செவ்வாய், 24 செப்டம்பர், 2024

இசைக்கலை

 

இசைக்கலை

அனைத்து உயிர்களையும் இசைக்கச் செய்வதால் இசை எனப் பெயர் பெற்றது. தொல்காப்பியர் காலத்திலேயே சையையும் கூத்தையும் துணையாகக் கொண்டு வாழ்வு த்திய கலைத்துறையினர் தனிப்பிரிவாக இயங்கினர் என்பதை ஆற்றுப்படை இலக்கணத்தின் வழியாக அறியலாம். சங்க இலக்கியத்தில் இசைக்கருவிகள், பண்கள், சைவாணர்கள் பற்றிய எண்ணற் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சங்ககாலத்தில் இசை

சங்க காலத்தில் திணைதோறும் தனித்தனிப் பண்கள் அமைந்திருந்தன.

திணை

பண்

தோல் கருவி

நரம்புக்கருவி

குறிஞ்சி

குறிஞ்சிப்பண்

தொண்டகப்பறை

குறிஞ்சியாழ்

முல்லை

சாதாரிப்பண்

ஏறுகோட்பறை

முல்லையாழ்

மருதம்

மருதப்பண்

நெல்லரிகிணை

மருதயாழ்

நெய்தல்

இரங்கற்பண்

மீன்கோட்பறை

விளரியாழ்

பாலை

பஞ்சுரப்பண்

துடி

பாலையாழ்


சங்க காலத்தில் அன்றாட வாழ்வோடு இசையை இணைத்தவர்கள் பாணர்களாவர். அவர்கள் ஊர் ஊராகச் சென்று தங்கள் இசைத்திறமைகளைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர். மன்னர்களும்
வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாராட்டிப் ரிசளித்துள்ளனர். பாணர்கள் வள்ளல்களாலும் மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர். தலைமக்களிடையே தூதுவர்களாக விளங்கினர். பெரு நகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. பிற்காலத்தில் பாணப்பேறு எனப்பட்டது.

சங்க காலத்து இசைக்கருவிகள்

பண்டை இசைக்கருவிகளில் தலையானது யாழ் ஆகும். யாழ் இரண்டு வகைப்படும். அவை, சீறியாழ் (அளவில் சிறியது), பேரியாழ் (அளவில் பெரியது) என்பனவாகும். இஃது  21 நரம்புகளைக் கொண்டது. பச்சை, செறிதுளை, போர்வை, கவைக்கடை, நரம்பு, கோடு, திவவு என்பன யாழின் உறுப்புகளாகும். பரிபாடலில் குழல் வகைகளின் விளக்கத்தைக் காணலாம். ஐந்து துளைகள் கொண்ட குழல் ஐம்புழை என்றும், ஏழு துளைகள் கொண்ட குழல் ஏழ்துளை என்றும் கூறப்பட்டுள்ளது.

இசைக்கருவிகளின் வகைகள்

பொதுவாக இசைக்கருவிகளை,

  1. தோற்கருவிமுழவு, முரசு, பதலை, துடி
  2. துளைக்கருவிகுழல், கோடு, தூம்பு
  3. நரம்புக் கருவியாழ்
  4. கஞ்சக் கருவிபாண்டில் (து உலோகத்கடு) எனப்பகுத்துக் காண்பர்.

இசைக்கல்வெட்டுகள்

இசை தொடர்பான பழமையான கல்வெட்டுகள் ஈரோட்டை அடுத்துள்ள நாகமலை ஆண்டிப்பாறையில் காணக்கிடைக்கின்றன. இவை கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளன.

இசை நூல்கள்

  • இறையனார் களவியல் உரை என்ற நூலானது, முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்கள் முதற்சங்க காலத்தில் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது
  • பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம் முதலிய நூல்கள் குறித்து அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். இசை நுணுக்கம் என்ற நூலினை சயந்தன் என்னும் பாண்டிய இளவரசன் எழுதியுள்ளார் என்றும், இந்திர காளியம் என்ற நூல் ஒன்று இருந்தமையையும் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்
  • அரும்பத உரையாசிரியர் மூலமாக பதினாறு படலம் என்னும் நூலையும், யாப்பருங்கல விருத்தி உரையின் வாயிலாக, வாய்ப்பியம் என்னும் நூலையும் அறிய முடிகின்றது
  • குலோத்துங்கன் இசை நூல் என்பது குலோத்துங்கச் சோழனால் இயற்றப்பட்டது. விபுலாந்தரின் யாழ்நூலும், ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரமும், வரகுண பாண்டியனின் பாணர்கைவழியும் குறிப்பிடத்தக்கவையாகும்.

சிலம்பும் இசையும்

சிலப்பதிகாரத்தைத் தமிழ்க்கலைக் ளஞ்சியம் என்று கூறலாம். இதன் அரங்கேற்றுக் காதையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் தமிழிசையின் பல்வேறு சிறப்புகளை அறிய உதவுகின்றன. இசையாசிரியன், தண்ணுமையாசிரியன் முதலியோரின் இலக்கணங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இசையை ஏழிசை என்பர். குரல், துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என அவை குறிக்கப்படும். இன்று அவை சப்தசுரங்கள் எனப்படுகின்றன.

பல்லவர் கால இசைக்கருவிகள்

தேவாரப் பாடல்கள் மூலமாக இசை வளர்க்கப்பட்டது. காரைக்காலம்மையார் தாம் பாடிய மூத்தத் திருப்பதிகம் ஒன்றில் தக்கை, தாளம், வீணை, மத்தளம் உள்ளிட்ட பல இசைக் கருவிகளைக் குறிப்பிடுகின்றார். கிண்ணி, மிருதங்கம், முரசம், உடுக்கை, தாளம், துடி போன்ற கருவிகளும் தேவாரங்களில் குறிக்கப்படுகின்றன. சேரமான் பெருமாள் நாயனார் தம் திருக்கையிலாய ஞான உலாவில், தட்டழி, சங்கம், தண்ணுமை, பேரி, படகம் ஆகிய இசைக்கருவிகளைக் குறிக்கின்றார்.

பல்லவ மன்னரில் முதலாம் மகேந்திரன், இராசசிம்மன் போன்றோர் இசை அறிஞராக விளங்கினார். பல மன்னர்கள் இசைக்கலையை வளர்த்தனர். ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற பாணர்கள் இறையன்பர்களாக விளங்கினர். இவர்கள் யாவரும், இறைவனையே ஏழிசையாகவும், இசைப்பயனாகவும், ஓசையாகவும், ஒலியாகவும் கண்டனர்.

சோழர்காலத்து இசை

பல்லவர் காலத்தில் பாடப்பட்ட பாடல்கள் எல்லாம் திருக்கோயில்களில் பாடப்படுதற்கு எத்துணையோ நன்மைகளை இவர்கள் உண்டாக்கினர். இவைக் கலைஞர்களுக்குக் கந்தருவர், கந்தருவி என்று பட்டமளித்தனர். “வாச்சிய மாராயன்” என வாத்தியக் கலைஞர் பெயர் பெற்றனர். தஞ்சைக்கோயிலில் மட்டும் 48 ஓதுவார்கள் இருந்துள்ளனர்.

இசை குற்றங்கள்

இசை பாடும்போது ஏற்படக்கூடாத குறைகளை சிந்தாமணி ஆசிரியர் கூறுகின்றார். புருவம் உயர்தல், கண் ஆடல், மிடறு வீங்கல், பல் தோன்றல் என்பவை அக்குற்றங்களாகும். இதனால் அக்காலத்தில் இசையில் ஏற்பட்டிருந்த பெருவளர்ச்சியை அறியலாம்.

