வியாழன், 13 பிப்ரவரி, 2025

கண்ணன் என் சேவகன்

 

பாரதியார்

கண்ணன் என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:

வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;

'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்

பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;

ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;

எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;

சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;

மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;

சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;

காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்

சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே

சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;

கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!

ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்

என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்

ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்.

கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்

ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,

மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;

கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;

நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்

ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள

காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.

பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே

கண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,

நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்

பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ..

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்

வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;

தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;

மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்

ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்

பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து

நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,

எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ...

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்

எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்

செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,

கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ...

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்

ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!

கண்ணனை நான்ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்!

கண்ணன் எனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

பாடல் விளக்கம்

கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பில் அமைந்த இப்பாடல் இறைவனுக்கும், மனித உயிருக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்கும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது.

சேவகரால் பாரதி பட்ட துன்பங்கள்

சேவகர்கள் சிறிய செயலைச் செய்தாலும் அதிகமான கூலியைக் கேட்பார்கள். நாம் முன்பு அவர்களுக்குக் கொடுத்ததை எல்லாம் மறந்து போவார்கள். நம் வீட்டில் வேலை மிகுதியாக இருக்கும் என்று தெரிந்தால் அன்றைக்கு வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டிலேயே தங்கிவிடுவர். மறுநாள் அவர்களிடம் ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை என்று கேட்டால், பானையில் இருந்த தேள் பல்லால் கடித்து விட்டது என்றும், வீட்டில் மனைவி மேல் பூதம் வந்த்து என்றும், பாட்டி இறந்த பன்னிரண்டாம் நாள் என்றும் ஏதாவது பொய்களைச் சொல்வர். நாம் ஒன்றைச் செய்யச் சொன்னால் வேறு ஒன்றைச் செய்வர். நமக்கு வேண்டாதவர்களோடு தனியிடத்தில் மறைவாகப் போய் பேசுவர். நம் வீட்டுக்குள் இருக்க வேண்டிய மறைவான செய்திகளைப் பலரும் அறியச் சொல்லி விடுவர். எள் முதலிய சிறு பொருள் வீட்டில் இல்லை என்றால், அவ் இல்லாமையை எல்லோர்க்கும் வெளிப்படுத்துவர். இவ்வாறு சேவகர்களால் படுகின்ற துன்பங்கள் பல உண்டு. எனினும், அவர்கள் இல்லை என்றால் நமக்கு வேலைகள் நடப்பதில்லை என்று பாரதி சேவகரால் பட்ட துன்பங்களை எடுத்துக் கூறுகின்றார்.

கண்ணனுக்கும் பாரதிக்கும் நடைபெற்ற உரையாடல்

வேலைக்காரர்களால் பாரதி துன்பம் மிகுந்து வருந்தும்போது, எங்கிருந்தோ வந்த ஒருவன், “ஐயா, நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன். மாடு கன்றுகள் மேய்ப்பேன். பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். வீட்டைப் பெருக்கி விளக்கேற்றுவேன். நீங்கள் சொன்ன வேலைகளை அப்படியே செய்வேன். துணிமணிகளைப் பாதுகாப்பேன். குழந்தைகளுக்கு இசையும் நடனமும் நிகழ்த்தி அவர்களை அழாதபடி பார்த்துக் கொள்வேன். என் உடல் வருத்தத்தைப் பார்க்காமல் இரவும் பகலும் காட்டு வழியிலும், திருடர் கூட்டத்து நடுவிலும் தங்களுக்குத் துணையாக வருவேன். தங்களுக்கு ஒரு துன்பமும் வராதபடி பார்த்துக் கொள்வேன். நான் கல்வி கற்காதவன். காட்டு மனிதன் என்றாலும் சிலம்பம், குத்துச் சண்டை, மற்போர் ஆகியவற்றைக் கற்றிருக்கிறேன். உங்களுக்குச் சற்றும் துரோகம் செய்ய மாட்டேன்” என்று பலவாறு கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட பாரதி அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று வினவியபோது, அவன், “எனக்குப் பெயர் என ஒன்று தனியே இல்லை. ஆயினும் ஊரில் உள்ளோர் என்னைக் கண்ணன் என்று அழைப்பர்” என்று கூறினான்.

அவனுடைய வலிமை மிக்க உடலையும், அவன் கண்ணில் தோன்றிய நல்ல குணத்தையும், அன்போடு அவன் பேசுகின்ற திறனையும் கண்ட பாரதியார், இவன் நமக்கு ஏற்றவனே என்று மனதில் மகிழ்ச்சி கொள்கின்றார். அவனிடம், “மிகுதியான சொற்களைச் சொல்லி பெருமைகள் பல பேசுகின்றாய். நீ விரும்பும் கூலி என்ன?” என்று வினவுகின்றார். அவனோ, “ஐயனே! நான் ஒற்றை ஆள். எனக்கு மனைவி மக்கள் இல்லை. நரை தோன்றாவிட்டாலும் எனக்கு வயது அதிகம். என்னை நீங்கள் அன்போடு ஆதரித்தால் போதும். உங்கள் அன்பு மட்டுமே பெரிது. காசும் பணமும் பொருளும் பெரிதல்ல” என்று கூறினான். அதைக் கேட்ட பாரதி, பழங்காலத்தைச் சேர்ந்த கள்ளம் கபடமற்ற மனிதன் இவன் என்று உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் அவனைத் தம் சேவகனாக ஏற்றுக் கொண்டார்.

