ஞாயிறு, 10 அக்டோபர், 2021

முதலாழ்வார் மூவர் - பாசுரங்கள்

 

முதலாழ்வார் மூவர்

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர். 

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்  காஞ்சிபுரத்தில்  திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலின் உள்ளே உள்ள பொய்கையில் பிறந்தவர். திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவர். முதன்முதலில் திருமாலின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.  இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பூதத்தாழ்வார்
         பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள், மகாபலிபுரத்தில் பள்ளிகொண்ட அரங்கநாதர் திருக்கோவிலின் நந்தவனத்தில் குருக்கத்தி மலரின் மீது பிறந்தவர் பூதத்தாழ்வார். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கவுமோதகி என்னும் கதை ஆயுதத்தின் அம்சமாக இறை ஒளியுடன் பிறந்தவர். எம்பெருமானுடைய உண்மையான நிலைமையை உணர்ந்து பரஞானம் அடைந்தவர் என்பதனால், “பூதத்தார்எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பேயாழ்வார்

             பூதத்தாரின் அவதார தினத்துக்கு அடுத்த நாள், பரந்தாமனின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக, சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் பேயாழ்வார்இறைவன் மீது அதிக அன்பு கொண்டு பக்திப் பரவசத்தால், நெஞ்சம் சோர்ந்து, கண் சுழன்று அழுது சிரித்து ஆடிப்பாடிப் பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் பேய் ஆழ்வார்எனப்பட்டார். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மூவரின்சந்திப்பு

திருமாலின் திருவுள்ளப்படி மூன்று நாட்களில், மூன்று தலங்களில் முதலாழ்வார்கள் மூவரும் தோன்றினர். அவர்களை ஓரிடத்தில் இணைக்கவும், அவர்களின் வாயிலாக தேன் சொட்டும் தமிழ் பாசுரங்களைச் செவிமடுக்கவும் இறைவன் முடிவு செய்தார். திருவிக்ரம பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலூர் என்ற தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, மூவருக்கும் பெருமாள் ஏற்படுத்தினார்.

ஒரு நாள், பொய்கையார் திருக்கோவலூர் சென்றார். இரவு நேரமாகிவிட்டது. ஒரு வைணவப் பெரியாரின் இல்லம் சென்று இடைக்கழியில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும் “எனக்கு இடமுண்டோ?” என்று வினவினார். இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்என்று எழுந்து அமர்ந்துகொண்டார். சிறிது நேரம் கழித்து பேயார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம், நீரும் வாரும்என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கருமேக நிறத்துப் பெருமாள், பெருமழையையும், காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடனே நின்று நெருக்கடியை உண்டாக்கினார். வந்திருப்பது யார்?’ என்று ஆழ்வார்கள் மூவரும் புறக்கண்ணால் நோக்கியபோது அவர்களின் கண்ணுக்குப் பெருமாள் அகப்படவில்லை. பின்னர் தங்களின் தவ நிலையைக் கொண்டு அகக்கண்ணால் கண்டனர். அப்போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள். அப்போது திருமால் நாச்சியாரோடு, கருடவாகனத்தில் காட்சி கொடுத்தார்.

 

    இம்மூவரும் முதன்முதலாக திருமாலைப் பாடிய பாடல்கள் நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

விளக்கம்

“பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.


பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கம்

“பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

 

பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

விளக்கம்

“பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.

 

 

 

 

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

 

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர்  ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ்க் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.  கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும். கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல புலமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து “கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா” என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

 இயற்றிய நூல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது.

திருப்பாவை

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

நாச்சியார் திருமொழி

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக     காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இந் நூலில் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்கள் அமைந்துள்ளன.

  • முதற் பத்துப் பாடல்கள், “கண்ணனை இணக்கு” எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை.
  • இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் “சிற்றில் சிதையேல்” எனக் கேட்கும் வகையில் அமைந்தவை.
  • மூன்றாம் பத்து கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்துள்ளது.
  • நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை.
  • ஐந்தாம் பத்து குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடுகின்றன.
  • ஆறாம்பத்து மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளன. 
  • ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை.
  • எட்டாம் பத்து மேகவிடு தூதாக அமைந்துள்ளது.
  • ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன.
  • பத்தாம் பத்து மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • பதினோராம் பத்து திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளது.
  • பன்னிரண்டாம் பத்து சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்துள்ளது.
  • பதின்மூன்றாம் பத்து அவலம் தணி என இறைவனைக் கோருவதாக அமைந்துள்ளது.
  • பதினான்காம் பத்து பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகிறது.

இவற்றுள் ஏழாம் பத்தில், கற்பூரம் நாறுமோ என்று தொடங்கும் பாடலே இங்கு நமக்குப் பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் - 1

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ,

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே.

 விளக்கம்

கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையைக் கம்சன் ஏவிவிட, அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற மாதவனின் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும் விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூவின் மணம் கொண்டிருக்குமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு சொல்வாயா?

பாடல் - 2

கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்

உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்

திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.

விளக்கம்

நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில் வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவனின் திருக்கரங்களில் சென்று குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும்படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.