பிற்கால இசை

பிற்காலத்தில் பள்ளு, குறவஞ்சி முதலான சிற்றிலக்கியங்களில் இசைப்பாடல்கள் காணப்படுகின்றன. புரட்சிக் கருத்துகளைத் தம் இசைப் பாடல்கள் மூலம் சித்தர்கள் வெளிப்படுத்தினர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் தமிழிசையின் நுட்பங்கள் பல கூறப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தைக் கீர்த்தனைகளின் காலம் என்று கூறலாம். இதனைத் தோற்றுவித்தவர்கள் மு.அருணாசலம் பிள்ளை, முத்துத் தாண்டவர் மரபினர் ஆவர். தற்போது தமிழிசைச் சங்கம் வகுத்த பாடத்திட்டத்தை அரசு இசைக் கல்லூரிகளில் பின்பற்றப்படுகின்றன. குரலிசை, கருவி இசை ஆகிய இரண்டிலும் பயிற்சியளிக்கப்படுகின்றது. கருநாடக இசையோடு, பழைய தேவார இசைமரபும் வளர்ச்சி பெற்று வருகின்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

திங்கள், 23 செப்டம்பர், 2024

சிற்பக்கலை

 

சிற்பக்கலை

பண்டைக்காலம் தொட்டே வளர்ந்துள்ள கவின் கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. பல்லவர் காலத்திற்கு முன்பு பெரும்பாலும் மண் உருவங்களும், சுதை உருவங்களும் செய்யப்பட்டன. கோயில் கட்டுவதற்குக் கருங்கல் பயன்படுத்தப்பட்ட பிறகுதான் சிற்பம் நிலைபேறடைந்த கலையாக உருவானது.

சிற்பங்களின் பிரிவுகள்

சிற்பங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

1.தெய்வ உருவங்கள் – தெய்வங்களின் உருவங்களைச் செதுக்குதல்

2.இயற்கை உருவங்கள் – விலங்கு, பறவை, மனிதன் உள்ளிடவை

3.கற்பனை உருவங்கள் – இருதலைப்பறவை, காமதேனு,  உள்ளிட்டவை.

4.படிமை உருவங்கள் – மன்னர் முதலியோர்க்கு எடுத்த உருவச் சிலைகள் என்பனவாகும்.

சங்ககாலச் சிற்பங்கள்

சங்க காலத் தமிழர்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் அழகிய சிற்பங்களை உருவாக்கினர்.  மண்ணால் உருவங்கள் செய்கின்ற கலைஞர்களை மண்ணீட்டாளர் என்றனர். வீடுகளில் தச்சர்கள் அழகிய உருவங்களை உத்தரக் கற்பலகையில் அமைத்தனர். மண்ணாலான சிற்பங்களைப் போலவே சுதைச் சிற்பங்களும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன. சங்க காலத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லில் உருவம் செதுக்கி வழிபட்டனர். கண்ணகி உருவச் சிலை அமைக்கப்பட்டதைச் சிலம்பு கூறுகின்றது. தமிழ்நாட்டுச் சிற்பிகள் கோயில்களையும், கல் உலோகச் சிற்பங்களையும் செய்வதற்குரிய விதிகளைக் கூறும் நூல்களைக் கையாண்டுள்ளனர். சங்க காலத்தில் மனை நூல் இருந்தமையை நெடுநல்வாடை கூறுகின்றது.

பல்லவர் காலச் சிற்பங்கள்

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுதைக் கோயில்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருவதிகைக் கோயில் இதற்கு சிறந்த சான்றாக உள்ளது. தமிழகத்தில் கற்சிற்பங்களைத் தொடங்கி வைத்த பெருமை பல்லவர்களுக்குரியதாகும். இவர்கள் கட்டிய குடைவரைக் கோயில்களிலும், கட்டுமானக் கோயில்களிலும் எண்ணற்ற சிற்ப உருவங்கள் உள்ளன.

மாமல்லபுரச் சிற்பங்கள்

மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக்கூடமாக விளங்குகின்றது. மகிடாசுரமர்த்தினி குகை, ஆதி வராகர் மண்டபம், மும்மூர்த்தி மண்டபம், வராகர் குகை ஆகியவற்றின் சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.

1.மும்மூர்த்தி குகை – ஊரின் வடபுறத்தில் உள்ள இக்குகையில் சிவன், திருமால், முருகன் உருவங்கள் உள்ளன. நான்குக் கைகளோடு முருகன் காட்சியளிக்கின்றார்.

2.கோடிக்கல் மண்டபம் – மும்மூர்த்தி குகைக்கு மேற்கே கோடிக்கல் மண்டபம் அமைந்துள்ளது. நீண்ட சதுர அமைப்புடைய இக்கொற்றவை கோயிலின் வாசலில் ஒருபுறம் கத்தியும், கேடயமும் தாங்கிய பெண்ணும், மறுபுறம் வில்லேந்திய பெண்ணும் காவல் பெண்களாக நிற்கின்றனர்.

3.வராக மண்டபம் – இம்மண்டபத்தில் நான்கு சிற்பங்கள் உள்ளன. இதில் வடபுறச் சுவரில் வராக மூர்த்தியின் சிற்பமும், கீழ்ச்சுவரில் தாமரை மீது அமர்ந்த திருமகள் உருவமும் உள்ளன. இங்குள்ள வராகப் பெருமானின் சிற்பமும், உலகளந்த பெருமாளின் உருவமும் உலகச் சிறப்பு வாய்ந்தவை.

4.ஆதிவராக மண்டபம் – இம்மண்டபத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. இது மக்களால் வழிபடக்கூடிய மண்டபமாக விளங்குகின்றது. இங்கே பல்லவ மன்னர்களின் உருவச் சிலைகள் உள்ளன. திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய கல்வெட்டும் இங்கே காணப்படுகின்றன. இக்கோயிலின் வடபுறச் சுவரில் சிவபெருமான் காட்சியளிக்கின்றார். கீழைச் சுவரில் தாமரைப் பீடத்தில் திருமகள் இருகைகளிலும் மலருடன் காட்சியளிக்கின்றாள்.

5.கிருஷ்ண மண்டபம் – கண்ணன், குன்றை அடுத்து நிற்க, அதற்குக் கீழே மாடுகளும், ஆயர்களும், ஆய்ச்சியர்களும் கவலையின்றி நிற்கின்ற காட்சி அழகு மிக்கது.

கோயில்களில் சிற்பம்

காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் பல்வேறு தோற்றங்களோடு காட்சி தருகின்றார். தேவியர்களின் பலவண்ணத் தோற்றமும் திருமால், நான்முகன், முருகன், கொற்றவை உருவங்களின் பல வகைத் தோற்றங்களும் இங்குள்ளன. நடனம் பற்றிய இருவகையான சிற்பங்கள் இங்கே காணப்படுகின்றன.

பாண்டியர் சிற்பங்கள்

கி.பி.6,7,8ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட பாண்டிய மன்னர்களின் குகைக் கோயில்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. திருமெய்யம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை எனும் இடங்களில் இவற்றை காணலாம். அதியமான் கவின் சிற்பத்தை நாமக்கல் குடைவரைக் கோயிலில் கண்டு களிக்கலாம்.

சோழர்காலச் சிற்பங்கள்

பல்லவர்கள் போற்றி வளர்த்த சிற்பக்கலை சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்தது. கருவறையின் கோட்டங்களை இவை அலங்கரிக்கின்றன. குடந்தைக் கீழ்க்கோட்டம், சீனிவாச நல்லூர் குரங்கு நாதர் கோயில், பசுபதி கோயில், திருவாரூர் அறநெறீச்சுரம் ஆகியவற்றில் கி.பி.9,10ஆம் நூற்றாண்டுச் சிற்பங்கள் உள்ளன. இக்காலத்தில் சிறப்பாகத் தோன்றிய வாயிற்காவலர் உருவங்கள் எழிலும், கம்பீரமும் கொண்டவையாகும்.

தஞ்சையில் மாபெரும் கோயிலைத் தோற்றுவித்த இராசராசன் காலத்தில் இருந்து ஒரு மாறுதலைக் காண்கிறோம். இராசராசன் கருங்கல்லால் வானளவு கட்டிடத்தை எழுப்பினான். அவனது கவனம் முழுவதும் கட்டிடத்தில் தலையாய நின்றது. அவன் கட்டுவித்த கோபுரங்களையும் விமானங்களையும் ஏராளமான சிற்பங்கள் அலங்கரித்தபோதிலும், அவை கட்டிடத்திற்கு அங்கமாக கட்டிடத்தின் பெருமிதத்தில் மறைந்து காணப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். கங்கை கொண்ட சோழன் கட்டிய பெரிய கோயிலுக்கும் இக்கருத்துப் பொருந்தும். எனினும், இங்கே உள்ள கலைமகள் சிற்பமும், சண்டிக்குச் சிவன் அருள்புரியும் சண்டீகப்பதம் பற்றிய சிற்பமும் தனித்தன்மை கொண்டு நிற்கின்றன. 

விசயநரகத்தார் காலச் சிற்பங்கள்

கி.பி.14,15,16 நூற்றாண்டுகளில் விசய நகரத்து மாவேந்தர்கள் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களையும், கலியாண மண்டபங்களையும் அமைத்தனர். அம்மண்டபத் தூண்களே வளமான சிற்பங்கட்கு இடமாயின. அரியநாதர் முதலியோர் கட்டிய ஆயிரங்கால் மண்டபமும், புதுமண்டபமும், மீனாட்சிக் கோயிலும் நாயக்க மன்னர்களின் சிற்பப் பெருமையைக் காட்டுவனவாகும். மீனாட்சிக் கோயிலில் பிச்சாடனார், மோகினி, காளியின் நடனம், சிவனுடைய ஊழிக்கூத்து, திருக்கலியாணக் காட்சி இவற்றைக் குறிக்கும் சிற்பத்தூண்கள் அழகுடன் விளங்குகின்றன. 

சிற்ப சாத்திரங்கள்

முற்காலத்தில் சிற்பக் கலையைக் கட்டிடக் கலையின் ஒரு பகுதியாகவே கருதினர். மானசாரம் என்ற கட்டிடக்கலை நூலில் 22 பகுதிகள் சிற்பம் பற்றிப் பேசுகின்றன.  சிற்ப சாத்திரங்கள், சமயம் சாராக் கட்டிடங்கள், கோயில் கட்டிடங்கள், கோட்டைக் கொத்தளங்கள், சிற்பம், ஓவியம் ஆகியவை அமைக்கப்பட வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


 

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

ஆங்கிலேயர் வருகை

 

ஆங்கிலேயர் வருகை

ஐரோப்பிய நாடுகள் பல கிழக்கு நாடுகளுடன் வாணிகத்திலும், வாணிகப் போட்டியிலும் ஈடுபட்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் அதிலிருந்து விலகி இருந்தனர். அதற்கு எலிசபெத் அரசியின் அரசியலும் ஓரு காரணமாகும்.

எலிசெபத் அரசி காலத்து ஆங்கிலேயர்களின் உணவில் மிளகு, கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் முக்கிய அங்கமாக விளங்கின. டச்சு வணிகர்கள் கிழக்கு நாடுகளில் இருந்து பெற்ற வாசனைப் பொருட்களை ஆங்கில வணிகர்களுக்கு அநியாய விலைக்கு விற்று வந்தனர். 1599இல் அவர்கள் அதன் விலையை இருமடங்காக ஏற்றினர். டச்சு வணிகர்களின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கில வணிகர்கள் முடிவு செய்தனர். அதன் விளைவாக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெணி கி.பி.1600இல் தோன்றியது.

1601 இல் இலங்காச்டர் தலைமையிலான ஆங்கிலக் கப்பல் சுமத்திரா சென்று மிளகு ஏற்றி வந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலக் கப்பல்கள் தென்கிழக்காசியத் தீவுகளுக்குச் சென்று வந்தன. என்றாலும், இந்தோனேசியப் பகுதிகளில் அவர்களுடைய வாணிபம் தோல்வியடைந்தது. எனவே அவர்களுடைய கவனம் இந்தியாவில் திரும்பியது. கி.பி 1615இல் ஆங்கிலேய தூதர்கள் ஜஹாங்கீரின் அரண்மனையை அடைந்து அவர் உதவியைப் பெற எண்ணினர். அப்பயணம் பயனளிக்கவில்லை.

இதனால் ஆங்கிலக் கம்பெனி தனது போக்கை மாற்றிக் கொண்டு வாணிபத் தளங்கள் ஏற்படுத்த முயன்று, கி.பி.1641இல் மசூலிப்பட்டித்தில் வாணிபத்தளத்தை அமைத்தனர். சந்திரகிரி அரசனின் அனுமதியுடன் சென்னையில் கோட்டை அமைத்தனர். அடுத்த ஆறு ஆண்டுகளில் 23 வாணிபத்தளங்களை அமைத்து முன்னேறினர்.

சூரத்தில் இருந்த தலைமையகத்தைப் பம்பாய்க்கு மாற்றினர். ஒளரங்கசீப்புடன் ஏற்பட்ட போரில் தோல்வியைத் தழுவியதால் தங்கள் தலைமையகத்தை வங்காளத்துக்கு மாற்றினர். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். பிரெஞ்சுக்காரர்களுடனான போட்டியும், கர்நாடகம், வங்காளம் ஆகிய இடங்களில் இருந்த அரசியல் நிலைமைகளும் அவர்களுக்கு ஊக்கமளித்தன.

ஆங்கிலேயர்பிரெஞ்சுக்காரர் மோதல்

18ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சில ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நாடு பிடிக்கும் போட்டி ஓங்கி வளர்ந்தது.  சோழ மண்டலக் கடற்கரை ஓரத்தில் ஆங்கிலேயர் வசம் இருந்த சென்னைப் பட்டினமும், பிரெஞ்சுக்காரர் வசம் இருந்த புதுச்சேரியும் இருபெரும் வாணிகத் துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. இருநாட்டவரும் அவரவர் ஊரில் வலிமை பொருந்திய கோட்டைகளைக் கட்டினர். இந்திய நாட்டு மன்னர்களிடம் தரைப்படையும், கப்பற்படையும் இல்லாததால், இவ்விருவரும் உள்நாட்டு மன்னர்களைத் தங்கள் சூழ்ச்சியால் வளைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தொடங்கினர்.

கருநாடக, மைசூர்ப் போர்கள்

கருநாடகப்போர்களிலும், மைசூர்ப் போர்களிலும் இவ்விருவருக்கும் பெரும் பங்கு உண்டு.  ஆங்கிலேயர் சீரங்கப்பட்டினத்தைச் சூறையாடினர். அரண்மனைகளையும், கட்டடங்களையும் இடித்தனர். மைசூர் தேசம் ஆங்கிலேயரின் உடைமையாயிற்று. திப்பு சுல்தானின் மக்கள் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர்கள்

ஆர்க்காடு நவாபு பெயரளவில்தான் கருநாடகத்தின் நவாபாக விளங்கினான். அவனுடைய அரசு முத்திரை ஆங்கிலேயரின் கையில் இருந்தது. நவாபின் பெயரால் கிழக்கிந்தியக் கம்பெனிதான் அரசாங்கத்தை நடத்தியது. கருநாடகத்தின் குடிமக்கள் நவாபுக்கு மட்டுமின்றி ஆங்கிலேயருக்கும் கட்டுப்பட்டனர். நவாபு அரசாங்கப் பொறுப்பு அனைத்தையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டு, பொறுப்பற்றவனாகச் செயல்பட்டான். தன் இன்ப வாழ்க்கைக்குப் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் கடன் தொல்லைக்கு ஆளானான். இறுதியாக அவன் இறந்த பிறகு அவன் மகன் நவாபு ஆனான். அவனுடன் கம்பெனி அரசாங்கம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஆர்க்காடு நவாபு தன் நாட்டையும் அரசையும் ஆங்கிலேயருக்கு வழங்கினான். அதற்கு ஈடாக அவனுடைய கடன்களைத் தீர்ப்பதற்கு ஆங்கிலேய அரசாங்கம் ஒத்துக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரே தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மேற்கொண்டனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.