உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாமாண்டு நான்காம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாமாண்டு நான்காம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மார்ச், 2025

குடும்ப விளக்கு - முதியோர் காதல்

பாரதிதாசன்

குடும்ப விளக்கு - முதியோர் காதல்

பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்னும் நூல் ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்துடன், நேர்மையுடன், தன் கடமையை நிறைவேற்றுபவனாக இருந்தால் வீடும் நாடும் சிறப்படையும் என்ற கருத்தை முன்னிறுத்தி இயற்றப்பட்டுள்ளது. இக்காவியத்தில் குடும்பத்தலைவரும் குடும்பத்தலைவியும் மனமொத்த தம்பதியர்களாக வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்று அவர்களை நன்முறையில் வளர்த்து, தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு, பெயரன் பெயர்த்திகளோடு மகிழ்ந்து வாழ்வதாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்நூலின் ஐந்தாம் பகுதியான முதியோர் காதல் சிறப்பு மிக்க பகுதியாக அமைந்துள்ளது.

மூத்த பிள்ளை முதியவரோடு

மணவழகர் மணியம்மை இருவரும் தம்பதியர்கள். அவர்களுக்கு வேடப்பன், வெற்றிவேல் என்ற இரு மகன்கள். வெற்றிவேல் தன் மனைவி பிள்ளைகளுடன் வேடப்பனின் வீட்டில் வாழ்கின்றான். வேடப்பன் தன் தந்தை வீட்டில் தன் குடும்பத்தோடு பெருமையோடு வாழ்கின்றார். அவரின் பெற்றோர் முதுமை வயதை அடைந்து விட்டனர்.

முதியோருக்கு மருமகள் தொண்டு

வேடப்பன் மனைவி நகைமுத்து அன்பானவள். தன் மாமனார் மாமியாரின் தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து நிறைவேற்றுகின்றாள். அவர்களின் மனம் கோணாதவாறு அவர்களுக்குத் தொண்டு செய்கின்றாள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஆடி ஆடி ஓய்ந்து போனவர்கள் என்ற பெருமையுடன் அவர்களை மதிப்புடன் நடத்துகின்றாள்.

அறையில் மணவழகர் தங்கம் அம்மையார்

வீட்டின் முதல் அறையில் மணவழகரும் தங்கம் அம்மையாரும் இருக்கின்றனர். மணவழகர் இலக்கியம் படிக்க, தங்கம் அம்மையார் அதை மகிழ்வுடன் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். உலர்ந்த பூங்கொடி போல தங்கம் அம்மையார் உடல் தளர்ந்து, ஓர் இடத்தில் அமர்ந்து தன் கணவர் படிப்பதைக் கேட்டு, பற்பல உரையாடி, மன மகிழ்வோடு உறங்குகின்றார்.

மணவழகர் உடல்நிலை

மணவழகருக்கு முன்புபோல தோளில் வலிமை இல்லை. கண் பார்வையில் ஒளி குறைந்து விட்டது. கண்ணாடியின் துணையின்றி எதுவும் செய்ய முடியாது. பனை போன்ற உடல் தற்போது சருகாக பலம் இழந்து காணப்படுகின்றது. வாயில் பற்கள் இல்லை. தலைமுடி முழுவதும் வெண்மையாகிவிட்டது. பாலின் கஞ்சிதான் உணவு. சிறிது தூரம் மட்டுமே டக்க முடியும் என்ற நிலையில் இருக்கின்றார்.

தங்கம் அம்மையாரின் உடல்நிலை

தங்கம் அம்மையாரின் ஒளி வீசிய கூந்தல் தற்போது நரைத்து விட்டது. அந்த முடியைக் கொண்டையாகப் போட்டிருக்கின்றார். முகத்தில் ஒளி குறைந்து விட்டது. அன்பை மட்டுமே வழங்கி அறம் செய்து வாழ்ந்த உடல் தோய்ந்து விட்டது. ஆயிரம் பிறைகளைக் கண்ட முதியவள். அவருடைய உடல் வானவில் போல வளைந்து விட்டது.

முதியோர் அறைக்கு மக்கள் பேர்ர் வருதல்

வீட்டின் முன்னறை இவ்விரு பெரியவர்களையும் தாங்கி, தன் பங்குக்குப் பெருமை சேர்த்துக் கொள்கின்றது. அவர்களின் பிள்ளைகள் அந்த அறைக்கு வந்து, முதியவர்களிடம் நல்ல செய்திகளைக் கற்றுக் கொள்கின்றனர். பெயரன் பெயர்த்தி வந்து சிறிது நேரம் அவர்களோடு விளையாடிவிட்டு, உரையாடிவிட்டு பள்ளிக்கூடம் செல்கின்றனர்.

நிரம்பிய உள்ளம்

பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து இருக்கிறோம்.  மகளுக்கும் கல்வியறிவு கொடுத்த்திருக்கிறோம். நம் கடமையை முடித்துவிட்டாம். இப்போது இனிமையாக வாழ்கின்றாம். உற்றார் உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் குறைவில்லாமல் செய்து முடித்தோம். இந்தநாள் வரை யாருக்கும் துன்பம் செய்யாமல் வாய்மையோடு வாழ்ந்திருக்கின்றாம்என்று மணவழகரும் தங்கம் அம்மையாரும் கொண்ட கடமையினின்று வழுவாது நம் வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம் என்ற மனநிறைவைக் கொள்கின்றனர்.

நாட்டுக்கு நலம் செய்தல்

ஒரு நாடு சிறப்புற வேண்டுமெனில், ஒவ்வொரு வீடும் சிறப்புற வேண்டும். அந்த வகையில் நாட்டிற்கு நலம் செய்வதற்காகவே இல்லறத்தை நல்லறமாக நடத்தினோம். நம்மால் பிறர்க்கு எந்த ஒரு தீமையும் நடந்தது இல்லை. நன்மை செய்தவர்களை மறந்ததும் இல்லை என்று அந்த இரு முதியவர்களும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமை கொள்கின்றனர்.

முதியவளே வாழ்கின்றாள் நெஞ்சில்

மணவழகர் தன் மனைவி தங்கம் அம்மையாரைக் கண்டு பெருமை கொள்கின்றார். “என் இளமையில் அவளைக் கண்டதும், என் உள்ளத்தை அவளிடம் விதைத்து விட்டேன். அந்தக் காதல் கதைகள் கதையாகி கனவாகி விட்டது. எனினும், எப்போதும் அந்த முதியவளே என் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாள்.

எது எனக்கு இன்பம்

அவளுடைய உடல் இப்போது புதிதாக பூத்த மலர் போன்று இல்லை. காய்ந்த புல் கட்டு போல் தளர்ந்து விட்டது. ஓடியாடும் நடை இப்போது இல்லை. நடக்கும்போதே தள்ளாடி விழுகின்ற முதுமை அவளுக்கு வந்து விட்டது. சந்திரனைப் போன்று இருந்த முகம் இப்போது வறண்ட நிலமாகக் காட்சியளிக்கின்றது. கண்களில் குழி விழுந்து விட்டன. ஆயினும் அவள் என் கண் எதிரில்  இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருகின்றது.

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்.

இப்போதெல்லாம் தமிழ்ப் பாடி இசைக்கின்ற ஆற்றல் அவளுக்கு இல்லை. ஆதலால் நான் ஒரு புறமும் அவள் ஒரு புறமும் தனித்து இருக்கின்றோம். என்னைக் கண்டு, என்னைத் தொட்டுப் பேச முடியவில்லை அவளுக்கு. ஆனால் அவள் என்னை நினைக்கின்றாள். நான் அவளை நினைக்கின்றேன். இதுவே எங்களுக்கு ன்பத்தைத் தருகின்றது. லும்புகளும் தோலும் வற்றிப்போய், ஊன்றுகோல் உதவியுடன் நடக்கின்ற அவளுடைய உடல் காலத்தின் கோலத்தில் தளர்ந்து விட்டது. என் முதுமையான விழியைக் காண்பதற்கும் அவளால் முடியவில்லை. எனினும் அவளுடைய அன்புள்ளத்தை நான் காண்கின்றேன். மனதால் மகிழ்ச்சி கொள்கின்றேன்என்று மணவழகர் தன் உள்ளத்தில் உள்ள காதலை அழகாக விவரிக்கின்றார்.

முடிவு

இளமையில் இருந்த அதே காதல், நரை தோன்றி, முதுமைப் பருவம் எய்தி, நடக்க முடியாமல் தள்ளாடும் சூழலிலும் அவள் மீது நான் கொண்ட காதல் மாறவே இல்லை என்பதை மிக நுட்பமாக விவரிக்கின்றது முதுமைக்காதல் என்னும் பகுதி.

 


ஞாயிறு, 23 மார்ச், 2025

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

 

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

உலகு எங்கிலும் உள்ள எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. இன்றைய உலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் மனச்சிக்கலால் துன்புறுகின்றனர். உளநலத்தின் இயல்பு, உளநலத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிக்மண்ட் பிராய்டு என்பவர் ஏராளமான ஆய்வுகளை நடத்திக் காட்டியுள்ளார். இலக்கிய உருவாக்கத்திற்கும் உணர்வுகளின் கலவையாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள், பண்புகள் போன்றவற்றை இலக்கியத்தில் படைப்பதற்கும் பல்வேறுபட்ட உணர்வுகளே அடிப்படையாக அமைகின்றன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவது உளவியல் அணுகுமுறை எனப்படுகின்றது.

தமிழ் இலக்கியங்களில் உளவியல்

சங்க இலக்கியப் பாடல்கள் பெரும்பான்மையும் உளவியல் நோக்கிலேயே பாடப்பட்டுள்ளன. உயிர்களின் அறிவுநிலையை, அதற்கான உறுப்புகளை வரிசைப்படுத்திய தொல்காப்பியர், “ஆறறிவதுவே அவற்றொடு மனனே” (மரபியல்) என்று கூறியுள்ளார். ஆறு அறிவு என்பது கண்ணுக்குப் புலப்படாத மனம் என்று, “மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம்” என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

தொல்காப்பியர் வரையறுத்துள்ள மெய்ப்பாடுகளை உற்று நோக்கும்போது, மனிதனின் மனநிலையை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பது அறியப்படுகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெரமிதம் வெகுளி உவகை என்ற

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்.பொருள்.252)

என்று மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர். இதனை இக்கால உளவியல் அறிஞர்கள், அச்சம்சார் உணர்ச்சிகள் (அச்சம், கவலை, பீதி, வெட்கம்), சினம்சார் உணர்ச்சிகள் (சினம், பொறாமை, வெறுப்பு), அன்புசார் உணர்ச்சிகள் (அன்பு, காதல், மகிழ்ச்சி, நகை, உற்சாகம்) என வகைப்படுத்தியுள்ளனர். இக்கால அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகத் தமிழர்கள் விளங்கியிருந்தனர் என்பது வியப்பான ஒன்று.

மெய்ப்பாடுகளும் உடல் பாதிப்புகளும்

அச்சம், கவலை, பீதி, வெட்கம், அழுகை போன்றவற்றால் உடல் உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புகளிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு முகபாவனை மாற்றம், குரல் வெளிப்பாட்டில் மாற்றம், குருதி அழுத்தம், அதிகரிப்பு, இதயத்துடிப்புச் சீரற்று இருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல், செரிமான உறுப்புகளில் மாற்றம் ஏற்படுதல், அதன் காரணமாகப் பசியின்மை, சோர்வு, உடல் மெலிதல் ஆகியவை ஏற்படுகின்றன. சான்றாக, வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. தலைவன் பொய்யுரைக்க மாட்டான் என்று அவன் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றாள் தலைவி. அவன் வராததை காலம் உறுதி செய்தபோது,

யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ (குறுந்.25)

எனத் தலைவன் தன்னைக் கைவிட்டால் தன் நிலைமை என்னாகும் என்று தலைவி நம்பிக்கை இழந்த மனிநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். இனி அவனை நினைத்து ஒன்றுமில்லை என்று எண்ணி அவனை மறந்து விடலாம் என்று எண்ணும்போது,

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது

இருப்பினெம் அளவைத் தன்றே (குறு.102)

என்று தன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிலை இழந்ததை உணர்கின்றாள். மேலும்,

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஆ ஒல்லெனக் கூவுனே கொல் (குறு.28)

என்று புலம்பித் தீர்க்கின்றாள். ”உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்” என்று ஊராரைப் பழிக்கின்றாள். இது மனச் சிதைவின் உச்சம் என்று கொள்ளலாம். உண்ணும் அளவைக் குறைத்தல், உடல் அழகு குறைதல், உடல் மெலிதல், பசலை பூத்தல் போன்ற பல மாற்றங்கள் அவளிடம் நிகழ்கின்றன. இது போன்று மெய்ப்பாடுகளில் ஏற்படுகின்ற சிதைவுகள் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பாதிக்கின்றன என்பதை உணர்ந்தே, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர்.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் காதலை நன்கு அறிந்த தோழி, அவளுடைய காதலை பெற்றோரிடம் தெரிவிக்கும் முறை சிறந்த உளவியல் பண்புகளைக் கொண்டது. காதலால் தவிக்கின்ற தலைவியின் உள்ளத்திற்கு அருமருந்து தலைவனைப் பற்றிய செய்தியைப் கேட்பதுதான் என்பதை உணர்ந்த தோழி,

அகவன் மகளே அகவன் மகளே

மனவுக் கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே

அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே (குறுந்.23)

என்று பாடுகின்றாள். தலைவியின் உளநோயைத் தீர்க்கும் மருத்துவச்சியாகத் தோழி செயல்படுவதைக் காண முடிகின்றது.

தலைவனின் உள நோய்

தலைவிக்கு உள நோய் ஏற்படும் முறையைப் பலவாறு வெளிப்படுத்தியுள்ள தொல்காப்பியர், தலைவனுக்கும் உள நோய் ஏற்படும் என்றும், அதனால் அவனுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை,

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு (தொல்.களவு.97)

என்ற நூற்பாவால் அறியலாம். தலைவியின் நினைவால் வாடுகின்ற தலைவன் தன் இயல்பினை உரைக்கின்ற தன்மையை,

காமம் காமம் என்பர் காமம்

அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்

முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோளாயே (குறுந்.204)

என்று பாடுகின்றான்.

முடிவுரை

மனநலம், உடல் நலம் இரண்டுமே மனிதனுக்குத் தேவை என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. உள்ளத்தில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும் என்பதற்காகவே தலைவனும் தலைவியும் அஃறிணைப் பொருள்களிடம் பேசுவது, அவற்றையே தூதாக அனுப்ப எண்ணுவது, தன் தோழி, பாங்கன் ஆகியோரிடம் முறையிடுவது, வாயில்கள் அவர்களுக்கு உதவி செய்வது எனப் பல உளவியல் முறையை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.

பண்டைத் தமிழிலக்கியங்களில் வானவியல்

 

பண்டைத் தமிழிலக்கியங்களில் வானவியல்

பழந்தமிழர்கள் பூமியின் தோற்றம் குறித்தும், வளிமண்டலம், கதிரவன், நிலவு, காற்று மண்டலம் குறித்தும் தெளிவான அறிவைப் பெற்றிருந்தனர். குறிப்பாக, நாள்மீன், அவற்றின் நிலை, தன்மை, இயங்கு சக்தி போன்றவற்றிற்கும், பூமியின் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்துள்ளனர். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பது அவர்களின் ஆய்வு முடிவாகும். இதனை,

நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம்“(தொல்காப்பியம், மரபியல்)

நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போடு ஐந்து“(மதுரைக்காஞ்சி 453-454)

என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுகளும் நாள்களும்

பொழுது என்பது வானியலைக் கொண்டு வகுக்கப்படுகின்றது. தமிழர்கள் பெரும்பொழுது, சிறுபொழுது என பொழுதினை இரண்டாக வகுத்தனர். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் ஆறு பருவங்களையும், சிறு பொழுது என்பது ஓர் நாளின் ஆறு பிரிவுகளையும் குறிக்கும். சிறுபொழுதுகளை, காலை (6 மணி முதல் 10 மணி வரை), நண்பகல் (10 மணி முதல் 2 மணி வரை), எற்பாடு (2 மணி முதல் 6 மணி வரை), மாலை (6 மணி முதல் 10 மணி வரை), யாமம் (10 மணி முதல் 2 மணி வரை), வைகறை (2 மணி முதல் 6 வரை) என வகுத்துள்ளனர். வானியல் அறிவு இன்றி இவ்வாறு வகுக்க முடியாது. பண்டைத் தமிழர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் 27 என்றும், கோள்கள் ஏழு என்றும், ஓரைகள் 12 என்றும் கண்டறிந்தனர். ஏழு கோள்களின் பெயரால் ஏழு கிழமைகளை வகுத்தனர். அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பதாகும். பன்னிரண்டு ஓரைகளை பன்னிரண்டு மாதங்களாக வகுத்துக் கொண்டனர். 12 மாதங்களுக்குரிய பருவத்தைப் பெரும்பொழுதாகக் கணக்கிட்டனர். அவை, கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி காலம் (மார்கழி, தை), பின்பனி காலம் (மாசி, பங்குனி), இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி) என்பனவாகும். இவை யாவும் தமிழர்களின் வானியல் அறிவை வெளிக்காட்டுகின்றன.

விசும்பு

விசும்பு என்பது வானத்தைக் குறிக்கின்றது. சூரியக் குடும்பம், வான வெளிக் குடும்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய விசும்பு, இருள் மயமானது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதை, திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்என்று நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. வானம் முதலில் தோன்றி,  அதன் பிறகு சூரியக் குடும்பங்கள் உருவாகி, அவை சுழலும்போது நெருப்பு உண்டாகி ஒளி பிறந்தது என்றும், தீம்பிழம்புகள் கோள்களாக மாறின என்றும், அவை சுழலும்போது காற்று வீசியது என்றும் இன்றைய அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த அறிவியல் நியதியை,

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறநானூறு 2)

என்று புறநானூறு பாடுகின்றது. வானம் பற்றுக்கோடு இல்லாத நிலையை உடையது என்பதை, வறிது நிலைஇய காயமும்(பதிற்றுப்பத்து 24) என்று பதிற்றுப்பத்து பதிவு செய்கின்றது.

விண்மீன்கள்

விண்மீன்கள் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெறுகின்றன என்பதை, “நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல(பட்டினப்பாலை 67) என்ற வரிகளால் அறிய முடிகின்றது. பழந்தமிழர்கள் விண்மீன்களுக்கு, வெள்ளி மீன் (பெரும்பாண் 318), சனிமீன் (புறம்.117), செம்மீன் (புறம்.60) எரிமீன் (புறம்.41), வட மீன் (122) என்று பல பெயர்கள் சூட்டியுள்ளனர். மேலும், வெள்ளி மீன்கள் பொழுது புலருகின்ற விடியற்காலையில் தோன்றும் என்றும் (புறம்.385), வெள்ளி தெற்குப் பக்கத்தில் எழுந்தால் மழைப் பொழிவு இருக்காது (புறம்.35) என்றும் கணித்துள்ளனர். உரோகிணி என்னும் நாள்மீனும், திங்களும் அருகிருக்கும் வேளையில் திருமணம் மற்றும் நல்ல காரியங்களைச் செய்தனர் என்பதை, கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்(அகநானூறு 86) என்றும், “விண்ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து(நெடுநல்வாடை) என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. விண்மீன்களின் சில செயல்கள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நம்பியிருந்தனர். எரிகொள்ளி வீழ்தலும், சனிமீன் மாறுபட்டுத் தோன்றுவதும் தீமையின் அறிகுறிகள் என்று புறநானூற்றில் (புறம்.395) பதிவு செய்யப்பட்டுள்ளன.

காற்று வழங்கா வானம்

இன்றைய அறிவியலாளர்கள், பூமியின் எட்டு கிலோ மீட்டருக்கு மேல் வானத்தில் காற்று இல்லை என்று நிரூபித்துள்ளனர். இச்செய்தியை, வளியிடை வழங்கா வானம்(புறம்.35), வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் (புறும்.36) என்று புறநானூறு கூறுகின்றது.

வளிமண்டல ஆய்வு

வளி மண்டலத்திற்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை என்று எதுவும் இல்லை. காற்று வழங்கும் தன்மைக்கு ஏற்ப வளிமண்டலம் கீழடுக்கு, படுகையடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தன்மை அறிந்தே பழந்தமிழர் விண், ஆகாயம், விசும்பு, வானம் எனப் பல பெயர்களில் வளிமண்டலத்தைக் குறித்தனர்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் (பால்வீதி)

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (இயக்கம்)

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (ஞாயிற்று மண்டிலம்)

வளிதிரிதரு திசையும் (வளிமண்டலம்)

வறிது நிலைஇய காயமும் என்றிவை (பற்றுகோடு அற்ற வானம்)

சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே (புறம் 30)

என்ற இப் புறநானூற்றுப் பாடல், பால்வீதி, அதன் இயக்கம், ஞாயிற்று மண்டிலம், வளி மண்டிலம், பற்றுக்கோடு அற்ற வானம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஓரே பாடலில் விளக்குகின்றது.

ஞாயிறு

ஞாயிறு குறித்த பல தகவல்களைத் தமிழிலக்கியங்களில் காணமுடிகின்றது. ஞாயிற்றுக்கு, கதிரவன், பரிதி, வெய்யோன், பகலோன், செங்கதிரோன், கனலி எனப் பல பெயர்களைத் தமிழர்கள் வழங்கியுள்ளனர். சூரியனின் உதயத்தைக் குறிக்கும்பொழுது பரிதி என்ற சொல்லைச் சுட்டுகின்றனர். இதனை,”அகல்இரு விசும்பின் பாய்இருள் பருகிப் பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி(பெரும்பாணாற்றுப்படை), பரிதியஞ் செல்வன்(மணிமேகலை) என்ற வரிகள் தெரிவிக்கின்றன. பகல் செய் மண்டிலம் (பெரும்பாணாற்றுப்படை), மலர்வாய் மண்டிலம் (புறநானூறு), வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை), மைஅறு மண்டிலம் (கலித்தொகை) என்ற தொடர்கள் ஞாயிற்றின் இயல்பினை உணர்த்துகின்றன. ஞாயிற்றின் ஒளி நிழலால் திசைகளை வரையறுத்தனர் என்பதை,

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு

ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறுட்டு” (நெடுநல்வாடை)

என்றவாறு நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. ஞாயிற்றின் மையப் பகுதி கனன்று கொணடிருக்கும் நெருப்பையும், அதனைச் சுற்றி அனல்வீசும் வெளிவட்டமும், வெளிவட்டத்தைச் சுற்றி ஒளிப்படலமும் கொண்டிருப்பதைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை, வால்நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு(சிறுபாணாற்றுப்படை 242) என்ற வரியால் அறிய முடிகின்றது.

நிலவு

பூமிக்கு அருகில் உள்ள கோள் நிலவு. ஞாயிற்றின் ஒளி நிலவில் பட்டுத் தெறிக்கும் எதிரொளிப்பு ஒளியே நிலவின் ஒளியாகும். நிலவில் வளர்பிறை, தேய்பிறை என்ற இரு நிலைகள் காணப்படுகின்றன. இவற்றை, அவ்வாய் வளர்பிறை சூடிச் செய்வாய்(பெரும்பாணாற்றுப்படை), “பிறைபறிந்தன்ன பின்எந்து கவைக்கடை(பெரும்பாணாற்றுப்படை) என்ற தொடர்கள் தெரிவிக்கின்றன. நிலவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை, குழவித் திங்கள் கோள்நேர்ந்தாங்கு(பெரும்பாணாற்றுப்படை) என்ற வரி தெரிவிக்கின்றது. மகளிர் நிலவின் பிறையை வழிபடுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,”ஒள்ளிழை மகளிர் எயர்பிறைத் தொழுவம் புல்லென் மாலை(அகநானூறு) என்ற பாடல் தெரிவிக்கின்றது.

முடிவுரை

பழந்தமிழர் கண்டறிந்த அறிவுத் துறைகள் பலவற்றுள் வானியல் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில், எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே கைக்கு எட்டாத வானத்தில் உள்ள கோள்கள் குறித்தும், வானில் நிகழ்கின்ற மாற்றங்கள் குறித்தும், வானத்துக்கும் பூமிக்குமான தொடர்பை குறித்தும் தமிழர்கள் அறிந்திருந்தமை வியப்புக்குரியதாகும். அவர்களின் பரந்துபட்ட சிந்தனைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.