ஞாயிறு, 24 டிசம்பர், 2023

முக்கூடற்பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை

 

முக்கூடற்பள்ளு

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

          போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே.

விளக்கம்

  • நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கு உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னலும், தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும், சூழ வளைத்து மின்னுகின்றன;
  • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றிக் காற்று அடிக்கின்றது;
  • கிணற்று நீரிலே இருக்கின்ற கசொறித்தவளைகள் கூப்பிடுகின்றன; சேற்றிலே வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாதபடி சேற்றினால் வளை வாயில்களை அடைக்கின்றன;
  • நீர்த்துளியை உண்ண ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் ஒரு மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றன;
  • உலகமெல்லாம் போற்றும் திருமாலாகிய அழகருக்குப் பெரியபபண்ணையைச் சேர்ந்த சேரியிலுள்ள பள்ளர் வகையினரெல்லாம் மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோம் வாருங்கள்!

 

 

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

தாய்மொழிப்படலம் - இராவண காவியம்

 

இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம்

பாடல் 1

ஏடுகை யில்லார் இல்லை இயலிசை கல்லார் இல்லை

பாடுகை யில்லார் இல்லை பள்ளியோ செல்லா ரில்லை

ஆடுகை யில்லார் இல்லை அதன்பயன் கொள்ளார் இல்லை

நாடுகை யில்லார் இல்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

விளக்கம்

         இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.

பாடல் 2

தமிழெனது ருகட் பார்வை தமிழெனது உருவப் போர்வை

தமிழெனது உயிரின் காப்புத் தமிழெனது உளவே மாப்புத்

தமிழெனது உடைமைப் பெட்டி தமிழெனது உயா்வுப் பட்டி

தமிழெனது உரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.

விளக்கம்

அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.

பாடல் - 3

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்

பாடெலாந் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமிழ் அகத்து மாதோ.

விளக்கம்

அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.

பாடல் - 4

உண்டியை உண்ணார் பொன்பட் டுடையினை எண்ணார் கன்னற்

கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்

செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்

தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.

விளக்கம்

தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.

பாடல் - 5

பாடுபவ ருக்கும் உரை பண்ணுபவ ருக்கும்

ஏடதுவி ரித்துஉரை யிசைப்பவர் தமக்கும்

நாடுநக ரோடு அவர் நயப்பவை கொடுத்தும்

தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.

விளக்கம்

தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.

 

 

பாபஞ்செய் யாதிரு மனமே - கடுவெளிச்சித்தர்

 

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

விளக்கம்

மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.

1

சாபங்கொடுத்திட லாமோ – விதி

தன்னைநம் மாலே தடுத் திடலாமோ

கோபந் தொடுத்திட லாமோ - இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

விளக்கம்

ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.

2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் - எந்த

நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

விளக்கம்

சூது என்பது சூதாட்டம். பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும், உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள், உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.

3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

விளக்கம்

தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.

4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

விளக்கம்

 ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.

5

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே

ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

விளக்கம்

யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.

6

நல்ல வழிதனை நாடு - எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

விளக்கம்

நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

7

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட

பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

விளக்கம்

உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.

8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

விளக்கம்

வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.

9

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னை யாளாதே - சிவன்

இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

விளக்கம்

ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.

10

மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டி னோர்க் கானந்த மாம் வழி கூறு

விளக்கம்

மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.