சனி, 19 ஆகஸ்ட், 2023

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே - இனியவை நாற்பது

இனியவை நாற்பது

பாடல்

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே
தட மென் பணை தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது
விளக்கம்

  • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
  • சுற்றத்தார்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
  • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது
என வாழ்க்கைக்கு இனிமை தரும் செய்திகளை இப்பாடல் விவரிக்கின்றது.

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார் - பழமொழி நானூறு

 

பழமொழி நானூறு

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.
விளக்கம்

சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம் சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல் நடந்து கொள்வர். 

இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம் பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்? 

ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.

 

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் - நான்மணிக்கடிகை

 

நான்மணிக்கடிகை

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல் உலகத்து அறம்

விளக்கம்

  • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத் தருகின்றன. 
  • நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும் அழகைத் தருகின்றன.
  • பெண்மைக்கு அழகு நாணமுடைமை. 
  • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.