

விளக்கம்

கற்பூரத்தில் உண்டாகும் ஒளிபோல எனக்கு உன்னுடைய திருக்காட்சியை அருளி, ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலத்தையும் அழித்து என்னை ஆட்கொள்ள வேண்டும்! பராபரமே!

 

வெள்ளி, 12 மே, 2023

திருஆசிரியம் – நம்மாழ்வார்

 

திருஆசிரியம் – நம்மாழ்வார்

பாடல் 1

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்
பீதகவாடை முடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து  சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப  மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தி தனிப் பெரு நாயக!
மூவுலகளந்த சேவடியோயே!

விளக்கம்

மேகங்களை இடுப்பில் கட்டி, சூரியனைத் தலையிலே வைத்துக்கொண்டு, சந்திரனை அணிந்து, நட்சத்திரங்களாகிய பல ஒளிபிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்று ஒளிவிடும் பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று உள்ளது. அந்த மலை, வருணனுடைய கைகளின் மேலே படுத்துக் கொண்டிருப்பதுபோல் உள்ளது. பல்வேறு ஆபரணங்களை அணிந்து, உதடுகளும், திருக்கண்களும் சிவந்திருக்கும்படியாக, திருமேனியில் பச்சை நிறம் ஒளிவிடும்படியாக, எதிரிகளை அழிப்பதில் நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களையுடையவனாக, கவிழ்ந்திருக்கும் தலைகளை உடையவனுமான ஆதிசேஷன் என்கின்ற பாம்பின் படுக்கையில் ஏறிப் படுத்திருப்பவனாக, அலை வீசும் திருப்பாற்கடலின் நடுவே உலகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோகநித்திரையில் படுத்துள்ளான் எம் பெருமானாகிய திருமால். அந்த எம்பெருமான் சிவன், பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுடைய கூட்டம் கைகூப்பி வணங்கும்படி படுத்திருக்கின்றான். அவன் ஒப்பற்றவன், எல்லோரையும் விடப் பெரியவன்! மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவன்!

பாடல் 2

உலகுபடைத்துண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

விளக்கம்

அனைத்து உலகங்களையும் படைத்து, பின்பு ஊழிக்காலத்தின்போது அவற்றை விழுங்கியவன் எம்பெருமான். அவனுடைய திருவடிகளாகிய தாமரைப் பூவை அணிவதற்காக என் ஆன்மா உருகி விழுகின்றது. அவன் மீதான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன, பக்தியினால் ஏற்படும் இனிமை என்ன, இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான மேன்மையை விட்டு அல்லல்படுபவர்கள் அலையட்டும். செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட மேலான வீடுபேற்றைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய பெரியோர்களுடைய எண்ணம் இவைகளைப் பெற நினைப்பதில்லை. மாறாக, எம்பெருமானின் அன்பினை எதிர்பார்த்து நிற்பர்.

பாடல் 3

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்    
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே

விளக்கம்

மூன்று உலகங்களையும் நல்வழியில் செலுத்துபவன். அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து வணங்கக்கூடிய தகுதி கொண்டவன். வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் புகழையுடையவன். தன் ஆணையை மிக நன்றாக செயல்படுத்துபவன். பிரம்மா, உருத்திரன், இந்திரன் ஆகிய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன். ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான். மலை போன்ற உயரமான அலைகள் மோதுகின்ற குளிர்ந்த கடலை, மிகப்பெரிய மந்திர மலையில் சுற்றிக் கடைந்த எம்பெருமானை அடைய வேண்டுமெனில் அவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்கே அப்பேறு கிடைக்கும்.

பாடல் 4

ஊழிதோறூழி ஓவாது வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே

விளக்கம்

அனைத்து உலகங்களும், அனைத்து விலங்குகளும் வணங்கத்தக்கவன். உலகம் அழிந்திருந்த காலத்தில், கணக்கிலடங்காத உயிரினங்களுக்கெல்லாம் பெறுவதற்கு அரியவனாய் இருந்தவன். அந்நிலையில் இவ்வுலகில் சிறந்த தேவதையான பிரம்மாவையும், மூன்று கண்களையுடைய உருத்திரனையும், பல தேவதைகளையும் படைத்து, அவர்களுக்குண்டான பணிகளுக்கு ஆற்றலைக் கொடுத்து, மூன்று உலகங்களையும் படைத்தஎம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் இடைவிடாமல் “வாழி” என்று நாம் தொழும் பாக்யம் கிடைக்க வேண்டும்.

பாடல் 5

மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே

விளக்கம்

உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி பூமி முழுவதையும் கைக்கொண்டாய். அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை பிரம்மாவின் உலகமானது அதிசயப்பட்டு மகிழும்படி செய்தாய். தாமரைப்பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தது போல் இருக்கும் திருக்கண்களோடு கூட, சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய், பரந்த ஆயிரம் சூரியர்கள் உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும், கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத்தோள்களையும் உடையவனாய், எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானுக்கு இவ்வுலகம் அடிமையாகும்.

பாடல் 6

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே

விளக்கம்

எம் பெருமானாகிய நாராயணன், இந்தப் பூமியை உண்டாக்கி, வராக அவதார காலத்தில் பூமியைப் பிரளயத்திலிருந்து காப்பாற்ற,ப அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்தான்.  பின்பு வாமன அவதாரத்தில் பூமியை அளந்து, அதற்கு மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்கின்றவன். அவனை விட்டு வேறு தெய்வங்களை ஆதரிப்பது என்பது, பெற்ற தாயிருக்க அவளைவிட்டு ஒரு பலகையை நீராட்டுவது போலிருக்கிறது.

பாடல் 7

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே

விளக்கம்

குளிர்ந்த சந்திரனைத் தலையில் வைத்திருக்கும் உருத்திரனையும், படைப்புக் கடவுளான பிரம்மாவையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், அனைத்து உலகங்களையும், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும், உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும், தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆல் இலையின் மேல் படுத்திருக்கின்ற, அளவிட முடியாதவனாக இருக்கின்ற திருமாலைத் தவிர, வேறு பெரிய ஒரு  இறைவன் இல்லை.

 

 

முக்கூடற்பள்ளு - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

முக்கூடற்பள்ளு

இப்பகுதி மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தாங்கள் வழிபடு தெய்வத்தை  முன்னிறுத்தி ஒருவரை ஒருவர் பழித்து ஏசுவதை விவரிக்கின்றது. மூத்த பள்ளி திருமாலை வழிபடுபவள். இளைய பள்ளி சிவனை வழிபடுபவள்.

பாடல்

சாதிப்பது உனக்குவரும்  மருதூப்பள்ளி- நரிதான்

பரியாய்ச்சா தித்தான்உங்கள் சம்புவல் லோடி

பேதிக்கச்சா திக்கவாராய் முக்கூடற்பள்ளி- கல்லைப்

பெண்ணாகச்சா தித்தானுங்கள் கண்ண னல்லோடி. 161

விளக்கம்
“சாதிக்கின்ற தந்திரம் எல்லாம் உனக்குத் தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் அல்லவா?” (மாணிக்க வாசகருக்காக நரியைப் பரி ஆக்கியது) என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “கல்லையும்  பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் அல்லவா?”  (கல்லாய்க் கிடந்த அகலிகையை இராமன் பெண்ணாக மாற்றியது) என்று கேட்கின்றாள்.

பாடல்

மங்கையொரு பங்கிருக்க யோகியென்றுதான்-கையில்

மழுவேந்தி நின்றானுங்கள் மத்த னல்லோடி

கொங்கைதனில் நாச்சியாரைச் சங்கையில்லாமற்-பண்டு

கூடிநெய்யிற் கையிட்டானுங் கொண்ட லல்லோடி. 162

விளக்கம்

“மங்கை ஒருத்தித் தன் ஒரு பாகத்திலே இருக்க, தான் யோகி என்று சொல்லிக் கையில் மழுவை ஏந்தி நிற்பவன் உங்கள் ஊமத்தை மாலை அணிந்த சிவபெருமான் அல்லவா” என்று மூத்தவள் கேட்கின்றாள். அதற்கு இளையவள் “நாச்சியாருடன் உடலும் உயிருமாகக் கலந்து விட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் முன்னொரு காலத்தில் மனம் துணிந்து நெய்யிலே கையிட்டவன் உங்கள் மேக வண்ணனாகிய திருமால் அல்லவா” என்று கேட்கின்றாள்.
பாடல்

காமனை மருகனென்று எண்ணிப்பாராமற்-காய்ந்து

கண்ணிலேறு பட்டானுங்கள் கர்த்தனல் லோடி

மாமனென்று பாராமல்முன் கஞ்சனைக்கொன்றே-கண்கள்

மாறாதேபூப் பட்டானுங்கள் மாயனல் லோடி.163

விளக்கம்

“மன்மதனைத் தன் மருமகன் என்று கூட எண்ணிப் பார்க்காமல் முதலில் கோபித்துக் கொண்டு, கண்ணிலே நெருப்பைக் காட்டியவன் உங்கள் சிவன் தானே?” என்று மூத்தவள் கூற, “மாமனெ்றும் பாராமல் முன்னாளில் கம்சனைக் கொன்றே கண்களின் என்றும் மாறாத பூ விழப் பெற்றவன் மாயவனாகிய உங்கள் கண்ணன் தானே” என்று இளையவள் சாடுகின்றாள்.
பாடல்

மாதொருத்திக் காசைப்பட்டுப் பொன்னின் மயமாம்-பனி

மலையேறிப் போனானுங்கள் மத்த னல்லோடி

காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால்-அன்று

கடலேறிப் போனானுங்கள் கண்ண னல்லோடி. 164

விளக்கம்

“பெண் ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “காதல் கொண்டு தம்பியோடு சீதை கொருட்டாக அந்நாளில் கடல் கடந்து போனவன் உங்கள் இராமன்” என்று இளையவள் ஏசுகின்றாள்.

பாடல்

தான்பசுப்போல் நின்றுகன்றைத் தேர்க்காலில் விட்டே-சோழன்

தன்மகனைக் கொன்றானுங்கள் தாணு வல்லோடி

வான்பழிக்கு ளாய்த்தவசி போல மறைந்தே-நின்று

வாலியைக் கொன்றானுங்கள் மாய னல்லோடி. 165

விளக்கம்

“தான் பசு போல நின்று கொண்டு தன் கன்றைத் தேர்க்காலில் விழ விட்டு, அதனால் சோழ மன்னனின் மகனைக் கொன்றவன் உங்கள் சிவனே” என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “பரிய பழிக்கு உள்ளாகித் தவவலிமையுடைவன் போல மறைந்து நின்று வாலியைக் கொன்றவன் உங்கள் திருமால்” என்று கூறுகின்றாள்.

பாடல்

வலிய வழக்குப்பேசிச் சுந்தரன் வாயால்-அன்று

வையக்கேட்டு நின்றானுங்கள் ஐய னல்லோடி

புலிபோல் எழுந்துசிசு பாலன்வையவே-ஏழை

போலநின்றான் உங்கள்நெடு நீல னல்லோடி. 166

விளக்கம்

“சுந்தரர் திருமணத்தில் வலிய வந்து வழக்குப் பேசிச் சென்று அன்று அவன் வாயால் திட்டுவதைக் கேட்டு நின்றவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, ”சிசுபாலன் புலி போல எழுந்து திட்டவே, (உருக்குமணியை மணந்தபோது கண்ணனை சிசுபாலன் திட்டடினான்) சபை நடுவில் ஏழைபோல ஒடுங்கி நின்றவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்

அடியனும் நாயனுமாய்க் கோவிற் புறகே-தொண்டன்

அன்றுதள்ளப் போனானுங்கள் ஆதியல் லோடி

முடியுஞ் சூடாமலேகை கேசிதள்ளவே-காட்டில்

முன்புதள்ளிப் போனானுங்கள் மூர்த்தியல் லோடி. 167

விளக்கம்

“அடியவனாகிய சுந்தரரும், நாயகனாகிய சிவபிரானும் தன் மனக்கோவிலுக்கு அப்பால் இருவரையும் தொண்டனாகிய விறன்மிண்டன் தள்ளிவிட, அதன்படி போக நுர்ந்தவன் சிவபெருமான்“ என்று மூத்தவள் கூற, “முடியும் சூடாமல் கைகேயி தள்ளிவிட, காட்டில் நெடுந்தொலைவு போய் வாடிக் கிடந்தவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்
சுற்றிக்கட்ட நாலுமுழந் துண்டு மில்லாமல்-புலித்

தோலைஉடுத்தா னுங்கள் சோதி யல்லோடி

கற்றைச்சடை கட்டிமர வுரியுஞ் சேலைதான்-பண்டு

கட்டிக்கொண்டான் உங்கள்சங்குக் கைய னல்லோடி.168

விளக்கம்

“இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு ஒரு நான்கு முழத்துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தியிருப்பவன் உங்கள் சிவன்” என்று மூத்தவள் கூற, “கற்றையாகச் சடையைக் கட்டி, மரவுரியை இடுப்பிலே கட்டிக் கொண்டவன் சங்கைக் கையில் கொண்ட உங்கள் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள். (சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்தமையையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் குறிப்பிடுகின்றனர்)

பாடல்

நாட்டுக்குள் இரந்தும்பசிக் காற்றமாட்டாமல்-வாரி

நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல் லோடி

மாட்டுப்பிற கேதிரிந்துஞ் சோற்றுக்கில்லாமல்-வெறும்

மண்ணையுண்டான் உங்கள்முகில் வண்ணனல் லோடி.169

விளக்கம்

“ஊருக்குள்ளே பிச்சை எடுத்துத் திரிந்தும், பசி ஆற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சைஎடுத்து உண்டவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “மாட்டு மந்தைக்குப் பின் திரிந்துங்கூட சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றவன் உங்கள் மேகவண்ணன்” என்று ஏசுகின்றாள் இளையவள்.

பாடல்

ஏறவொரு வாகனமும் இல்லாமையினால்-மாட்டில்

ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல் லோடி

வீறுசொன்ன தென்னமாடு தானுமில்லாமல்-பட்சி

மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல் லோடி.170

விளக்கம்

“ஏறிச் செல்வதற்குத் தகுந்த வாகனம் இல்லாமல் மாட்டின் மேல் ஏறிக்கொண்டு திரிபவன் உங்கள் ஈசனே” என்று மூத்தவள் கூற, “அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டானோ உங்கள் மாயவன்” என்று கேலி பேசுகின்றாள் இளையவள்.

பாடல்

பெருமாள் அடியானுக்குப் பெண்டிருந்துமே-எங்கள்

பெருமாளை நீ பழித்துப் பேசலா மோடி

திருமால் அடிமையென்றாய் சாலப்பசித்தால்-ஆருந்

தின்னாததுண் டோசினத்தால் சொல்லாத துண்டோ?171

விளக்கம்

இருவருடைய ஆத்திரமும் இவ்வாறு பேசி பேசி சிறிது அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சில் இருவரும் ஒத்துப்போகும் எண்ணமும் பிறந்தது. அதனால், “மிக நன்றாகச் சொன்னாய் மருதூர்ப்பள்ளி! போ! போ! என்னதான் கோபப்ட்டாலும் சீர் அழியச் சொல்லலாமா?” என்று மூத்தவள் கேட்க, “எனக்குக் கோபம் வராதோ முக்கூடற்பள்ளி! முதலில் திட்டியவரை வாழ்த்தியவர் இதுவரை எவராவது இந்த உலகில் உண்டோ?” என்று கூறுகின்றாள் இளையவள்.

 

 

 

 

 

 

 

பாடல்

தீராண்மைநன் றாகச்சொன்னாய்

      மருதூர்ப்பள்ளி-போபோ

சினத்தாலுஞ் சீரழியச்

      சொல்லலா மோடி

வாராதோ எனக்குக்கோபம்

      முக்கூடற்பள்ளி-முந்த

வைதவரை வாழ்த்தினவர்

      வையகத் துண்டோ.172

விளக்கம்