திங்கள், 24 மார்ச், 2025

திருக்குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்

 திருக்குற்றாலக் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

நூலாசிரியர்

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல்  திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது.

கதை அமைப்பு

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது. மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச் சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள் குறத்தி தலைவி. அவள் கணவன் தலைவன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட தலைவன் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

நூலின் சிறப்புகள்

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும்இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும்இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். குற்றாலக் குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றாலக் குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது.

 

 குறத்தி மலைவளம் கூறுதல்

பாடல் – 1

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;

விளக்கம்

ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்து வேண்டிக் கேட்பார்கள். வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;

ஞாயிறு, 23 மார்ச், 2025

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

 

பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல்

உலகு எங்கிலும் உள்ள எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. இன்றைய உலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் மனச்சிக்கலால் துன்புறுகின்றனர். உளநலத்தின் இயல்பு, உளநலத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிக்மண்ட் பிராய்டு என்பவர் ஏராளமான ஆய்வுகளை நடத்திக் காட்டியுள்ளார். இலக்கிய உருவாக்கத்திற்கும் உணர்வுகளின் கலவையாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள், பண்புகள் போன்றவற்றை இலக்கியத்தில் படைப்பதற்கும் பல்வேறுபட்ட உணர்வுகளே அடிப்படையாக அமைகின்றன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவது உளவியல் அணுகுமுறை எனப்படுகின்றது.

தமிழ் இலக்கியங்களில் உளவியல்

சங்க இலக்கியப் பாடல்கள் பெரும்பான்மையும் உளவியல் நோக்கிலேயே பாடப்பட்டுள்ளன. உயிர்களின் அறிவுநிலையை, அதற்கான உறுப்புகளை வரிசைப்படுத்திய தொல்காப்பியர், “ஆறறிவதுவே அவற்றொடு மனனே” (மரபியல்) என்று கூறியுள்ளார். ஆறு அறிவு என்பது கண்ணுக்குப் புலப்படாத மனம் என்று, “மனநலமே மன்னுயிர்க்கு ஆக்கம்” என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

தொல்காப்பியர் வரையறுத்துள்ள மெய்ப்பாடுகளை உற்று நோக்கும்போது, மனிதனின் மனநிலையை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பது அறியப்படுகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெரமிதம் வெகுளி உவகை என்ற

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்.பொருள்.252)

என்று மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர். இதனை இக்கால உளவியல் அறிஞர்கள், அச்சம்சார் உணர்ச்சிகள் (அச்சம், கவலை, பீதி, வெட்கம்), சினம்சார் உணர்ச்சிகள் (சினம், பொறாமை, வெறுப்பு), அன்புசார் உணர்ச்சிகள் (அன்பு, காதல், மகிழ்ச்சி, நகை, உற்சாகம்) என வகைப்படுத்தியுள்ளனர். இக்கால அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகத் தமிழர்கள் விளங்கியிருந்தனர் என்பது வியப்பான ஒன்று.

மெய்ப்பாடுகளும் உடல் பாதிப்புகளும்

அச்சம், கவலை, பீதி, வெட்கம், அழுகை போன்றவற்றால் உடல் உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புகளிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு முகபாவனை மாற்றம், குரல் வெளிப்பாட்டில் மாற்றம், குருதி அழுத்தம், அதிகரிப்பு, இதயத்துடிப்புச் சீரற்று இருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல், செரிமான உறுப்புகளில் மாற்றம் ஏற்படுதல், அதன் காரணமாகப் பசியின்மை, சோர்வு, உடல் மெலிதல் ஆகியவை ஏற்படுகின்றன. சான்றாக, வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. தலைவன் பொய்யுரைக்க மாட்டான் என்று அவன் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றாள் தலைவி. அவன் வராததை காலம் உறுதி செய்தபோது,

யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ (குறுந்.25)

எனத் தலைவன் தன்னைக் கைவிட்டால் தன் நிலைமை என்னாகும் என்று தலைவி நம்பிக்கை இழந்த மனிநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். இனி அவனை நினைத்து ஒன்றுமில்லை என்று எண்ணி அவனை மறந்து விடலாம் என்று எண்ணும்போது,

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது

இருப்பினெம் அளவைத் தன்றே (குறு.102)

என்று தன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிலை இழந்ததை உணர்கின்றாள். மேலும்,

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஆ ஒல்லெனக் கூவுனே கொல் (குறு.28)

என்று புலம்பித் தீர்க்கின்றாள். ”உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்” என்று ஊராரைப் பழிக்கின்றாள். இது மனச் சிதைவின் உச்சம் என்று கொள்ளலாம். உண்ணும் அளவைக் குறைத்தல், உடல் அழகு குறைதல், உடல் மெலிதல், பசலை பூத்தல் போன்ற பல மாற்றங்கள் அவளிடம் நிகழ்கின்றன. இது போன்று மெய்ப்பாடுகளில் ஏற்படுகின்ற சிதைவுகள் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பாதிக்கின்றன என்பதை உணர்ந்தே, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர்.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் காதலை நன்கு அறிந்த தோழி, அவளுடைய காதலை பெற்றோரிடம் தெரிவிக்கும் முறை சிறந்த உளவியல் பண்புகளைக் கொண்டது. காதலால் தவிக்கின்ற தலைவியின் உள்ளத்திற்கு அருமருந்து தலைவனைப் பற்றிய செய்தியைப் கேட்பதுதான் என்பதை உணர்ந்த தோழி,

அகவன் மகளே அகவன் மகளே

மனவுக் கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே

அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே (குறுந்.23)

என்று பாடுகின்றாள். தலைவியின் உளநோயைத் தீர்க்கும் மருத்துவச்சியாகத் தோழி செயல்படுவதைக் காண முடிகின்றது.

தலைவனின் உள நோய்

தலைவிக்கு உள நோய் ஏற்படும் முறையைப் பலவாறு வெளிப்படுத்தியுள்ள தொல்காப்பியர், தலைவனுக்கும் உள நோய் ஏற்படும் என்றும், அதனால் அவனுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை,

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு (தொல்.களவு.97)

என்ற நூற்பாவால் அறியலாம். தலைவியின் நினைவால் வாடுகின்ற தலைவன் தன் இயல்பினை உரைக்கின்ற தன்மையை,

காமம் காமம் என்பர் காமம்

அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்

முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோளாயே (குறுந்.204)

என்று பாடுகின்றான்.

முடிவுரை

மனநலம், உடல் நலம் இரண்டுமே மனிதனுக்குத் தேவை என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. உள்ளத்தில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும் என்பதற்காகவே தலைவனும் தலைவியும் அஃறிணைப் பொருள்களிடம் பேசுவது, அவற்றையே தூதாக அனுப்ப எண்ணுவது, தன் தோழி, பாங்கன் ஆகியோரிடம் முறையிடுவது, வாயில்கள் அவர்களுக்கு உதவி செய்வது எனப் பல உளவியல் முறையை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்

கற்கால நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனத்தைத் தொழில்நுட்பம் சார்ந்த உயிரினமாகப் பரிணாமம் கொள்ளச் செய்தது உலோகவியல். பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படுகின்ற பொன், செம்பு, தாமிரம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற தன்மையை ஆராய்கின்ற துறையாக உலோகவியல் செயல்படுகின்றது. உலோகங்களின் வகைகள்

19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலோகவியல் ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த உலோகவியல் ஒரு அறிவியல் துறையாக மாறியது. உலோகங்களைத் தனித்த உலோகம் (தங்கம்), கலப்பு உலோகம் (செப்பு + வெள்ளி = வெண்கலம்) என்று இருவகையாகப் பிரிக்கலாம். தாதுக்கள் சேகரிக்கப்படும் திறம், உலோகங்களின் அமைப்பு, அதன் எடை மற்றும் சுடர் நிறம், சூடுபடுத்தும்போது உண்டாகும் மணம் ஆகியவற்றின் அடிப்படையில் உலோகங்கள் வேறுபடுத்தி அறியப்பட்டன.

சங்க காலத்தில் பொன், வெள்ளி, இரும்பு

சங்க காலத்தில் தங்கத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. புறநானூற்றில் கழஞ்சு என்ற சொல் பொன்னைக் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் உலோகத் தாதுக்களைக் கண்டறிந்து, அவற்றை வெட்டி எடுக்கவும், அவற்றை உருக்கிப் பிரித்தெடுக்கவும், பிரித்தெடுத்த உலோகங்களைக் கொண்டு கருவிகள், அணிகலன்கள், எந்திரங்கள், பயன்பாட்டுப் பொருட்கள், படைக்கலங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்யவும் அறிந்திருந்தனர் என்ற செய்திகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.   

வெள்ளி குறித்து வெள்ளி அன்ன விளங்கும் சுதைஎன்று நெடுநல்வாடையும், செம்பு குறித்து செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து என்று மதுரைக்காஞ்சியும், இரும்பு குறித்து இரும்பு செய் கொல் எனத் தோன்றும் என்று  அகநானூறும் குறிப்பிடுகின்றன. இரும்பின் கண்டுபிடிப்பு சமூகத்தில் மிகப்பெரும் புரட்சியை விளைவித்தது. சங்க இலக்கியங்களில் இரும்பானது, பொன், கரும்பொன், இரும்பொன், ஊதுகுறடு, கருந்தாது எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

பொன்னைத் தோண்டி எடுத்தல்

பழந்தமிழர் மலையிலிருந்து பொன்னைத் தோண்டி எடுத்தனர். வேட்டைத் தொழில் புரியும் கானவன் ஒருவன் வளமான மலையில் யானைத் தந்தத்தைக் கொண்டு பொன்னைத் தோண்டி எடுக்கின்றான். இதனை,

யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வேன் (அகநானூறு28)

என்று அகநானூறு பாடுகின்றது.

பொன்னைப் புடமிடல்

அணிகலன்களுக்குரிய பொன்னானது இயற்கையாகவே தூய்மையானது, புடமிட்டுத் தூய்மையாக்கப் பெற்றது என இருவகைப்படும். புடமிட்டுத் தூய்மை செய்யப்பட்ட பொன்னால் செய்த காற்சிலம்பில் முத்துப் பரல்கள் ஒலிப்பதைப் பரிபாடல் காட்டுகின்றது. அதேபோல் வள்ளுவரும், “சுடச் சுடரும் பொன்போல்” என்று புடமிடும் நுட்பத்தைப் பதிவு செய்கின்றார்.

பொன் அணிகலன்கள்

சங்ககால மக்கள் பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அழகிய கலைநம்மிக்க அணிகலன்கள் செய்வதில் தேர்ந்திருந்தனர். அணிகலன்களின் வகைகளையும், வடிவங்களையும் சிறப்புகளையும் சிலப்பதிகாரமும், ஆற்றுப்படை நூல்களும் காட்டுகின்றன. பொன்னோடு பவளம், முத்து, மணிகள் போன்றவற்றைச் சேர்த்து அழகிய வேலைப்பாடமைந்த அணிகலன்களை உருவாக்கும் திறத்தை, “பொன்னும் துகிலும் முத்தும் மன்னிய” என்ற புறநானூற்று அடிகள் பதிவு செய்கின்றன. சிலப்பதிகாரத்தில் மாதவியின் கால் விரல்கள் முதல் உச்சி வரை அணிந்திருந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட அணிகலன்களை இளங்கோவடிகள் பட்டியலிடுகின்றார். யானை, குதிரை போன்ற விலங்குகளுக்கும் கலைநயம் மிக்க அணிகலன்களை அணிவித்தனர் என்பதை, “பொன்னணி யானை” என்கிறது பதிற்றுப்பத்து.  

வணிகம்தொழிலகம்

உலோகப் பொருள்களின் விற்பனைக்குத் தனியே தெருக்கள் இருந்தமையை, “பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்” என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. பொன் விற்கப்பட்டதால் அக்டைத்தெருவைப் “பொன்னுடை நியமம்“ என்றனர். உலோகத் தொழிலாளர்கள் கொல்லன்(பெரும்.20) “கம்மியன் (நெடுநல்.57) என்ற பெயர்களால் அறியப்பட்டனர்.  இரும்பை உருக்கினால் எஃகு கிடைக்கும். அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்தோரைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். இவர்களின் தொழிற்கூடம் உலை என்று அழைக்கப்பட்டது. இதை, இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்(புறநானூறு 170) என்று புறநானூறு கூறுகின்றது.

கொல்லர்கள் பயன்படுத்திய கருவிகள்

பழங்காலத்தில் கொல்லர்கள், துருத்தி, சுட்டுக்கோல், குறடு, கூடம் அல்லது சம்மட்டி, பட்டைக்கலை அல்லது உலைக்கல், அரம், மிதிதோல், உலை மூக்கு போன்ற பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன.

உலோகக்காசுகள்

உலோகத்தினால் ஆன காசுகள் புழக்கத்தில் இருந்தன. காசுகள் பெரும்பாலும் துளையுடன் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தன. பிற்காலத்தில் ஓட்டைக் காசுகள் என்ற ஒருவகைக் காசுகள் பழக்கத்தில் இருந்தன. பண்டமாற்றில் பொருளுக்கு அடுத்து பொற்காசுகள் மதிப்பீடாக அமைந்திருந்தன.

எந்திரங்கள்

இரும்பை உருக்கி வேளாண்கருவிகள், கரும்புபிழி எந்திரம், விலங்குகளிடம் இருந்து விளைபொருள்களைப் பாதுகாக்கும் பொறிகள், மதிலுறுப்புகள், எந்திரப்புழைகள், தானியங்கி எந்திரப் பொறிகள், படைக்கலன்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், போக்குவரத்து ஊர்திகளின் உறுப்புகள், எந்திரமேடை, தானியங்கி நீர் இயக்கிகள், எந்திரப்பாவை போன்றவற்றைச் செய்யும் திறன்களைப் பெற்றிருந்தனர். செம்பு போன்ற உலோகத்தினைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.  கரும்பு பிழி எந்திரத்தின் ஒலி, ஆண் யானையின் முழக்கத்தைப் போல இருந்தது என்பதை, “கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிறிற்றும்” என்று ஐங்குறுநூறு கூறுகின்றது.

தமிழரும் உலோகவியலும்

வெம்பக்கோட்டை, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் எண்ணற்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் தங்கப்பட்டம் முதலான அணிகளும், பொற்பனைக் கோட்டைப் பகுதியில் தங்க அணிகலன்களும், வெம்பக் கோட்டையில் நடைபெற்ற ஆய்வில் தங்கத்தாலியும் தமிழர்களின் உலோகவியல் பயன்பாட்டை வெளிக்காட்டுகின்றன. மேலும், உலோகக் கலவைகளை உருக்கு நிலைக்கு மேல் சூடாக்கி கரிமத்துடன் இணைக்கும் கரியகப் புடமிடல் உலோகவியல் நுட்பம் புழக்கத்தில் இருந்தமைக்குச் சான்று கூறுகின்றது. இதனால் ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தெரிகிறது.

முடிவுரை

தமிழர்கள் உலோகங்களை மிகத் திறமையாகக் கையாண்டனர் என்பதற்குப் பண்டைய போர்க்கருவிகளும், உலைக்களங்களும், பொற்காசுகளும், அணிகலன்களும் சான்றுரைக்கின்றன.