புறநானூறு
திணை : பொதுவியல்
துறை: பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி.
“உண்டால் அம்ம இவ்வுலகம்
இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்,
இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே;
முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர்
அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங்
கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர்
உண்மை யானே.”
பொதுவியல் திணை:
பொதுவியல் திணை
என்பது வெட்சித்திணை முதல் பாடாண் திணை வரையுள்ள ஏழு புறத்திணைகளிலும் கூறமுடியாமல்
விடுபட்டிருக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. போர், வெற்றி போன்ற செய்திகளைக்
கூறாமல், இவ்வுலக வாழ்க்கைக்குரிய அறச்செய்திகளைக் கூறுவதால், இப்பாடல்பொதுவியல் திணை ஆயிற்று.
பொருண்மொழிக்காஞ்சி:
வாழ்வின் நிலையாமையை
விளக்கி உறுதிப்பொருள்களைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும். இப்பாடல் வாழ்க்கைக்கு நலம் தரும் அறச்செயல்களை
எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.
பாடிய புலவர்:
கடலுள் மாய்ந்த
இளம்பெருவழுதி. இவர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் போருக்காகக் கடற்படையில்
சென்றபோது கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்கினார். இதனால் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
எனப் பெயர் பெற்றார்.
பாடல் விளக்கம்:
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சான்றோர்களின் பண்பு நலன்கள் குறித்துப் பாடிய பாடல் ஆகும்.
- சான்றோர்கள் தேவர்களின் உணவாகிய அமிழ்தம் தவப்பயனாகவோ தெய்வத்தாலோ கிடைத்தாலும் தனியாக உண்ணமாட்டார்கள். அமிழ்தத்தை உண்டால் நீண்டநாள் வாழமுடியும், இருப்பினும் அதைத் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் கொடுத்து உண்பர்.
- யார் மீதும் வெறுப்பைக் காட்ட மாட்டார்கள். அஞ்சத் தகுந்த பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்பவர்கள். ஒரு போதும் சோம்பலின்றிச் சுறுசுறுப்புடன் வாழ்பவர்கள்.
- பழந்தமிழர்கள் புகழ் கிடைப்பதாக இருந்தால் தன் உயிரையும் கொடுப்பர். பழி என்றால் உலகம் முழுமையும் கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனக்கவலையின்றி வாழ்பவர்கள்.
- இத்தகைய பெருமை பொருந்திய குணங்களை உடையவர்களான இவர்கள் ஒருபோதும் தமக்கு என்று முயற்சித்து வாழாமல் பிறருக்காக முயற்சித்து நல்லது செய்து வாழ்பவர்கள்.
- இத்தகையவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக