வியாழன், 9 ஜூலை, 2020

மனுமுறை கண்ட வாசகம்

மனுமுறை கண்ட வாசகம்  

இராமலிங்க அடிகளார்


ஆசிரியர் குறிப்பு

இராமலிங்க அடிகளார் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா பிள்ளைசின்னம்மாள். காலம் கி.பி.1823 – 1874. இவரை இறையருள் பெற்ற திருக்குழந்தை என்பர். இவரின் வழிபடு கடவுள் முருகன். வழிபடு குரு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம். இளமையிலேயே ஓதாமல் உணர்வு பெற்றுக் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது முதல் நூல் சென்னைக் கந்தகோட்டத்து முருகன் மீது பாடியதெய்வமணி மாலைஎன்னும் நூலாகும். இவர் பாடிய பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு திருவருட்பா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இவருடைய ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு எனப்படுகிறது.  இவருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார்.

இயற்றிய உரைநடை நூல்கள்

  •  மனுமுறை கண்ட வாசகம்
  •  ஜீவ காருண்ய ஒழுக்கம்

பதிப்பித்த நூல்கள்

  •  ஒழிவில் ஒடுக்கம்
  •   தொண்டைமண்டல சதகம்
  •   சின்மய தீபிகை

நிறுவிய நிறுவனங்கள்

  •  சன்மார்க்க சங்கம்
  • ·சத்திய தருமசாலை
  • ·சத்திய ஞானசபை
  • ·சித்திவளாகம்

இவருடைய கொள்கை

1.   கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதியாக உள்ளார்.

2.   சாதி, மத, இன வேறுபாடு கூடாது.

3.   எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

4.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

5.பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

6.   புலால் உணவு உண்ணக்கூடாது.

 

மனுமுறை கண்ட வாசகம்

மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல் கொல்லா நெறியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. சென்னையில் இராமலிங்க அடிகளார் தங்கியிருந்தபோது சாத்திர விளக்கச் சங்கத்தார் வேண்டிக் கொள்ள, பெரிய புராணத்தில் உள்ள மனுநீதி கண்ட புராணத்தை முதல் நூலாகக் கொண்டு, மனுநீதிச் சோழன் பசுவிற்கு முறை செய்த வரலாற்றை மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலாக எழுதி அருளினார் என்பர். இந்நூல் 1854 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகும்.

 

உரைநடையின் சுருக்கம்

மனுநீதியின் சோழ நாட்டு வளம்

காவிரி நதி ஓடுவதால் எந்த காலத்திலும் குறைவுபடாத நீர்வளமுடையது சோழநாடு. வாழை, பலா, மா, தென்னை, கமுகு, கரும்பு சோலைகள் அணிஅணியாகச் சூழ்ந்திருந்தன. அசோகு, சண்பகம் போன்ற மரங்களும், தாமரைக் குளங்களும் நிறைந்திருந்தன. ஓடைகள், பொய்கைகள், ஏரிகள், குளங்கள் என நீர்வளம் உடையதாக இருந்தது சோழநாடு. செந்நெல் பயிர்கள் நன்கு செழித்திருந்தன.

திவ்விய தேசங்கள்

சிதம்பரம், பஞ்சநாதம், மத்தியார்ச்சுனம் (திருவிடைமருதூர்), சம்புகேச்சுரம் (திருவானைக்கா) முதலான திவ்விய தேசங்களால் நிறைந்திருந்தது சோழநாடு.

நீர்நிலைகள்

தெய்வதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வசந்தஓடை, செங்குவளை ஓடை முதலான நீர்நிலைகள் இருந்தன.

அரண்மனைச் சிறப்பு

            தேர், யானை, குதிரை, சேனைகளுக்கான இடங்கள், ஆஸ்தான, விசித்திர, விநோத, நியாய, நிருத்த, கல்வி, கணக்கறி மண்டபங்கள் எனப் பல மண்டபங்கள் இருந்தன.  சிலம்பக்கூடம், ஆயுதசாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் இருந்தன.

நகரச்சிறப்பு

கடை வீதி முதல் வைதீகர் வீதி வரை பல வீதிகளை உடையதாகத் திருவாரூர் நகரம் அமைந்திருந்தது.

மனுநீதிச் சோழனின் ஆட்சிச் சிறப்பு

சூரிய குலத்தில் பிறந்த சோழ அரசர்களில் சிறந்தவராய், ஆயகலைகளில் வல்லவராய், கேள்வி ஞானம் உடையவராய், எல்லா உயிர்களுக்கும் இதமளிப்பவராய் விளங்கினார். வேதம் ஓதுதல், யாகம் செய்தல், பகைவரை அழித்தல் போன்ற ஆறு தொழில்களிலும் வல்லவராய் இருந்தார்.

செல்வக்குடிகள், மாறாத பொருள்கள், மதிநுட்ப மந்திரி, நட்பு, பகைவரால் அழிக்கமுடியாத கோட்டை, நீதி, இனிய சொல், விவேகம், பெரியோர் சகாயம், சுற்றந்தழுவல், கண்ணோட்டம் உடையவராய் உலகியற்கை அறிந்து நல்லொழுக்கத்துடன் நடப்பவராயிருந்தார். மேலும், குடிகளுக்குத் தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய், தோழனாய், உயிராய் விளங்கினார். மக்களுக்குப் பொன்புதையலைப் போன்றும், மேகத்தைப் போன்றும், கற்பகம், காமதேனு, சிந்தாமணியின் குணங்களைக் கொண்டும் இந்திரனைப் போன்றிருந்தார்.

உலகெலாம் இவர் குடை நிழலில் இருந்ததால் மன்னர்களெல்லாம் திறை செலுத்தி வணங்கினர். விநோதமுள்ள உயிர்களெல்லாம் நட்புடன் வாழ்ந்திருந்தன. இயற்கைப் பேரிடர்கள் இல்லாமல் நல்ல காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறாமல் இருந்தன. மனுநீதிச் சோழனின் நாடு பொருள் பறிப்பாரும், கடின மனமுள்ளவர்களும், மது உண்போரும், அடிபடுவோரும், வறுமையுற்றோரும், துக்கப்படுவோரும், பொய் பேசுபவர்களும் இல்லாமல் மேன்மையே சிறந்து விளங்கியது.

சோழனின் மனவருத்தமும், மகனைப் பெறுதலும்

மனுநீதிச் சோழனுக்குக் குழந்தைப் பேறு இல்லாததால் மனம் வருந்தியிருந்தார். சிவனின் திருவருளைப் பெற வேண்டி, தன் மனைவியுடன் கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் குளித்துக் கோயிலை வலம் செய்து மனமுருகி நாள்தோறும் இறைவனை வேண்டினார். இறையருளால் அரசமாதேவி கருவுற்றாள். அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகுந்த பேரழகுடன் ஒரு மகன் பிறந்தான்.

மனுநீதியின் மகிழ்ச்சி

மகன் பிறந்த செய்தி கூறிய தோழியர்க்கு விலையுயர்ந்த ஆபரணங்களை அளித்தார். பிராமணர்களுக்கு விதைத்தானம், சொர்ணதானம், கஜதானம், பூதானம், கோதானம் முதலான தானங்களை அளித்தார். மகன் பிறந்த நாள் முதல் 12 ஆண்டுகளுக்கு மக்களுக்கு வரிவிலக்கும், அரசர்களுக்கு 7 ஆண்டுகளுக்குத் திறை விலக்கும், கைதிகளுக்கு விடுதலையும் அளித்தார். கருவூலத்தைத் திறந்து விட்டு நாட்டில் உள்ள யாவரும் ஏழுநாள் வரை வேண்டியதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  தியாகராஜப் பெருமானது திருவருளால் மகன் பிறந்ததால் அவனுக்கு வீதி விடங்கன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

வீதிவிடங்கனின் சிறப்பு

மனுநீதிச் சோழன் தன் மகனுக்கு ஐந்தாம் வயதில் கல்வி பயில்விக்கும் சடங்கினைச்  செய்தார். ஏழாம் வயதில் சகல தேசத்தலைவர்க்கும் தெரிவித்து நகரை அலங்கரித்து, அனைவரும் ஆசீர்வதிக்க இளவரசர்கள், அமைச்சர்கள், உறவினர் முதலானவர்கள் கண்டுகளிக்க, சுமலிங்கப் பெண்கள் மங்கலப் பாடல் பாட, மங்கல வாத்தியங்கள் முழங்க நல்ல நாளில் வேத முறைப்படி பூணூல் அணிவித்தார். சில நாட்களில் வீதிவிடங்கன் சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசிரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனானான். மேலும், யானையேற்றம், குதிரையேற்றம், வில்வித்தை, வாள்வித்தை முதலான வித்தைகளையும் குறைவறக் கற்றான்.

நல்ல அழகும், ஆண்சிங்கம் போல ஆண்மையும், மதயானை போல் நடையும், கொடைத்தன்மையும் உள்ளவனாக இருந்தான். சிவபக்தி, சீவகாருண்யம், பொறுமை, அன்பு, மனிதநேயம் முதலான நற்குணங்கள் பெற்று, இளம் பருத்திலேயே இளவரசு பட்டத்திற்குத் தகுதியுடையவனாக இருந்தான்.

கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்டல்

ஒரு நாள் வீதிவிடங்கன் தியாகராஜப் பெருமானைத் தரிசித்து வர வேண்டும் என்று தந்தையின் அனுமதி கேட்டான். தந்தையும், “உனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு ஆண்டவனைத் தரிசித்து விட்டு வருகஎன்று கட்டளையிட்டான். வீதிவிடங்கனின் தாய்நான் உன் மணக்கோலத்தைக் கண்டு களிப்படையும் வரத்தைப் பெற்று வாஎன்று  வழியனுப்பினாள்.

கோயிலுக்குச் செல்லும் வழியில் கன்று இறத்தல்

     தியாகராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய வீதிவிடங்கன் செல்லும்போது, தேரில் உள்ள குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து, தெய்வத்தின் வசமாகி அதிவேகமாக அத்தேரை இழுத்துக் கொண்டு சென்றன. இத்தருணத்தில் தாய்ப்பசு பின்னேவர, முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங்கன்று துள்ளிக் குதித்துக் கொண்டு, மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் வேகமாகச் செல்லும் தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு உடல் முறிந்து குடல் சரிந்து உயிர்விட்டது.


வீதிவிடங்கன் வருத்தம்

பசுங்கன்று தன் தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கண்ட வீதிவிடங்கன் மனம் பதறினான். கண்களில் நீர் பெருக, தியாகராஜப் பெருமானை வேண்டினான். இறைவனைத் தரிசிக்க கால் வருந்த நடந்து வராமல், செல்வச் செருக்கில் தேரிலேறி வந்ததால் இந்தத் தண்டனையோ? என் தந்தைக்குப் பெரும் பழியைச் சுமத்தினேனேஎனக் கலங்கினான்.

சான்றோர் கூறிய சமாதானம்

வீதிவிடங்கன் கதறி அழுததைக் கண்ட அமைச்சர் முதலானோர்கர்ம வினையால்  கன்று மடிந்தது. அதற்கு நீ பொறுப்பல்ல. ஏதேனும் பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். தேரில் ஏறுங்கள் செல்லலாம்என்று கூறி அழைத்துச் சென்றனர்.

 தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தல்

தன் கன்று இறந்து கிடப்பதைக் கண்ட தாய்ப்பசு மனம் கலங்கி, நம் துன்பத்தை மனுநீதிச் சோழனிடம் கூறச் சென்றது. அரசனின் வாயிலுக்கு வந்து அவர் கட்டியிருக்கும் ஆராய்ச்சி மணியை அடித்தது. மணியோசை கேட்ட அந்நகர மக்கள் ஒரு காலத்திலும் கேட்டறியாத ஆராய்ச்சி மணி ஒலிக்கிறதே என்ற அச்சத்துடன் அரண்மனைக்கு வந்தனர். ஆராய்ச்சி மணியின் ஓசை கேட்ட மனுநீதிச் சோழன் திகைப்படைந்தார். உடல் நடுங்கி உள்ளம் பதைத்து அதிவேகமாக அரண்மனை வாயிலுக்கு வந்தார். அப்போது வாயில் காவலன்மன்னா, ஒரு தாய்ப்பசுவானது தன் கொம்பினால் ஆராய்ச்சி மணியை அடித்து ஓசை உண்டாக்கியதுஎன்றுரைத்தான்.

மனுநீதியின் புலம்பல்

அமைச்சன் ஒருவன் தாய்ப்பசுவிற்கு நேர்ந்த நிலையை மன்னனிடம் விளக்கினார். அதைக் கேட்ட மன்னன்முன்னோர்கள் காலம் தொட்டு யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து வருகிறேன் என்று எண்ணிக் களித்தேனே. நம் பிள்ளை நாட்டைக் காப்பான் என்று எண்ணியிருந்தேனே. இப்படி ஒரு தீராப் பழியை சுமந்து வந்து நிற்கின்றானேஎன்று அரற்றினான். “சிவதரிசனம் செய்ய விரும்பியவன் தேரில் சென்றிருக்கக் கூடாதே. அவ்வாறு போவதானால் நாற்புறத்திலும் ஆட்களை விட்டு நடப்போர்களை விலக்கும்படிச் செய்து விட்டு மெல்ல தேரை விட வேண்டும். பயமறியாது செய்து விட்டானேஎன்று வருந்தினார்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?


மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?


மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?


ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?


இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ?

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ?

கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ?


கற்பிழந்தவளைக் களித்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ?

கணவன் வழிநிற்போரைக் கற்பழித்தேனோ?

கர்ப்பம் அழித்துக் களித்திருந்தேனோ?


குருவை வணங்கக் கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ?

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ?

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ?


பஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனா?

கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ?

ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ?


அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ?

பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ?


பொது மண்டபத்தைப் போயி இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?

சிவனடியாரைச் சீறி வைத்தேனோ?

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ?


தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ?

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ?

இன்னதென்று அறியேனே?

என்று புலம்பி வருந்தினார்.

அமைச்சர்கள் சமாதானம்

மனுச்சக்கரவர்த்தியின் அருகிலிருந்த அமைச்சர்கள் மன்னனைத் தொழுது விதிவசத்தாலே வலிய வந்து மடித்த இளங்கன்றைக் குறித்து நீர் துன்பப்பட வேண்டாம். உம் மகன் உயிரினங்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோ என்று அஞ்சியஞ்சி நடக்கின்றவன். ஆகவே, வினை வசத்தால் நேரிட்ட இந்தக் கன்றின் கொலைக்குத் தக்க பரிகாரத்தைச் செய்வதே முறைஎன்று கூறினர்.

மன்னனின் கோபம்

அமைச்சர்கள் கூறியதைக் கேட்டு வெகுண்ட மன்னன் நீங்கள் கூறிய நீதியை தருமதேவதை ஒப்புக் கொள்வாளா? தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேட வேண்டும் என்று எனக்கு அடிக்கடி நீங்கள் அறிவுறுத்திய சொல் இப்போது என்னவாயிற்று?” என்று சினம் கொண்டான்.

மன்னன் மகனைப் பலியிடத் துணிதல்

தாய்ப்பசு எவ்வாறு தன் கன்றை இழந்து தவிக்கின்றதோ அதுபோல நானும் என் பிள்ளையை இழந்து தவிப்பதே சரியான நீதிஎன்றுரைத்தார். மன்னனின் சொற்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள் அறநூல்களில் உள்ள தர்ம நியாயங்களை எல்லாம் சுட்டிக் காட்டினர்.

கலாவல்லபன் உயிர் இழத்தல்

மன்னன் மனம் மாறாததைக் கண்ட அமைச்சர் கலாவல்லபன்உயிருக்கு உயிர் தான் பதில் என்றால் தன் உயிரை வீதிவிடங்கன் உயிருக்குப் பதிலாகத் தருகிறேன்என்று கூறி அதிவேகமாகத் தன் உடை வாளை உறையிலிருந்து உருவித் தன் கழுத்தை அரிந்து கொண்டு உயிரிழந்து விழுந்தான். அது கண்ட சில ஒற்றர்கள்  வேகமாகச் சென்று மனுநீதி சோழனிடத்தில் கலாவல்லபன் என்னும் அமைச்சன் இறந்த செய்தியைக் கூறினர். ஒற்றர் கூறியதைக் கேட்டு மன்னன் துடிதுடித்து மனம் கலங்கினார்.

வீதிவிடங்கன் அரண்மனையைத் திரும்புதல்

            நம் தந்தை சொல்கின்ற தீர்ப்பின்படி நடந்து கொள்வோம் என்று கருதி தேகம் மெலிந்து மேனி வேறுபட்டு முகம் சோர்ந்து தன் அரண்மனைக்குத் திரும்பினான் வீதிவிடங்கன். செய்தி கேட்ட அரசமாதேவிபாவியாகிய விதி என் பாக்கியத்தை அழித்ததே!” என்று புலம்பினாள். தாயைத் தேற்றி விட்டுத் தன் தந்தையிடம் சென்றான்.

வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டுக் கொல்லுதல்

மன்னன் தன் காவலர்களை அழைத்து, “பசுங்கன்று இந்து கிடக்கின்ற வீதிக்குச் சென்று பசுங்கன்றை அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்என்று ஆணையிட்டான். மன்னன் ஆணை கேட்ட வீரர்கள் மனம் கலங்கி நிற்க, வீதிவிடங்கன் தன் மாதா, பிதா, குரு முதலானவர்களை மனதில் நிறுத்தி வடக்கே தலையும், தெற்கே காலும்  வைத்துப் படுத்துக் கொண்டு இரண்டு கண்ளையும் மூடிக்கொண்டான். அப்போது மன்னன் இறைவனை வணங்கி விட்டுபசுங்கன்றை கொலை செய்தபடியால், தாயப்பசுவின் துயர் தீர்க்க, இதோ தேர்க்காலில் ஊர்ந்து இவனைக் கொல்கிறேன் என்று கூறி வீதிவிடங்கன் மேல் தேரை ஓட்டினான். உடல் சிதறி நசுக்குண்டு வீதிவிடங்கன் இறந்தான்.



தேவர்களின் வருத்தம்

நடந்ததைக் கண்ட தேவர்கள் அருமையாகப் பெற்ற மகன் என்றும் பாராமல் நீதியை நிலைநாட்டிய மன்னனே! “உனக்கு நலம் உண்டாவதாகஎன வாழ்த்தினர். இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம் என்று வருந்தினர். மனுநீதிச் சோழன் தன் அமைச்சரின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே இறங்கினார்.

தியாகராஜப் பெருமாள் தோற்றமும் அருளும்

அப்போது  ஆனைமுகக் கடவுளும், ஆறுமுகக்கடவுளும் இருபக்கங்களிலும் இசைந்து வர, உமாதேவியார் இடப்பக்கத்தில் இருக்க தியாகராஜப் பெருமான் எழுந்தருளி மனுநீதிச் சோழனுக்குத் தரிசனம் அளித்தார். “மனுநீதிச் சோழனே! உன் நீதியின் பெருமையை உலகோர் அறியும் பொருட்டு இவ்வாறு சோதித்தேன். இனி ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்என்றார். அக்கணமே இறந்து கிடந்த பசுங்கன்றும், கலாவல்லப அமைச்சனும், வீதிவிடங்கனும் உயிர்பெற்று எழுந்தனர்.

மனுநீதிச் சோழனின் மகிழ்ச்சி

இறைவனின் அருள் பெற்ற மனுநீதிச் சோழன்உள்ளம் குளிர்ந்தேன். உயிர் தழைத்தேன். பசுங்கன்றும், அமைச்சனும் என் மைந்தனும் உயிர் பெற்று எழுந்து கொள்ள வரம் பெற்றேன். வாழ்வடைந்தேன். துயர் எல்லாம் நீங்கினேன்என்று இறைவனடியைப் போற்றினார்.


மனுமுறை கண்ட வாசகம் முற்றும்


நிழற்பட இணைப்பு - https://stockresearch52.wordpress.com/

 

 

 

 

 

 

 

 

 

 

 



புதன், 8 ஜூலை, 2020

திருவெம்பாவை

திருவெம்பாவை 

பாடலும் விளக்கமும்


பாடல் எண் - 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்.

விளக்கம் 

வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளியாகப் பிரகாசிக்கும் நம் சிவபெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயா? அந்த மகாதேவனின் பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள்   பாடியது வீதியெல்லாம் நிறைந்தது. அதைக் கேட்ட ஒரு பெண் பக்தி மேலீட்டால், விம்மி விம்மி அழுதாள். மலர்ப் படுக்கையில் இருந்து புரண்டு தரையில் விழுந்து மயக்கமானாள். சிவபெருமானின் மீது அவள் கொண்ட அன்பைக் கண்டு வியக்கிறோம். ஆனால், நீயோ  உறங்கிக் கொண்டு இருக்கிறாய்! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

பாடல் எண் - 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

விளக்கம்

அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இரவு பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர்ப் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய்என்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்குப் பதிலளித்த தோழியர், “ஒளி பொருந்திய திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு  பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாகஎன்றனர்.

பாடல் எண் - 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

விளக்கம்

முத்துப் போன்ற புன்னகை கொண்ட பெண்ணே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்பே நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்கத் தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திறஎன்றனர். தூங்கிக் கொண்டிருந்த தோழி, ஏதோ அறியாமல் தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். சிவ பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என மனம் வருந்திக் கூறுகின்றாள். வந்த தோழியர் அவளிடம், “அப்படியில்லை! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானைப் பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்என்றனர்.

பாடல் எண் - 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.


விளக்கம்

“ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?” என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய அனைத்துத் தோழிகளும் வந்துவிட்டார்களா?” என்றாள்.  எழுப்ப வந்தவர்கள் உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்குஎன்று கேலி செய்தனர்.

பாடல் எண் - 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

விளக்கம்

மணம் வீசும் கூந்தலை உடைய பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது திருவடியையும், திருமுடியையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல. இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்டப் பெருமைக்குரியவனை உணர்ச்சிப் பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் பெண்கள்.

பாடல் எண் - 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

விளக்கம்

மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், “உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா?  வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே, உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாட எழுந்து வாஎன்றனர்.

பாடல் எண் - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

விளக்கம்

பெண்ணே ! தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்குக் காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?” என்றனர்.

பாடல் எண் - 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

விளக்கம் 

தோழியை எழுப்ப வந்த பெண்கள், “அன்புத் தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருளை நீக்கும் வண்ணம்  பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளைப் பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். உறக்கத்துக்குச் சொந்தமாகி விட்டாய்! இன்னும் பேசமாட்டேன் என்கிறாய்! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனைப் பாடி மகிழ உடனே புறப்படுஎன்றனர்.

பாடல் எண் - 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

விளக்கம்

கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் இலட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னைத் தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்குக் கணவர்களாக அமைய வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்குக் கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த நற்பாக்கியத்தை எங்களுக்குத் தந்தால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்என்றனர்.

பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கோயில் திருப்பணியைச் சார்ந்து வாழும் பெண்களே! சிவபெருமானின் பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழுபாதாள உலகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. சிவனின் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. உமையம்மையைத் தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒரே திருமேனியுடையவன் அல்லன் என்பது உண்மையாகிறது. விண்ணில் உள்ளவர்களும், பூலோகத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. தவம் கொண்ட முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவன் பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? என்பதைக் கூறுவீர்களா? என்று வேண்டினர்.

முற்றும்

நன்றி - தினமலர் திருவெம்பாவை மார்கழி ஸ்பெஷல். 

 



திருவெம்பாவை - நூல் குறிப்பு

திருவெம்பாவை 

மாணிக்கவாசகர் 
        பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர்இவரது இயற்பெயர் தெரியவில்லைஊர்ப்பெயரால் திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார்கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்அறிவாற்றலில் சிறந்து விளங்கிய இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணி புரிந்தார்அப்போது அம்மன்னனால் தென்னவன் பிரமராயன் என்ற பட்டமளித்துப் பாராட்டப்பட்டார் மன்னனுக்காகக் குதிரை வாங்க வேண்டி நிறையப் பொன்னுடன் கீழைக்கரைக்குச் சென்றபோது, வழியில் திருப்பெருந்துறையில், குருந்த மரத்தடியில் இறைவன் ஞானாசிரியனாக வெளிப்பட்டு உபதேசம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்கொண்டு வந்த பொன்னையெல்லாம் இறை பணியில் செலவிட்டார். இதனையறிந்த மன்னன் இவரைச் சிறையிலிடுமாறு அறிவித்தான்அப்போது இறைவன் தன் அடியவனைக் காப்பாற்ற நரியைப் பரியாக்கியும், வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும், பிரம்படிபட்டும் மாணிக்கவாசகரை ஆட்கொண்டார்.  இதனால் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்த மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவித்து இறைவனிடம் தஞ்சம் அடைந்தான். அன்று முதல் மாணிக்கவாசகர் முழு மூச்சுடன் சிவத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


நூல்கள்  
   இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம் என்னும் பெயர் பெற்றதுஇதன் கருத்துகள் கற்போரின் உயிரை உருக்கியதால் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்னும் பழமொழி வழங்கப்படுவதாயிற்றுஆண்டாள் கண்ணனைக் கணவனாக எண்ணிப் பாடியதுபோல், மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு திருவெம்பாவை பாடியுள்ளார்திருவெம்பாவையில் மனம் பறிகொடுத்த இறைவன் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று வேண்டியதற்கிணங்க 400 பாக்களைக் கொண்ட திருக்கோவையார் பாடினார்.  திருவாசகமும், திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகின்றன. 

    பின்பற்றிய நெறி
              இவர் இறைவனைத் தன் ஞான ஆசிரியனாக எண்ணி வழிபட்டார். ஆகவே, இவர் பின்பற்றிய நெறி சன்மார்க்க நெறி என்று கூறப்படுகிறது. இது ஞான நெறி என்றும் வழங்கப்படும்
    திருவெம்பாவை - விளக்கம்
     திருவெம்பாவை சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டது. பாவை நோன்பினை அடிப்படையாகக் கொண்டது. கன்னிப்பெண்கள் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளில் நீராடித் தாம் வணங்கும் தெய்வப் பாவையிடம் தங்களது வாழ்வு நலமாக இருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு நல்ல குணமுடைய கணவன் அமைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதாக அமைவதே திருவெம்பாவை ஆகும்.


              திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது.  முதல் எட்டுப் பாடல்கள் தோழியர் ஒருவர் மற்றொருவரை எழுப்புகின்ற செய்தி இடம்பெறுகிறதுஒன்பதாவது பாடல் பெண்களின் வேண்டுதலைக் கூறுகிறது. பத்தாவது பாடல் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறது.   அடுத்த இருபது பாடல்கள் பெண்கள் நீராடுகின்ற சூழலை விவரிக்கின்றன. இப்பாடல்கள் சிறு பெண்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலாக அமைந்துள்ளது மிகச் சிறப்பு சிறு பெண்களின் கேலியும் கிண்டலும் படிப்போர் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.    

     பெயர்க்காரணம்
             மாணிக்கவாசகர் திருவண்ணாமலையைத் தரிசித்தபோது பாடப் பெற்றது திருவெம்பாவை. இப்பாடல்கள் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இந்நூலுக்குப் பெயராக அமைந்தது.   "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர், பொருள் ஏதுமில்லாத அசைச்சொல் ஆகும். “பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று இதற்குச் சிலர் பொருளுரைக்கின்றனர்.



11

 









k