திங்கள், 4 நவம்பர், 2024

களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

 

களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். பிற வாழ்வியல் கூறுகளைப் புறம் என்றனர். இவ் இரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் தோன்றின.

அன்பின் ஐந்திணை

சங்கச் செய்யுட்களில் பெரும்பான்மை அகப்பாடல்களாகவே அமைந்துள்ளன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இவ் ஐந்தும் அன்பின் ஐந்திணை என்று போற்றப்படுகின்றது. பிறப்பு, குடிமை ஆகியவற்றால் ஒத்த காதலர்பால் நிகழும் காதல் அன்பின் ஐந்திணையாகவும், ஒரு தலைக்காதல் கைக்கிளை என்றும், பொருந்தாக் காதல் பெருந்திணை என்றும் பெயர் பெற்றன. இவ் அக வாழ்க்கை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன.

களவும் கற்பும்

அகத்திணை காதல் வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. யாரும் அறியாத வகையில் ஒரு பெண்ணும், ஆணும் காதல் கொள்வது களவு என்றும், ஊரறிய திருமணம் செய்து கொண்டு வாழும் நிலையைக் கற்பு என்றும் பிரித்துள்ளனர்.

களவு வாழ்க்கை

களவு வாழ்க்கையில் பல நிலைகள் உண்டு. ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்ட பிறகு, அவர்களுடைய களவு வாழ்க்கை தொடர தோழியும், பாங்கனும் உதவி செய்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப்  பகலிலும் இரவிலும் தங்கள் காதலை வளர்க்கின்றனர். இதற்குப் பகற்குறி, இரவுக்குறி என்று பெயர். தலைவியின் காதல் ஊராருக்குத் தெரியும்போது அவர்கள் தலைவனையும் தலைவியையும் பழிக்கின்றனர். அதை அலர் தூற்றுதல் என்று குறிக்கின்றனர். தலைவியின் தாய், தன் மகளின் காதல் தெரிந்த பிறகு அவளை வீட்டில் அடைத்து வைக்கின்றாள். இதற்கு இற்செறிப்பு என்று பெயர். பெற்றோருக்குத் தெரிந்த பின்பு, தங்கள் காதல் நிறைவேறாதோ என்ற அச்சத்தில் தலைவனும் தலைவியும் உடன்போக்கில் ஈடுபடுகின்றனர். அவர்களைத் தேடிப் பெற்றோர்கள் சென்றதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் பெற்றோர் தலைவியைத் தனக்கு மணம் செய்து கொடுக்காதபோது தலைவன், தலைவியின் படத்தை எழுதி கையில் பிடித்தவாறு ஊரறிய நடந்து செல்கின்ற நிலையை மடலேறுதல் என்று குறிக்கின்றனர். இவை எதுவும் நிகழாதபோது, தோழி தலைவியின் காதலை, செவிலித்தாயிடமும், நற்றாயிடமும் முறைப்படி உரைத்து அவர்களின் காதல் திருமணத்தில் முடிய பேருதவி புரிகின்றாள். இத்தகு சூழலை அறத்தொடு நிற்றல் எனத் தமிழிலக்கியம் கூறுகின்றது.  களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியைப் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.

கற்பு வாழ்க்கை

அகத்திணையுள் திருமண வாழ்க்கை கற்பு எனப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோர்களும் திருமணத்திற்கு உடன்பட்டு, நல்ல நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வர். விடியற்காலையில் திருமணம் நடைபெறும். உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த உணவை விருந்தினர்க்குப் பரிமாறினர். புதுமணல் பரப்பி, மணப்பந்தல் அமைக்கப்பட்டது. குழந்தைகளைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் மங்கல நீரால் மணமக்களை நீராட்டினர். இச்சடங்கு வதுவை நன்மணம் என்று குறிக்கப் பெறுகின்றது. “கற்பினின்று வழுவாது பெருமையுடைய மனைக்கிழத்தி ஆகுக” என்று மகளிர் வாழ்த்தினர். தாலி கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை. திருமணநாள் அன்று மணமக்கள் மணவறையில் கூட்டப்பெற்றனர்.

திருமணமான பிறகு கணவன் தன் மனைவியைக் கல்வி கற்பதன் பொருட்டோ, பொருள் தேடுதற் பொருட்டோ பிரிவதுண்டு. கல்விக்காக ஏற்படும் பிரிவு மூன்றாடுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மன்னனுடைய கடமைகைளை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தால் அப்பிரிவு ஓராண்டுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.

தொழில் புரிவதை ஆடவர் தங்கள் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரை உயிராக மதித்தனர். இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவது பெண்களின் தலையாய கடமையாக இருந்தது. தன் கணவன் வறுமையுற்றபோதும் அதனைத் தன் பெற்றோருக்கு மறைத்து வாழ்வதே சிறந்த மனைவியின் பண்பாடு என்று கருதினர். தன் கணவன் தன்னை விட்டு, பரத்தையரோடு நட்பு கொண்டபோது ஊடல் கொள்கின்றாள். ஆனால் கணவனை விட்டுப்  பிரிந்து செல்ல முற்பட்டதில்லை. அவன் தவறைச் சுட்டிக் காட்டி அவனைத் திருத்த முயற்சிப்பதாகப் பல சங்கப் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் ஊடலைத் தணிக்க, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பாணர்கள் உள்ளிட்ட பலர் வாயில்களாகச் செயல்பட்டுள்ளனர்.

இல்லறத்தின் சிறப்பு நன்மக்கட்பேறு. குழந்தையைப் பெறுவது தாயின் கடமை என்றும், அக்குழந்தைக்குக் கல்வியறிவைக் கொடுத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது தந்தையின் கடமை என்றும் போற்றப்பட்டது. விருந்தோம்பல் தம்பதியரின் தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சமூக மறுமலர்ச்சி

 

சமூக மறுமலர்ச்சி

இந்தியா விடுதலை பெற்ற பின்னர், தமிழகத்தில் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல நிகழ்ந்தன.

அரசியல் நிர்வாகம்

தமிழகத்தில் முடியாட்சி நீங்கிக் குடியாட்சி மலர்ந்தது. 1952இல் திரு இராசாகோபாலச்சாரியார் தமிழகத்தின் முதல்வரானார். அரசின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடாதவாறு, அறநெறியுடன் ஆட்சி செய்ய விரும்பினார். அயல்நாட்டு மது வகைகளுக்கு விற்பனை வரி விதித்தார். பொதுக்களின் நலனை விரும்பி நிர்வாகத் துறையைக் கவனமாகக் கையாண்டார்.

1954ஆம் ஆண்டு திரு கு.காமராசர் முதல்வரானார். இவர் காலத்தில் வேளாண்மை, கல்வி, தொழில், மின்சாரம் ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. நெல்சோள உற்பத்தித் திறனில் முதன்மைப் பெற்றது. கட்டாயக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. ஏழைச் சிறார்களுக்கு மதிய உணவும், சீருடையும், பாடநூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர் அடித்தள மக்களின் நலனை மனதில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார்.

1963 ஆம் ஆண்டு திரு பக்தவச்சலம் முதல்வரானார். இவர் காலத்தில் குறைந்த ஊதியம் உள்ளோருக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு திரு அண்ணாதுரை முதல்வரானார். திராவிடப் பண்பாட்டை உயர்த்தவும், தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறவும் பாடுபட்டார். கலப்புமணத் தம்பதியரைச் சிறப்பித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார். மருத்துவக் கல்விக்கும், ஆய்வுக்கும் தனி இயக்கம் ஏற்படுத்தி, பொது நலத்திற்கும், மருத்துவத்திற்கும் தொண்டு செய்யத் தூண்டினார்.

1969ஆம் ஆண்டு திரு கருணாநிதி முதல்வரானார். மாநிலத் திட்டக் குழுவை நியமித்துப் பயிர்த்தொழிலுக்கும், பாசனத்திற்கும் பல தொண்டுகள் செய்தார். தொழுநோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தல், பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்குதல், உடல் ஊனமுற்றோர்க்கு மறுவாழ்வு அளித்தல், கைம்பெண்களுக்குத் தையற்பொறி வழங்கி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1977ஆம் ஆண்டு திரு எம்.ஜி.இராமச்சந்திரன் முதல்வரானார். மதுவிலக்கில் தீவிரமாக ஈடுபட்டார். புயல், தீ, வெள்ளம் போன்றவற்றால் சேதமுற்ற ஏழை மக்களுக்கு விரைந்து உதவினார். வறுமையில் வாடும் தமிழ் அறிஞர்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முயன்றார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்புற நடத்தினார். தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்க முயன்றார்.

இவ்வாறு பல முதல்வர்கள் தோன்றி அவ்வக்காலத்து ஏற்படும் தேவைக்கேற்பப் பல மாறுதல்களைக் கொணடு வந்தனர். இன்று தமிழகம் பல துறைகளில் தன்னிகரற்று விளங்குவதற்கு அவர்களே காரணம். இன்றும் செல்வி ஜெயலலிதா, திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதல்வர்கள் தமிழகத்தில் தோன்றி மக்களின் நலனுக்காக அருந்தொண்டாற்றியுள்ளமை கண்கூடு. 

பொருளாதார வளர்ச்சி

விடுதலைக்குப் பிறகு நீராவி இயந்திரத்தின் மூலம் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பெருகின. குடிசை தொழிலாக இருந்த நூற்பும், நெசவும் தொழிற்சாலைக்கு மாறின. ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி, நிலக்கடலை போன்ற வாணிகப் பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டமையால் அவற்றின் உற்பத்திக்கு உழவர்கள் ஊக்கம் காட்டினர். ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் தொழில் வளர்ச்சிகள் பெருக்கப்பட்டன. இத்திட்டத்தின் பயனால் உழவுத்தொழில் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட பழுப்பு நிலக்கரித் திட்டம் பெருவெற்றி அடைந்தது. இங்குக் கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. சென்னையில் இணைப்பு இரயில் தொழிற்சாலை, எண்ணூர் அனல் மின்சார நிலையம், திருவெறும்பூர் உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, கல்பாக்கம் மின் அணு நிலையம் முதலியவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. தொழில் உற்பத்தியில் துணைக்கண்டத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தை எட்டியது.

சமூக நிலை

விடுதலைக்குப்பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம், சமணம், பார்சி முதலிய சமயங்களும், நாத்திகவாதம், பகுத்தறிவாதம் முதலிய கோட்பாடுகளும் வழக்கில் இருந்தன. சாதாரண மக்கள் கல்வி, அரசியல் ஆகியவற்றின் மூலம் வெளியுலகத் தொடர்பைப் பெற்றனர். விடுதலைக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களும், ஆலைத் தொழில்களும், திரை அரங்குகளும், வாணிபமும் பெருகின. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவோர் எண்ணிக்கை பெருகியது. ஆதரவு இழந்த முதியோருக்கு உதவித் தொகை அளிக்க அரசு முன்வந்தது. ஊரகங்களிலும், நகரங்களிலும் நூலகங்கள் பெருகின. பெண்கள் கல்விப் பயனைப் பெறும் நிலை விரிவடைந்தது. ஆசிரியைப் பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றுக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கை பெருகியது. பெண்கள் பொது வாழ்வில் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்கென சட்டங்கள் இயற்றப்பட்டன.

நகர வாழ்க்கை, உணவு விடுதிகள், இரயில்கள், விமானங்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகள், பல்கலைக்கழகங்கள், குழாய்த்தண்ணீர், ஆங்கில மருத்துவம், கோயில் திருவிழாக்கள் முதலியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பன்மடங்கு பெருகின. வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பப் பல்கைலக்கழகம் தொடங்கப்பட்டன.

குடிநல வளர்ச்சி, சமுதாய வாழ்க்கைச் சீர்த்திருத்தங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு தலையாய இடத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடிய தீய பூசல்களோ, சுயநல இயக்கங்களோ காணப்படாமை பெரிதும் பாராட்டக்குரியது.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

           

 

 

சனி, 26 அக்டோபர், 2024

முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன.

அலாவுதீன்

கி.பி.1290இல் தில்லியில் சுல்தானாய் இருந்தவன் ஜலாலுதீன் கில்ஜி. இவர் பண்புடைய அரசன். தன் மகளை அலாவுதீன் என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இராசபுத்திரர்கள் கில்ஜியை எதிர்த்தனர். அவர்களை அடக்க அலாவுதீன் அனுப்பப்பட்டார். மன்னனின் ஒப்புதலைப் பெறாமல் தென்னகத்தின் மேல் படையெடுத்தார் அலாவுதீன். 8000 வீரர்களுடன் போர் நினைவே இல்லாத அமைதியான யாதவ நாட்டின் மீது 1294இல் திடீரென போர் நிகழ்த்தினார். எதிர்பாராது தாக்குண்ட யாதவ மன்னன் அலாவுதீனுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் பல்வேறு பொன், முத்து, இரத்தினம், வெள்ளி, பட்டுத்துணிகள் ஆகியவற்றை யாதவ மன்னன் அலாவுதீனுக்குக் கொடுக்க நேர்ந்தது. தென்னிந்தியாவின் மீது நடந்த முதல் இசுலாமியப் படையெடுப்பு இதுவேயாகும். வெற்றிப் பொருள்களுடன் தில்லி திரும்பிய அலாவுதீன், மன்னன் ஜலாலுதீனைக் கொன்று தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.

மாலிக்காபூர்

தென்னிந்திய படையெடுப்பை மேற்கொண்டு வெற்றி பெற்ற அலாவுதீன் கில்ஜி, தன் படைத்தளபதியான மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களையும், காகதியர்களையும், போசளர்களையும் தோற்கடித்தார். மாலிக்காபூர் திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடூரமாகத் தாக்கினார். மதுரையில் வீர பாண்டியனைத் தோற்கடிக்க எண்ணி, கண்ணனூரை நோக்கி விரைந்தார். வழியில் பொன்னும், மணியும்  ஏற்றிக் கொண்டு சென்ற 120 யானைகளைக் கைப்பற்றினார். தம் கைகளில் இருந்த நழுவிச் சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு சிதம்பரம் விரைந்தார். அங்குப் பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்து எடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினார். ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து வெறியாடினார். தன் கண்ணில் பட்ட கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தீ வைத்தான். தான் கைப்பற்றி இருந்த 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டு இராமேசுவரம் சென்றார். அந்நகரை அழித்து மக்களைப் படுகொலை செய்து, கொள்ளையடித்தார். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினார். மதுரையை ஆண்ட அலாவுதீன் இறந்ததும் அவன் பிள்ளைகளைச் சிறையில் அடைத்தார். அலாவுதீன் மகன்களுள் ஒருவனைப் பேருக்கு மன்னனாக்கி மாலிக்காபூரே நாட்டை ஆண்டார். மணிமகுடம் சூடிய 35ஆம் நாள் மாலிக்காபூர் கொல்லப்பட்டார்.

முகமது பின் துக்ளக்

கியாசுதீன் துக்ளக்கின் மகனான பக்ருதீன் முகமது ஜூனாகான் என்பவரே முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் திறம்படச் செயல்பட்டதால், பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு உலுக்கான் என்ற பட்டம் பெற்றார். 1325இல் சுல்தானைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் மதுரையில் முழுமையாக முசுலீம் ஆட்சி நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் முசுலீம் பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் நிறுவப்பட்டன.  இவரிடம் பல உயிரிய குணங்கள் இருந்தன. கணிதம், வானநூல், தத்துவம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரசீக மொழியில் சில பாடல்களையும் இயற்றியுள்ளார். எளிமையாக வாழ்க்கை வாழ விரும்பிய இம்மன்னன், இந்து மதத்தினர் மீது மிகவும் பரிவு காட்டினார். ஆற்றல் மிக்கவனாக, அறிவு நிறைந்தவராகக் காணப்பட்டார். இவருடைய நிர்வாகச் சீர்த்திருத்தங்களில் வருவாய்த்துறை மாற்றங்கள், தலைநகர் மாற்றங்கள், அடையாள நாணயமுறை, சமயக்கோட்பாடு, விவசாய இலாகா மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரோஸ் துக்ளக்

இவர் அமைதியை விரும்பினார். அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜாகிர் முறையை இவர் புதுப்பித்தார். தம்மிடம் இருந்து பறிபோன தக்காணம், வங்காளம், சிந்து, இராஜஸ்தானம் ஆகிய மாநிலங்களை மீட்க இவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இவருக்கு முன் ஆட்சி செய்த அரசர்களோடு மிகவும் மாறுபட்டு இருந்தார்.

தைமூர்

1398இல் தைமூர் மேற்கொண்ட படையெடுப்பு முசுலீம் பேரரசை தடுமாறச் செய்தது. நாட்டைச் சூறையாடியதுடன் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றார். 1399இல் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இப்ரஹிம் லோடி

தில்லிச் சுல்தானியர்களின் கடைசி சுல்தான் இவர். இவருடைய பேரரசு குன்றிக் குறுகி இருந்தது. தில்லி, ஆக்ரா, சாந்தேரி, ஜான்பூர், பீகாரின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு அப்பால் இவருடைய ஆட்சி பரவவில்லை. பல பிரபுக்களை இன்னலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்தினார். அவருடைய அரசியல் தந்திரமற்ற செயல்களால் சுல்தானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாபர் 1526இல் முதல் பானிபட் போரில் இப்ரஹிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.