செவ்வாய், 19 அக்டோபர், 2021

அருணகிரிநாதர் - விநாயகர்துதி

 

விநாயகர்துதி

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்,  தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் திருவெங்கட்டார், முத்தம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர்.  தமிழ் மொழிவடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. அருணகிரிநாதர்தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன.

அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்"  தேவாரத்திற்கு  இணையாகவும், "கந்தர் லங்காரம்"  திருவாசகத்திற்கு  இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி"  திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

அருணகிரிநாதரின் நூல்கள்

·       கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)

·       கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)

·       கந்தரனுபூதி (52 பாடல்கள்)

·       திருப்புகழ் (1307 பாடல்கள்)

·       திருவகுப்பு (25 பாடல்கள்)

·       சேவல் விருத்தம் (11 பாடல்கள்)

·       மயில் விருத்தம் (11 பாடல்கள்)

·       வேல் விருத்தம் (11 பாடல்கள்)

·       திருவெழுகூற்றிருக்கை

அவற்றுள் திருப்புகழ் நூலில் விநாயகர் துதி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் துதி

நினது திருவடி சத்திம யிற்கொடி

     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்

     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி

          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

     மகர சலநிதி வைத்தது திக்கர

          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு

     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு

          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல

     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்

          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்

     நிரைய அரவநி றைத்தக ளத்திடை

          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்

     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட

          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

     இரண பயிரவி சுற்றுந டித்திட

          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

விளக்கம்

தெனன தெனதென தெத்தென என்றவாறு ஒலி செய்யும் சிறிய ஈக்கள் பல மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள் இவைகளோடு வரிசையாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த முருகப் பெருமானே உன்னை வணங்குகின்றேன்.

 உன்னுடைய திருவடியையும், வேல், மயில், சேவல் ஆகியவற்றையும் நினைவில் கொண்டு தியானிக்கும் அறிவை நான் எப்போதும் பெறுவதற்காக, விநாயகனை வணங்குகின்றேன். நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பம், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்பு, லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, இனிய வாழைப்பழ வகைகள், இளநீர் ஆகிய நிவேதனப் பொருட்களை மிக விருப்பத்துடன் தொட்டு உண்ணுகின்ற திருக்கரத்தையும், கடலைத் தொட்டு உண்ட தும்பிக்கையையும் உடைய, யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,  அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு வழிபட்டு, துதிப்பதற்குரிய சொற்களைக் கொண்டு துதித்து, தூக்கிய கைகளால் காதைப் பிடித்து, தோப்புக்கரணம் போட்டு, சிரசில் குட்டி, அந்த விநாயகருடைய தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறப்பதில்லை.

இப்பாடலின்வழி அறியலாகும் புராண வரலாறு

மகர சலநிதி வைத்தது.......

திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்புற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.

வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு....

ஒருமுறை அகத்திய முனிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.

 

http://www.kaumaram.com/thiru/nnt0004_u.html

http://kuganarul.blogspot.com/2018/05/blog-post_29.html

 

வள்ளலார் - பிள்ளைச் சிறு விண்ணப்பம்

பிள்ளைச் சிறு விண்ணப்பம்

வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மருதூரில் 5.10.1823இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.  இவரை, அருளாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், உரையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், பண்பாளர் என்றெல்லாம் அழைப்பர்.

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்

1.   இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

2.   எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

3.   எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

4.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

7.   புலால் உணவு உண்ணக்கூடாது.

8.   கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

9.   சாதிமதம், இனம்மொழி முதலிய வேறுபாடு கூடாது.

10. மத வெறி கூடாது.

பதிப்பித்த நூல்கள்

1.   சின்மய தீபிகை

2.   ஒழிவிலொடுக்கம்

3.   தொண்டைமண்டல சதகம்

இயற்றிய உரைநடைகள்

1.   மனுமுறைகண்ட வாசகம்

2.   ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டுதிருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டு உள்ளது.

         திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் அமைந்துள்ள பிள்ளைச் சிறு விண்ணப்பம் என்ற பகுதியில் இருந்து ஐந்து பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பிள்ளைச் சிறு விண்ணப்பம்

வள்ளல் பெருமான் இறைவனிடம் வேண்டிய வரங்களை விண்ணப்பங்கள் என்றுரைக்கின்றார். பிள்ளைப் பருவத்தில் தன் உள்ளத்தில் எழுந்த விருப்பங்கள் சிலவற்றை எடுத்துரைத்து இறைவனை வேண்டுகின்றார். தான் செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுவது, இறைவன் தம்மை வெறுத்துவிடக்கூடாது என்று விரும்புவது, பொய்ம்மையை வெறுப்பது, மாந்தர் அனைவரையும் அன்பால் போற்றி வாழ்வது, புலை, கொலை தவிர்க்கும் அருள் வேட்கையை விரும்புவது, சமரச ஞான சுத்த சன்மார்க்க நெறியை விளக்குவது, பிறவித் துன்பமற வரம் பெற விழைவது உள்ளிட்ட பல விண்ணப்பங்கள் இப்பகுதியில் ஓதப்படுகின்றன. உயிர்களின் இடர் களைவதே இவ்விண்ணப்பங்களின் அடிநாதமாக விளங்குகின்றது.

பாடல் - 1

டித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.

விளக்கம்

தன் மகன் ஒரு தவறு செய்தால் தந்தை அவனை அடித்துக் கண்டிக்கும்போது, தாய் அவரைத் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள். தாய் அடித்தால் தந்தை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வார். அம்மையும் அப்பனுமாகிய எம் பெருமானே! எனக்குத் தாயும் தந்தையும் நீயே ஆதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை அடித்தது போதும். இனி பொறுக்க முடியாது. ஆகவே, உன் அருளால் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

பாடல் - 2

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்

மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்

கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் 

முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென் முனிவு தீர்ந்தருளே 

விளக்கம்

அம்பலத்தில் திருநடனம் புரியும் அருளரசனே! என்னைப் பெற்ற அருள் வள்ளலே! தம் பிள்ளைகளின் குணங்களைப் பெற்றோரைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. அதுபோல என் குணங்கள் அனைத்தையும் அறிந்தவன் நீ! அறிந்திருந்தும் என்னை வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று என்னை ஆட்கொள்க.

பாடல் - 3

வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்

சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே

இம்மதிச்சிறியேன் விழைந்ததொன்றிலைநீ என்றனைவிழைவிக்க விழைந்தேன்

செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

தீய பண்புடைய தன் மகன் பிறருக்குக் கொடிய செயல் செய்ய விரும்பினால், மகன் மீது உள்ள பாசத்தால் அவனைப் பெற்றவர்கள் அவன் புரியும் கொடுஞ்செயலுக்கு உடன்படுகின்றனர்.  சிறியவனாகிய நான் குற்றமொன்றும் செய்யவில்லை. என் மனதில் உன் மீது அன்பு உண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன். அறிஞர்கள் மதிக்கும் திருநெறியினையே கடைபிடிக்கின்றேன். இவை அனைத்தும் உன் திருவுள்ளம் அறியும்.

பாடல் - 4

பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு

நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே

கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்

செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

என் தந்தையாகிய சிவபெருமானே! பொய் கூறுதல், புறம் உரைத்தல், இன்னா மொழிதல் முதலான குற்றங்கள் பலவற்றை உடையவனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டாகச் செய்யும் குற்றத்தை நான் வாயால் உரைப்பதில்லை. பிறர் மீது கொண்ட அருளுணர்வால் அவர்களுக்குச் சிறு பிழைகள் செய்ய நினைத்ததில்லை! உன்னுடைய திருவடியின் மீது ஆர்வம் கொண்டதைத் தவிர வேறு ஒரு பிழையும் செய்ததில்லை. என்னுடைய இந்த நிலைமையை நீ நன்கு அறிவாய்!

பாடல் - 5

அப்பணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே

இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே

எப்பணி இட்டாய்  அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே

செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.

விளக்கம்

கங்கையைத் தன் சடை முடியின் மீது சூடிய எம் தந்தையே! ஆனந்த நடனம் புரியும் அருளரசனே! எனக்கு நல்லறிவு தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை நான் எத்தகைய பணி செய்ய வேண்டும் என நீ ஏற்பாடு செய்தாயோ, அதைச் செய்வதன்றி வேறு எதுவும் செய்தது இல்லை. நான் செய்வது அனைத்தும் உன் திருவுள்ளம் நன்கு அறியும்.


தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி

 


பைங்கிளிக்கண்ணி

தாயுமானவர்

1. இவர் திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் பிறந்தவர். 

2.இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கெஜவல்லி அம்மையார் ஆவார். 

3.இவர் வடமொழிதமிழ்மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். 

4.திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்தவர். பின்னர் அப்பதவியைத் துறந்து  மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

5.தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார்.

6. இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

7.தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். 

8.வள்ளலாரும், பாரதியாரும் எளிய கவிதைகள் பாடுவதற்கு இவரே  முன்னோடியாகத் திகழ்ந்தார்.  

9.தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.  அவற்றுள் பைங்கிளிக்கண்ணி என்ற தலைப்பில் அமைந்த பாடல்களுள் ஐந்து பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பைங்கிளிக்கண்ணி

1.    அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்

சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.

2.    அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்

சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே.

3.    ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்

பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே.

4.    ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து

சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே.

5.    ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்

கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே.

விளக்கம்

1. முதலும் முடிவும் இல்லாத அருட்பெருஞ்சோதியான இறைவன் என் அறிவில் தங்கி, எனக்கு அருள் செய்வாரோ? சொல் பைங்கிளியே!

2.  பைங்கிளியே! என் மனதின்கண் பொருந்தியிருக்கின்ற இறைவனிடம் நீ சென்று, என் துன்பத்தை எல்லாம் எடுத்துக்கூறி, எனக்கு முடிவில்லா இன்பம் பெற்று வந்து தருவாயாக.

3.   உயிர்க்கு உயிர் என்று கூறப்படுகின்ற அற்புத மூர்த்தியாகிய இறைவனின் ஞானத்தால் பெறப்படுகின்ற சுகம், இந்தப் பாவியாகிய எனக்குக் கிடைக்குமோ? நீ சொல் பைங்கிளியே!

4.  பைங்கிளியே! யாரும் அறியாத வண்ணம், இரகசியமாக வந்து என்னை அணைத்து ஆட்கொள்ளும்படி, என் தலைவனாகிய இறைவனிடம் நீ சொல்லி வருவாயாக.

5. மழலைச்சொல் பேசும் பைங்கிளியே! ஆறுபோல பெருகிய என் கண்ணீரின் அளவுக்கு என் தேகம் வருந்திய வருத்தத்தினை நீ இறைவனிடம் சொல்லாமல் வந்தது ஏன்?