ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சமூக மறுமலர்ச்சி

 

சமூக மறுமலர்ச்சி

இந்தியா விடுதலை பெற்ற பின்னர், தமிழகத்தில் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல நிகழ்ந்தன.

அரசியல் நிர்வாகம்

தமிழகத்தில் முடியாட்சி நீங்கிக் குடியாட்சி மலர்ந்தது. 1952இல் திரு இராசாகோபாலச்சாரியார் தமிழகத்தின் முதல்வரானார். அரசின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடாதவாறு, அறநெறியுடன் ஆட்சி செய்ய விரும்பினார். அயல்நாட்டு மது வகைகளுக்கு விற்பனை வரி விதித்தார். பொதுக்களின் நலனை விரும்பி நிர்வாகத் துறையைக் கவனமாகக் கையாண்டார்.

1954ஆம் ஆண்டு திரு கு.காமராசர் முதல்வரானார். இவர் காலத்தில் வேளாண்மை, கல்வி, தொழில், மின்சாரம் ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. நெல்சோள உற்பத்தித் திறனில் முதன்மைப் பெற்றது. கட்டாயக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. ஏழைச் சிறார்களுக்கு மதிய உணவும், சீருடையும், பாடநூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர் அடித்தள மக்களின் நலனை மனதில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார்.

1963 ஆம் ஆண்டு திரு பக்தவச்சலம் முதல்வரானார். இவர் காலத்தில் குறைந்த ஊதியம் உள்ளோருக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு திரு அண்ணாதுரை முதல்வரானார். திராவிடப் பண்பாட்டை உயர்த்தவும், தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறவும் பாடுபட்டார். கலப்புமணத் தம்பதியரைச் சிறப்பித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார். மருத்துவக் கல்விக்கும், ஆய்வுக்கும் தனி இயக்கம் ஏற்படுத்தி, பொது நலத்திற்கும், மருத்துவத்திற்கும் தொண்டு செய்யத் தூண்டினார்.

1969ஆம் ஆண்டு திரு கருணாநிதி முதல்வரானார். மாநிலத் திட்டக் குழுவை நியமித்துப் பயிர்த்தொழிலுக்கும், பாசனத்திற்கும் பல தொண்டுகள் செய்தார். தொழுநோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தல், பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்குதல், உடல் ஊனமுற்றோர்க்கு மறுவாழ்வு அளித்தல், கைம்பெண்களுக்குத் தையற்பொறி வழங்கி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1977ஆம் ஆண்டு திரு எம்.ஜி.இராமச்சந்திரன் முதல்வரானார். மதுவிலக்கில் தீவிரமாக ஈடுபட்டார். புயல், தீ, வெள்ளம் போன்றவற்றால் சேதமுற்ற ஏழை மக்களுக்கு விரைந்து உதவினார். வறுமையில் வாடும் தமிழ் அறிஞர்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முயன்றார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்புற நடத்தினார். தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்க முயன்றார்.

இவ்வாறு பல முதல்வர்கள் தோன்றி அவ்வக்காலத்து ஏற்படும் தேவைக்கேற்பப் பல மாறுதல்களைக் கொணடு வந்தனர். இன்று தமிழகம் பல துறைகளில் தன்னிகரற்று விளங்குவதற்கு அவர்களே காரணம். இன்றும் செல்வி ஜெயலலிதா, திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதல்வர்கள் தமிழகத்தில் தோன்றி மக்களின் நலனுக்காக அருந்தொண்டாற்றியுள்ளமை கண்கூடு. 

பொருளாதார வளர்ச்சி

விடுதலைக்குப் பிறகு நீராவி இயந்திரத்தின் மூலம் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பெருகின. குடிசை தொழிலாக இருந்த நூற்பும், நெசவும் தொழிற்சாலைக்கு மாறின. ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி, நிலக்கடலை போன்ற வாணிகப் பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டமையால் அவற்றின் உற்பத்திக்கு உழவர்கள் ஊக்கம் காட்டினர். ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் தொழில் வளர்ச்சிகள் பெருக்கப்பட்டன. இத்திட்டத்தின் பயனால் உழவுத்தொழில் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட பழுப்பு நிலக்கரித் திட்டம் பெருவெற்றி அடைந்தது. இங்குக் கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. சென்னையில் இணைப்பு இரயில் தொழிற்சாலை, எண்ணூர் அனல் மின்சார நிலையம், திருவெறும்பூர் உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, கல்பாக்கம் மின் அணு நிலையம் முதலியவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. தொழில் உற்பத்தியில் துணைக்கண்டத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தை எட்டியது.

சமூக நிலை

விடுதலைக்குப்பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம், சமணம், பார்சி முதலிய சமயங்களும், நாத்திகவாதம், பகுத்தறிவாதம் முதலிய கோட்பாடுகளும் வழக்கில் இருந்தன. சாதாரண மக்கள் கல்வி, அரசியல் ஆகியவற்றின் மூலம் வெளியுலகத் தொடர்பைப் பெற்றனர். விடுதலைக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களும், ஆலைத் தொழில்களும், திரை அரங்குகளும், வாணிபமும் பெருகின. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவோர் எண்ணிக்கை பெருகியது. ஆதரவு இழந்த முதியோருக்கு உதவித் தொகை அளிக்க அரசு முன்வந்தது. ஊரகங்களிலும், நகரங்களிலும் நூலகங்கள் பெருகின. பெண்கள் கல்விப் பயனைப் பெறும் நிலை விரிவடைந்தது. ஆசிரியைப் பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றுக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கை பெருகியது. பெண்கள் பொது வாழ்வில் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்கென சட்டங்கள் இயற்றப்பட்டன.

நகர வாழ்க்கை, உணவு விடுதிகள், இரயில்கள், விமானங்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகள், பல்கலைக்கழகங்கள், குழாய்த்தண்ணீர், ஆங்கில மருத்துவம், கோயில் திருவிழாக்கள் முதலியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பன்மடங்கு பெருகின. வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பப் பல்கைலக்கழகம் தொடங்கப்பட்டன.

குடிநல வளர்ச்சி, சமுதாய வாழ்க்கைச் சீர்த்திருத்தங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு தலையாய இடத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடிய தீய பூசல்களோ, சுயநல இயக்கங்களோ காணப்படாமை பெரிதும் பாராட்டக்குரியது.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

           

 

 

சனி, 26 அக்டோபர், 2024

முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன.

அலாவுதீன்

கி.பி.1290இல் தில்லியில் சுல்தானாய் இருந்தவன் ஜலாலுதீன் கில்ஜி. இவர் பண்புடைய அரசன். தன் மகளை அலாவுதீன் என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இராசபுத்திரர்கள் கில்ஜியை எதிர்த்தனர். அவர்களை அடக்க அலாவுதீன் அனுப்பப்பட்டார். மன்னனின் ஒப்புதலைப் பெறாமல் தென்னகத்தின் மேல் படையெடுத்தார் அலாவுதீன். 8000 வீரர்களுடன் போர் நினைவே இல்லாத அமைதியான யாதவ நாட்டின் மீது 1294இல் திடீரென போர் நிகழ்த்தினார். எதிர்பாராது தாக்குண்ட யாதவ மன்னன் அலாவுதீனுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் பல்வேறு பொன், முத்து, இரத்தினம், வெள்ளி, பட்டுத்துணிகள் ஆகியவற்றை யாதவ மன்னன் அலாவுதீனுக்குக் கொடுக்க நேர்ந்தது. தென்னிந்தியாவின் மீது நடந்த முதல் இசுலாமியப் படையெடுப்பு இதுவேயாகும். வெற்றிப் பொருள்களுடன் தில்லி திரும்பிய அலாவுதீன், மன்னன் ஜலாலுதீனைக் கொன்று தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.

மாலிக்காபூர்

தென்னிந்திய படையெடுப்பை மேற்கொண்டு வெற்றி பெற்ற அலாவுதீன் கில்ஜி, தன் படைத்தளபதியான மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களையும், காகதியர்களையும், போசளர்களையும் தோற்கடித்தார். மாலிக்காபூர் திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடூரமாகத் தாக்கினார். மதுரையில் வீர பாண்டியனைத் தோற்கடிக்க எண்ணி, கண்ணனூரை நோக்கி விரைந்தார். வழியில் பொன்னும், மணியும்  ஏற்றிக் கொண்டு சென்ற 120 யானைகளைக் கைப்பற்றினார். தம் கைகளில் இருந்த நழுவிச் சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு சிதம்பரம் விரைந்தார். அங்குப் பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்து எடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினார். ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து வெறியாடினார். தன் கண்ணில் பட்ட கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தீ வைத்தான். தான் கைப்பற்றி இருந்த 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டு இராமேசுவரம் சென்றார். அந்நகரை அழித்து மக்களைப் படுகொலை செய்து, கொள்ளையடித்தார். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினார். மதுரையை ஆண்ட அலாவுதீன் இறந்ததும் அவன் பிள்ளைகளைச் சிறையில் அடைத்தார். அலாவுதீன் மகன்களுள் ஒருவனைப் பேருக்கு மன்னனாக்கி மாலிக்காபூரே நாட்டை ஆண்டார். மணிமகுடம் சூடிய 35ஆம் நாள் மாலிக்காபூர் கொல்லப்பட்டார்.

முகமது பின் துக்ளக்

கியாசுதீன் துக்ளக்கின் மகனான பக்ருதீன் முகமது ஜூனாகான் என்பவரே முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் திறம்படச் செயல்பட்டதால், பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு உலுக்கான் என்ற பட்டம் பெற்றார். 1325இல் சுல்தானைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் மதுரையில் முழுமையாக முசுலீம் ஆட்சி நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் முசுலீம் பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் நிறுவப்பட்டன.  இவரிடம் பல உயிரிய குணங்கள் இருந்தன. கணிதம், வானநூல், தத்துவம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரசீக மொழியில் சில பாடல்களையும் இயற்றியுள்ளார். எளிமையாக வாழ்க்கை வாழ விரும்பிய இம்மன்னன், இந்து மதத்தினர் மீது மிகவும் பரிவு காட்டினார். ஆற்றல் மிக்கவனாக, அறிவு நிறைந்தவராகக் காணப்பட்டார். இவருடைய நிர்வாகச் சீர்த்திருத்தங்களில் வருவாய்த்துறை மாற்றங்கள், தலைநகர் மாற்றங்கள், அடையாள நாணயமுறை, சமயக்கோட்பாடு, விவசாய இலாகா மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரோஸ் துக்ளக்

இவர் அமைதியை விரும்பினார். அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜாகிர் முறையை இவர் புதுப்பித்தார். தம்மிடம் இருந்து பறிபோன தக்காணம், வங்காளம், சிந்து, இராஜஸ்தானம் ஆகிய மாநிலங்களை மீட்க இவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இவருக்கு முன் ஆட்சி செய்த அரசர்களோடு மிகவும் மாறுபட்டு இருந்தார்.

தைமூர்

1398இல் தைமூர் மேற்கொண்ட படையெடுப்பு முசுலீம் பேரரசை தடுமாறச் செய்தது. நாட்டைச் சூறையாடியதுடன் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றார். 1399இல் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இப்ரஹிம் லோடி

தில்லிச் சுல்தானியர்களின் கடைசி சுல்தான் இவர். இவருடைய பேரரசு குன்றிக் குறுகி இருந்தது. தில்லி, ஆக்ரா, சாந்தேரி, ஜான்பூர், பீகாரின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு அப்பால் இவருடைய ஆட்சி பரவவில்லை. பல பிரபுக்களை இன்னலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்தினார். அவருடைய அரசியல் தந்திரமற்ற செயல்களால் சுல்தானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாபர் 1526இல் முதல் பானிபட் போரில் இப்ரஹிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.

 

புதன், 16 அக்டோபர், 2024

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

 

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

உழவுத்தொழிலும், வாணிகமும் பண்டையத் தமிழரின் இருபெரும் முக்கியத் தொழில்களாக இருந்தன. வாழ்க்கை நலன்களுக்காக பல பண்டங்களும், ஏற்றமதி செய்யப்பட்ட பல பொருள்களும் தமிழ்நாட்டில் உற்பத்தியாயின.

உழவுத்தொழில் சிறப்பு

தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக உழவு விளங்கியது. அது மக்களுடைய வளத்துக்கும், மன்னனுடைய வளத்துக்கும் அடிப்படையாக விளங்கியது. உழவுகின்ற நிலம் செழிப்பாக இருந்தமையால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக் காணப்பட்டது. நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், மஞ்சளும், இஞ்சியும், பருத்தியும் தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டன. நிலத்தை உழுவதும், எரு விடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை எடுப்பதும், பயிரைக் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.

மருத நிலத்தில் நெல்லும் கரும்பும் முக்கியப் பயிர்களாகும். வரகும், தினையும் முல்லை நிலத்தின் முக்கியப் பயிர்கள். பழங்கள், கிழங்குகள், வள்ளிச் செடிகள் ஆகியவை குறிஞ்சி நிலத்திற்குரியவையாகும்.

உழவுத்தொழிலுக்கு நீர் வசதி அளித்தனர். காவிரியில் அணை கட்டினர். கால்வாய்கள் அமைத்தனர். குளங்கள், ஏரிகள், கிணறு ஆகியவற்றை உருவாக்கினர்

ஆநிரை மேய்த்தல்

          உழவுத்தொழிலின் ஒரு பகுதியாக ஆடு மாடுகளை மேய்த்தனர். இது ஆயர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. கையில் கோலுடன் மந்தைகளின் பின்னால் சென்று ஆயர்கள் கடினமாக உழைத்தனர். பானைகளில் மோர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றனர்.

தமிழ்நாட்டினரும் அயல் நாட்டினரும்

தமிழ்நாட்டுக் கைவினைஞர்களுடன் அயல்நாட்டுத் தொழிலாளர்களும் இணைந்து பல கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மகத நாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவன நாட்டின் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடி கண்கவரும் பொருட்களைப் படைத்தனர் என்பதை மணிமேலை குறிப்பிடுகின்றது. கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக் கம்மர்களும் தமிழகத்தில் பிழைக்க வந்தனர்.

வணிகர்கள்

  • ·   ஓவியத்திற்கான வண்ணக்குழம்பு பூசு சுண்ணம், நறுமணக் கூட்டுகள், மலர் மாலைகள், சந்தனம், பச்சைக் கற்பரம் போன்ற நறுமணப் பண்டங்களை விற்பவர்களும்,
  • · பட்டு நூலாலும், எலியின் முடி, பருத்தி நூல், ஊசி ஆகியவற்றைக் கொண்டு தறியின் அச்சினைக் கட்டும் காருகர்களும்,
  • ·  பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, மணி, பொன் ஆகியவற்றை நோட்டம் பார்ப்பவர்களும்,
  • ·       நெல், புல்லரிசி, வரகு, திணை, சாமை, மூங்கிலரிசி வணிகர்களும்,
  • ·  கள் விற்கும் பெண்களும், மீன் விற்கும் பரதவரும், உப்பு விற்கும் உமணரும், வெற்றிலை வணிகரும்,
  • ·       தக்கோலம், தீம்பு, இலவங்கம், சாதிக்காய் விற்பர்களும்,
  • ·       எண்ணெய் வாணிகரும்,
  • ·       வெண்கலம், செம்புக் கலங்கள் தட்டுபவர்களும்,
  • ·       தச்சர், ஓவியர், சிற்பிகள் முதலியோரும்,
  • ·   செயற்கைப் பூங்கொத்துகள், வாடாமாலைகள், பொய்க்கொண்டைகள் செய்வோர்களும்,
  • · சிறுசிறு கைத்தொழில்களைப் பிறருக்குப் பயிற்றுவோர்களும் பூம்புகாரில் திரண்டிருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் கூறுகின்றது.

வணிக மக்களின் பண்பு

பல தொழிலைச் செய்யும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தொழில்முறையில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை. நாட்டு வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வுக்கும் தங்களின் உழைப்பு இன்றியமையாததது என்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியிருந்தது. தங்கள் தொழிலை நேர்மையாக நடத்தினர்.

வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களை பல ஊர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வர். இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். கள்வர்களுக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாகச் செல்வர்.

சிறந்த வாணிகம்

உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவை சிறப்பான வாணிகங்களாகப் போற்றப்பட்டன.

பண்டமாற்று வாணிகம்

பண்டமாற்று முறையிலே வாணிகம் நடைபெற்றது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீன், நறவு ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டன. கரும்பு, அவல் ஆகியவை மானின் இறைச்சிக்கும், கள்ளுக்கும் மாறின. நெய்யை விற்று எருமை வாங்கினர். உப்புக்கு நெல் மாற்றப்பட்டது. பச்சைப் பயறுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றப்பட்டது.

பண்டமாற்று முறையில் குறிப்பிட்ட பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திலுப்பிக் கொடுக்கும்குறியெதிர்ப்பைஎன்ற ஒரு முறை வழங்கி வந்தது.

நாணயங்கள்

பண்டமாற்று வாணிகம் இல்லாதபோது நாணயங்களைப் பயன்படுத்தி பண்டங்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். சங்க காலத்தில் மன்னர்கள் நாணயம் அச்சிட்டிருப்பதையும், வெளிநாட்டு வணிகர்கள் அவர்கள் நாட்டு நாணயங்களைக் கொண்டு வந்து பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது.

விற்பனை செய்யப்பட்ட நிலை

சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனை செய்யப்பட்டன. சில பண்டங்கள் ஊர் ஊராக எடுசத்துச் சென்று விற்றனர். உப்பு, மிளகு ஆகியவை ஊர் ஊராக விற்கப்பட்டன. பண்டங்களை வண்டிகளின் மேலும, கழுதையின் மேலும் ஏற்றிச் செல்வர். சரக்கு மூட்டைகளின் மேல் அவற்றின் அளவு அல்லது எடை பொறிக்கப்பட்டன. தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின் மேல் பறக்க விட்டனர். வணிகச் சாத்துகள் கழுதையின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தினர்.

    கீழைக் கடற்கரையிலிருந்து மதுரைக்குக் கப்பலில் அகில் முதலிய நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றி வந்த யவனர்கள் அதே மரக்கலங்களில பொன் அணிகலன்களையும், புளி கருப்பட்டி சேர்ந்து பிசைந்த தீம்புளி என்ற பண்டத்தையும், மீனையும், உப்பையும், தத்தம் நாட்டுக்கு ஏற்றிச் செல்வர்.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

கொங்கு நாடடுத் தங்கம், பாண்டி நாட்டு முத்து, மிளகு, வாசனைப் பொருட்கள், இஞ்சி, தந்தம், ஏலம், கிராம்பு போன்றவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. உயர்தரமான ஆடைகள், பட்டு ஆடைகள், விரிப்புகள், ஓவிய வேலைப்பாடுடைய பொருட்கள், வைரம், பிற விலை உயர்ந்த கற்கள் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.

மேற்கு நாடுகளில் இருந்து உயர் ரக மது வகைகள், கண்ணாடிப் பொருட்கள், குதிரைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் உணவுப் பொருட்கள் வந்து இறங்கின. சீனாவில் இருந்து அழகிய பட்டுகளும், சர்க்கரையும் வரவழைக்கப்பட்டன.

தங்கக்காசுகள்

அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்தன. கணம் என்றொரு பொற்காசு சங்க காலத்தில் இருந்தது. மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகளைப் பரிசுகளாக்க் கொடுத்தனர். பெண்கள் பொற்காசுகளை மாலையாக்க் கோர்த்து அணிந்து கொண்டனர். அக்காலத்தில் இரும்புக்கும் பொன் என்று பெயர் வழங்கப்பட்டது.

அளவைகள்

வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல் அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர். எண் என்னும் சொல் எண்ணையும் கணிதத்தையும் குறித்தது. நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் காணப்படுகின்றன.

துறைமுகங்கள்

தமிழகத்துத் துறைமுகங்களில் அயலார் கலங்கள் குவிந்து கிடந்தன. பொறையாறு, புகார், கொற்கை ஆகியவை சிறந்த துறைமுகங்களாகச் செயல்பட்டன. கோட்டாறு, மதுரை, முசிறி, உறையூர் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களின் ஆரவாரம் பெற்ற உள்நாட்டு நகரங்களாக விளங்கின. தமிழ்நாட்டில் வணிகம் சிறந்திருந்தது என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது.