வியாழன், 14 மார்ச், 2024

நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி ரத்தமின்றி

 

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!

விளக்கம்

   நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார். 

    கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.

    ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை.  உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. 

    தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

    இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.  முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

 

சனி, 9 மார்ச், 2024

தம்பிக்கு - மு.வரதராசனார்

 

தம்பிக்கு - மு.வரதராசனார்

முதல் கடிதம்

முன்னுரை

            டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார். அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் கடிதத்தில் அவர் இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகளைப் பின்வருமாறு காணலாம்.

நன்மை - வன்மை

 நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் வாழ்க்கையில் துன்புற்று வீழ்கின்றர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர். இதற்கு நாடு, வீடு எதுவும் விதிவிலக்கல்ல. அதன்படி தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உடல் - உள்ளம்

வாழ்க்கையில் ஒன்றை மட்டும் போற்றுகின்றவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றி வாழ்ந்தால், உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்தி அழிக்கின்றது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றுகின்றவனுக்கு, உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து, அவனுடைய உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அழிக்கின்றது. எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

அறநெறி – பொருள்நெறி

வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறத்தை நினைத்து பொருளை மறக்கும்படியாகவோ, பொருளைப் போற்றி அறத்தை மறக்கும்படியாகவோ அவர் கூறவில்லை. வாழ்க்கையின் பல பகுதிகளைப் போற்றி வாழ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. திருக்குறளைப் பெற்ற நாம், திருவள்ளுவரையும் போற்றவில்லை. திருக்குறளையும் போற்றவில்லை. போற்றினால் நம் வாழ்வு வளம் பெறும்.

தமிழ்மொழி – வன்மை மொழி

நல்ல மொழியான தமிழை வன்மை பொருந்திய மொழியாக நாம் ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது. நல்ல இசை தந்த யாழ் என்னும் இசைக்கருவி புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மக்கள் மனதில் இருந்து நீங்கிவிட்டது. தற்போது தமிழ் மொழிக்கும் அதே நிலைதான் இருக்கின்றது.

பொதுமக்கள் - களிமண்

பொதுமக்களின்  விருப்பம்போலவே ஆட்சி நடக்கின்றது என்று கூறுவது தவறு. காரணம் பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அணுகுண்டை விரும்பவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை, வறுமையை விரும்பவில்லை. தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

கடமை – மேடைப் பேச்சு

களிமண் பிசைகின்றவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவதுண்டா? இல்லை. அவர்களை மாற்றுவதற்காக, நாம் ஏதேனும் செய்தோமா? அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதைச் சற்று நிறுத்திவிட்டால் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது. “இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக” என்று கூறிய வள்ளுவரை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முடிவுரை

இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு என்று இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் கடிதம்

முன்னுரை

மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது என்பது ஆசிரியரின் கூற்று. ஆகையால் உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார் மு.வரதராசனார்.

வீண் கனவு அல்ல

            “திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும். அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆளுநர் தமிழில் கையாப்பம் இட வேண்டும்“ என்ற இவை யாவும் வீண் கனவு என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால் அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; அவற்றின் பெருமை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; வங்காளத்திற்குத் தொண்டு செய்ய சென்றபோது, அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

தமிழரின் குறை

பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தான் உணர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்றுகின்றனர். தமிழர் நெஞ்சம், உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டு வந்தது. அதனால் சொல்கின்றவர் யார்? உண்மையாக சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.  விளைவு “புறமுதுகு காட்டாத தமிழர்களை இதோ என் சொல்லால் வீழ்த்தி விட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்து விட்டேன். இனி, தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம். அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்ப வேண்டும் என்று வள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.

மொழிப்பற்று

            மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும் நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள்.  இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். நாட்டுப் பற்றையும், இனப்பற்றையும், பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப் பற்று அங்கே ஒழிந்தால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுப் பாடத்தை வாழ்ந்து காட்டத் தொடங்கிவிடுவான் தமிழன். எனவே, தமிழன் மற்றவர் சொல் கேட்கும் பேதை ஆகிவிடக்கூடாது. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

முடிவுரை

            இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

 

 

 

 

 

 

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

 

எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஏழாவது சுரம்

கதவை இழுத்து மூடியதால்

எட்டாவது சுரம்

ஏமாந்து திரும்பியிருக்கலாம்

ஆனால் இசை தேவதை

ஆலாபனை நிறுத்திவிட்டுக்

கதவைத் திறக்க

ஓடியிருக்க மாட்டாளா?

ஏழு வண்ண வில்

எழுதி வைத்திருக்கலாம் வாசலில்

“எட்டாவது வண்ணத்திற்கு

இங்கு இடம் இல்லை“!

அதற்காக

உறங்க முடியாத வானம்

நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்

வருந்தி அழுதிருக்காதா?

வாரத்திற்குள் வந்துவிடத்து துடித்த

எட்டாவது கிழமை

ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்

அதனால்

மாதத்தின் மார்பு துடித்து

வெடித்திருக்காதா?

வள்ளுவ!

எட்டாவது சீர்

உன்னைத் தேடி வந்தபோது

என்ன செய்தாய்?

“போடுவதற்கு ஒன்றுமில்லை

போ”

என்று

வாசல் யாசகனை

வீடுகளில் விரட்டுவதுபோல்

விரட்டி விட்டாயா?

எட்டாவது சீர்

ஏன் உனக்கு தேவைப்படவில்லை?

யாப்பு

கூப்பிட்டு மிரட்டியதால்

ஏற்பட்ட அச்சமா?

ஏழு சீர்களிலேயே

ஒளி தீர்ந்து போனதா? – ஈற்று

முச்சீரடியில் உனக்கும்

மூச்சு முட்டியதா?

“காசும்” “பிறப்பும்”

உன்முன் வந்து கண்களைக்

கசக்கினவா?

“நாளும்” மலரும்”

நச்சரித்தனவா?

இல்லை

எட்டாவது சீர்தான்

அடுத்த குறளின் முதற் சீரா?

அப்படியே ஆனாலும்

கடைசிக் குறளின் காலடியே

எட்டாவது சீர் ஒன்று

தோளில் என்னைத் தூக்கிக்கொள்

என்று கெஞ்சியிருக்குமே!

கடலின்

கடைசி அலையின்

தாகத்தைத் தணிப்பது என்வேலை

இல்லை என்கிறாயா?

சிந்தனைகளை எண்ணியவனே?

நீ

சீர்களை எண்ணவில்லையோ?

உனக்கு

எண்ணங்களே முக்கியம்

எங்களுக்கோ

எண்ணிக்கையே முக்கியம்

ஏழு சீர்களில்

சொன்னதே எதற்கு என்று

எண்ணிக் கொண்டிருக்கிறேன்

ஏன்

எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு

என்கிறாயா?

போதைப் “பொருளுக்கு”

அறத்தையும் இன்பத்தையும்

அவசரமாய் அடகு வைப்பவர்கள்

நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

வீடு தேடுகிற

வெறியில்

அறம் பொருள் இன்பத்தை

மிதித்துக் கொண்டு

ஓடுகிறவர்கள் நாங்கள்

அப்படித்தான் இருப்போம்.

இலக்கணக்காரன்

இப்போது எப்படி ஏங்குகிறான்

தெரியுமா?

எட்டாவது சீருக்கு

இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்

சொல்லியிருப்பாயே!

வாய்ப்புள்ளவன்

அந்த ஒரு சீரில் சிந்தித்து

வரிகளைச் சமப்படுத்தட்டும்

என நான்தான்

விட்டு வைத்திருக்கிறேன்” என்கிறாயா?

என்னோடு

நிறைவடைந்து விடவில்லை

சிந்திக்க இடம்

இன்னும் உண்டு என்பதைக்

கோடி காட்டுகிறாயா?

உண்மையின்

உள்ளத்திலிருந்து பேசுபவர்

எவரோ அவரே – நீ

எழுதாது விட்ட எட்டாவது சீரா?

ஆனால்

வள்ளுவ!

எட்டாவது சீர்கள் எல்லாம்

இப்போது உன் சிலை முன்

உண்ணாவிரதம் இருக்கின்றன

என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்

நீ வந்து இன்னொரு திருக்குறள்

எழுதும்போது

ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!

விளக்கம்

உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமடளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

இசையின் சுரங்கள் ஏழு

இசையின் சுரங்கள் ஏழு. எட்டாவது சுரம் அனுமதிக்கப் படாததால் இசையின் தேவதை தன் ஆலாபனையை நிறுத்தி விட்டுக் கதவை திறக்க ஓடியிருப்பாள். ஏனெனில் இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை.

வானவில்லின் நிறம் ஏழு

வானவில்லின் நிறம் ஏழு. எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால் வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம். நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைவதில்லை என்பதை வானவில் உணர்ந்திருக்கும்.

வாரத்தின் நாட்கள் ஏழு

வாரத்தின் நாட்கள் ஏழு. எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

வள்ளுவத்தின் சீர் ஏழு

எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடி போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

ஏழு சீர்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் ஒளி தீர்ந்திருக்கலாம்.

அலகிடும் வாய்ப்பாடுகளான காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதல் அடியாக இருக்கின்றதோ என்று எண்ணினால் இல்லை. ஏனெனில், கடைசி குறளின் காலடி என்னைத் தோளில் வைத்துக் கொள் என்று கெஞ்சியிருக்க வாய்ப்புண்டு.

கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்க்க முடியாது என்பதுபோல   கடைசிக் குறளின் வேண்டுகோளை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

சிந்தனைகளை எண்ணிய வள்ளுவர் சீர்களை எண்ணவில்லை. ஆனால் நமக்கோ எண்ணிக்கைதான் முக்கியம். அவர் தந்த கருத்துகளை ஆராய்வதை விட்டு, ஏன் அவர் ஏழு சீர்களுக்குள் திருக்குறளை அமைத்திருக்கின்றார் என்று ஆராய்கின்றோம்.

ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

பணம் என்ற போதைக்கு அடிமையாகி அறத்தையும், இன்பத்தையும் அடகு வைக்கின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

வீடுபேறு தேடுகின்ற வெறியில் அறம், பொருள், இன்பத்தை எல்லாம் மதிக்காமல் மிதித்துக் கொண்டு ஓடுகின்ற நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

வாய்ப்புள்ளவர்கள் சீர்களைச் சமப்படுத்தட்டும் என்று வள்ளுவர் அதை விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்.

உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

மீண்டும் அவர் வந்து இன்னொரு திருக்குறள் படைக்கும்போது ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டும் என்று எட்டாவது சீர்கள் எல்லாம் திருவள்ளுவரின் சிலை முன் உண்ணாவிரதம் இருக்கின்றன.

என்று கவிநயத்தோடு இக்கவிதையைப் படைத்திருக்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.