சனி, 19 ஆகஸ்ட், 2023

நாடா கொன்றோ; காடா கொன்றோ - புறநானூறு

 

புறநானூறு

பாடியவர்: வையார்

திணை: பொதுவியல்.

திணை விளக்கம்:

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி.

துறை விளக்கம்:

துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

பாடல்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

பாடல் விளக்கம்

  • வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்தது அன்று. 
  • அந்த நிலத்தில் வாழ்கின்ற ஆடவரைப் பொறுத்தது. 
  • நற்பண்பும் நற்செயலும் உடைய ஆடவரே நாட்டின் நிலத்திற்கும், புகழுக்கும் வளத்திற்கும் காரணமாவர். 
  • தீய நிலமாக இருந்தாலும், நற்பண்பு உடையவர்கள் அங்கே வாழ்ந்தால் அத்தீய நிலம் நல்ல நிலம் என்றே கூறப்படும். 
  • ஆனால் நல்ல நிலமாகவே இருந்தாலும் அங்கே தீயவர்கள் வாழ்ந்தால் அந்த நல்ல நிலம் தீய நிலம் என்றே கொள்ளப்படும்.
  • இதுவே உலகத்தின் இயற்கை என்று ஔவையார் கூறுகின்றார்.

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே - இனியவை நாற்பது

இனியவை நாற்பது

பாடல்

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே
தட மென் பணை தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது
விளக்கம்

  • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
  • சுற்றத்தார்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
  • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது
என வாழ்க்கைக்கு இனிமை தரும் செய்திகளை இப்பாடல் விவரிக்கின்றது.

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார் - பழமொழி நானூறு

 

பழமொழி நானூறு

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.
விளக்கம்

சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம் சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல் நடந்து கொள்வர். 

இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம் பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்? 

ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.