பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்
கற்கால நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனத்தைத் தொழில்நுட்பம் சார்ந்த உயிரினமாகப் பரிணாமம் கொள்ளச் செய்தது உலோகவியல். பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படுகின்ற பொன், செம்பு, தாமிரம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற தன்மையை ஆராய்கின்ற துறையாக உலோகவியல் செயல்படுகின்றது. உலோகங்களின் வகைகள்
19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலோகவியல் ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த உலோகவியல் ஒரு அறிவியல் துறையாக மாறியது. உலோகங்களைத் தனித்த உலோகம் (தங்கம்), கலப்பு உலோகம் (செப்பு + வெள்ளி = வெண்கலம்) என்று இருவகையாகப் பிரிக்கலாம். தாதுக்கள் சேகரிக்கப்படும் திறம், உலோகங்களின் அமைப்பு, அதன் எடை மற்றும் சுடர் நிறம், சூடுபடுத்தும்போது உண்டாகும் மணம் ஆகியவற்றின் அடிப்படையில் உலோகங்கள் வேறுபடுத்தி அறியப்பட்டன.
சங்க காலத்தில் பொன், வெள்ளி, இரும்பு
சங்க காலத்தில் தங்கத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. புறநானூற்றில் கழஞ்சு என்ற சொல் பொன்னைக் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் உலோகத் தாதுக்களைக் கண்டறிந்து, அவற்றை வெட்டி எடுக்கவும், அவற்றை உருக்கிப் பிரித்தெடுக்கவும், பிரித்தெடுத்த உலோகங்களைக் கொண்டு கருவிகள், அணிகலன்கள், எந்திரங்கள், பயன்பாட்டுப் பொருட்கள், படைக்கலங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்யவும் அறிந்திருந்தனர் என்ற செய்திகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
வெள்ளி குறித்து “வெள்ளி அன்ன விளங்கும் சுதை” என்று நெடுநல்வாடையும், செம்பு குறித்து “செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து” என்று மதுரைக்காஞ்சியும், இரும்பு குறித்து “இரும்பு செய் கொல் எனத் தோன்றும்” என்று அகநானூறும் குறிப்பிடுகின்றன. இரும்பின் கண்டுபிடிப்பு சமூகத்தில் மிகப்பெரும் புரட்சியை விளைவித்தது. சங்க இலக்கியங்களில் இரும்பானது, பொன், கரும்பொன், இரும்பொன், ஊதுகுறடு, கருந்தாது எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.
பொன்னைத் தோண்டி எடுத்தல்
பழந்தமிழர் மலையிலிருந்து பொன்னைத் தோண்டி எடுத்தனர். வேட்டைத் தொழில் புரியும் கானவன் ஒருவன் வளமான
மலையில் யானைத் தந்தத்தைக் கொண்டு பொன்னைத் தோண்டி எடுக்கின்றான். இதனை,
யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வேன் (அகநானூறு28)
என்று அகநானூறு பாடுகின்றது.
பொன்னைப் புடமிடல்
அணிகலன்களுக்குரிய பொன்னானது இயற்கையாகவே தூய்மையானது, புடமிட்டுத்
தூய்மையாக்கப் பெற்றது என இருவகைப்படும். புடமிட்டுத் தூய்மை செய்யப்பட்ட பொன்னால்
செய்த காற்சிலம்பில் முத்துப் பரல்கள் ஒலிப்பதைப் பரிபாடல் காட்டுகின்றது. அதேபோல்
வள்ளுவரும், “சுடச் சுடரும் பொன்போல்” என்று புடமிடும் நுட்பத்தைப் பதிவு செய்கின்றார்.
பொன் அணிகலன்கள்
சங்ககால மக்கள் பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அழகிய கலைநம்மிக்க
அணிகலன்கள் செய்வதில் தேர்ந்திருந்தனர். அணிகலன்களின் வகைகளையும், வடிவங்களையும் சிறப்புகளையும்
சிலப்பதிகாரமும், ஆற்றுப்படை நூல்களும்
காட்டுகின்றன. பொன்னோடு பவளம், முத்து, மணிகள் போன்றவற்றைச் சேர்த்து அழகிய வேலைப்பாடமைந்த
அணிகலன்களை உருவாக்கும் திறத்தை, “பொன்னும்
துகிலும் முத்தும் மன்னிய” என்ற புறநானூற்று
அடிகள் பதிவு செய்கின்றன. சிலப்பதிகாரத்தில் மாதவியின் கால் விரல்கள் முதல் உச்சி வரை
அணிந்திருந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட அணிகலன்களை இளங்கோவடிகள் பட்டியலிடுகின்றார்.
யானை, குதிரை போன்ற விலங்குகளுக்கும் கலைநயம் மிக்க அணிகலன்களை அணிவித்தனர் என்பதை,
“பொன்னணி யானை” என்கிறது பதிற்றுப்பத்து.
வணிகம் –
தொழிலகம்
உலோகப் பொருள்களின் விற்பனைக்குத் தனியே தெருக்கள் இருந்தமையை, “பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்” என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. பொன் விற்கப்பட்டதால்
அக்டைத்தெருவைப் “பொன்னுடை நியமம்“ என்றனர். உலோகத் தொழிலாளர்கள் “கொல்லன்” (பெரும்.20)
“கம்மியன்” (நெடுநல்.57) என்ற பெயர்களால் அறியப்பட்டனர். இரும்பை உருக்கினால் எஃகு கிடைக்கும். அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்தோரைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். இவர்களின் தொழிற்கூடம் உலை என்று அழைக்கப்பட்டது. இதை, “இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்” (புறநானூறு 170) என்று புறநானூறு கூறுகின்றது.
கொல்லர்கள் பயன்படுத்திய கருவிகள்
பழங்காலத்தில் கொல்லர்கள், துருத்தி, சுட்டுக்கோல், குறடு, கூடம் அல்லது
சம்மட்டி, பட்டைக்கலை அல்லது உலைக்கல், அரம், மிதிதோல், உலை மூக்கு போன்ற பல்வேறு கருவிகளைப்
பயன்படுத்தினர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன.
உலோகக்காசுகள்
உலோகத்தினால் ஆன காசுகள் புழக்கத்தில் இருந்தன. காசுகள் பெரும்பாலும்
துளையுடன் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தன. பிற்காலத்தில் ஓட்டைக் காசுகள் என்ற ஒருவகைக்
காசுகள் பழக்கத்தில் இருந்தன. பண்டமாற்றில் பொருளுக்கு அடுத்து பொற்காசுகள் மதிப்பீடாக
அமைந்திருந்தன.
எந்திரங்கள்
இரும்பை உருக்கி வேளாண்கருவிகள், கரும்புபிழி எந்திரம், விலங்குகளிடம்
இருந்து விளைபொருள்களைப் பாதுகாக்கும் பொறிகள், மதிலுறுப்புகள், எந்திரப்புழைகள், தானியங்கி
எந்திரப் பொறிகள், படைக்கலன்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், போக்குவரத்து ஊர்திகளின்
உறுப்புகள், எந்திரமேடை, தானியங்கி நீர் இயக்கிகள், எந்திரப்பாவை போன்றவற்றைச் செய்யும்
திறன்களைப் பெற்றிருந்தனர். செம்பு போன்ற உலோகத்தினைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
கரும்பு பிழி எந்திரத்தின் ஒலி, ஆண் யானையின்
முழக்கத்தைப் போல இருந்தது என்பதை, “கரும்பின்
எந்திரம் களிற்றெதிர் பிறிற்றும்” என்று ஐங்குறுநூறு
கூறுகின்றது.
தமிழரும் உலோகவியலும்
வெம்பக்கோட்டை, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் எண்ணற்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருநை ஆற்றங்கரையில்
தங்கப்பட்டம் முதலான அணிகளும், பொற்பனைக் கோட்டைப் பகுதியில் தங்க அணிகலன்களும்,
வெம்பக் கோட்டையில் நடைபெற்ற ஆய்வில் தங்கத்தாலியும் தமிழர்களின் உலோகவியல் பயன்பாட்டை
வெளிக்காட்டுகின்றன. மேலும், உலோகக் கலவைகளை உருக்கு நிலைக்கு மேல் சூடாக்கி கரிமத்துடன் இணைக்கும்
கரியகப் புடமிடல் உலோகவியல் நுட்பம் புழக்கத்தில் இருந்தமைக்குச்
சான்று கூறுகின்றது. இதனால் ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தெரிகிறது.
முடிவுரை
தமிழர்கள் உலோகங்களை மிகத் திறமையாகக் கையாண்டனர் என்பதற்குப் பண்டைய போர்க்கருவிகளும், உலைக்களங்களும், பொற்காசுகளும், அணிகலன்களும் சான்றுரைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக