செவ்வாய், 14 அக்டோபர், 2025

TANSCHE - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரை விரிவடைந்தது. டெல்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத், கர்நாடகம், சூரத், தஞ்சை ஆகிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் உடைமைகளாயின. தஞ்சை சரபோஜி மன்னன், வெல்லெஸ்லி பிரபுவிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு 1799இல் தான் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டான்.

வேலூர்க் கலகம்

ஆங்கிலேயச் சேனாதிபதி இராணுவச் சிப்பாய்களின் நடைமுறையில் சில ஒழுக்க விதிகளைப் பிறப்பித்ததன் விளைவாக வேலூர்க் கோட்டையில் புதிய நடைமுறைகளை எதிர்த்துக் கலகம் தோன்றியது. திப்புவின் மக்கள் இக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டனர். அதனால் கிளர்ந்து எழுந்த சிப்பாய்கள் நூறு ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இது வரலாற்றில் வேலூர்க் கலகம் என்றும், வடக்கில் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகவும் கருதப்பட்டது.

காங்கிரஸ் பேரவை

கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்களுக்கு இந்திய அரசாட்சியிலும், அரசாங்க அலுவல்களிலும் பதவிகள் கொடுக்கப்ட வேண்டும் என்று அறிஞர் சிலர் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, இந்திய தேசியப் பேரியக்கம் ஒன்றை ஏற்படுத்தினர். இதுவே காங்கிரஸ் பேராயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் பாலகங்காதர திலகர் போன்ற இந்தியத் தலைவர்கள் சிறந்து விளங்கினர். இவ்வியக்கத்தின் முயற்சியால் படித்த இந்தியர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், பலதுறை உயர் அலுவலர்களாகவும் நியமனம் பெற்றனர். 1914இல் இருந்து காந்தியடிகள் இவ்வியக்கத்தில் செல்வாக்கு பெற்றதால், அதன் பின் சுதந்திரப் போராட்டம் அகிம்சைவழி அறப்போராட்டமாக மாறியது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

தமிழ்நாட்டு விடுதலைப்போரில் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராசர், தந்தை பெரியார் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கப்பலோட்டிய தமிழன்

சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த, சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் விட்டு கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்பட்டவர் வ.உசி. திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த செம்மல் என்னும் பெயர் பெற்றார்.

பாரதியார்

பாரதியார் தம் உணர்வூட்டும் கவிதைகளால் மக்களின் மனதில் விடுதலை வேட்கையை உண்டாக்கினார். இவரது கவிதைகளையும் இவர் நடத்திய இதழ்களையும் ஆங்கில அரசு தடை செய்து அவரை கைது செய்ய முனைப்புக் காட்டியது.

 தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் இராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரால் பேரியக்கமாக வளர்ந்து நின்றது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனிமனித விடுதலையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தந்தது. இவர்களோடு வ.வே.சு.ஐயர், திரு.வி.க, பா.ஜீவானந்தம், கே.பி.சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற பலரும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டனர்.

TANSCHE - முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழக வரலாற்றில் தெளிவற்ற ஆட்சிக் காலங்களாக அமைந்தவை களப்பிரர் காலமும் முகமதியர் காலமுமே ஆகும். முகமதியர் வடக்கில் இருந்த நாடுகளான தேவகிரி, துவார சமுத்திரம் ஆகிய ஆட்சிப் பகுதிகளை வென்று தக்காணத்திற்கு வந்தனர். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டனர். தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன. பின்னர் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் தமிழகத்தின் மேல் படையெடுத்தனர். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் மேற்கொண்ட போர், தமிழகத்தில் முகமதியர் குடியேற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தொடக்கமாக அமைந்தது.

மாலிக்காபூர்

மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், அவர் புதல்வர்களான சுந்தரபாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டனர். சுந்தரபாண்டியன் அரியணையை வீர பாண்டியனுக்கு வழங்கினார். இதனால் இருவருக்குமிடையே பூசல் ஏற்பட்டது. இந்நிலையில் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த மாலிக்காபூரை உதவிக்கு அழைத்தான் சுந்தர பாண்டியன்.

வீர பாண்டியப் படைகளைத் தாக்கி முன்னேறிய மாலிக்காபூர் படைகள் உய்யக்கொண்டான் திருமலையை முகாமாகக் கொண்டு கண்ணனூர், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடுரமாகத் தாக்கியது. இதனால் மதுரையை விட்டு வெளியேறினான் சுந்தரபாண்டியன். மாலிக்காபூர் இராமேஸ்வரம் வரை படை நடத்தி வென்று அங்கு மசூதி ஒன்றை நிறுவினான். பெரும் செல்வத்தோடு டெல்லி புறப்பட்ட மாலிக்காபூர், படையின் சிறு பகுதியை மதுரையிலே விட்டுச் சென்றான். வேணாட்டடிகள், இரவிவர்ம குலசேகரன் இருவரின் துணையுடன் விக்கிரம பாண்டியன் மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டு விரட்டினான். மாலிக்காபூருக்குப் பின்…

மாலிக்காபூர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கில்ஜி சுல்தான்களின் ஆட்சி மறைந்து துக்ளக் சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது.

முகமதுபின் துக்ளக்

சுல்தான் கியாசுதீன் தன் மகனான முகமதுபின் துக்ளக்கை தென்னகம் நோக்கி படையெடுக்க அனுப்பினான். இப்படை முதலில் தோற்றது. பின்னர் பிரதாப ருத்திரதேவனை வென்று, மலபாரில் நுழைந்து தமிழகத்தை வெற்றி கண்டது. பாராக்கிரம பாண்டியன் கைது செய்யப்பட்டான். முகமது பின் துக்ளக் டில்லி சுல்தான் ஆனான். மதுரையில் அரச பிரதிநிதியை அமர்த்தினான். இவனது ஆட்சியின் கீழ் தென்னகம் 23ஆவது மாநிலமாக அமைந்தது.

இவனுக்குப் பிறகு சலாவுதீன் அசன் 1333 முதல் 1378 வரை மதுரையை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக அமைத்து ஆட்சி செய்தான். இதற்கிடையில் பல போர்கள் ஏற்பட்டன. மதுரை சுல்தான்கள் பலர் இறந்து போயினர். இறுதியில், மதுரையில் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துது.

சமூக நிலை

இவர்கள் உருவச்சிலை வழிபாட்டை எதிர்த்தனர்.  மாலிக்காபூரின் படையெடுப்பால் சீரங்கம், மதுரை போன்ற ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. தமிழகத்துப் பேரரசுகள் சிற்றரசுகளாக மாறின. முகமதியர்களின் சமயச்சார்பு அரசியலால் மக்கள் பல ஊர்களில் கூட்டம் கூட்டமாக இசுலாம் மதத்தைத் தழுவினர். இசுலாமியச் சமயமும், சாராசானிக் கட்டடக் கலையும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றன.

சாராசானிக் கட்டடக்கலை

முகமதிய சாராசானிக் கட்டடக்கலை, ஐரோப்பிய கட்டடக்கலையும் இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் சேர்ந்து உருவாக்ப்பட்டது ஆகும். குவி மாடங்களால் கட்டப்படும் இக்கட்டடக்கலை, தமிழ் இலக்கியங்கள் கூறும் எழுநிலை மாடங்களைப் போல பருவச் சூழலுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டவையாகும். உயர்ந்த கோபுர அமைப்பு, பூ வேலைப்பாடுகள் அமைந்த கட்டட முனைகள், விதானங்கள் எனப் பலவும் சாராசானிக் கட்டடக்கலையில் அமைந்துள்ளன. இதற்கு எடுத்துக்கட்டு சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனை ஆகும். தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் சாராசானிக் கட்டடம் இதுவே ஆகும்.

சென்னை உயர்நீதி மன்றம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால், மதுரையின் நாயக்கர் மகால் ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் பல கோட்டைகளை அழித்திருந்தாலும், இச்சாராசானிக் கட்டங்கள் மட்டும் அழியாமல் மீண்டதற்கு இதன் சிறப்பே காரணமாகும்.

இலக்கியங்கள்

சீறாப்புராணம், படைப்போர் இலக்கியங்கள், நொண்டி நாடகங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் முதலியன இக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

TANSCHE - மராட்டியர்

 

மராட்டியர்

விசயநகர ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் மராட்டியர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர். தக்காணத்தில் விசயநகரம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இசுலாமியர் அதன் சுற்றுப் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாசி

பீசப்பூர் சுல்தானின் தளபதியான சாசி (சிவாசியின் தந்தை) கர்நாடகம், தஞ்சை, செஞ்சி, தேவனாம்பட்டினம், பறங்கிப்பேட்டை முதலியவற்றைக் கைப்பற்றினான். கைப்பற்றிய இடங்களுக்கு ஆளுநராக அவனே அமர்த்தப்பட்டான். சுல்தான்களின் ஆதிக்கத்தை உதறித் தள்ளினான். மராட்டிய மொழியை ஆட்சி மொழியாக்கினான். சாசியின் மூத்த புதல்வன் சிவாசி இசுலாமிய அரசுகளுக்கு எதிராக மராட்டியத்தில் மராட்டிய அரசை நிறுவினார். சாசியின் இரண்டாம் மனைவி துர்காபாயையும், அவள் வழி வந்த வெங்காசியையும் புறக்கணித்தார். 1664இல் குதிரை விபத்தில் உயிர் இழந்தார்.

சிவாசி

மராட்டியர் ஆட்சியை விரிவுபடுத்த பிற பகுதிகளின் மேல் படையெடுத்தான் சிவாசி. ஸ்ரீசைலம், திருப்பதி வழியே காஞ்சி, செஞ்சி, வேலூர் முதலிய இடங்களைக் கைப்பற்றினான். பறங்கிப்பேட்டை, திருவதிகை, தேவனாம்பட்டினம், புவனகிரி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொள்ளிட ஆற்றின் திருமாலப்பாடியில் முகாமிட்டான்.

வெங்காசி

சாசிக்குப் பிறகு வெங்காசி கர்நாடகப் பகுதியின் ஆளுநராகப் பொறுப்பு ஏற்றான். பீசப்பூர் சுல்தான் மறைந்த பின்னர் வெங்காசி தஞ்சை மீது படையெடுத்து செங்கமலதாசை அகற்றிவிட்டு தஞ்சையில் மராட்டியர் ஆட்சியைத் துவக்கினான். சிவாசியுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வெங்காசி தஞ்சையைத் தர மறுக்க அவனை கைது செய்ய முயன்றார். வெங்காசி தப்பி ஓடினான்.  பின்னர் சிவாசி செஞ்சியைத் தலைமை இடமாகக் கொண்டு தென்பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை சாந்தாசியிடம் கொடுத்துவிட்டு வடக்கிற்குத் திரும்பினார். வெங்காசி சாந்தாசியுடன் உடன்படிக்கை மேற்கொண்டு தஞ்சையை மீண்டும் ஆண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் பெரும் வெள்ளமும், கடல் அரிப்பும் மக்களை வாட்டியது. அதிக வரி வசூலால் மக்கள் அவதிப்பட்டனர். வெங்காசியின் மறைவுக்குப்பின் அவனது மகன் சாசி ஆட்சிக்கு வந்தான்.

சாசி

இவனது ஆட்சிக்காலத்தில் அரசியல் நிலை சிக்கல் நிறைந்து காணப்பட்டது. மதுரையின் சில பகுதிகளை சேதுபதி மற்றும் மைசூர் உடையாருடன் இணைந்து கைப்பற்றினான். முகலாயத் தளபதி தஞ்சையைக் கைப்பற்ற வர, சாசி பெருந்தொகை கொடுத்துத் தப்பினான். சேதுபதிக்கு உதவி செய்து  புதுக்கோட்டையைப் பெற்றான். திருக்காட்டுப் பள்ளியையும், அறந்தாங்கியையும் கைப்பற்றினான். மருத்துவமனைகள், சிவில் நீதிமன்றங்களை ஏற்படுத்தினான்.

சரபோஜி

சாசிக்கு வாரிசு இல்லாததால் அவனது தம்பி சரபோசி ஆட்சிக்கு வந்தான். முதலாம் சரபோசி, சிவகங்கையின் தோற்றத்துக்கும், இராமநாதபுரம் ஐந்தாகப் பிரிவதற்கும் காரணமாக இருந்தார். புலவர்களைப் போற்றுவதிலும், கோயிற்பணி செய்வதிலும் ஈடுபட்டார்.

துக்காசி

முதலாம் சரபோசிக்கு வாரிசு இல்லாததால் அவன் தம்பி துக்காசி ஆட்சிக்கு வந்தான். கர்நாடக நவாபின் முன்னேற்றத்தால் தஞ்சை அவருக்குத் திறை செலுத்தியது. இராமநாதபுரத்திலும் புதுக்கோட்டையிலும் இருந்த அரசியல் நிலைகளைப் பயன்படுத்தித் தொல்லைகளைக் கொடுத்தான். இவனுக்குப் பின் தஞ்சை சிலகாலம் முடங்கியது. பிரதாபசிங் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை சீரானது.

பிரதாப சிங்

அரசியல் நுட்பமும் மக்களின் ஆதரவும் பெற்று தஞ்சையை ஆட்சி புரிந்தான். கர்நாடக நவாப் தஞ்சையைக் கைப்பற்றிப் பிரதாப சிங்குக்கு ஓய்வூதியம் கொடுத்து ஓய்வு பெறச் செய்தான். இதை அறிந்த மராட்டிய மன்னன் சாகு, தன் படையினை அனுப்பி கர்நாடகத்தில் நவாப் ஆட்சியைத் தடுமாறச் செய்தான். பிரதாப சிங் மீண்டும் தஞ்சை அரசன் ஆனான். ஆங்கிலேயர்களுடன் நட்பு கொண்டு தன் நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான்.

துல்சாசி

இவன் ஆட்சிக் காலத்தில் ஐதர்அலி படையெடுப்பு நடைபெற்றதால், அவர்களுக்கு நான்கு இலட்ச ரூபாயும், நான்கு யானைகளையும் கொடுத்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டான். ஆங்கிலேயரின் துணையுடன் தஞ்சையைக் கைப்பற்றினான். அதற்காக, ஆங்கில அரசுக்கு 277 கிராமங்களைப் பரிசாக அளித்தான். இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியுடன் வாழ்ந்தனர்.

அமர்சிங்

துல்சாசிக்குப பிறகு அவனது மகன் இரண்டாம் சரபோசி சிறுவனாக இருந்தமையால் அமர்சிங் ஆளுநராகப் பதவிக்கு வந்தான். இதனால் ஆங்கில அரசு வரியை மேலும் உயர்த்தியது. மக்கள் வரிச்சுமையால் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றனர். ஆங்கில அரசு வரியைக் குறைத்தது. பிறகு தானே ஆள விரும்பி தஞ்சை அரசன் ஆனான்.

இரண்டாம் சரபோசி

தஞ்சையின் அரசனாக இரண்டாம் சரபோசி ஆட்சிப் பொறுப்பு ஏற்றான். தஞ்சைக் கோட்டையையும் வல்லத்தையும் தான் வைத்துக் கொண்டு தஞ்சை நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தான். தஞ்சை சென்னையுடன் இணைக்கப்பட்டது. இவர்களின் குடும்பத்திற்கு ஓய்வு ஊதியம் வழங்கியது ஆங்கில அரசு.

மராட்டியர் ஆட்சி முறை

வருவாய் அதிகாரிகள் திவான் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். பவன பண்டிதர் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து வரிவசூல் முறையும் நீர்பாசனம் பெறும் வசதியும் இருந்தது. தாபிர் பண்டிதர் உருவாக்கிய அமணி துறை வரித்திட்டம் இவர்கள் ஆட்சியில் அதிகாரிகள், விவசாயிகளைச் சூறையாட வழிவகை செய்தது.

கலை இலக்கியப் பணிகள்

சரபோசி மன்னன், சரசுவதி மகாலினை உருவாக்கி 2200க்கும் மேற்பட்ட சுவடிகள், மருத்துவம், காப்பியம், இலக்கியம், இசை, கட்டடக்கலை, வானியல் தொடர்பான சுவடிகளைத் திரட்டி அடுக்கினார். 1805இல் ஒரு அச்சுக் கூடத்தைச் சரபோசி நிறுவினார். தேவநாகரி எழுத்துகளில் அச்சிடும் தொழில் அதில் நடைபெற்றது.

சாசி மன்னன் காலத்தில் 46 புலவர்கள் வாழ்ந்தனர். இராமபத்திர தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர் என்ற பெரும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர். அலூரி குப்பண்ணா என்ற தெலுங்குப் புலவரைத் துல்சாசி ஆந்திர காளிதாசர் என்று அழைத்தார். தமிழ்ப்புலவர்கள் தல புராணங்களும், பக்திப் பாடல்களுக்கு உரைநூல்களும் படைத்தனர். தாயுமானவர், வைத்தியநாத தேசிகர், சுவாமிநாத தேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் முதலியோர் தஞ்சையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஆவர்.