ஞாயிறு, 23 மார்ச், 2025

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

 

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களுள் எவையேனும் ஒன்றையோ அல்லது இரண்டையோ பற்றிக் கூறும் இலக்கியம் சிற்றிலக்கியம் எனப் பெயர் பெற்றது. அச்சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழ், அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பெறுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவியல் செய்திகளைப் பின்வருமாறு காணலாம்.

வானியல் அறிவு

உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளர்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. காற்று வருகின்ற திசையையும், மண்ணின் தரத்தை அறிந்து பயிரிடும் முறையையும் நன்கு அறிந்தவர்கள் பள்ளர்கள்.

இன்று நாளை வெள்ளம்வரத் தென்றல் வீசுதுவிண்ணில்

இந்திரவில்லும் இட்டதுகார் வந்து விட்டது

குன்றிலே ஒழுங்காய்மஞ்சு சென்றிறங்குதுகொல்லம்

கொங்குமின்னல் எங்கும் மின்னி குதூகலிக்குது

அன்றில் தேரை தாலம் நீரில் சென்று அலறுதுசேல்வந்து

ஆர்ப்பு அரவம் செய்யுது

என்று திருப்புடை மருதூர்ப் பள்ளு பாடுகின்றது. இதைப் போன்றே, தென்மேற்குத் திசையிலும், தென் கிழக்குத் திசையிலும் மின்னல் வீசும், மரக்கொம்புகளைச் சுற்றி காற்று அடிக்கும். கிணற்றில் தவளைகள் கூச்சல் போடும். நண்டுகள் தம் வளைக்குள் மழைநீர் புகுந்துவிடாதபடி பாதுகாக்கும். மழை நீரைத் தேடி வானம்பாடிப் பறவைகள் பறக்கும் என்று மழை வருவதற்கான அறிகுறிகளை முக்கூடற்பள்ளு இலக்கியம் காட்டுகின்றது. இதனை,

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி

மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே

கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுதே

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே 

மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே

என்ற பாடல் காட்டுகின்றது. இதன் மூலம் அக்கால மக்கள் வானிலை குறித்த அறிவினை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

வேளாண்மை அறிவியல்

முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்ட நூல் ஆதலின், வேளாண் அறிவியல் குறித்த பல செய்திகளை இந்நூலில் காணலாம். கோதுமைச் சம்பா, ஆனைக் கொம்புச் சம்பா, மூங்கிற் சம்பா. காடைக் ழுத்தன், சித்திரக்காலி, சிறை மீட்டான், மணல்வாரி, கருஞ்சுரை, சீரகச் சம்பா, முத்து விளங்கி, மலைமுண்டன், நெடுமூக்கன் உள்ளிட்ட 150 வகையான நெல் வகைகளை முக்கூடற்பள்ளு காட்டுகின்றது.

அண்ட அறிவியல்

இதுபோன்றே அண்டங்கள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் இயல்பு உடையது என்பது அறிவியல் கண்ட உண்மை. அதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சியில்,

சாட்டி நிற்கும் அண்டமெலாம்

சாட்டையிலாப் பம்பரம்போல்

ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார்

என்று திரிகூட இராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். சாட்டைத் துணை ஏதும் இல்லாமல் அண்டங்களைப் பம்பரத்தைப் போல ஆட்டி வைப்பது இறைவனே என்பது இதன் பொருள்.

இயற்பியல்

ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்பது விஞ்ஞானி கலிலியோ அவர்கள் கண்டறிந்த உண்மை. இதனை,

மகரக்குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம்ஆட்டஅவ்வூசலில்

பாய்ந்திலது இவ்வூசல் எனநனிஆட்டுதோறும்

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்

திங்கள் சாய.. (அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்)

பாடுகின்றது. ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தமிழர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியது.

வளியியல்

காற்று குறித்த அறிவியலைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று தங்கும் இடம் உந்தி என வரையறுக்கின்றது தமிழ்விடுதூது. அக்காற்றே ஒலி எழுப்பி எழுத்துகளை உண்டாக்குகின்றது என்பதை,

புண்ணயஞ் சேர் உந்தி பலத்தே வளி தரித்துக்

கண்ணிய வாக்கங் கருப்பமாய் – நண்ணி

தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம்

உலைவிலா வண்ணத் துருவாய் (தமிழ்விடுதூது)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. எழுத்துகள் பிறப்பதையே அறிவியல் தன்மையோடு விளக்கிய பெருமை தமிழர்களுக்கு உண்டு என்பதை இதனால் அறிய முடிகின்றது. 

உயிரியல்

உயிர்களில் நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன எனப் பலவகைகள் உண்டு. தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிர்களின் மீது கவனம் செலுத்தியவர்கள் என்பதை,

தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவன நிற்பன

தனித்தனி பறப்பனவுமே

எனத் தில்லைச் சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் கூறுகின்றது.

உளவியல்

சிற்றிலக்கியங்கள் பெரும்பான்மையும் உளவியல் அடிப்படையிலே எழுதப்பட்ட இலக்கியங்களாக அமைகின்றமை சிறப்பு. தலைவன் தலைவிக்கு இடையே நிகழ்கின்ற காதல் நிகழ்வுகளை குற்றாலக் குறவஞ்சி தெற்றனெ விளக்குகின்றது. காதல் துன்பத்தால் தோன்றுகின்ற மனத்துன்பத்தை கோவை இலக்கியங்களும், உலா இலக்கியங்களும் காட்டுகின்றன. பெண்களின் உடல் தன்மையை அறிந்து ஏழு பருவங்களாக வகுத்து அவர்களின் வயதிற்கேற்ற உணர்வுகளை மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற உலா இலக்கியங்கள். தனக்குப் பிடித்த தலைவனையோ அல்லது இறைவனையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவதும் ஓர் உளவியலே.

சிற்றிலக்கியப் புலவர்கள் அறிவியல் பார்வையோடு இலக்கியங்களைப் படைத்துள்ளனர் என்பதை இதுகாறும் கண்ட செய்திகள் மெய்ப்பிக்கின்றன.

சனி, 22 மார்ச், 2025

இணைய நூலகம்

 

இணைய நூலகம்

தன் கருத்துகளையும், கற்பனைகளையும் பதிவு செய்து கொள்ள கல்லிலும், சுடுமண் பலகையிலும், ஓலைச் சுவடிகளிலும் எழுதிய மனிதன், பிற்காலத்தில் நூல் வடிவமாக்கினான். அந்த நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்ற இடத்திற்கு நூலகம் என்று பெயர் வைத்தான். அந்த நூலகம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்னூலகமாக மாறி அடுத்த வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மின் நூல்கள்

மின் நூல் என்பது நூலின் மின்னணுவியல் பதிப்பாகும். இதனை, மின்னூல் (PDF BOOK), மீயுரை நூல் (HTML BOOK), புரட்டும் நூல் (FLIP BOOK), மென்னூல் (EPUB BOOK), கிண்டில் (MOBI BOOK) எனப் பலவாறு விளக்கலாம்.

மின்னூல்கள்

நூலில் இடம்பெறும் செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும்படியாக மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும்போது படிக்கின்ற வகையிலும் மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் காணப்படுகின்ற நூல்கள் பெரும்பாலும் பிடிஎஃப் வடிவிலேயே இருக்கும். அச்சில் இருக்கின்ற பழைய நூல்களை ஸ்கேன் செய்து கணினி மற்றும் திறன் பேசிகளில் பயன்படுத்தும்போது அவையும் பிடிஎஃப் வடிவத்திலேயே இருக்கும்.

மீயுரை நூல்

மீயுரை நூல்களில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு அதன் மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் பெற முடியும்.

புரட்டும் நூல்

அச்சு நூல்களைப் புரட்டுவது போல இதையும் புரட்ட முடியும்.

மென்னூல்

இவை கணினியின் வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை. இவ்வகை நூல்களில் எழுத்துகளைப் பெரிதாகவோ, சிறிதாகவோ, பக்கத்தின் அமைப்பை நம் விருப்பத்திற்கேற்பவோ மாற்றி அமைத்துக் கொள் முடியும்.

