சனி, 20 ஜூலை, 2024

பண்டைத் தமிழகத்தின் விளையாட்டுகள்

பண்டைத் தமிழகத்தின் விளையாட்டுகள்

 ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் விளையாட்டுகளும் பொழுது போக்கும் முக்கியமானவையாகும். பண்டைய தமிழகத்து மக்களின் விளையாட்டுகளைப் பின்வருமாறு காணலாம்.

குழந்தைகள் விளையாட்டு

  • குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடினர்.
  • முச்சக்கரத் தேர் ஓட்டுவர்.
  • பொம்மை வைத்தாடுதல், மடுவில் குதித்து மூழ்கி மண் எடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
  • குழந்தைகளுக்கு அம்புலி காட்டி விளையாடுவதுமுண்டு.
  • பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப்போல செதுக்கப் பொருத்தி வைத்து விளையாடினர் என்பதைக் குறுந்தொகை 61ஆவது பாடல் காட்டுகின்றது.

சாதாரண மக்களின் விளையாட்டு

  • கட்டங்கள் அமைத்து, வட்டாடுவதையும், கால் பந்தாட்டத்தையும் சாதாரண மக்கள் விளையாடினர்.
  • ஆடவரும் பெண்டிரும் ஆறுகளிலும் குளங்களிலும் புனலாடி மகிழ்ந்துள்ளனர்.

ஆண்களின் விளையாட்டுகள்

  • உடலை ஆற்றுலுடையதாக வளர்த்து மற்போர் செய்வது ஒரு விளையாட்டு அதைக் கண்டு களிப்பது பொழுது போக்காகியது.
  • விலங்குகளைக் கருவியாகக் கொண்டு நடத்தப்படும் போட்டிகளான கடாப்போர், கோழிப்போர், ஏறுதழுவல் ஆகிய விளையாட்டுகள் ஆண்களின் விளையாட்டில் முக்கியத்துவம் பெற்றன.
  • மன்னர்களுக்கு வேட்டையாடுதல் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

பெண்களின் விளையாட்டுகள்

  • பந்துகளைக் கொண்டு கழங்காடுதல் பெண்களின் விளையாட்டாகும்.
  • பாவைகளை வைத்தாடும் ஓரை என்ற விளையாட்டு முக்கியப் பொழுது போக்காகும்.
  • மணற்பாவை வனைந்து விளையாடினர். இது வண்டலிழைத்தல் எனப்பட்டது.
  • தண்ணீரில் பாய்ந்து நீராடி விளையாடுவதுண்டு.
  • அம்மானை, ஊசல் ஆகியனவும் பெண்களின் விளையாட்டுகளாகும்.
  • விளையாடும்போது வரிப்பாட்டுபாடுவர்.

 

பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

 பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

பண்டைத் தமிழகத்தில் மக்கள் பல்வேறு அணிகலன்களால் தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். ஆண்களும் பெண்களுக்கு இணையாக அணிகலன்கள் அணிந்திருந்தமையை இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. தங்க அணிகளும், வெள்ளி அணிகளும், சங்கு அணிகளும் புழக்கத்தில் இருந்தன.

மகளிர் அணிகலன்களின் வகைகள்

    கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளை மீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகிய அணிகலன்களைப் பெண்கள் அணிந்திருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

    இவை தவிர, மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச்சங்கிலி, பொன்ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி ஆகிய அணிகலைன்களையும் பெண்கள் அணிவதுள்ளனர். பெண்மக்கள் தம் காதுகளைத்தொங்கத் தொங்க வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்றும், வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பிணை என்றும் பெயர். நெல்லைத் தின்ன வந்த கோழிகளின்மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி எறிவார்களாம். அக்காலத்தில் குழைகள் அவ்வளவு மலிந்திருந்தன என்பதைப் பட்டினப்பாலை 20 – 25 கூறுகின்றது.

    கைவளைகளில் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டன. பெண்கள் கால்விரல்களில் மோதிரம் அணியும் பழக்கம் இருந்துள்ளது.

    பெண்கள் அணிந்த சிலம்புகளுள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.

பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை ஐந்து வகைப்படும். அவை, மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என்பனவாகும்.

பெண்களின் தலைக்கோலம்

தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள் அளவு கடந்த விருப்பதைக் காட்டி வந்தனர். அக்காலத்தில் ஒப்பனைக் கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர் என்பதைப் புறநானூறு 147ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். கூந்தலில் பலவகையான மலர்களைச் சூட்டிக் கொள்வர். பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன என்பதைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது. மகரவாய், வகிர் என்ற தலையணிகளையும், மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள் அணிந்திருந்தனர்.

    மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டியுள்ளனர். கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்தி, அதை இரு தொகுதியாக வகிர்ந்து பின்னவிட்டுக் கொண்டனர். கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில் தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்ந்தனர். இக்காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் தமிழ்ப்பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து முழுகும் வழக்கம் இருந்து வந்தது.

    பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டனர். மைதீட்டும் குச்சிக்குக் கோல் என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின் பெண்கள் கண்ணை “உண்கன்“ என்று கூறுவதுண்டு.

ஆண்களின் அணிகலன்கள்

ஆண்மக்கள் மதாணி, முத்துமாலை, வெள்ளிக்கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்திருந்தனர்.  ஆடவர் தலைமுடி வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப்பட்டிருக்கும். தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர். குண்டலம் ஆண்களின் முக்கிய அணியாக இருந்துள்ளது.

குழந்தை அணிகலன்கள்

குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும், பிறையும், மூவடம் கோர்த்த பொன் சங்கிலியும் பூட்டியுள்ளனர். கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும் அணி செய்தன. குழந்தைகளின் விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள் பூட்டினர். மணிகள் உள்ளிட்ட சதங்ககைள், பொன் இரட்டைச் சரிகள் கால்களிலும், மணியும் பவழமும் கோத்த அரைஞாண் இடையிலும் அணிவிக்கப்பட்டிருந்தன. சதங்கைகளின் பூட்டு வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்டன என்று கலித்தொகைப் பாடல்கள் 84,85,86 தெரிவிக்கின்றன.

 --------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, 

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

பண்டைத்தமிழரின் உணவு

 

பண்டைத்தமிழரின் உணவு

பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைப்பதில் தேர்ந்திருந்தனர். அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகள் வேறுபட்டன. காய்கறிகளோடு இறைச்சி உணவும் விரும்பி உண்ணப்பட்டது. பலவகையான மது வகைகளையும் விரும்பி அருந்தினர். மன்னர்கள் இரவலர்க்கு அளித்த விருந்துகளில் பெரிதும் புலால் உணவே பரிமாறப்பட்டது.  

அரிசி உணவு

இராசா அன்னம் என்ற உயர்ரக நெல்லை அரிசியாக்கி உண்டனர். அரிசியைப் புழுக்கிக் காய வைத்து இரும்பு உலக்கையினால் குத்தி அரிசியாக்கினர். பண்டைத் தமிழர்கள் அரிசிச் சோற்றை சிறப்பு உணவாகக் கொண்டனர். புழுங்கலரிசி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையில் சமைத்தனர் (புறம்.399). வரகு, சாமை முதலிய சிறுதானிய அரிசி வகைகளும் பயன்பாட்டில் இருந்துள்ளன. சோற்றுக்கான அரிசி முல்லைப்பூப்போல வெண்மையாகவும், மென்மையாகவும் இருந்தது. ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ, முரிவோ காணப்படாதவாறு, சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக வெந்த நிலையில் சமைத்து உண்டனர். பழஞ்சோறு மக்களால் விரும்பி உண்ணப்பட்டது. சோற்றோடு காய்கறி வகைகள் சேர்க்கப்பட்டன. வேடர்கள் புளிச்சோறை விரும்பி உண்டமையைப் பொருநராற்றுப்படை (107) கூறுகின்றது. கடுகு தாளித்து காய்கறிகளைச் சமைத்தனர். மிளகு, உப்பு, புளி உணவில் சேர்க்கப்பட்டது. நெய்சோற்றை நண்டுக் கறியோடு உண்டனர் என்பதைச் சிறுபாணாற்றுப்படை (193-195) கூறுகின்றது.  நெய்சோற்றோடு காய்கறி வகைகளையும் உண்டனர்.

கஞ்சி

அரிசி, கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடித்தனர். புளிக்க வைத்த மாவைக் கரைத்து புளிங்கூழ் ஆக்கிக் குடித்தனர்.

சமையல் நுணுக்கங்கள்

தயிர்க்குழம்பு வைத்த தலைவியைக் குறுந்தொகை காட்டுகின்றது (குறுந்.167) மாங்கனிச் சாறும், களாப்பழமும், துடரியும், நாவற்பழமும் புளிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன. வரால் மீன் குழம்புக்கு மாங்காய் புளியாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் புறநானூறு (புறம்.399) கூறுகின்றது. மாதுளங்காயை மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டு பசுவெண்ணெயில் பொரித்து உண்டனர். பெண்கள் விருந்தினர்க்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறினர். பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியனவும் தமிழ்களின் உணவாகும்.

புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த காடியைப் பெரிதும் விரும்பினர். பாலைத் தோய்த்து வெண்ணெய் திரட்டும் வழக்கம் இருந்தது. வெண்ணையைப் பதமாகக் காய்ச்சி நெய் எடுத்துச் சோற்றில் வார்த்து உண்பர்.

ஐந்திணை உணவுகள்

·       குறிஞ்சி நில மக்களின் உணவில் தேன் மிக முக்கிய இடம் பெற்றது. தேனீக்களால் தேன் கிழிந்து கற்குவியல்களில் வழிந்தததைக் குறவர் இன மக்களின் பிள்ளைகள் உண்டனர் என்பதை அகம் 168ஆவது பாடல் காட்டுகின்றது. மேலும், கிழங்கு வகை உணவுகளை வேகவைத்து உண்டனர். வேட்டையாடி உணவு உண்ணும் வழக்கம் இருந்தது.

·       முல்லை நில மக்களின் உணவில் பால் சிறப்பிடம் பெற்றது. தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் உணவுப் பொருட்களைச் சேர்த்து உண்டனர் என்பதைப் “பாலுடை அடிசில் தொழீஇய” என்ற வரி (அகம்.152) காட்டுகின்றது.

·       மருத நிலத்தில் உழவர்கள் வரகுச் சோற்றை அவரையோடு உண்டனர். வெண்ணெற் சோற்றை கோழி இறைச்சியின் வற்றலோடு உண்டனர். அவலை இடித்து உண்டதை, பெரும்பாணாற்றுப்படை (பெ.ஆ.படை:223-226) காட்டுகின்றது. பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு ஆகிய பழ வகைகள் மருதநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த உணவுகளாகும்.

·       நெய்தல் நில மக்கள் கொழியலரசியைக் கூழாக ஆக்கி, உலர வைத்து, மீனோடு சேர்த்து உண்பர். (பெரும்.275-282) எயினர்கள் களர் நிலத்தில் வளரும் ஈச்சம்பழம் போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லால் சமைத்த சோற்றினை நாய் வேட்டையாடிக் கொண்டு வந்த உடும்புக் கறியோடு உண்டனர். (பெரும்.130-132)

·       பாலை நில மக்களின் உணவில் பொரித்த உணவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டனர். விருந்தினர்களுக்குத் தேக்கு இலையில் விருந்து படைத்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை விளக்குகின்றது.

இறைச்சி உணவு

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் கூட்டியோ சமைத்தனர்.  இறைச்சியை நெய்யில் பொரித்த வழக்கம் காணப்படுகின்றது. புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டுப் புளிங்கறி சமைப்பதுண்டு. நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து அதைக் கொழுக்க வைப்பர். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல் தனியாகக் குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன் ஊனைச் சமைத்துத் தின்றனர். பழந்தமிழர் ஊனை உப்புக்கண்டம் போட்டுப் பயன்படுத்தி உள்ளனர். ஊன் துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோர்த்து நெருப்பில் வாட்டி உண்டனர்.(பொருநர்.105)

கள்ளுணவு

மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளுண்டு மகிழ்ந்தமையை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன. இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டு வந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர். மதுவகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி நெடுநாள் மண்ணில் புதைத்தனர். அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். கள்ளுண்டவர்கள் புளிச் சுவைக்காக, களாப்பழம், துடரிப்பழம், நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்து உண்டனர்.

       பண்டைத்தமிழர்களின் உணவுகளையும், அவற்றை எவ்வாறு சமைத்து உண்டனர் என்பதையும் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

 -------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, 

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.