சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் அனைத்து மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து
வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக்
குழுக்களாக இயங்கி வந்தபோது, ஓய்வு நேரங்களில் சக
மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன்
பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.
தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என
பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள்
அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,
‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’
என்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர்
எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும்
இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தயம்
போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம்
என்பார் இராசாசி.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ்
இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின்
செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று
வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில்
வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’. அதைத்
தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள்,
தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும்
அதிகமானது.
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்
வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவேக
போதினி என்னும் இதழ் ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். இவர் ‘குளத்தங்கரை அரசமரம்
சொன்ன கதை, மங்கையர்க்கரசியின் காதல் போன்ற கதைகளை
எழுதியுள்ளார்.
ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது ‘குசிகர் குட்டிக் கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து
வெளியிட்டார்.
கல்கியின் கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன்
என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம்
காட்டியது.சி றுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின்
மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம்,
பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை
உலகின் திருமூலர் என்று அழைப்பார்.
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச் சிறுகதையின் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது
டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின்
சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்க முழுக்க சிறுகதை இதழாக
பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன்,
ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த
சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு
அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன்
போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்
இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை
எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு
முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக
வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ்
பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும்
இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச்
சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்பத்தில் சிறுகதை
இதழ்களால் வளர்ந்த சிறுகதை இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது.
சிறுகதைக்கெனவே பல இணையதளங்களும் வலைப்பூக்களும் உயிர்ப்பெறுகின்றன. மேலும்
அலைபேசியிலும் வாட்பேட், பிரதிலிபி
போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச்
செவ்வனே செய்கின்றன.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப
ஒருபக்கக் கதை, அரைப்பக்கக்
கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என
தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம்
என்றும் மறக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக