வியாழன், 28 ஜனவரி, 2021

புதுக் கவிஞர்கள்

 கவிஞர் அப்துல் ரகுமான்

    கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் 22.11.1937 ஆம் ஆண்டு சையத்  அஹமத், ஜைனத் பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கவிக்கோ என்று சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர். 1960க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளால்  சிறப்படைந்தவர். வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்களோடு இணைந்து கவி பாடியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தன்னை ஒரு படைப்பாளியாக இனம் காட்டியவர். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் படைத்தவர். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.

படைப்புகள்

பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், சோதிமிகு நவகவிதை, ரகசியப்பூ (புதுக்கவிதைகள்) ஆகிய கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அத்துடன் நெருப்பை அணைக்கும் நெருப்பு, இல்லையிலும் இருக்கிறான், இது சிறகுகளின் நேரம், முட்டை வாசிகள், ஆறாவது விரல், காக்கைச் சோறு, தட்டாதே திறந்திருக்கிறது ஆகிய கட்டுரைகள் சேர்ந்த கட்டுரைத் தொகுப்புகளையும், குணங்குடியார் பாடற்கோவை ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கவிஞர் இன்குலாப்

    இவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

2017ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். மீரா என்னும் கவிஞருடன் நட்பு கொண்டவர். தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.

படைப்புகள்

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன.  தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.  மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.

Ø  சிறுகதைத்தொகுதி - பாலையில் ஒரு சுனை

Ø  கட்டுரைத்தொகுதி – யுகாக்கினி

Ø  நாடக நூல்கள் – ஒளவை, மணிமேகலை குரல்கள், துடி, மீட்சி,

Ø  இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், கிழக்கும் பின்தொடரும், கூக்குரல்.

Ø   பொன்னிக்குருவி (2007 நவம்பர்), புலிநகச்சுவடுகள், காந்தள் நாட்கள் (2016) - 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்

Ø  ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)

பெற்ற விருதுகள்

    சிற்பி இலக்கிய விருது,  கவிஞர் வைரமுத்து விருது,  2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

 

 கவிஞர் மு. மேத்தா

மு. மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார்.  இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.   உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.

மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவர்.   இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.  "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.  அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும், இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

கவிதைத் தொகுப்புகள்

கண்ணீர்பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, அவர்கள்வருகிறார்கள், முகத்துக்கு முகம், நடந்தநாடகங்கள், காத்திருந்த காற்று, ஒரு வானம் இரு சிறகு, திருவிழாவில் தெருப்பாடகன், நந்தவனநாட்கள், இதயத்தில் நாற்காலி, என்னுடையபோதிமரங்கள், கனவுக்குதிரைகள், கம்பன் கவியரங்கில், என் பிள்ளைத் தமிழ், ஒற்றைத் தீக்குச்சி, மனிதனைத்தேடி, ஆகாயத்துக்குஅடுத்த வீடு, மு.மேத்தா கவிதைகள், கலைஞருக்கும் தமிழ் என்று பேர், கனவுகளின்கையெழுத்து.

சிறுகதை தொகுப்புகள்: 

கிழித்த கோடு, மு.மேத்தா சிறுகதைகள், பக்கம் பார்த்து பேசுகிறேன்

நாவல்:  சோழ நிலா

கட்டுரை நூல்: திறந்த புத்தகம்

திரைப்படப் பாடல்கள்:

கேளடி கண்மணி – கற்பூர பொம்மை ஒன்று….

காசி  - என் மனவானில் சிறகை விரிக்கும் …..

ரெட்டைவால் குருவி – ராஜ ராஜ சுாழன் நான்…..

சூரிய வம்சம் – நட்சத்திர சன்னலில் வானம் எட்டி…..

உதயகீதம் – பாடு நிலாவே

 

 கவிஞர் அ.சங்கரி

    கவிஞர் அ.சங்கரி என்பவர் சித்திரலேகா மௌனகுரு ஆவார். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர். இவரது தந்தை கந்தையா; தாய் மகேஸ்வரி. இவர் தமது இளமைக் கல்வியை மட்டக்களப்பில் பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள ஹேக் சமூகக் கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றார். பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இவர் எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், கல்வியியலாளர், பெண்கள் பத்திரிகைகளின் ஆசிரியக்குழு உறுப்பினர், நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பெண்கள் அமைப்புக்களின் நிறுவுநர், சோசலிஷப் பெண்ணிலைவாதி, சமூக சேவகி எனப் பன்முகப் பணிகளில் ஈடுபட்டு அவற்றில் தனது ஆளுமை, அறிவை வெளிப்படுத்தி வருகின்றார்.

எழுத்துத்துறையில் இலக்கியம், விமர்சனம், பெண்ணிலைவாதம், பண்பாட்டு ஆய்வு, நாட்டார் வழகாற்றியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகின்றார். இவர் சித்ரா, சங்கரி, ரோகினி, பர்வதகுமாரி, மும்தாஜ், காஞ்சனா முதலான புனைபெயர்களில் கவிதைகளையும் பெண்ணிய ஆக்கங்களையும் படைத்து வருகின்றார்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். சிந்தனை, பிரவாதம், பெண்ணின் குரல், பெண் முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பெண்ணிலைச் சிந்தனைகள், இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம், பாரதியும் பெண்களும்: காலம் கருத்து இலக்கியம் ஆகிய ஆய்வுத்துறை நூல்களை எழுதியுள்ளார்.

சொல்லாத சேதிகள், சிவரமணி கவிதைகள், உயிர்வெளி ஆகிய கவிதை நூல்களைத் தொகுத்துள்ளார். இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார்.

சித்திரலேகா  1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் சார்பில் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள்  கவிதைத்தொகுப்பு  இன்றும் இலக்கியப்பரப்பில்  பேசுபொருளாகவே  வாழ்கிறது.

 

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

    இயற்பெயர் செகதீசன்,  பெற்றோர்  - செ.இரா.நடராசன், வள்ளியம்மாள். பிறப்பு  28.9.1940.. இவர் ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதுக்கவிஞர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர்,  திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசைந நாடக மன்றத்தின் நிர்வாகக்  குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார். நெஞ்சின் நிழல் என்ற புதினத்தையும். தீவுகள் கரையேறுகின்றன, தோணிகள் வருகின்றன, அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு நாள் முந்தி உள்ளிட்ட பல்வேறு கவிதை தொகுப்புகளையும் என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்) என்ற சொற்பொழிவு நூலையும் பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என் கட்டுரைத் தொகுப்பையும், மதிப்பீடுகள் என்ற திறனாய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ மற்றும் லிமரிக் என்ற இருவகைக் கவிதை வடிவங்களையும் இணைத்து லிமரைக்கூ என்ற வடிவத்தை டெட் பாக்கர் என்னும் கவிஞர் உருவாக்கினார். இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து 138 பாக்களைத் தொகுத்து சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டிருக்கின்றார். 

 

கவிஞர் வைரமுத்து

        வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் 1953ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் நாள்   ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

6000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும். .

கவிதை, கட்டுரைத் தொகுப்புகள்

வைகறை மேகங்கள்,  திருத்தி எழுதிய தீர்ப்புகள்,  இன்னொரு தேசியகீதம்,  எனது பழைய பனையோலைகள்,  கவிராஜன் கதை, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் ம‌ழை,

ல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள், கொடி மரத்தின் வேர்கள் கல்வெட்டுக்கள், என் ஜன்னலின் வழியே   சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன், வடுகபட்டி முதல் வால்கா வரை,   இதனால் சகலமானவர்களுக்கும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,  கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

நாவல்

     வானம் தொட்டுவிடும் தூரம்தான்,  மீண்டும் என் தொட்டிலுக்கு,  வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்),  சிகரங்களை நோக்கி,  ஒரு போர்களமும் இரண்டு பூக்களும், காவி நிறத்தில் ஒரு காதல்,  தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம்,   கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர்.

தன்வரலாறு -  இதுவரை நான்

விருதுகள்

    கலைமாமணி விருது - 1990, சாகித்ய அகாதமி விருது . (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்ம பூசன் விருது, சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை)

 

கவிஞர் ந.பிச்சமூர்த்தி

    கவிஞர் ந.பிச்சமூர்த்தி  அவர்கள், நடேச தீட்சிதர் – காமாட்சி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக 8.11.1900 இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர்  வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்து விட்டதால், அக்காலத்து வழக்கப்படி அவரை பிச்சை என்று அழைத்தனர்.  அதுவே பின்னர் பிச்சமூர்த்தி ஆனது.

இவர்  கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தார்.  சென்னைச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

ந. பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்க் கதையான “சயன்ஸுக்குப் பலி”  என்ற கதை கலைமகள் இதழில் வெளிவந்தது. இவர் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியிருக்கின்றார்.

நவஇந்தியா இதழில் சில காலம் பணியில் இருந்தார். இவருடைய படைப்புகள் சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவர் தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். தத்துவத்தைப் பின்னணியாகக் கொண்டு கதை சொல்லும் உத்தியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். இவருடைய படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள் - பதினெட்டாம்பெருக்கு, மோகினி, மாங்காய்த் தலை, காபூலிக் குழந்தைகள், விஜயதசமி ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

கவிதைத் தொகுப்புகள் - காட்டுவாத்து, வழித்துணை, கோடை வயல் ஆகியன இருடைய கவிதைத் தொகுப்புகள்.

 

 


வியாழன், 24 டிசம்பர், 2020

மரபுக் கவிஞர்கள்

  

பாரதியார்

  • பிறந்த இடம் – எட்டையபுரம், பெற்றோர் – சின்னசாமி, இலக்குமி அம்மாள்

  • இயற்பெயர் சுப்பிரமணியன் (சுப்பையா)

  • பிறப்பு – திசம்பர் 11, 1882, இறப்பு – செப்டம்பர் 11, 1921

  • 11 ஆம் வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றதால் எட்டயபுர அரச சபையினரால் பாரதி என்ற பட்டம் பெற்றார்.

  • தமிழ், ஆங்கிலம் இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

  • சுதேசமித்திரன், இந்தியா, பால பாரதம், சக்கரவர்த்தினி, சூரியாதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் படைப்புகளை இயற்றியவர்.

  • தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை முதலிய படைப்புகளின் உரிமையாளர்.

  • கவிஞர், விடுதலை போராட்ட வீரர், இதழியலாளர், சமூக சீர்த்திருத்தவாதி என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.  பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.

  • தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.

  • பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.


பாரதிதாசன்

  • பிறந்த ஊர் பாண்டிச்சேரி. பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்.

  • பிறப்பு – ஏப்ரல் 29, 1891.  இறப்பு – ஏப்ரல் 21, 1964.

  • இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.   சிறப்புப் பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்,

  • கிறுக்கன், கண்டழுதுவோன், கிண்டல்காரன் எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

  • குயில் என்னும் திங்களிதழை நடத்தி வந்தார்.

  • கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1969இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

  • இசையமுது, அழகின் சிரிப்பு, அமிழ்து எது?, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, குயில் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு முதலானவை பாரதிதாசன் படைப்புகள்.

  • விதவைத் திருமணம், கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர். குழந்தை மணத்தை எதிர்த்தவர். பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டவர்.

  • திராவிட இயக்கத் தலைவர்களுள் திரைத்துறையில் முதன்முதலாக நுழைந்தவர்.


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • இயற்பெயர் -  விநாயகம், பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை,   ஆதிலட்சுமி, மனைவி - உமையம்மை

  •  பிறப்பு : 27.7.1876,  இறப்பு : 26.9.1954

  • தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.

  • தமிழ்க்கவிதை, கல்வெட்டாராய்ச்சி, சமூகச் சீர்திருத்தம், நூற்பதிப்பு, பெண்விடுதலை முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

  • நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தைச் செல்வம், கீர்த்தனைகள், மலரும் மாலையும், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரைமணிகள் முதலியவற்றைப் படைத்துள்ளார்.

  • எட்வின் ஆர்னால்டின் THE PILGRIMS OF PROGRESS என்ற நூலை ஆசிய ஜோதி எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவியும் தமிழில் எழுதினார். 1922 இல் மனோன்மணீயம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.

  • கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.  காந்தளூர்ச் சாலை என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

  • சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940 இல் கவிமணி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

  • 1952 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.


நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

  • பெற்றோர்:  வெங்கடராமன், அம்மணியம்மாள்

  •  பிறப்பு: 19.10.1888, இறப்பு: 24.8.1972

  • தமிழ்ப் புலமை மட்டுமின்றி ஓவியத்திலும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

  • தேசபக்திப் பாடல்கள், பிரார்த்தனை, தமிழன் இதயம், காந்தி அஞ்சலி, சங்கொலி, கவிதாஞ்சலி, மலர்ந்த பூக்கள், தமிழ்மணம், தமிழ்த்தேன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், அவனும் அவளும் என்ற கவிதைப் படைப்புகளையும்,

  • தமிழ்மொழியும் தமிழரசும், இசைத்தமிழ், கவிஞன் குரல், ஆரியராவது திராவிடராவது, பார்ப்பனச் சூழ்ச்சியா, திருக்குறள் – உரை, கம்பன் கவிதை இன்பக் குவியல் முதலிய உரைநடைப் படைப்புகளையும், மலைக்கள்ளன், தாமரைக்கண்ணி, கற்பகவல்லி, மரகதவல்லி, காதல் திருமணம், மாமன் மகள் முதலிய புதினங்களையும் படைத்துள்ளார்.


கண்ணதாசன்

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.

  •  இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி.

  • ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.

  •  இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர்

  • நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். 

  • சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

  • தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.

  • தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

  • அவர் படைப்புகளுள் சில பின்வருமாறு

 கவிதை நூல்கள் – காப்பியங்கள் -   ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு         காவியம், ஐங்குறுங்காப்பியம்,கல்லக்குடி மகா காவியம், கிழவன்                 சேதுபதி.

சிற்றிலக்கியங்கள் - அம்பிகை அழகுதரிசனம், ,கிருஷ்ண அந்தாதி கிருஷ்ண கானம், கிருஷ்ண மணிமாலை, ஸ்ரீகிருஷ்ண கவசம்

சமயம்  - அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

சிறுகதைகள் - ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை,

புதினங்கள் - அரங்கமும் அந்தரங்கமும், ,அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை, கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி விருதுபெற்றது)


பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனார்

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

  • எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

  • தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர்.

  • இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

  • பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை.

  • 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

  • நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார்.

  • தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர்.

  • இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார்.  பின்னர் நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொண்டார்.

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.

  • தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

  • இவர் எழுதிய திரைப்படப்பாடல்கள் சில பின்வருமாறு

திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே 1961),     உன்னைக் கண்டு நானாட (கல்யாண பரிசு), செய்யும் தொழிலே தெய்வம் (ஆளுக்கொரு வீடு 1960), தை பொறந்தா வழி பொறக்கும் (கல்யாணிக்கு கல்யாணம் 1959), சின்னப்பயலே...சின்னப்பயலே (அரசிளங்குமரி 1958), தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன் 1958)

கவிஞர் தமிழ் ஒளி

  •  தென்னாற்காடு மாவட்டத்தில் ஆரூர் என்னும் சிற்றூரில் 21.9.1924 அன்று சின்னையா, செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

  • விஜயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர். இவர் 24.3.1965 அன்று இயற்கை எய்தினார்.

  • பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கிக் கவிதைகளைப் படைத்தார்.

  • கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலவும் இயற்றினார்.

  • தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சாதி சமய வேறுபாடுகளையும் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியவர்.

  • நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின ரோஜா ஆகிய மூன்று காவியங்களை இயற்றியுள்ளார். ஐந்து சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.

  • முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை  போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார்.   திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

  • சக்தி நாடக சபாவிற்காகச் சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அது 'வணங்காமுடி’  என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.

முடியரசன் 

  • தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். 
  •  இயற்பெயர்: துரைராசு
  • தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். 
  • துரைராசு என்ற தன் பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். 
  • பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர்.
  • தந்தை பெரியார்அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்றவர்.
  • சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர்.
  • இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். 
  • சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

சிறப்புகள்

  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர் அண்ணாவால்       வழங்கப்பட்டது.
  •  பற ம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டமம், பொற்பதக்கமும் பெற்றவர்.
  • தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றவர்
  • இவருடைய படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

படைப்புகள்

  •        காப்பியங்கள் - பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல்
  •  கவிதைகள் - முடியரசன் படைப்புகள், காவியப்பாவை, நெஞ்சு பொறுக்கவில்லையே, தமிழ் முழக்கம், நெஞ்சிற் பூத்தவை, ஞாயிறும் திங்களும், பதியதொரு விதி செய்வுாம், தாய்மொழி காப்போம்
  •        கட்டுரைகள் - எப்படி வளரும் தமிழ், பாடுங்குயில்கள்
  •        சிறுகதை - எக்கோவின் காதல்
  •        தன் வரலாறு - பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் 

 நன்றி - விக்கிபீடியா.