முக்கூடற்பள்ளு
மூத்த பள்ளி நாட்டு வளம் உரைத்தல்
பாடல்
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே
விளக்கம்
தென்னை மரத்தின் இளநீரை, அதன் அருகில் வளர்ந்திருக்கும் பாக்கு மரம் தாங்குகின்றது. பாக்கு மரத்தின் குலைகளை மாமரங்கள் தாங்குகின்றன. மாமரங்களின் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தாங்குகின்றன. பலாவின் கனிகளை வாழை மரங்கள் தாங்குகின்றன. வாழை மரங்களின் குலைகளை மாதுளங் கொடிகள் தாங்குகின்றன. இத்தகைய வளம் உடையது ஆசூர் வடகரை நாடு.