வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழக அறிவியல் ஆளுமைகள்

 

தமிழக அறிவியல் ஆளுமைகள்

சர்.சி.வி.இராமன்

இவருடைய முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். கல்கத்தாவில் அறிவியல் ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

சீனிவாச இராமானுஜன்

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரையிலான பல்வேறு துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

.பி.ஜெ.அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி என்றெல்லாம் புகழக்கூடிய மாமனிதர். 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

கோபால்சாமி துரைசாமி

ஜி. டி. நாயுடு என்று அறியப்படுகிறார். இவர் தமிழகத்தின் அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய தேவை இல்லாத வகையில் மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதை தன் பேருந்துகளில் பயன்படுத்தினார். எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான் (Vibrator Tester) என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

இவர் இந்திய வேளாண் அறிவியலாளர். தாவர மரபியலாளர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று அறியப்படுகின்றார். 1960களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பஞ்சம் வந்த காலத்தில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிக உற்பத்தியை உருவாக்கிக் காட்டினார். பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், பாரத ரத்னா விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.

மயில்சாமி அண்ணாதுரை

முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநர். தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார். கையருகே நிலா, சிறகை விரிக்கும் மங்கள்யான், வளரும் அறிவியல், அறிவியல் களஞ்சியம், விண்ணும் மண்ணும், இந்தியா - 75 போர்முனை முதல் ஏர்முனைவரை ஆகிய ஆறு நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். "கையருகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது. "விண்ணும் மண்ணும்" என்ற நூல் 2021ஆம் ஆண்டுக்கான மணவை முஸ்தபா அறிவியல் விருதைப் பெற்றுள்ளது.

கைலாச வடிவு சிவன்

கைலாசவடிவு சிவன் என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.

பி.கே.அய்யங்கார்

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற இந்திய அணுசக்தி அறிவியலாளரும் அணுக்கருவியலாளரும் ஆவார். பாபா அணு ஆராய்ச்சி மையம் (பிஏஆர்சி)யின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார்.  ஐக்கிய அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாக இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை எதிர்த்து வந்தார்.

இரா.சிதம்பரம்

இரா. சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் ஓர் இந்திய அணு அறிவியலாளரும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞரும் ஆவார். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 2018-22 காலகட்டத்தில் பணியாற்றினார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தார். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றினார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தினார். சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார்.

வி.நாராயணன்

வி. நாராயணன் (V. Narayanan) ஓர் இந்திய விண்வெளிப் பொறியாளரும் வானூர்தித் தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இசுரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறைச் செயலராகவும் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இசுரோ நிறுவனத்தின் 11-ஆவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.வளர்மதி

இஸ்ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு, சரல் செயற்கைக்கோள், ஜிசாட்-7, செவ்வாய் சுற்றுகலன் திட்டம், ஜிசாட்-14 எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினை பெற்ற முதலாவது நபர் இவராவார்.

அருணா தத்தாத்ரேயன்

சென்னையைச் சேர்ந்த பேராசிரியரும், இந்தியாவின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR), ஓய்வுபெற்ற விஞ்ஞானியும் ஆவார். உயிர் இயற்பியல், வேதியியல் மற்றும் மேற்பரப்பு அறிவியல் ஆகியவை துறைகளில் பணியாற்றியவரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.

த.ச.கனகா

தஞ்சை சந்தானகிருட்டிண கனகா டி. எஸ். கனகா என்றும் அழைக்கப்படும் இவர் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். உலகின் முதல் சில பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் மூளையில் நாள்பட்ட மின்முனை உள்வைப்புகளை சரிசெய்த இந்தியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார் 1975 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆழ்ந்த மூளைத் தூண்டுதலைச் செய்த முதல் நிபுணருமாவார். பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எஸ். கல்யாணராமன் ஆகியோருடன் இணைந்து இவர் 1960கள் மற்றும் 1970களில் செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாகவும் இருந்தார்.

 

செயற்கை நுண்ணறிவு

 

செயற்கை நுண்ணறிவு

மனிதர் போன்று சிந்திக்கும் திறனையும், முடிவெடுக்கும் திறனையும் கொண்ட கணினி அமைப்புகளைக் குறிக்கும் ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படுகின்றது. இந்நுண்ணறிவு உயர்கல்வி, மெய்நிகர் உதவியாளர்கள், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது. தொழில்களில் புரட்சியை ஏற்படுத்துகிறது. நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தையும் நம்மைச் சுற்றியுள்ள தகவல்களையும் மாற்றியமைக்கிறது.

செயற்கை நுண்ணறிவின் தந்தை

ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956இல் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். அதனால் இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அறியப்படுகின்றார்.

செயற்கை நுண்ணறிவின் நோக்கம்

கணினித் துறையில்‌, வருங்காலத்தில் இந்தியாவில்‌ மட்டுமல்லாது உலக அளவில்‌ அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கக் கூடிய துறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) (AI) துறை விளங்கும்‌. இதன்‌ மூலம்‌ மனிதனைப் போன்று அல்லது மனிதர்களை விட சிந்திக்கும்‌ மற்றும்‌ செயல்படக் கூடிய அறிவுத் திறன்‌ கொண்ட கணிப் பொறிகளை உருவாக்குவதே இத்துறையின்‌ நோக்கமாகும். இத்துறை, மனிதனின்‌ பகுத்தறியும்‌ திறனடிப்படையில்‌, கற்றல்‌, பகுத்தாய்தல்‌, திட்டமிடல்‌, உணர்தல்‌, உள்ளுணர்தல்‌, பார்த்தல்‌, கேட்டல்‌ ஆகிய ‌பண்புகளைக்‌ கொண்டு சூழ்நிலைக்கேற்ப முடிவுகள்‌ மேற்கொண்டு செயல்படுத்தக் கூடிய ஒரு பணியினை, கணினியினைக்‌ கொண்டு செய்து முடிக்க‌ இயந்திரங்களை உ௫வாக்குவதாகும்‌. எனவே, இத்துறை அனைவரின்‌ கவனத்தையும்‌ ஈர்த்து வருகின்றது. இத்துறை வளர்ச்சியடைந்து முழு வெற்றி பெற்று விட்டால்‌ மனிதன்‌ வேலை செய்ய முடியாத இடங்களிலெல்லாம்‌ கூட இயந்திர வடிவங்களைக்‌ கொண்டு அவ்வேலைகளை செய்து முடிக்கலாம்‌. அவ்விடங்கள்‌ விண்வெளியாகவோ அல்லது காற்று மாசடைந்த இடமாகவோ இருக்கலாம்‌.

Windows 10 வருகைக்குப்‌ பிறகு செயற்கை நுண்ணறிவு வாயிலாக சூட்டிகைப் பேசிகளின்‌ செயலிகளில்‌ மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது எனலாம்‌. Cortana, Hound, ELSA (English Language Speech Assistant), Siftr Magic Cleaner, Robin etc. போன்ற செயலிகள்‌ செயற்கை நுண்ணறிவின்‌ அடிப்படையில்‌ உருவாக்கப்பட்டவையே. உன்னதமான வேலைவாய்ப்பை உலகமெங்கும்‌ அள்ளித் தரக் கூடியதும்‌ 2030 ஆம் ஆண்டில் அதிகமான நபர்கள்‌ பணி செய்யக் கூடிய துறையாகவும்‌ செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI) துறை விளங்கும்‌. மேலும், இத்துறையில்‌ இந்தியா மிகப் பெரிய திறனறிவு பெற்றவர்களை உடையதாகவும்‌ இருக்கும்‌ என்று பொருளாதார கணக்கீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

7 வகையான செயற்கை நுண்ணறிவு (AI

செயற்கை நுண்ணறிவை பல்வேறு வகையான செயற்கை நுண்ணறிவாக வகைப்படுத்தலாம்.

1. எதிர்வினை இயந்திரங்கள்

இந்த இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவின் பழமையான வடிவமாகும். இந்த இயந்திரங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வினை புரியும். சான்று பீட் ப்ளு, .பி.எம்.

2. வரையறுக்கப்பட்ட நினைவகம்

இந்த வகையான செயற்கை நுண்ணறிவுக் கருவிக்கு குறிப்பிட்ட அளவில் வரையறை செய்யப்பட்ட நினைவகம் உண்டு. சான்று ஓட்டுநர் இல்லாத தானியங்கிக் கார்கள்.

3. மனக் கோட்பாடு

இக்கோட்பாடு வகை நுண்ணறிவு என்பது மற்றவர்களின் மனதினைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது. நம்பிக்கைகள், நோக்கங்கள், ஆசைகள், கருத்துகள் முதலானவற்றைப் புரிந்து கொள்வதற்கும், புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படும் செயற்கை நுண்ணறிவினைக் கொண்டிருக்கின்றது. இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

4. சுய விழிப்புணர்வு

இது மனக் கோட்பாட்டின் அடுத்த கட்டமாகும், நாம் சுய விழிப்புணர்வு கொண்ட செயற்றை நுண்ணறிவினை அடையும்போது, ​​மனிதனைப் போன்ற விழிப்புணர்வைக் கொண்ட, மனிதர்களைப் போலவே புத்திசாலியான, ஒத்த ஆசைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவைப் பெறுவோம்.

5. செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI)

இந்தக் கருவிகள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய இயந்திர கற்றல் வழிமுறைகளின் ஆதரவைப் பெறுகின்றன. உதாரணமாக, இயற்கை மொழி செயலாக்க செயற்கை நுண்ணறிவு, குரல் கட்டளைகளை மட்டுமே அடையாளம் கண்டு பதிலளிக்க முடியும்.

6. செயற்கை பொது நுண்ணறிவு

செயற்கை பொது நுண்ணறிவு இயந்திரங்கள் மனிதர்களைப் போலவே பல்வேறு பணிகளைச் செய்ய முடியும் என்பதால் இது வலுவான செயற்கை நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது. சான்று - ChatGPT

7. செயற்கை சூப்பர் நுண்ணறிவு

இந்த வகை செயற்கை நுண்ணறிவு செயற்கை பொது நுண்ணறிவின் திறன்களை மிஞ்சும் என்று கோட்பாடு செய்யப்பட்டு நம்பப்படுகிறது. எனவே, இது சூப்பர் AI என்றும் அழைக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் கிளைகள்

செயற்கை நுண்ணறிவு பல கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.

1. இயந்திரக் கற்றல்

இது உண்மையான உலகின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தரவை பகுப்பாய்வு செய்ய, விளக்க மற்றும் செயலாக்க ஒரு இயந்திரத்தின் திறனைக் கையாள்கிறது. 

2. இயற்கை மொழி செயலாக்கம்

ஓர் இயந்திரம் எழுத்து மற்றும் பேச்சு மொழியைப் புரிந்துகொண்டு மீண்டும் தொடர்பு கொள்வதற்காக அதை ஒருங்கிணைக்கும் திறனை வழங்குகிறது. இது வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சேவைகளை வழங்க முடியும்.

3. ரோபாட்டிக்ஸ்

ரோபாட்டிக்ஸ் என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கிய கிளைகளில் ஒன்றாகும். இது முக்கியமாக பல்வேறு பயன்பாடுகளில் ரோபோக்களை வடிவமைத்து பயன்படுத்துவதை உள்ளடக்கியது.

4. தெளிவற்ற தர்க்கம்

இது மருத்துவத் துறை, விண்வெளி ஆராய்ச்சி, வாகனங்களின் ஆட்டோமேஷன் போன்றவற்றில் முடிவுகளை எடுக்க வேண்டிய சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.

5. நிபுணர் அமைப்புகள்

இது ஒரு மனிதனின் நடத்தையைப் பின்பற்றி, அந்தத் துறையில் உள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடிய AI அடிப்படையிலான நிரலாகும். இந்த அமைப்புகள் வைரஸ்களைக் கண்டறிதல், கடன் சுயவிவரங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் தகவல்களை நிர்வகித்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

6. கணினி பார்வை

கணினி பார்வை மனித பார்வைக்கு ஒத்திருக்கிறது. இது படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற காட்சி உள்ளீடுகளை பகுப்பாய்வு செய்து அர்த்தமுள்ள தகவல்களை மீட்டெடுக்க இயந்திரங்களை அனுமதிக்கிறது. இது பொதுவாக எக்ஸ்-கதிர்கள், சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ அறிக்கைகள், 3டி மாதிரிகளை உருவாக்குதல் போன்றவற்றில் பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்

  • மருத்துவத் தறையில் நோயைக் கண்டறிவதில் மிகத் துல்லியமான முடிவுகளைக் காட்டுகின்றது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கதிரியக்க அறுவை சிகிச்சைகளில், நோய் பாதித்த பகுதிகளில் மட்டும் சிகிச்சை மேற்கொள்ள உதவுகின்றது.
  • விண்வெளி ஆய்வுகளில் மிகப் பெரும் பங்காற்றுகின்றது.
  • மனிதர்கள் செய்கின்ற துறை சார்ந்த தவறுகளை நீக்கப் பயன்படுகின்றது.
  • மனித குலத்தின் பல ஆபத்தான வரம்புகளைக் கடக்க உதவுகின்றது. சான்றாக, செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்வது, வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது, கடலின் ஆழமான பகுதிகளை ஆராய்வது என மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற செயல்களில் செயற்கை நுண்ணறிவு மிக திறமையாகச் செயல்படுகின்றது.
  • இடைவேளை இல்லாமல் 24 மணிநேரமும் உழைக்க வைக்கலாம்.
  • விவசாயத்தில் மனித உழைப்பை மிச்சப்படுத்தும் வகையில் விவசாய ரோபாக்கள் மூலம் விதைகள் நடுதல், அறுவடை செய்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு போன்ற அத்தியாவசிய விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும்.  
  • சாட் ஜி.பி.டி. செயற்கை நுண்ணறிவு தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்திக் தேவையான பதில்களைத் தருகிறது.
  • இராணுவத்துறை, வாகனத்துறை, சட்டத்துறை, தணிக்கைத்துறை, கலைத்துறை, அரசுத்துறை, நிதித்துறை முதலான துறைகளிலும் செயற்கை நுண்ணறிவால் பங்களிப்பைத் தருகின்றது.
  • பல உற்பத்தித் தளங்கள், முழு தானியங்கி முறையில் இயங்கி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவின் தீமைகள்

  • மனித மனத்தின் செயல்பாடுகள் வியப்பிற்குரியவை. அத்தகைய மனதை ஒரு கருவி ஆளுகை செய்வது என்பது மனிதன் தன்னையே இயந்திரத்திடம் அடிமையாக ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரங்கள், கணினிகள் போன்றவற்றை அமைப்பதற்கு பெரும் செலவுகள் தேவைப்படுகின்றன.