ஞாயிறு, 10 அக்டோபர், 2021

திருவாய்மொழி - நம்மாழ்வார்

 

திருவாய்மொழி

நம்மாழ்வார்

நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார் திருநகரியில் காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குச நாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.  நான்கு வேதங்களைத் தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு. அவை,

1.    திருவிருத்தம் – 100 பாசுரங்கள்

2.    திருவாசிரியம் – 8 பாசுரங்கள்

3.    பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள் 

4.    திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்

 நம்மாழ்வாரின் வேறு பெயர்கள்

சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன், பவரோக பண்டிதன், ஞதனதேசிகன், ஞான பிரான், ஞானத் தமிழ்க் கடல்.

இவர் இயற்றிய திருவாய்மொழியில் நான்காம் திருமொழியிலிருந்து 5 பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி, பராங்குசன் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து இறைவன் மீது காதல் கொண்டு, நாரை, குயில், அன்னம் முதலிவற்றைத் தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது.


நான்காந் திருமொழி

நாரை விடு தூது

அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?

விளக்கம்

நாரையே! என் மீது கொண்ட கருணையால், நீ உன் ஆண் நாரையுடன் நாரணனிடம் எனக்காகத் தூது சென்றால், அவன் உங்களை அவனது சிறையில் வைத்துவிட்டால், என்ன செய்வாய்?


குயில் விடு தூது

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்

என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

விளக்கம்

இனக் குயில்களே! தாமரைக் கண்ணனிடம் எனக்காகத் தூது செல்லுங்கள். நான் முன் செய்த வினைப்பயனால், அவனுக்குக் குற்றேவல் செய்யும் விதி எனக்கு இல்லாமல் போயிற்று. இனியாவது அப்பேறு எனக்குக் கிட்டுமோ என்பதை அறிந்து வா.


அன்னம் விடு தூது

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.

மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு

மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி

மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.

விளக்கம்

அன்னங்களே! குறள் மணியாய் (வாமன அவதாரம்) உலகை இரந்தவனிடம்  சென்று, புத்தி முழுவதும் கலங்கப் பெற்று, அறிவிழந்து கிடக்கிறாள் ஒரு பெண் என்று கூறுங்கள். 


மகன்றில் விடு தூது (கிரவுஞ்சம்)

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத

என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?

விளக்கம்

மகன்றில்களே! என் நிலைமையைக் கண்டு இரக்கப்படாத முகில் வண்ணனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள்.

 

குருகு விடு தூது

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,

நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்

மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.

மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.

விளக்கம்

நீர் வாய்ந்த தோட்டங்களில் உலாவும் குருகே!  ஏழு உலகங்களையும் காத்தளிக்கும் நாராயணன் நீர் நிறைந்த கண்களுடன் நிற்கும் எனக்கு அருள் தரக்கூடாதா என்று  அவனிடம் சென்று கேள். 

 

 

முதலாழ்வார் மூவர் - பாசுரங்கள்

 

முதலாழ்வார் மூவர்

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர். 

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்  காஞ்சிபுரத்தில்  திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலின் உள்ளே உள்ள பொய்கையில் பிறந்தவர். திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவர். முதன்முதலில் திருமாலின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.  இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பூதத்தாழ்வார்
         பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள், மகாபலிபுரத்தில் பள்ளிகொண்ட அரங்கநாதர் திருக்கோவிலின் நந்தவனத்தில் குருக்கத்தி மலரின் மீது பிறந்தவர் பூதத்தாழ்வார். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கவுமோதகி என்னும் கதை ஆயுதத்தின் அம்சமாக இறை ஒளியுடன் பிறந்தவர். எம்பெருமானுடைய உண்மையான நிலைமையை உணர்ந்து பரஞானம் அடைந்தவர் என்பதனால், “பூதத்தார்எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பேயாழ்வார்

             பூதத்தாரின் அவதார தினத்துக்கு அடுத்த நாள், பரந்தாமனின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக, சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் பேயாழ்வார்இறைவன் மீது அதிக அன்பு கொண்டு பக்திப் பரவசத்தால், நெஞ்சம் சோர்ந்து, கண் சுழன்று அழுது சிரித்து ஆடிப்பாடிப் பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் பேய் ஆழ்வார்எனப்பட்டார். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மூவரின்சந்திப்பு

திருமாலின் திருவுள்ளப்படி மூன்று நாட்களில், மூன்று தலங்களில் முதலாழ்வார்கள் மூவரும் தோன்றினர். அவர்களை ஓரிடத்தில் இணைக்கவும், அவர்களின் வாயிலாக தேன் சொட்டும் தமிழ் பாசுரங்களைச் செவிமடுக்கவும் இறைவன் முடிவு செய்தார். திருவிக்ரம பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலூர் என்ற தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, மூவருக்கும் பெருமாள் ஏற்படுத்தினார்.

ஒரு நாள், பொய்கையார் திருக்கோவலூர் சென்றார். இரவு நேரமாகிவிட்டது. ஒரு வைணவப் பெரியாரின் இல்லம் சென்று இடைக்கழியில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும் “எனக்கு இடமுண்டோ?” என்று வினவினார். இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்என்று எழுந்து அமர்ந்துகொண்டார். சிறிது நேரம் கழித்து பேயார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம், நீரும் வாரும்என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கருமேக நிறத்துப் பெருமாள், பெருமழையையும், காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடனே நின்று நெருக்கடியை உண்டாக்கினார். வந்திருப்பது யார்?’ என்று ஆழ்வார்கள் மூவரும் புறக்கண்ணால் நோக்கியபோது அவர்களின் கண்ணுக்குப் பெருமாள் அகப்படவில்லை. பின்னர் தங்களின் தவ நிலையைக் கொண்டு அகக்கண்ணால் கண்டனர். அப்போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள். அப்போது திருமால் நாச்சியாரோடு, கருடவாகனத்தில் காட்சி கொடுத்தார்.

 

    இம்மூவரும் முதன்முதலாக திருமாலைப் பாடிய பாடல்கள் நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

விளக்கம்

“பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.


பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கம்

“பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

 

பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

விளக்கம்

“பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.

 

 

 

 

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

 

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர்  ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ்க் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.  கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும். கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல புலமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து “கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா” என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

 இயற்றிய நூல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது.

திருப்பாவை

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

நாச்சியார் திருமொழி

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக     காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இந் நூலில் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்கள் அமைந்துள்ளன.

  • முதற் பத்துப் பாடல்கள், “கண்ணனை இணக்கு” எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை.
  • இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் “சிற்றில் சிதையேல்” எனக் கேட்கும் வகையில் அமைந்தவை.
  • மூன்றாம் பத்து கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்துள்ளது.
  • நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை.
  • ஐந்தாம் பத்து குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடுகின்றன.
  • ஆறாம்பத்து மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளன. 
  • ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை.
  • எட்டாம் பத்து மேகவிடு தூதாக அமைந்துள்ளது.
  • ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன.
  • பத்தாம் பத்து மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • பதினோராம் பத்து திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளது.
  • பன்னிரண்டாம் பத்து சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்துள்ளது.
  • பதின்மூன்றாம் பத்து அவலம் தணி என இறைவனைக் கோருவதாக அமைந்துள்ளது.
  • பதினான்காம் பத்து பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகிறது.

இவற்றுள் ஏழாம் பத்தில், கற்பூரம் நாறுமோ என்று தொடங்கும் பாடலே இங்கு நமக்குப் பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் - 1

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ,

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே.

 விளக்கம்

கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையைக் கம்சன் ஏவிவிட, அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற மாதவனின் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும் விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூவின் மணம் கொண்டிருக்குமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு சொல்வாயா?

பாடல் - 2

கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்

உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்

திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.

விளக்கம்

நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில் வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவனின் திருக்கரங்களில் சென்று குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும்படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.

பாடல் - 3

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே!  இலையுதிர் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போல், வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.

பாடல் - 4

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தரம் ஒன்றின்றி றி அவன்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! சந்திர மண்டலம் ஒளி வீசித் திகழ்வதுபோல், தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்ந்து, அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய். நீ அடைந்த இந்தச் செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.

பாடல் - 5

உன்னோ டுடனே ஒருகடலில் வாழ்வாரை,

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

பாஞ்சசன்னியமே! கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லை! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலகத்தின் மன்னனாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.

பாடல் - 6

 போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.

விளக்கம்

வலம்புரிச் சங்கே! நீ எந்தப் புனித தீர்த்தங்களிலும் நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தாயோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால் சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம் என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.

பாடல் - 7

 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்

செங்கண் கருமேனி வாசுதே வனுடய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா உன்செல்வம் சாலவ ழகியதே.

விளக்கம்

 சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே!  மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப் போல, சிவந்த கண்களையும் கருத்த திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது ஏறி, உறங்கும் உன் செல்வம் மிகவும் அழகுடையதே ஆகும்.

பாடல் - 8

 உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே.

விளக்கம்

 பாஞ்சசன்னியச் சங்கே! உலகளந்த உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறக் கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும் கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண் குலத்தவர் உன்னிடம் பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பல்லாத இந்தக் காரியத்தை நீ செய்வது உனக்குத் தகுதியா?

பாடல் - 9

 பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்,

பொதுவாக உண்பதனைப் புக்குநீ உண்டக்கால்,

சிதையாரோ உன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே.

விளக்கம்

 பெருஞ்செல்வம்  உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின் வாய் அமுதத்தைப் பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக் குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள் யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?

பாடல் - 10

 பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே.

விளக்கம்

அழகில் சிறந்த திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான கோதை, பாஞ்சசன்னியச் சங்கை, அதன் பெருமையைப் பாடிய பாசுரங்களைப் பயின்று எம்பெருமானைத் துதிப்பவர்கள் அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆவார்கள்.

 

நன்றி

http://naachiyaarthirumozhi.blogspot.com/2016/07/64.html

https://www.deivatamil.com/divya-prabandham/andal/66-natchiar-thirumozhi-karuppuram.html

http://koodal1.blogspot.com/2013/06/blog-post.html