செவ்வாய், 14 அக்டோபர், 2025

TANSCHE - ஐரோப்பியர் கால இலக்கிய வளர்ச்சி

 

ஐரோப்பியர் கால இலக்கிய வளர்ச்சி

நம் இந்திய மண்ணுக்கு வந்த ஐரோப்பியர்களை இரு வகைப்படுத்தலாம். வணிக நோக்கில் வந்த கிழக்கிந்திய கம்பெனியார்கள்.  இன்னொருவர் மதத்துறவிகளான மிஷனரிகள். வணிக நோக்குடன் வந்தவர்களால் பல துன்பங்கள் விளைந்தன. மதத்துறவிகளால் பல நன்மைகள் நடந்தன. குறிப்பாக, அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டு அளவில்லாதது. சமயம் பரப்பும் நோக்குடன் வந்த ஐரோப்பியர் தழிழைப் படித்து, அதன் இனிமையில் மயங்கினர். தமிழில் ஆய்வு முறைகளையும், எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் செய்து பண்டைய உரை வடிவ முறைகளை மாற்றி அனைவரும் படிக்கும் வகையில் எளிமைப்படுத்தினர். அவர்கள் கொண்டு வந்த அச்சு இயந்திரங்களால் மொழிப்புரட்சி ஏற்பட்டது.

தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்கள்

தமிழ் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்களுள், இராபர்ட் – டி –நோபிலி என்னும் தத்துவ போதகர், பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களின் இலக்கியப்பணி தமிழ்க் கிறித்துவ இலக்கியங்களிலும், தமிழ் இலக்கண இலக்கிய மொழி ஆராய்ச்சிகளிலும் எண்ணற்ற புதுமைகளை உருவாக்கியது.

இலக்கியங்கள்

தத்துவக் கண்ணாடி, இயேசுநாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம், சதுரகராதி, தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்தகுரு கதை, தமிழ்மொழி இலக்கணம், அகராதிப் பணிகள் எனப் பலவும் அவர்களின் தமிழ்க்கொடைகளாகும். கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூல் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பான மகுடம் ஆகும். இவர்களின் வருகையால் ஏராளமான சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. தமிழ் உரைநடை வளர்ச்சியும், தமிழ்க்கல்வி மற்றும் ஆங்கிலக் கல்வியும்  வளர்ச்சி கண்டன. அவர்கள் கொண்டு வந்த கல்வி முறைகளும் இலக்கிய நுட்பங்களும் கொடுத்த பயன்களும் தேச மொழி வளர்ச்சிக்கு இன்றிமையாதனவாக அமைந்துள்ளன.

TANSCHE - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரை விரிவடைந்தது. டெல்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத், கர்நாடகம், சூரத், தஞ்சை ஆகிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் உடைமைகளாயின. தஞ்சை சரபோஜி மன்னன், வெல்லெஸ்லி பிரபுவிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு 1799இல் தான் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டான்.

வேலூர்க் கலகம்

ஆங்கிலேயச் சேனாதிபதி இராணுவச் சிப்பாய்களின் நடைமுறையில் சில ஒழுக்க விதிகளைப் பிறப்பித்ததன் விளைவாக வேலூர்க் கோட்டையில் புதிய நடைமுறைகளை எதிர்த்துக் கலகம் தோன்றியது. திப்புவின் மக்கள் இக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டனர். அதனால் கிளர்ந்து எழுந்த சிப்பாய்கள் நூறு ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இது வரலாற்றில் வேலூர்க் கலகம் என்றும், வடக்கில் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகவும் கருதப்பட்டது.

காங்கிரஸ் பேரவை

கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்களுக்கு இந்திய அரசாட்சியிலும், அரசாங்க அலுவல்களிலும் பதவிகள் கொடுக்கப்ட வேண்டும் என்று அறிஞர் சிலர் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, இந்திய தேசியப் பேரியக்கம் ஒன்றை ஏற்படுத்தினர். இதுவே காங்கிரஸ் பேராயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் பாலகங்காதர திலகர் போன்ற இந்தியத் தலைவர்கள் சிறந்து விளங்கினர். இவ்வியக்கத்தின் முயற்சியால் படித்த இந்தியர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், பலதுறை உயர் அலுவலர்களாகவும் நியமனம் பெற்றனர். 1914இல் இருந்து காந்தியடிகள் இவ்வியக்கத்தில் செல்வாக்கு பெற்றதால், அதன் பின் சுதந்திரப் போராட்டம் அகிம்சைவழி அறப்போராட்டமாக மாறியது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

தமிழ்நாட்டு விடுதலைப்போரில் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராசர், தந்தை பெரியார் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கப்பலோட்டிய தமிழன்

சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த, சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் விட்டு கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்பட்டவர் வ.உசி. திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த செம்மல் என்னும் பெயர் பெற்றார்.

பாரதியார்

பாரதியார் தம் உணர்வூட்டும் கவிதைகளால் மக்களின் மனதில் விடுதலை வேட்கையை உண்டாக்கினார். இவரது கவிதைகளையும் இவர் நடத்திய இதழ்களையும் ஆங்கில அரசு தடை செய்து அவரை கைது செய்ய முனைப்புக் காட்டியது.

 தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் இராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரால் பேரியக்கமாக வளர்ந்து நின்றது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனிமனித விடுதலையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தந்தது. இவர்களோடு வ.வே.சு.ஐயர், திரு.வி.க, பா.ஜீவானந்தம், கே.பி.சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற பலரும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டனர்.

TANSCHE - முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழக வரலாற்றில் தெளிவற்ற ஆட்சிக் காலங்களாக அமைந்தவை களப்பிரர் காலமும் முகமதியர் காலமுமே ஆகும். முகமதியர் வடக்கில் இருந்த நாடுகளான தேவகிரி, துவார சமுத்திரம் ஆகிய ஆட்சிப் பகுதிகளை வென்று தக்காணத்திற்கு வந்தனர். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டனர். தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன. பின்னர் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் தமிழகத்தின் மேல் படையெடுத்தனர். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் மேற்கொண்ட போர், தமிழகத்தில் முகமதியர் குடியேற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தொடக்கமாக அமைந்தது.

மாலிக்காபூர்

மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், அவர் புதல்வர்களான சுந்தரபாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டனர். சுந்தரபாண்டியன் அரியணையை வீர பாண்டியனுக்கு வழங்கினார். இதனால் இருவருக்குமிடையே பூசல் ஏற்பட்டது. இந்நிலையில் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த மாலிக்காபூரை உதவிக்கு அழைத்தான் சுந்தர பாண்டியன்.

வீர பாண்டியப் படைகளைத் தாக்கி முன்னேறிய மாலிக்காபூர் படைகள் உய்யக்கொண்டான் திருமலையை முகாமாகக் கொண்டு கண்ணனூர், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடுரமாகத் தாக்கியது. இதனால் மதுரையை விட்டு வெளியேறினான் சுந்தரபாண்டியன். மாலிக்காபூர் இராமேஸ்வரம் வரை படை நடத்தி வென்று அங்கு மசூதி ஒன்றை நிறுவினான். பெரும் செல்வத்தோடு டெல்லி புறப்பட்ட மாலிக்காபூர், படையின் சிறு பகுதியை மதுரையிலே விட்டுச் சென்றான். வேணாட்டடிகள், இரவிவர்ம குலசேகரன் இருவரின் துணையுடன் விக்கிரம பாண்டியன் மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டு விரட்டினான். மாலிக்காபூருக்குப் பின்…

மாலிக்காபூர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கில்ஜி சுல்தான்களின் ஆட்சி மறைந்து துக்ளக் சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது.

முகமதுபின் துக்ளக்

சுல்தான் கியாசுதீன் தன் மகனான முகமதுபின் துக்ளக்கை தென்னகம் நோக்கி படையெடுக்க அனுப்பினான். இப்படை முதலில் தோற்றது. பின்னர் பிரதாப ருத்திரதேவனை வென்று, மலபாரில் நுழைந்து தமிழகத்தை வெற்றி கண்டது. பாராக்கிரம பாண்டியன் கைது செய்யப்பட்டான். முகமது பின் துக்ளக் டில்லி சுல்தான் ஆனான். மதுரையில் அரச பிரதிநிதியை அமர்த்தினான். இவனது ஆட்சியின் கீழ் தென்னகம் 23ஆவது மாநிலமாக அமைந்தது.

இவனுக்குப் பிறகு சலாவுதீன் அசன் 1333 முதல் 1378 வரை மதுரையை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக அமைத்து ஆட்சி செய்தான். இதற்கிடையில் பல போர்கள் ஏற்பட்டன. மதுரை சுல்தான்கள் பலர் இறந்து போயினர். இறுதியில், மதுரையில் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துது.

சமூக நிலை

இவர்கள் உருவச்சிலை வழிபாட்டை எதிர்த்தனர்.  மாலிக்காபூரின் படையெடுப்பால் சீரங்கம், மதுரை போன்ற ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. தமிழகத்துப் பேரரசுகள் சிற்றரசுகளாக மாறின. முகமதியர்களின் சமயச்சார்பு அரசியலால் மக்கள் பல ஊர்களில் கூட்டம் கூட்டமாக இசுலாம் மதத்தைத் தழுவினர். இசுலாமியச் சமயமும், சாராசானிக் கட்டடக் கலையும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றன.

சாராசானிக் கட்டடக்கலை

முகமதிய சாராசானிக் கட்டடக்கலை, ஐரோப்பிய கட்டடக்கலையும் இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் சேர்ந்து உருவாக்ப்பட்டது ஆகும். குவி மாடங்களால் கட்டப்படும் இக்கட்டடக்கலை, தமிழ் இலக்கியங்கள் கூறும் எழுநிலை மாடங்களைப் போல பருவச் சூழலுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டவையாகும். உயர்ந்த கோபுர அமைப்பு, பூ வேலைப்பாடுகள் அமைந்த கட்டட முனைகள், விதானங்கள் எனப் பலவும் சாராசானிக் கட்டடக்கலையில் அமைந்துள்ளன. இதற்கு எடுத்துக்கட்டு சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனை ஆகும். தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் சாராசானிக் கட்டடம் இதுவே ஆகும்.

சென்னை உயர்நீதி மன்றம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால், மதுரையின் நாயக்கர் மகால் ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் பல கோட்டைகளை அழித்திருந்தாலும், இச்சாராசானிக் கட்டங்கள் மட்டும் அழியாமல் மீண்டதற்கு இதன் சிறப்பே காரணமாகும்.

இலக்கியங்கள்

சீறாப்புராணம், படைப்போர் இலக்கியங்கள், நொண்டி நாடகங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் முதலியன இக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும்.