கிண்டில் நூல்கள்

இது மின் படிப்பான் ஆகும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் கருவிகளில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. இக்கருவி கம்பியற்ற இணைப்புகளின் உதவியுடன் மின்நூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றை இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்யவும், வாசிக்கவும் பயன்படுகின்றது. தாள்களில் வாசிப்பது போன்ற அனுபவமும் உணர்வும் கிடைப்பது இதன் சிறப்பு.

மின் நூலகங்கள்

மின்னியல் முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின் நூல்கள், படங்கள், ஆணவங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழியில் அணுகக்கூடிய நூலகத்தை மின் நூலகங்கள் எனலாம். இதனை தகவல் மீட்டுப்பு ஒருங்கியம் என்று அழைப்பர். இது மெய்ந்நிகர் நூலகம் (Virtual Library), எண்ணிம நூலகம் (Digital Library) என்றும் அழைக்கப்படுகின்றது. இருக்கின்ற இடத்திலேயே மின்னூலகங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முடிவதும், ஒரே நூலை பல பேர் பலமுறை படிக்க முடிவதும் இதன் சிறப்பாகும்.

  • தமிழ் இணையக் கல்விக் கழகம்
  • மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
  • சென்னை நூலகம்
  • தமிழ் மரபு அறக்கட்டளை
  • நூலகத் திட்டம்

ஆகிய மின்னூலகங்கள் இணைய உலகில் சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றன.

சிறப்புகள்

மின்னூலகங்களின் வாயிலாக பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும், அதன் விளக்க உரை நூல்களையும், பல்வேறு அகராதிகளையும், பார்வை நூல்களையும், சித்தர் இலக்கியங்களையும், இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களையும், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு, இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள் என தமிழின் அனைத்து நூல்களையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள முடிகின்றது.

 

வெள்ளி, 21 மார்ச், 2025

தொழில் நுட்ப மேலாண்மை

 

தொழில் நுட்ப மேலாண்மை

நம் அறிவுக்குட்பட்டவாறு புதிய புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதும், அதைச் செயல்படுத்துவதும் தொழில் நுட்ப மேலாண்மையாகும். நாகரிகத்தை உலகிற்குக் கற்றுக் கொடுத்த நம் முன்னோர்கள் தொழில்நட்ப மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். வேளாண்மை, நெசவு, மருத்துவம், கட்டிடம் என அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் சிறந்திருந்தனர். இதற்குக் கீழடி, ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளும் பல இலக்கியங்களும் சான்றுரைக்கின்றன. கட்டிடங்கள், சுடுமண் குழாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள், உறை கிணறுகள், செங்கற்கள், மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவை தமிழர்களின் தொழில்நுட்ப மேலாண்மைக்குச் சான்றுகளாகும்.

நெசவுத் தொழில்நுட்பம்

மனிதன் உடுத்துகின்ற ஆடை ஒரு சமூகத்தின் நாகரிகத்தைக் காட்டும் கண்ணாடி. ஆதி மனிதன் விலங்கின் தோலையும், இலைகளையும் தழைகளையும் கொண்டு தன் உடலை மூடினான். பிறகு பருத்தியைக் கண்டறிந்து உடைகளை உருவாக்கத் தொடங்கியமையை, “பருத்தி வேலிச் சீறூர்“ (புறம்.299) என்ற வரியால் அறியலாம். நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த மங்கையர் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டமையை, “பருத்திப் பெண்டிர் பனுவலன்ன” (புறம்.125) என்று புறநானூறு காட்டுகின்றது. பருத்தியால் ஆடைகளை நெய்தோடு, அதில் வண்ணம் ஏற்றுதல், பூ வேலைப்பாடுகள் செய்தல் முதலிய நுட்பங்களையும் தமிழர்கள் கையாண்டனர். ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தாழிகளில், மண்வெட்டி, நெல், உமி, இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன. உறையூரில், நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், உடுக்கை, கலிங்கம் என ஆடைகளுக்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன என்பதை, “துகில்சேர் மலர் போல்” (பரிபாடல்), “நீலக்கச்சை” (புறநானூறு), “தோயாப் பூந்துகில்” (பெரும்பாணாற்றுப்படை), “ஒண்பூண் கலிங்கம்” (புறநானூறு) என்று பல இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இயந்திரத் தொழில்நுட்பம்

நம் முன்னோர்கள் இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பல வகைகளில் பயன்படுத்தினார்கள் என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

  • கரும்பைப் பிழிவதற்கு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தமையைதீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” (பதிற்றுப்பத்து 13) என்ற வரியால் அறியலாம்.
  • ஆழ்துளைக் கிணறு இருந்தமையை, “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” (பெருங்கதை 1) என்பதால் அறியலாம்.
  • செயற்கை நீருற்று இருந்தமையை நெடுநல்வாடையின் மூலம் அறியலாம்.
  • ஆள் இல்லா விமானம் குறித்துவலவன் ஏவா வானவூர்திஎன்று புறநானூறு குறிப்பிடுகின்றது.
  • சீவகசிந்தாமணி மயிற்பொறி குறித்து கூறுகின்றது.

மருத்துவத் தொழில்நுட்பம்

இன்றைய மருத்துவத்தின் தொழில்நுட்பம் குறித்து நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர் என்பதைப் பின்வருமாறு அறியலாம்.

  • சங்க இலக்கியங்களில் அறவோன், மருத்துவன் என்றும், திருக்குறளில் கற்றான், தீர்ப்பான் என்றும் மருத்துவர்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
  • மருத்துவத்திற்கான இலக்கணத்தை வள்ளுவரும் நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்என்று கூறுகின்றார்.
  • புண்ணுக்கு மருந்து வைக்கும்போது, புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் இருந்ததை, “பஞ்சியும் களையாப் புண்ணர்” (புறம்.353) என்று புறநானூறு கூறுகின்றது.
  • அறுவை மருத்துவத்தில், நம் முன்னோர் அறுக்க வேண்டிய இடத்தில் அறுத்துக் குருதியை வெளியேற்றி, அவ்விடத்தைச் சுட்டுப் புண்ணுக்கு மருந்திட்டனர் என்பதை, “வாளால் அறுத்துச் சுடினும்” (பெருமாள் திருமொழி) என்ற வரியால் அறியலாம்.

கட்டிடத் தொழில்நுட்பம்

தமிழர்கள் நிலையானதொரு இடத்தில் தங்கள் வாழ்க்கையை வாழக் கற்றிருந்தனர். அதனால் தமக்கென்று வீடுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். மன்னர்களுக்கென்று மனை வகுக்கப்ட்டமையை, “பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்துஎன்று நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. வீடுகள் கட்டுவதற்குத் திசைகள் பார்க்கப்பட்டன. வீடுகள் நிலா முற்றங்களோடும், மாடங்களோடும் கட்டப்பட்டன. கோயில்களின் கட்டிடக்கலை உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.  தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் கட்டுமானப் பணிகள் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை தொழில்நுட்பத்திற்குச் சான்று கூறுகின்றன.

போர்த்தொழில்நுட்பம்

போர்க்களக் கருவிகளை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்திருந்தனர். அவற்றைக் கையாள்வதிலும், வடிவமைப்பதில் திறமையுடையவர்களாக இருந்தனர். வாள், வேல், வில், அரிவாள், எஃகு, கேடகம், கலப்பை, குறடு, கோடாலி, மழு எனப் பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கிய பெருமை நம் முன்னோர்களுக்கு உண்டு. போரில் வெற்றி பெற்ற வின் வீரர்கள் தோற்ற நாட்டில் படை வீடு அமைத்துத் தங்குவர். அப்படைவீடு சிதைந்த போர்க்கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கும் என்பதை முல்லைப்பாட்டு வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை

கப்பற்கலை, சிற்பக்கலை, மரவேலை, மண்பாண்டக்கலை, தையற்கலை, நகைக்கலை என அனைத்துக் கலைகளிலும் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவுத்திறன் வியக்க வைக்கின்றது.