வெள்ளி, 4 டிசம்பர், 2020

புதுக்கவிதை - விதைச்சோளம்

 

விதைச்சோளம்

கவிஞர் வைரமுத்து

ஆடி முடிஞ்சிருச்சு

ஆவணியும் கழிஞ்சிருச்சு

சொக்கிகொளம் கோடாங்கி

சொன்னகெடு கடந்திருச்சு

 

காடு காஞ்சிருச்சு

கத்தாழை கருகிருச்சு

எலந்த முள்ளெல்லாம்

எலையோட உதிந்திருச்சு

 

வெக்க பொறுக்காம

றெக்க வெந்த குருவியெல்லாம்

வெங்காடு விட்டு

வெகுதூரம் போயிருச்சு

 

பொட்டு மழை பெய்யலையே

புழுதி அடங்கலையே

உச்சி நனையலையே

உள்காடு உழுகலையே

 

வெதப்புக்கு விதியிருக்கோ

வெறகாக விதியிருக்கோ

கட்டிவச்ச வெங்கலப்ப

கண்ணீர் வடிச்சிருச்சே

 

காத்துல ஈரமில்ல

கள்ளியில பாலுமில்ல

எறும்பு குளிச்சேர

இருசொட்டுத் தண்ணியில்ல

 

மேகம் எறங்கலையே

மின்னல் ஒண்ணுங் காங்கலையே

மேற்க கருக்கலையே

மேகாத்து வீசலையே

* * * * *

தெய்வமெல்லாம் கும்பிட்டுத்

தெசையெல்லாம் தெண்டனிட்டு

நீட்டிப் படுக்கையில

நெத்தியில ஒத்தமழை

* * * * *

துட்டுள்ள ஆள் தேடிச்

சொந்தமெல்லாம் வாரதுபோல்

சீமைக்குப் போயிருந்த

மேகமெல்லாம் திரும்புதய்யா

 

வாருமய்யா வாருமய்யா

வருண பகவானே

தீருமய்யா தீருமய்யா

தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

 

ஒத்தஏரு நான் உழுகத்

தொத்தப்பசு வச்சிருக்கேன்

இன்னும் ஒரு மாட்டுக்கு

எவனப் போய் நான் கேட்டேன்?

 

ஊரெல்லாம் தேடி

ஏர்மாடு இல்லாட்டி

இருக்கவே இருக்கா

இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

* * * * *

காசு பெருத்தவளே

காரவீட்டுக் கருப்பாயி

தண்ணிவிட்டு எண்ணெயின்னு

தாளிக்கத் தெரிஞ்சவளே

 

 

சலவைக்குப் போட்டாச்

சாயம் குலையுமின்னு

சீல தொவைக்காத

சிக்கனத்து மாதரசி

 

கால்மூட்ட வெதச்சோளம்

கடனாகத் தாதாயி !

கால்மூட்ட கடனுக்கு

முழுமூட்ட அளக்குறண்டி

* * * * *

ஊத்துதடி ஊத்துதடி

ஊசிமழை ஊத்துதடி

சாத்துதடி சாத்துதடி

சடைசடையாச் சாத்துதடி

 

பாழும் மழைக்குப்

பைத்தியமா புடிச்சிருச்சு?

மேகத்தக் கிழிச்சு

மின்னல் கொண்டு தைக்குதடி

 

முந்தாநாள் வந்த மழை

மூச்சுமுட்டப் பெய்யுதடி

தெசைஏதும் தெரியாம

தெரபோட்டுக் கொட்டுதடி

 

கூர ஒழுகுதடி

குச்சுவீடு நனையுதடி

ஈரம் பரவுதடி

ஈரக்கொல நடுங்குதடி

 

வெள்ளம் சுத்திநின்னு

வீட்ட இழுக்குதடி

ஆஸ்தியில சரிபாதி

அடிச்சிக்கிட்டுப் போகுதடி

 

குடி கெடுத்த காத்து

கூர பிரிக்குதடி

மழைத்தண்ணி ஊறி

மஞ்சுவரு கரையுதடி

 

நாடு நடுங்குதய்யா

நச்சுமழை போதுமய்யா

வெதவெதைக்க வேணும்

வெயில்கொண்டு வாருமய்யா

 

மழையும் வெறிக்க

மசமசன்னு வெயிலடிக்க

மூலையில வச்சிருந்த

மூட்டையப் போய் நான் பிரிக்க

 

வெதச்சோளம் நனைஞ்சிருச்சே

வெட்டியாய் பூத்திருச்சே

மொளைக்காத படிக்கு

மொளைகட்டிப் போயிருச்சே

 

ஏர்புடிக்கும் சாதிக்கு

இதுவேதான் தலையெழுத்தா?

விதிமுடிஞ்ச ஆளுக்கே

வெவசாயம் எழுதிருக்கா?

 

காஞ்சு கெடக்குதுன்னு

கடவுளுக்கு மனுச்செஞ்சா

பேஞ்சு கெடுத்திருச்சே

பெருமாளே என்னபண்ண?

 

கவிதையின் விளக்கம்

கவிஞர் வைரமுத்து அவர்கள் விதைச்சோளம் என்ற கவிதையில், விவசாயமே தங்களின் வாழ்வாதாரம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் துன்பத்தை எடுத்துரைக்கின்றார்.

மழையும் விவசாயமும்

மழை இன்றி உழவு இல்லை. உழவின்றி உணவு இல்லை. உழவர்களுக்கு மழையே தெய்வம். ஆனால், மழை பெய்யாமலும் கெடுக்கின்றது. பெய்தும் கெடுக்கின்றது. இதனை ஓர் உழவனின் மனநிலையில் இருந்து படைத்துக் காட்டுகின்றார் கவிஞர்.

மழை பெய்யாமையால் நேர்ந்த துன்பங்கள்

          உழவுத் தொழிலை மேற்கொள்ளும் உழவர்கள் மழை வேண்டி இறைவனைப் பாடுகின்றனர். விதை விதைக்க வேண்டிய ஆடி மாதம் முடிந்து விட்டது. ஆவணியும் முடிந்து விட்டது. மழை வரும் என்று சொக்கிக்குளத்தைச் சேர்ந்த கோடாங்கி உடுக்கை அடித்துச் சொன்ன கெடுவும் முடிந்து விட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

மழை பொழியாததால் காடுகள் காய்ந்து விட்டன. எளிதில் காய்ந்துவிடாத தன்மை கொண்ட கற்றாழைகள் இப்போது கருகி விட்டன. இலந்தை மரங்கள் பழங்களைத் தருவதற்கு முன்பே இலைகளை உதிர்த்து விட்டன. வெயிலின் கொடுமை தாங்காது தங்கள் சிறகுகள் வெந்துபோன நிலையில், குருவிகள் வெம்மை தரும் காட்டை விட்டு வெகு தூரம் சென்று விட்டன. காற்று வீசுவது குறையவில்லை. அதனால் புழுதிகள் மண்ணில் அடங்கவில்லை. தலை நனைய மழை பெய்யவில்லை. நிலத்தில் உழவு செய்யமுடியவில்லை. இவ்வாறு சென்றால், விதை விதைத்து வருமானம் ஈட்டி உயிரோடு வாழ்வேனா? அல்லது வறுமையால் இறந்துபோய் விறகாகி விடுவேனா? என்று கவலை கொள்கின்றார் விவசாயி. ஏர் உழுகின்ற கலப்பை, நிலத்தில் கால் வைக்க முடியாமையால் கண்ணீர் வடிக்கின்றது. காற்றில் ஈரம் இல்லை. அதனால் கள்ளிச் செடியில் கூட பால் வற்றிப் போய்விட்டது. சிறு உயிரினமான எறும்பு குளிக்கக்கூட இரு சொட்டு நீர் இல்லாத நிலை உருவாகிவிட்டது. மேகங்கள் ஒன்று கூட வில்லை. மின்னல்கள் வரவில்லை. மேற்குத் திசையில் மேகங்கள் கருக்கவில்லை. காற்றும் வீசவில்லை என்று புலம்புகின்றார்.

மழை கண்ட உழவனின் மகிழ்ச்சி

மழை வேண்டி அனைத்துத் திசையில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டி விட்டு மன உளைச்சலோடு படுக்கின்றார் உழவர். அப்போது அவருடைய நெற்றியில் மழைத்துளி விழுகின்றது.

செல்வம் இருப்பவனைத் தேடிவரும் திடீர் உறவினர்களைப்போல, வெளியூருக்குச் சென்றிருந்த மேகமெல்லாம் திரண்டு வந்து விட்டது என்று எண்ணி மகிழ்கின்றார். தென்னாட்டின் பஞ்சங்களைத் தீர்க்க வருண பகவானை அன்போடு அழைக்கின்றார்.

உழவு செய்ய முயலும் விவசாயி

ஏர் உழ உடல்நலம் சரியில்லாத ஒற்றைப் பசுவை வைத்திருக்கிறேன். ஏர் பூட்டி உழுக இன்னொரு பசுவை யாரிடம்போய்க் கேட்பேன் என்று கவலை கொள்கின்றார். கேட்டுக் கிடைக்கவில்லையெனில், இடுப்பு உடைந்தாலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை இன்னொரு பசுவாக்கி ஏர் உழத் தயாராகிவிட்டார். இதன் மூலம், ஊருக்கே உணவளிக்கும் இன்றைய விவசாயிகளின் நிலைமை இத்தகைய கொடுமையான சூழலில்தான் இருக்கின்றது என்பதை மிகத் துயரத்தோடு பதிவு செய்கின்றார் கவிஞர்.

கடன் பெறுதல்

ஊரிலேயே    பணமும், செல்வமும், சொந்தவீடும்  படைத்திருக்கும் கருப்பாயி சிக்கனம் என்ற பெயரில் கருமியாக இருப்பவள்.  தண்ணியை எண்ணெய் என்று ஊற்றித் தாளிக்கத் தெரிந்தவள் என்றும், சலவைக்குப் போட்டால் சாயம் போய்விடும் என்று புடவையைத் தோய்க்காதவள் என்றும் அவளுடைய கருமித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றார்  ஆசிரியர். அவளிடம் சென்று கால் மூட்டை விதைச் சோளத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, கால் மூட்டைக்கு வட்டியோடு முழு மூட்டையும் அளக்க வேண்டிய தம் நிலையை எண்ணி வேதனை கொள்கின்றார்.

பெய்து கெடுத்த மழை

கடனாகப் பெற்ற சோளத்தை விதைக்கலாம் என்று எண்ணியிருந்த வேளையில், முதலில் ஊசி ஊசியாய் இறங்கிய மழை, பின்பு பின்னிய சடை போல் பெய்யத் தொடங்கியது. மேகத்திற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதுபோல ஓயாமல் பெய்கின்றது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு மின்னல்கள் மின்னுகின்றன. மூன்று நாட்களாக விடாமல் பெய்கின்றது மழை. எந்தத் திசையில் பெய்கின்றது என்பதே தெரியாத நிலையில் திரை போட்டுக் கொண்டு பெய்கின்றது. கூரை வீடு ஒழுகுகின்றது. குடிசை வீடு நனைகின்றது. நிலத்தில் ஈரம் மிகுதியாகப் பரவ ஈரக்குலை நடுங்குகின்றது.  வீடுகள் வெள்ளத்தால் சூழந்து விட்டன. சேர்த்து வைத்திருந்த சிறிதளவு சொத்துக்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. பலமான காற்றால் வீட்டின் கூரை வீசியெறியப்பட்டுவிட்டது. மழை நீர் ஊறியதால் மண் சுவர்கள் இடிந்து போயின. மழை விரும்பிய விவசாயி, நாடு நடுங்கும் அளவிற்குப் பெய்கின்ற நச்சு மழையை வெறுக்கின்றார். விதை விதைக்க வெயில் அடிக்க வேண்டும் என்று வேண்டத் தொடங்குகின்றார்.

வெயில் வந்தது

மழை நின்றது. வெயில் அடித்தது. விதை விதைக்கத் தயாராகி கடனாகப்பெற்ற சோள மூட்டையைப் பிரித்தால், மழையால் விதைச்சோளங்கள் எல்லாம் நனைந்து விதைப்பதற்கு முன்பே பூத்துவிட்டன. முளைக்காத அளவிற்கு முளைக் கட்டிவிட்டன. அதைக்கண்ட விவசாயி அதிர்ச்சி கொண்டவராய் “ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு இதுதான் தலையெழுத்தா? விதி முடிந்தவர்களுக்குத்தான் விவசாயம் என்று எழுதியிருக்கா” என்று குமுறுகின்றார்.  “நிலங்கள் காய்ந்து கிடக்கின்றதே என்று எண்ணிக் கடவுளிடம் மழை வேண்டினால், அதிகமாகப் பெய்து கெடுத்துவிட்டதே இறைவா நான் என்ன செய்ய” என்று அழுகின்றார்.

முடிவு

விவசாயிகளின் வறுமை வாழ்க்கையையும், மழையால் அவர்கள் படும் துயரங்களையும், இன்றைய உழவுத்தொழிலின் அவலத்தையும் இக்கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

 

திங்கள், 30 நவம்பர், 2020

புதுக்கவிதை - நிழல்கள்

 

நிழல்கள்

கவிஞர் மு.மேத்தா

 சூரிய நெருப்பு

சுடுகிற பாதத்தில்

ஒத்தடம் கொடுக்கும்

நிழல் ஒற்றர்கள்.

வெய்யில் தாங்காமல்

விரைந்து வரும்

காலுக்குச்

சிறிது நேரச் செருப்புகள்!

வெளிச்சத்தின்

காலடிச் சுவடுகள்!

கவிதையின் விளக்கம்

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது முதுமொழி.  இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கவிதையை இயற்றியுள்ளார் கவிஞர் மு.மேத்தா.

நிழல்கள் - ஒற்றர்கள்

இக்கவிதை நிழலின் தன்மைகளை வாழ்க்கையோடு பிணைத்துக் காட்டியிருக்கின்றது. சூரியனின் கதிர்கள் பாதங்களைச் சுடும்போது கால்கள் நிழல்களைத் தேடி ஓடுவது இயல்பு. வாழ்க்கையில் துன்பங்கள் நம்மை நெருக்கும்போது ஆறுதலைத் தேடி மனம் செல்வதும் இயல்பு.  

நிழல்கள் ஓரிடத்தில் நிற்தில்லை. சூரியக் கதிர்களின் ஓட்டத்தைப் பொறுத்தே நிழல்கள் உருவாகின்றன. மனிதனின் வாழ்க்கையும் ஓரிடத்தில் நிலையாக நிற்பதில்லை. நாம் செய்கின்ற செயல்களின் அடிப்படையில்தான் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது. சூரியனின் தாக்கத்தை முன்னரே அறிவிக்கும் ஒற்றர்கள்போல் நிழல்கள் செயல்படுகின்றன. அதுபோல தோல்விகள் யாவும் வரப்போகின்ற வெற்றியை அறிவிக்கின்ற ஒற்றர்கள்தான் என்பதை உணர்த்துகின்றார் கவிஞர்.

நிழல்கள் - செருப்புகள்

செருப்பில்லாமல் உழைக்கின்ற மக்களின் கால்களுக்கு நிழல்கள் சிறிது நேரம் செருப்புகளாகப் பயன்படுகின்றன. கவலைகளும், கலக்கங்களும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது இளைப்பாறக் கிடைக்கும் தற்காலிக இன்பங்கள் எல்லாமே நிழல்கள்தான் என்ற கருத்தை முன் வைக்கின்றார் ஆசிரியர்.

நிழல்கள் - காலடிச் சுவடுகள்

            ஒளியின் பிம்பங்களே நிழல்களாகத் தோன்றுகின்றன. அதனால் நிழல்களை வெளிச்சத்தின் காலடிச் சுவடுகள் என்று வர்ணிக்கின்றார் கவிஞர். அதே போல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பின்வரும் தலைமுறையினருக்குக் காலடிச்சுவடுகளாய் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றார் கவிஞர்.

 

 

புதுக்கவிதை - சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

ஈரோடு தமிழன்பன்

சொல்லில் உயர்வு

தமிழ்ச் சொல்லே என்று பாடிய பாரதி

இங்கு வரவில்லை திருவள்ளுவர்க்குக் கூட

என்வணக்கம் இல்லை

திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம்

என்வணக்கம்.

வள்ளுவர்க்கு இதைவிட

வேறென் வணக்கம் வேண்டும்?


தாயை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது

எவருக்கு விண்ணப்பம் போட்டும்

கையூட்டு காலூட்டுக் கொடுத்தும்

விரும்பியபடி

தாயைப் பெறமுடியாது.

முடியும் என்றால்

அரசாங்கம் தாய்மாற்றுவாரியம்

ஏற்படுத்தியிருக்கும். . .

ஏழைகளுக்கு

இலவசத்தாய் வழங்கு திட்டம்

தொடங்கப்பட்டிருக்கும். . .

தேர்தல் முடியும் வரை

யாரும் தாயாகக் கூடாது என்று

தலைமைத் தேர்தல் ஆணையம்

தடையைப் போட்டிருக்கும்

தாயை மாற்றிக் கொள்ள

முடியாது . . .

தாய் மொழியையும் மாற்றிக் கொள்ளவோ

தானாகத்

தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ முடியாது . . .


தமிழ்நாட்டில்தான்

தள்ளுபடி விலையில், தமிழ்த்தாயை

விற்றுவிட்டு

ஆங்கில ஆயாவையே

தாயின் இடத்தில் அமர்த்தினார்கள்.

உடனே

மம்மிவந்து சேர்ந்தாள்

மம்மி என்றால் என்ன பொருள்

பதப்படுத்தப்பட்ட பிணம்

மம்மிக்குப்பின்

டம்மியான தந்தை டாடியானான்.

மம்மியையும்

மம்என்று இறுக்கமாய்

அமுக்கினார்கள் . . .

சின்னம்மா மினிமம்

பெரியம்மா மேக்சிமம்

ஆனார்கள்.

டாடிகள்

திண்டாடினார்கள்.

அத்தையா

சித்தியா, பேத்தியா

மொத்தக் குழப்பத்தில் ஆண்டி!

மாமாவா

சித்தப்பாவா பெரியப்பாவா . . .

சந்தேக அங்கிளைப் பார்த்து

ஆண்டி ஹாய் என்றாள்.


பள்ளிகளில்

இங்கிலிஷ் மிஸ், கணக்கு மிஸ்

கெமிஸ்ட்ரி மிஸ், டிராயிங் மிஸ்

மொத்தத்தில்

தமிழ் மிஸ்.


கல்லூரிகளில்

மரியாதை அதிகம்

மிஸ்கள் எல்லாம் மேடமானார்கள்.

பைத்தியமான அம்மாக்களாய்

இருக்க வேண்டும் என விரும்பி

அவர்களை

மேடமாக்கினார்களோ

தெரியவில்லை.


ஆங்கிலத்தின் நடுவே

அங்கங்கே

கைதான தமிழ்சசொற்கள்

கண்ணீர் வடித்தபடி . . .

கதை வசனம்.


காதலனுக்கும்

காதலிக்கும் தாய்மொழி வெவ்வேறு

அதற்காக

மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு

உரையாடல் நடத்தினால்

 என்ன நடக்கும்?

தமிழ் தெரியாப் பெண்ணைக்

காதலித்த ஒருவன்

உன்ன நான் காதலிக்கிறேன்

என்று தமிழில் சொல்ல 

மொழிப் பெயர்ப்பாளன் ஐ லவ் யூ

என்றான் மொழிபெயர்த்து.

ஐ டூ லவ் யூஎன்று

தமிழ் தெரியாத அந்தப் பெண்

அவனோடு போய்விட்டாள்

நம் கடவுளிடம்

நம் மொழியில்நாம்

காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கித் தொழ வேண்டாமா?


தமிழில் எழுதவேண்டும்

தமிழாகவும் எழுதவேண்டும்

இப்போது

சென்னை மாநகராட்சியின்

சீர்மிகு துணையால்

பிளைவுட், ஷாப்

வன்பொருள் விற்பனைக் கடை ஆயிற்று

பேக்கரி அடுமனையகமாயிற்று

எத்தனை எத்தனை

விளம்பரங்களில் ...

முத்தான தமிழ்ச் சொற்களால்

அத்தனைக்கும் தமிழ்த்தாய்

முத்தப் பரிசளிப்பாள்

தமிழின் இரத்தம்

சூரியனில் ஒளியாக இருக்கிறது.

நிலவில் குளிச்சியாக இருக்கிறது.


தமிழின் முகவரியில் நெடுங்காலம்

அழகைச் சுவாசித்து வளர்ந்த பிறகுதான்

வசந்தம்

இயற்கையோடு வாழப் புறப்பட்டு வந்தது.

மழை பருவத்து

ஈரம் அவ்ளவும்

மேகங்கள் தமிழின்  மடியிலிருந்து

திரட்டிக் கொண்டவை அல்லவா?

சொல்லோ கல்லோ

எதுவானாலும் மாணிக்கமாய் வைரமாய்

இருக்கட்டும்

அடிபடி நாங்கள் தயாராய் உள்ளோம். !

கவிதையின் விளக்கம்

         கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ்மொழியின் சொல்வளம் கால மாற்றத்தால் எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் இக்கவிதையின் வாயிலாக விளக்குகின்றார்.

பாரதி - வள்ளுவன்

இனிமையும் சொல்வளமும் நிறைந்தது தமிழ்மொழி என்பதை உணர்த்திடவே பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று பாடினான். தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்க பாரதி போன்று இன்றைய இளைய தலைமுறை முயல்வதில்லை என்று வருந்துகின்றார்.

உலகப்பொதுமறை தந்த வள்ளுவனுக்குச் சிலை வைப்பதும், மாலையிட்டு வணங்குவதும் அவருக்குச் செய்யும் மரியாதை அல்ல. வள்ளுவன் இயற்றிய திருக்குறளின் அருமை அறிந்து அதனைப் படித்து, அதன்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களை வணங்குவதுதான் உண்மையில் வள்ளுவனுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று உணர்த்துகின்றார். ஆகவேதான் திருவள்ளுவர்க்குக் கூட என்வணக்கம் இல்லை, திருக்குறளைப் படிப்பவர்க்கெல்லாம் என்வணக்கம் என்றுரைக்கின்றார்.

தாய் – தமிழ்

இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் தங்கள் தாயைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பதும், எங்கேனும் விண்ணப்பம் செய்தோ, எவருக்கேனும் இலஞ்சம் கொடுத்தோ பொருட்களை மாற்றிக் கொள்வதுபோல, தாயை மாற்றிக் கொள்ள முடியாது என்பதும் இயற்கையின் நியதி.

ஒரு குடும்பத்தில் பிறந்தவன் அக்குடும்பத்தின் தாய் மொழியில் பேசி வளர்ந்தால் மட்டுமே அம்மொழி சார்ந்த பண்பாடும் கலாச்சாரமும் நிலை பெற்று நிற்கும் என்ற உண்மையை மறந்து  வேற்று மொழி பேச விரும்புகின்றோம். ஒரு மொழியை அழித்து விட்டால் அம்மொழி பேசும் இனமே அழிந்து விடும் என்ற அச்சம் இன்றி  தாய்மொழியை மாற்றிக் கொள்ளத்  துடிக்கின்றோம்.

அவ்வாறு நாம் விருப்பப்பட்டால், தாயை மாற்றிக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை வந்தால், அரசாங்கம் தாய் மாற்று வாரியம் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கும். ஏழைக் குழந்தைகளுக்காக இலவசத் தாய் வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கும். தலைமைத்தேர்தல் ஆணையமோ, இன்னும் ஒரு படி மேலே சென்று தேர்தல் காலங்களில் யாரும் தாயாகக் கூடாது என்று தடை போட்டிருக்கும் என்று  நகைச்சுவையாக எடுத்துரைக்கின்றார்.த  இதன் மூலம் ஒருவனின் தாய் மொழியை மாற்றி, பிற மொழியைப் புகுத்த நினைக்கும் அரசாங்கத்தின் செயலைத் தோலுரித்துக் காட்டுகின்றார்.  தாயைத் தேர்நதெடுக்கவோ, தாயை மாற்றிக் கொள்ளும் உரிமையோ யாருக்கும் இல்லாததைப்போல தாய்மொழியைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதை ஆணித்தரமாக விளக்கியுரைக்கின்றார்.   

மம்மி  - டாடி

தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ்த்தாயை விற்றுவிட்டுத் தள்ளுபடி விலையில் ஆங்கில ஆயாவைத் தாயின் இருக்கையில் அமர்த்துகின்றனர் என்று கோபம் கொள்கின்றார். தமிழ்த்தாயைப் புறக்கணித்து, சொல் வளம் இல்லாத,  இளமை நலம் இன்றிக் விளங்கும் வேற்று மொழியை ஆட்சியில் அமர்த்தியதால், தமிழ்நாட்டுக் குழந்தைகள் அம்மாவை மம்மி என்று அழைக்கத் தொடங்கினர். மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்ற பொருள் தெரிந்தும், கருவில் உயிரூட்டிய தாயைக் குழந்தைகள் தினம் தினம் பிணம் என்றே அழைக்கும் கொடுமையைச் சுட்டிக் காட்டுகின்றார் கவிஞர். அவ்வாறு அழைப்பதை நாகரிகம் என்று கருதி ஏற்கும் தாய்மார்களைக் கண்டு கவலை கொள்கின்றார்.  அப்பாவை “மம்மிக்குப் பின் டம்மி ஆகியதாகக் கருதி டாடி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். மம்மியை இன்னும் இறுக்கமாக்கி “மம்” என்று சுருக்கிவிட்டனர். இவ்வாறு அழைப்பதால், அன்பும் உயிரோட்டமுள்ள வாழ்வும் சீர்குலைந்து, பண்பாடும் கலாச்சாரமும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலையை நம் கண் முன் நிறுத்துகின்றார் ஆசிரியர்.

ஆண்டி - அங்கிள்

தமிழ் மொழியில் அனைத்து உறவுகளுக்கும் நல்ல தமிழ்ச் சொல் உண்டு. தாயின் இளைய சகோதரியைச் சித்தி என்றும், மூத்த சகோதரியைப் பெரியம்மா என்றும், தந்தையின் மூத்த சகோதரனைப் பெரியப்பா என்றும், இளைய சகோதரனைச் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லி அழைத்த காலம் போய், இன்று பெண்கள்  யாவரும் ஆண்டியாகி விட்டனர். ஆண்கள் யாவரும் அங்கிளாகிவிட்டனர். இதனால் யார் யார் எந்த உறவு முறை என்பதெல்லாம் குழம்பிப்போய்த் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை என்கின்றார்.

மிஸ் -  மேடம்

கல்வி நிலையங்களில் பெண் ஆசியர்கள் மிஸ் என்றும், ஆண் ஆசிரியர்கள் சார் என்றும் ஆகிவிட்டனர். ஆசிரியர்கள் எல்லோரும் மிஸ் ஆனதால் அங்கே தமிழும் மிஸ் ஆகிவிட்டது என்று தன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றார்.  உயர் கல்வியைத் தரும் கல்லூரிகளில் மிஸ்கள் எல்லாம் மேடம் ஆகிவிட்டார்கள். மேட் என்றால் பைத்தியம் என்றொரு பொருள் ஆங்கிலத்தில் உண்டு.

இவ்வாறு பிற மொழிகளின் பொருள் புரியாமல் அவற்றைப் பயன்படுத்தும்போது தமிழின் பெருமையை நாம் உணர மறந்து விடுகின்றோம் என்பதை நினைவூட்டுகின்றார் ஆசிரியர்.

அன்றாட வாழ்க்கையில் நாம் தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுபவதால், தமிழ் ஆங்கிலத்திற்கு நடுவில் சிக்கிச் சிதைந்து போனது. இதனால் மொழியின் தமிழின் வளமை குறைந்து கொண்டே செல்கின்றது என்று அச்சம் கொள்கின்றார்.

ஆங்கிலமும் தமிழும்

வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இருவர் காதலித்தால் எந்த மொழியில் பேசித் தங்கள் காதலை வளர்த்துக் கொள்வார்கள்? அதற்கென்று ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக் கொண்டா காதல் புரிய முடியும். அவ்வாறு புரிந்தால், அந்தப் பெண்ணைக் காதலிக்கின்றவன் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று தமிழில் சொல்ல, மொழிபெயர்ப்பாளன் “ஐ லவ் யூ” என்று ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணிடம் மொழி பெயர்க்க, அந்தப் பெண் மொழிபெயர்ப்பாளனோடு காதல் கொண்டு சென்று விடுவாள் என்று நகைச்சுவையோடு கூறி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். ஞானசம்பந்தர், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இறைவனைத் தொழுதார்.  உணர்வுகளை வெளிப்படுத்த அவரவர் தாய் மொழியே சிறந்தது என்பது இதன்மூலம் உணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் கவிஞர்.

தமிழின் சொல்வளம்

எதை எழுதினாலும் தமிழில்தான் எழுத வேண்டும். அதைத் தமிழாகவே எழுத வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும். இன்று தமிழ் மீது பற்றுக் கொண்ட சிலரின் முயற்சியால், பிளைவுட்ஷாப் என்பது வன்பொருள் விற்பனைக் கடை என்றும், பேக்கரி என்பது அடுமனை என்றும் அழகான தமிழில் எழுதப்படுகின்றது. இது பாராட்டப்பட வேண்டிய மாற்றம் ஆகும்.

காலங்கள் பல மாறினாலும், தொழில்நுட்பங்கள் பல பெருகினாலும், எந்தச் சொற்களையும் அழகு தமிழில் எழுதத் தமிழ் இடங் கொடுக்கும் என்பதைத்தான், “முத்தான  தமிழ்ச் சொற்களால் அத்தனைக்கும் தமிழ்த்தாய் முத்தப் பரிசளிப்பாள்என்ற வரிகளால் விளக்குகின்றார்.       

சூரியனும் நிலவும் எவ்வாறு உலகை ஆளுகை செய்கிறதோ? அது போல, தமிழ் உலகளாவிய மொழியாக வலம் வருகின்ற சிறப்புக்குரியது என்பதையும் தெரிவிக்கின்றார். ஆகவேதான் சூரியனையும், நிலவையும் தமிழின் இரத்தங்கள் என்கின்றார்.

தமிழின் சுவை

இயற்கையோடு இயைந்தது தமிழ்மொழி. நீண்ட காலம் தமிழில் சுவாசித்துக் கொண்டிருப்பதால்தான் இயற்கையோடு வாழ்கின்ற வசந்த வாழ்க்கையை அனுபவிக்க முடிகின்றது. இன்றும் ஒருவன் தமிழ் மொழியின் இலக்கியங்களை ஆழ்ந்து வாசிப்பானேயானால் அவனால் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும்.

 பூமியின் மடியிலிருந்து மேகம் மழை பருவத்தின் ஈரத்தை உறிந்து எடுத்துக் கொண்டு மழையாகப் பொழிவித்து மக்களைக் காக்கின்றது. அது  சாரல் மழையாக இருப்பினும், ஆலங்கட்டி மழையாக இருப்பினும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல, வாழ்க்கைக்குத் தேவையான நல்லறங்களைத் தமிழின் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கொண்டு வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்மொழியைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சியில் சொல் எறிந்து, கல் எறிந்து நம்மைத் துன்பப்படுத்தினாலும், அவற்றை மாணிக்கங்களாய் வைரங்களாய் ஏற்றுக் கொண்டு  அடிபடத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி, தமிழ் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றார் கவிஞர்.