ஞாயிறு, 23 மார்ச், 2025

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்

 

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்

கற்கால நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனத்தைத் தொழில்நுட்பம் சார்ந்த உயிரினமாகப் பரிணாமம் கொள்ளச் செய்தது உலோகவியல். பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படுகின்ற பொன், செம்பு, தாமிரம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற தன்மையை ஆராய்கின்ற துறையாக உலோகவியல் செயல்படுகின்றது

உலோகங்களின் வகைகள்

ஜார்ஜியஸ் அக்ரிகலோ உலோகவியலின் தந்தை எனப்படுகின்றார். 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலோகவியல் ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த உலோகவியல் ஒரு அறிவியல் துறையாக மாறியது. உலோகங்களைத் தனித்த உலோகம் (தங்கம்), கலப்பு உலோகம் (செப்பு + வெள்ளி = வெண்கலம்) என்று இருவகையாகப் பிரிக்கலாம். தாதுக்கள் சேகரிக்கப்படும் திறம், உலோகங்களின் அமைப்பு, அதன் எடை மற்றும் சுடர் நிறம், சூடுபடுத்தும்போது உண்டாகும் மணம் ஆகியவற்றின் அடிப்படையில் உலோகங்கள் வேறுபடுத்தி அறியப்பட்டன.

தமிழரும் உலோகவியலும்

வெம்பக்கோட்டை, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் எண்ணற்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பண்டைத் தமிழர்கள் உலைக்களங்கள், உலோகப் புழங்கு பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. மயிலாடும்பாறை என்னும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் 70 செ.மீ நீளம் கொண்ட இரும்புக் கத்திகள், இரும்பு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தெரிகிறது.

சங்க காலத்தில் பொன், வெள்ளி, இரும்பு

பொன்னைத் தோண்டி எடுத்தல், உருக்குதல், உலைக்களம், உலோகவியல் தொழிலாளர், உலோக அணிகலன்கள், உலோகக் கட்டுமானங்கள் ஆகிய பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.   

சங்க காலத்தில் தங்கத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. புறநானூற்றில் கழஞ்சு என்ற சொல் பொன்னைக் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் உலோகத் தாதுக்களைக் கண்டறிந்து, அவற்றை வெட்டி எடுக்கவும், அவற்றை உருக்கிப் பிரித்தெடுக்கவும், பிரித்தெடுத்த உலோகங்களைக் கொண்டு கருவிகள், அணிகலன்கள், எந்திரங்கள், பயன்பாட்டுப் பொருட்கள், படைக்கலங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்யவும் அறிந்திருந்தனர். இதனை,

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வேன் (அகநானூறு28)

என்று அகநானூறு பாடுகின்றது. மேலும், வெள்ளி குறித்து வெள்ளி அன்ன விளங்கும் சுதைஎன்று நெடுநல்வாடையும், செம்பு குறித்து செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து என்று மதுரைக்காஞ்சியும், இரும்பு குறித்து இரும்பு செய் கொல் எனத் தோன்றும் என்று  அகநானூறும் குறிப்பிடுகின்றன. இரும்பின் கண்டுபிடிப்பு சமூகத்தில் மிகப்பெரும் புரட்சியை விளைவித்தது. சங்க இலக்கியங்களில் இரும்பானது, பொன், கரும்பொன், இரும்பொன், ஊதுகுறடு, கருந்தாது எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. இதனை, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் (அகநானூறு 199: 19) என்ற அகநானூற்றுப் பாடலின்வழி காணலாம்.

வணிகம்தொழிலகம்

உலோகப் பொருள்களின் விற்பனைக்குத் தனியே தெருக்கள் இருந்தமையை பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. உலோகத் தொழிலாளர்கள் கொல்லன்” (பெரும்.20) “கம்மியன்” (நெடுநல்.57) என்ற பெயர்களால் அறியப்பட்டனர்.  பொன்னைப் புடமிடும் தொழிலை அறிந்திருந்தனர் என்பதற்கு, சுடுபொன் ஞெகிழத்து முத்தரி சென்றார்ப்ப (பரிபாடல் 21- 18) என்றும், சுடச் சுடரும் பொன்போல் (குறள் 267) என்ற இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. இரும்பை உருக்கினால் எஃகு கிடைக்கும். அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்தோரைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். இவர்களின் தொழிற்கூடம் உலை என்று அழைக்கப்பட்டது. இதை, இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்(புறநானூறு 170) என்று புறநானூறு கூறுகின்றது.

முடிவுரை

தமிழர்கள் உலோகங்களை மிகத் திறமையாகக் கையாண்டனர் என்பதற்குப் பண்டைய போர்க்கருவிகளும், உலைக்களங்களும், பொற்காசுகளும், அணிகலன்களும் சான்றுரைக்கின்றன.

