நாயக்கர்கள்
சுல்தான்களால் சைவம்,
வைணவம் அழிந்து கொண்டிருந்த காலத்தில் அதனை மீட்டு எடுக்க ஹரிஹரன், புக்கர் ஆகியோரால்
ஏற்படுத்தப்பட்ட ஆட்சியே விசயநகர ஆட்சி ஆகும். விசயநகர ஆட்சியின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள்
ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சி செஞ்சி, தஞ்சை, மதுரை என்ற முப்பிரிவுகளைக் கொண்டது.
குமாரகம்பண உடையார்
இவர் புக்கரின் மகன்.
மதுரையை ஆண்ட சுல்தான்களை வென்றவர். தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை, வேலூர் போன்ற இடங்களைக்
கைப்பற்றி விசயநகரப் பிரதிநிதியாக இருந்தான். தமிழகத்துக் கோயில்களைப் புதுப்பித்தவர்.
இச்செய்திகளை மதுரா விஜயம் என்ற நூலின்வழி அறிய முடிகின்றது. இந்நூலை இயற்றியவர் குமாரகம்பண உடையாரின்
மனைவி கங்காதேவி ஆவார்.
விசயநகரப் பேரரசும் தமிழகத்து
நாயக்கர்களும்
சுதந்திரமாகச் செயல்பட
எண்ணிய நாயக்கர்கள் விசயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்ட மறுத்தனர். இதனால் கிருஷ்ணதேவராயர்
கோபம் கொண்டு தமிழகத்தின் மீது படையெடுத்தார். அதன் பிறகு செஞ்சியில் வையப்ப நாயக்கனும்,
தஞ்சையில் விசயராகவ நாயக்கனும், மதுரையில் வெங்கடப்ப நாயக்கனும் விசயநகரப் பேரரசின்
பிரதிநிதிகளாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். கிருஷ்ண தேவராயருக்குப் பின் அவனது தம்பி
அச்சுதராயன் விசயநகரப் பேரரசை ஆண்டான். இவன் இறந்தபிறகு அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை
நாயக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சுதந்திரமாக நாட்டை ஆண்டனர். மதுரையை ஆண்ட விசுவநாத
நாயக்கன் நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து நாயக்கர்களின் வலிமையை நிலைநாட்டினார்.
செஞ்சி நாயக்கர்கள்
பாகுகிருஷ்ணப்ப நாயக்கனின்
வழிவந்தவர்கள் செஞ்சி நாயக்கர்கள். இவர்கள் பாலாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட
பகுதியை ஆண்டனர். பாகுகிருஷ்ணப்ப நாயக்கனுக்குப்
பின் சூரப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் ஆகியோர் ஆண்டனர்.
தில்லையில் கூத்த பெருமாள் ஆலயத்தின் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை நாயக்கர்கள்
திம்மப்ப நாயக்கன், செவப்ப
நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன், இரகுநாத நாயக்கன், விசயராகவ நாயக்கன் ஆகியோர் தஞ்சையை
ஆண்ட நாயக்கர்கள் ஆவர். மைசூர் உடையார்கள் மதுரையைத் தாக்கியபோது அவர்களுக்கு விசயராகவ
நாயக்கன் துணை புரிந்துள்ளான். இறுதியில் நாயக்கன் சொக்கநாதன் தஞ்சையைக் கடுமையாகத்
தாக்கினான். விசயராகவ நாயக்கன் கொல்லப்பட்டான். தஞ்சையில் சொக்கநாதன் அழகிரி நாயக்கனை
அரியணை அமரச் செய்தான். பிறகு மதுரையுடன் தஞ்சை இணைக்கப்பட்டது. நாயக்கர்வழி வந்த செங்கமலதாசுக்குப்
பீசப்பூர் சுல்தான் துணை புரிந்தார். எக்கோசியின் தலைமையில் அழகிரி நாயக்கனை வென்று
தஞ்சை செங்கமதாசுக்கு வழங்கப்பட்டது. பின்பு எக்கோசிக்கே தஞ்சையை ஆளும் எண்ணம் ஏற்பட்டதால்
தஞ்சை மராட்டியரின் கீழ் கொண்டு வரப்பட்டது. தஞ்சை நாயக்கர் குறித்து சோழ மண்டலக் கல்வெட்டுகள்
குறிப்பிடுகின்றன.
மதுரை நாயக்கர்கள்
விசுவநாத நாயக்கன், கிருஷ்ணப்ப
நாயக்கன், முத்து கிருஷ்ணப்ப நாயக்கன், திருமலை நாயக்கன், சொக்கநாத நாயக்கன், இராணி
மங்கம்மாள் ஆகியோர் மதுரை நாயக்கர்கள் ஆவர்.
விசுவநாத நாயக்கன்
இவன் கிருஷ்ணதேவராயரின்
தளபதி நாகமநாயக்கனின் மகன். இவன் மதுரையின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டு, தன்னுடைய
தளவாய் அரியநாதரின் துணை கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்தான். இவருடைய காலத்தில் திருச்சியும்
மதுரையும் இணைந்து இருந்தது. திருச்சி சீரங்கநாதர் ஆலயத்தை மூன்று இலட்சம் செலவில்
சீரமைத்தார் என அங்குள்ள கோயில் கல்வெட்டு காட்டுகின்றது. இவன் தனது ஆட்சிப் பரப்பை
72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டான். தெலுங்கர்களும், கன்னடர்களும், பாண்டியர் பரம்பரையினரும்
பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் போரின்போது மன்னர்களுக்கு உதவுமாறு பணிக்கப்பட்டனர்.
பாளையக்காரர்கள் பாளையத்தின் வருவாயை மூன்றில் ஒருபாகம் மன்னனுக்கும், ஒரு பாகம் நிர்வாகச்
செலவுக்கும் பயன்படுத்தினர்.
கிருஷ்ணப்ப நாயக்கன்
இவன் விசுவநாத நாயக்கனின்
மகன். இவனுடைய காலத்தில் விசயநகரத்துக்கும் பாமினி சுல்தான்களுக்குமிடையே தலைக்கோட்டையில்
போர் நடைபெற்றது. அதில் இராமராயன் கொல்லப்பட்டான். அப்போரில் அரியநாதர் தலைமையில் படையை
அனுப்பினான். திருமலைராயனுக்கு அவனுடைய பேரரசை மீட்க உதவினான். இவன் பெயரில் கிருஷ்ணாபுரம்
என்ற நகர் ஏற்படுத்தப்பட்டது. திருவேங்கடநாதர் ஆலயத்திற்கும், மதுரை மீனாட்சி ஆலயத்திற்கும்
திருப்பணிகள் செய்தான்.
அரியநாதர்
விசுவநாத நாயக்கர் தொடங்கி
குமார கிருஷ்ணப்ப நாயக்கர் வரை நாயக்கர்களுக்குப் பெரும் உதவி புரிந்தவர் இவர். குமார
கிருஷ்ணப்ப காலத்தில் உயிர் நீத்தார். இவர் நினைவாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தின் முன்
குதிரை மேல் அரியநாதர் அமர்ந்து இருப்பதுபோல் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
முத்து கிருஷ்ணப்ப நாயக்கன்
இவன் விசுவப்ப நாயக்கனின்
மகன் ஆவார். இவன் காலத்தில் இராமேசுவரத்தில் திருடர்கள் தொல்லை அதிகமாக இருந்தமையால்
அங்கு சடையத்தேவரை குறுநில மன்னனாக்கினார். கோயில்களுக்கு 13 கிராமங்களைத் தானமாகக்
கொடுத்துள்ளார். சடையத்தேவர் சேதுபதி என்று அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் இராபர்–டி-நொபிலி
மதுரைக்கு வந்தார்.
திருமலை நாயக்கன்
நாயக்கர் வரலாற்றின்
கதிரவன் என்று போற்றப்படுபவர் திருமலை நாயக்கன். இவன் முத்து வீரப்பனின் மகன் ஆவார்.
மதுரையைத் தலைநகராகக் கொண்டார். சுயாட்சியை விரும்பியதால் விசயநகரப் பேரரசுக்கு எதிரியானார்.
இவர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். மைசூர், வேணாடு, இராமநாதபுரம், வேலூர் ஆகிய இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றார். இவருடைய காலத்தில் நடைபெற்ற மூக்கறுப்புப் போரால் மக்கள் பலர் மடிந்தனர். கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஆர்வம் கொண்டார். பாழ்பட்டுக் கிடந்த கோயில்களைச் செப்பனிட்டு அழகுபடுத்தினார். ஆண்டு ஒன்றுக்குப் பெருவிழாக்கள், சிறுவிழாக்கள் நடத்தி மதுரையை விழா நகரமாக்கினார். மதுரையில் அழகிய தெப்பகுளம், புதுமண்டபம், ஆவணி மூலை, இராயர் கோபுரம் ஆகியவை இவருடைய சீரிய பணிக்குச் சான்றுகளாகும். மதுரையின் மற்றொரு சிறப்பு திருமலை நாயக்கர் மகால் ஆகும். கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட விசயம் ஆகிய பல புகழ் பெற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய அறப்பணிகளும், கலைப்பணிகளும், இறவாப் புகழை தந்தன.
சொக்கநாத நாயக்கன்
திருமலைக்குப் பிறகு
சிறப்பான ஆட்சி புரிந்தவன் சொக்கநாத நாயக்கன் ஆவான். பீசப்பூர் அரசர்களை வெற்றி கொண்டான்.
தஞ்சை, செஞ்சி, வேலூர் போன்றவற்றைக் கைப்பற்றிய சிவாஜி மதுரையைக் கைப்பற்ற திருச்சி
கொள்ளிட ஆற்றில் முகாமிட, அவனுக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கொடுத்து படையெடுப்பைத் தவிர்த்தான்.
பாளையக்காரர்கள் துணை கொண்டு திருச்சியைக் கைப்பற்றிய ருசுதும்கானைக் கொன்று வெற்றி
கண்டான். இவரது காலத்தில் ஜான் பிரிட்டோ மதுரையில் சமயத் தொண்டாற்றினார்
சொக்கநாதனுக்குப்
பின் அரங்க கிருட்டிண முத்து வீரப்பன், செஞ்சி
சம்போஜி, மைசூர் சிக்கராய உனடயார், தஞ்சை எக்கோசி, இராமநாதபுரம்
கிழவன் சேதுபதி ஆகியோர் மதுரையை ஆள நினைத்துப் போரிட்டனர்.
இராணி மங்கம்மாள்
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் மடிந்த சில மாதங்களில் அவருடைய புதல்வன் விசயரங்க சொக்கநாதன் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆயினும், அவருடைய பாட்டியும், சொக்கநாதனின் மனைவியுமான மங்கம்மாள் ஆளுநராக ஆட்சி நடத்தினார். முகலாயர்களின் வலிமையையும், நாயக்கர்களின் பலவீனத்தையும் உணர்ந்த மங்கம்மாள், முகலாய மன்னனுக்குப் பணிந்து, திறை செலுத்த இணங்கி, உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவருடைய உதவியை நாடினார். மராட்டியர்களிடத்தில் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டார். சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் ஆதரித்தார். இதனால் நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றனர். நீர்நிலைகளை உருவாக்குதல், சாலைகள் அமைத்தல், சாலையில் நிழல் தரும் மரங்கள் நடுதல், சத்திரங்கள் அமைத்தல், அன்னச் சாவடிகள் அமைத்தல், தண்ணீர்ப்பந்தல் நிறுவுதல் உள்ளிட்ட பல அரும்பணிகளைச் செய்தார்.
விசயரங்க சொக்கநாத நாயக்கன்
இராணி மங்கம்மாவுக்குப்
பின் ஆட்சிக்கு வந்தார். அரசக் கடமை தவறி பக்தி நெறியில் வாழ்ந்தார். நாடு எங்கும்
பூசல் நிகழ்ந்தது. எங்கும் வாரிசுரிமை போட்டி நிலவியது. பிறகு விசயரங்க சொக்கநாத நாயக்கனின்
மனைவி மீனாட்சி ஆட்சியில் அமர்ந்தார். இறுதியில் சாந்தாசாகிப் மதுரையைக் கைப்பற்றியதால்
நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
நாயக்கரின் ஆட்சி முறை
நாயக்கர்கள் மன்னருக்கு
அடுத்தபடியாக இருந்த அமைச்சர், தளபதி ஆகிய பதவிகளை ஒன்றாக்கி தளவாயாக மாற்றினர். தளவாய்க்கு
அடுத்தபடியாக வருவாய் அதிகாரியான பிரதானி நிதி அமைச்சருக்கு இணையானவராக அமர்த்தப்பட்டார். பிரதானிக்கு அடுத்தபடியாக
இராசயம்
என்ற
உயர் அதிகாரி இருந்தார். இவர்கள் நீங்கலாக கணக்கன் தணிக்கை அதிகாரியாகவும்,
தானாபதி
அரசப்
பிரதிநிதியாகவும் விளங்கினர்.
பேரரசு மாநிலங்களாகப்
பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மாநிலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டன. மாகாணா, சீமை என்ற பெயரில் பல கிராமங்கள்
ஒன்றிணைக்கப்பட்டன. கிராமங்களின் பெயர்கள் மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குலம்,
குறிச்சி, பட்டி எனப்பட்டன. கர்ணம், மணியக்காரன், தலையாரி எனக் கிராம அதிகாரிகள் இருந்தனர்.
திண்ணைப் பள்ளிகள் வழக்கத்தில்
இருந்தன. சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.
இந்தோ சாரசானிய முறையில்
அரண்மனைகள் கோட்டைகள் கட்டப்பட்டன. நெல்லை கூத்தப்பர் ஆலயம் இவர்களுடைய காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இலக்கியம்
வீரகவிராயரின் அரிச்சந்திர புராணம், அதிவீரராம பாண்டியனின்
நைடதம், இலிங்கபுராணம், மகாபுராணம்,
கூர்மபுராணம், பதிற்றுப்பத்தந்தாதி, வரதுங்க ராம பாண்டியனின் கொக்கோகம், ஞானபிரகாசரின் திருவொற்றியூர் புராணம்,
நமச்சிவாயப்
புலவரின் சிதம்பர வெண்பா, எல்லப்ப நாவலரின் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குமரகுருபர சுவாமிகளின்
கந்தர்
கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், இரத்தினக் கவிராயரின் மச்ச புராணம், புலவராற்றுப்படை
ஆகிய
நூல்கள் எழுந்தன. சைவ சித்தாந்த நூல்களும், சிவஞான போத உரைகளும் தோன்றின. அமிர்த கவிராயர், சர்க்கரைப்
புலவர் ஆகியோரும் நாயக்கர் காலப் புலவர்களாவர். சூரப்பநாயக்கன் அரண்மனையில்
வாழ்ந்த புலவர் சீனிவாச தீட்சிதர் பவன புருடோத்தமம் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.