பாடல் - 3

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே!  இலையுதிர் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போல், வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.

பாடல் - 4

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தரம் ஒன்றின்றி றி அவன்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! சந்திர மண்டலம் ஒளி வீசித் திகழ்வதுபோல், தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்ந்து, அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய். நீ அடைந்த இந்தச் செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.

பாடல் - 5

உன்னோ டுடனே ஒருகடலில் வாழ்வாரை,

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

பாஞ்சசன்னியமே! கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லை! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலகத்தின் மன்னனாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.

பாடல் - 6

 போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! நீ எந்தப் புனித தீர்த்தங்களிலும் நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தாயோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால் சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம் என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.

பாடல் - 7

 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்

செங்கண் கருமேனி வாசுதே வனுடய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா உன்செல்வம் சாலவ ழகியதே.

விளக்கம்

 சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே!  மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப் போல, சிவந்த கண்களையும் கருத்த திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது ஏறி, உறங்கும் உன் செல்வம் மிகவும் அழகுடையதே ஆகும்.

பாடல் - 8

 உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

 பாஞ்சசன்னியச் சங்கே! உலகளந்த உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறக் கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும் கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண் குலத்தவர் உன்னிடம் பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பல்லாத இந்தக் காரியத்தை நீ செய்வது உனக்குத் தகுதியா?

பாடல் - 9

 பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்,

பொதுவாக உண்பதனைப் புக்குநீ உண்டக்கால்,

சிதையாரோ உன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 பெருஞ்செல்வம்  உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின் வாய் அமுதத்தைப் பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக் குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள் யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?

பாடல் - 10

 பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே.

விளக்கம்

அழகில் சிறந்த திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான கோதை, பாஞ்சசன்னியச் சங்கை, அதன் பெருமையைப் பாடிய பாசுரங்களைப் பயின்று எம்பெருமானைத் துதிப்பவர்கள் அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆவார்கள்.

 

நன்றி

http://naachiyaarthirumozhi.blogspot.com/2016/07/64.html

https://www.deivatamil.com/divya-prabandham/andal/66-natchiar-thirumozhi-karuppuram.html

http://koodal1.blogspot.com/2013/06/blog-post.html

 

 

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

திருநீற்றுப் பதிகம் - திருநாவுக்கரசர்

 

 திருநீற்றுப் பதிகம்

திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசர்  கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்தமிழ் நாட்டில்  பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.  திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடியில் உள்ள  திருவாமூர்  எனும் ஊரில் புகழனார் மற்றும் மாதினியாருக்கு மகனாகப் பிறந்தவர்.  இவருடைய இயற்பெயர் மருண்நீக்கியார். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி)  ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.

    பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியான உழவாரப் பணியை மேற்கொண்டார். அதனால் "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இவர் இறைவனை தொண்டு வழியில், அடிமை நெறியில் வழிபட்டார். திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில்  இறைவனடி கலந்தார்.

வேறு பெயர்கள்

  • தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்
  • நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
  • அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
  • உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.

அற்புதங்கள்

  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது    உயிர் பிழைத்தார்.
  • சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச்      சென்றது.
  • சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே    தோணியாகக் கரையேறியது.
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  • வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  • காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

திருநாவுக்கரசரைத் திருநீற்றறையில் இட்டபோது அவர் பாடிய திருநீற்றுப் பதிகத்தின் பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல் எண்: 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

விளக்கம்

இறைவனின் திருவடி நிழல் குற்றமற்ற வீணையின் நாதம் போலவும், மாலையில் ஒளி வீசும் நிலவின் குளிர்ச்சி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், மாட்சியும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.

 

பாடல் எண்: 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

விளக்கம்

நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.

பாடல் எண்: 3
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர்செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.

விளக்கம்

சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்; அவர்கள் சிவபிரானுக்கு அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகளால் சிவபிரானின் நாமத்தை கேட்க மாட்டார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை எந்த பயனையும் அடையாமல் வீணாகக்கழிகின்றது.

பாடல் எண்: 4
நடலை வாழ்வுகொண்டு என்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சு அமுதுண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்து ஊர்முனி பண்டமே.

விளக்கம்

நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத் தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சிசெய்யவேண்டும்.

 

பாடல் எண்: 5
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே.

விளக்கம்

சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை.

பாடல் எண்: 6
 குறிகளும் அடையாளமும் கோயிலும்
 நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
 அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
 பொறி இலீர்மனம் என்கொல் புகாததே.

விளக்கம்
சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும் சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை), அவனை வழிபடுவதற்கு உரிய சைவ நெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்?


பாடல் எண்: 7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன்நெடுங் காலமே.

விளக்கம்

தன்னை வாழ்த்துதற்கு வாயும், தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும், தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித் துதிக்காமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்து விட்டேனே?

பாடல் எண் : 8
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே.

விளக்கம்
சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்?


பாடல் எண்: 9
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

விளக்கம்

உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில் புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான், பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான்.

பாடல் எண்: 10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

விளக்கம்:
சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

நன்றி:

https://vaaramorupathigam.wordpress.com/