 

பழந்தமிழ் இலக்கியங்களில் நிலவியல்

 

பழந்தமிழ் இலக்கியங்களில் நிலவியல்

புவியின் தோற்றம், வரலாறு, அதன் வடிவம் ஆகியவற்றைப் பற்றி அறிகின்ற தன்மையை நிலவியல் எனலாம். நிலவியல் குறித்த அறிவியலில் பெருவெடிப்புக் கொள்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கோட்பாடு 20ஆம் நூற்றாண்டில் வெளியானது.

பெருவெடிப்புக் கொள்கை

 அண்டவெளியில் உள்ள பொருள்கள் முதலில் தீப்பிழம்பாகத் தோன்றி நாளடைவில் மிக வேகமாக விரிவடைந்துள்ளது என்பதே இதன் கொள்கையாகும். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பமற்ற பகுதிகள் விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அண்டம் வெடித்தபோது காலம் தோன்றி, ஈர்ப்பு விசை உருவாகி, அணுத்துகள்கள் தோற்றம் பெற்று, அவை ஒன்றோடொன்று மோதி புரோட்டான் நியூட்ரான் ஆகியன உருவாகி, அவை இரண்டும் சேர்ந்து ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் ஆகியவற்றை உருவாக்கின. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழிந்து எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. பின்பு முப்பது கோடி ஆண்டுகள் கழிந்த பின்னர் விண்மீன்கள் உருவாயின. இவற்றிற்குப் பிறகே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

தமிழர்களின் பெருவெடிப்புக் கொள்கை

பழந்தமிழர்கள் நிலவியல் குறித்த அறிவைப் பெற்றிருந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் பல சான்றுரைக்கின்றன.  வானம் முதலில் தோன்றியது. வானத்தினின்று காற்றும், நெருப்பும், நீரும், நிலமும் தோன்றின என்று பரிபாடல் கூறுகின்றது. இதனை,

கருவளர் வானத் திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும்  (பரிபாடல் பாடல் எண் 2.4-5)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. இக்கருத்து மேற்கூறிய பெருவெடிப்புக் கொள்கையோடு ஒத்திருப்பதைக் காணும்போது வியப்பு உண்டாகின்றது. மேலும், சூரிய மண்டலம் குறித்து வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்“(அகநானூறு பா.எண்.11.1) என அகநானூறு கூறுகின்றது.

ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம்

         இன்றைய அறிவியல் அறிஞர்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது உலகம் என்று ஆராய்ந்து கூறியுள்ளனர். ஆனால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம்,

நிலம் தீ நீர் வளி விநும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் (தொல்.மரபு.91)

என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஐம்பூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று உருவானவை என்பதை,

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியம்

வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறநானூறு.2)

எனப் புறநானூறு கூறுகின்றது.

உலகின் புற அமைப்பு

 உலகமானது பரந்து விரிந்த நிலப்பரப்பை உடையது. கடல்களே இதன் எல்லையாக இருக்கின்றன. புவியின் நிலப்பரப்பில் உயர்ந்த மலைகள் நிறைந்துள்ளன. இந்தச் செய்தியை,

ஓங்கு திரை வியன் பரப்பின்

ஒலி முந்நீர் வரம்பு ஆக

தேன் தூங்கும் உயர்ச்சிமைய

மலைநாறிய வியல் ஞாலத்து (மதுரைக்காஞ்சி 1)

என்றவாறு மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

நிலத்தின் தோற்றம்

             புவியோட்டின் மேற்புறம் பலவகையான பாறை அடுக்குகள் உள்ளன. பலவகையான மண் வகைகள் உள்ளன. இதுவே நிலம் என்று அழைக்கப்படுகிறது. புவியின் நில அமைப்பு விரிந்து பரந்துள்ளது என்பதையும், நிலத்தின் சுழற்சியையும், உருகெழு நிலம்” (கலித்தொகை பா..106), “நனந்தலைப் பைந்நிலம்“(பதிற்றுப் பத்து பா.எண்.17) என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. கடல் நீரையும்கூட நிலம் தாங்கி நிற்கிறது என்பதைப் பரிபாடல் நீர் நிரந்தேற்ற நிலந்தாங் கழுவத்து(பரிபாடல் எண்.183) எனக் கூறுகின்றது.

நில வரையறை

பழந்தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியை மிக நன்றாக அறிந்தவர்கள் என்பதை,

தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லை

குன்று மலை காடு நாடு

ஒன்று பட்டு வழிய

என்று புறநானூறு கூறுகின்றது. தமிழகத்தின் நிலப்பகுதியை,

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும் (தொல்காப்பியம் 635)

எனத் தொல்காப்பியம் வரையறுக்கின்றது.

            தமிழர்களின் புவியியல் அறிவும், நிலவியல் பார்வையும் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை இச்செய்திகள் வெளிப் படுத்துகின்றன. இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ள அனைத்துக் கருத்துகளும், பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை வியப்பிற்குரியதாகும்.