கண்ணன் பாரதிக்குச் செய்த தொண்டுகள்

கண்ணனுடைய ஒவ்வொரு செயலாலும் பாரதி ஈர்க்கப்படுகின்றார். அவன் மீது நாளாக நாளாக அவருக்குப் பற்று அதிகமாகின்றது. அவனால் செய்கின்ற தொண்டை எண்ணி மகிழ்கின்றார். கண்ணன், 

  • கண்ணை இமைகள் காப்பதுபோல் என் குடும்பத்தைக் கருத்துடன் காக்கின்றான்.
  • முணுமுணுத்துச் சலித்துக் கொள்ளும் பழக்கம் அவனிடத்தில் இல்லை.
  • தெருவைக் கூட்டுகின்றான். வீட்டைச் சுத்தம் செய்கின்றான்.
  • பிற சேவகர்கள் செய்யும் குற்றங்களை அதட்டி அடக்குகின்றான்.
  • பிள்ளைகளுக்கு ஆசிரியனாகவும், செவிலித்தாயாகவும், மருத்துவனாகவும் விளங்கி நன்மைகள் பல புரிகின்றான்.
  • குறைவற்ற முறையில் பொருட்களைச் சேர்த்து பால், மோர் முதலியவற்றை வாங்குகின்றான்.
  • குடும்பத்தில் பெண்களைத் தாய் போல் தாங்குகின்றான்.
  • உற்று உதவும் நண்பனாகவும், நல்லது கூறும் அமைச்சனாகவும், அறிவு ஊட்டும் ஆசிரியனாகவும், பண்புடைத் தெய்வமாகவும் விளங்குகின்றான்.

ஆனால் பார்வைக்கு மட்டும் சேவகனாகவே காட்சியளிக்கின்றான் என்று கூறி மகிழ்கின்றார்.

கண்ணனால் பாரதி பெற்ற சிறப்புகள்

கண்ணனால் நன்மைகளை பல பெற்ற பாரதி, “எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்று கூறினான். இவனை நான் பெற என்ன தவம் செய்தேனோ” என்று வியப்பு கொள்கின்றார். “கண்ணன் என் இல்லத்தில் அடியடுத்து வைத்த நாள் முதலாக கவலை எனக்கு இல்லை. என்னுடைய எண்ணம், சிந்தனை எதுவும் அவன் பொறுப்பாக இருக்கிறது. செல்வம், பெருமை, அழகு, சிறப்பு, புகழ், கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே உருவான மெய்யறிவு, எப்போதும் ஒளி குறையாத நன்மைகள் முதலிய அனைத்தும் என் இல்லத்தில் நிறைந்து வருகின்றன. கண்ணனை நான் சேவகனாகக் கொண்டதால் ஞானக் கண் பெற்றவனாகவே என்னைக் கருதுகிறேன். அவனைச் சேவகனாகப் பெற முற்பிறப்பில் செய்த தவம், நல்வினை, தானம் முதலியனவே காரணங்களாக இருக்க வேண்டும்” என கண்ணனால் தாம் பெற்ற சிறப்புகளைக் கூறுகின்றார் பாரதியார்.

 

செவ்வாய், 5 நவம்பர், 2024

தொழில்நுட்ப வளர்ச்சி

 

தொழில்நுட்ப வளர்ச்சி

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எண்ணற்ற பயன்கள் விளைந்தன. தொழில் துறைகள் வளர்ச்சியடைந்தன. பல தொழிற்சாலைகள் உருவாயின. அறிவுப் பெருக்கத்தால் பல புதிய புதிய இயந்திரங்கள் தோன்றின. மின் அடுப்பு, சலவை இயந்திரம், குளிர்சாதனங்கள், பாத்திரம் தூய்மை செய்யும் இயந்திரம், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேளாண்மைத் துறை

இந்திய மக்களின் தலையாய தொழிலாக விளங்குவது வேளாண்மை. இன்று நவீன இயந்திரங்களின் மூலமாக வேளாண்மை செய்யப்படுகின்றது.  மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை கண்டறிய உணர்விகள் (சென்சார்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.  இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜிபிஎஸ் தொழில்நுட்பம், வானிலைக் கண்காணிப்பு, தன்னியமாக்கல், ட்ரோன்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்படுகின்றது. கனரகத் தொழில் துறை

அறிவியல் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்து வாகனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை உருவாக்க பல தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இன்று பேருந்து, மகிழுந்து, இரண்டு சக்கர வண்டிகள், இரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுவதைக் காண முடிகின்றது. நடந்து செல்வோர் குறைந்து, சாமானிய மக்களும் காரில் உலா வருவதைக் காண்கிறோம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இவை வெற்றி பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது. இதைப் போன்று, வாகனங்களின் உதிரிப் பாகங்களை உருவாக்க எண்ணற்ற தானியங்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகையால் ஒரு வாகனத்தை உருவாக்குவது மிக எளிதான செயலாயிற்று. ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய விமானங்கள், அதிவேக இரயில்கள், ஆயிரக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிச் செல்கின்ற கப்பல்கள் என போக்குவரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்ச நிலையை எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்கள்

இன்றைய உலகில் மிக தீவிரமாக உருப்பெற்று இயங்கிக் கொண்டிருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் உருவாகியுள்ளன. சென்னையில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா தமிழனை தொழில்நுட்பத் துறையில் உயர்த்தியது. ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதில் கடிதப் போக்குவரத்து தொடங்கி இன்று திறன் பேசி மூலமாக உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நாம் உரையாட முடிகின்றது. கணினி தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை நவீனமயமாகிவிட்டது. நாளுக்குநாள் புதிது புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்கள் மனிதனின் அன்றாட வேலையை மிக எளிதாக்குகின்றன. கணினியும், திறன் பேசியும் இல்லாமல் இனி உலகம் இயங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வித்துறை

பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் நிலை மாறி, வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது. விரும்புகின்ற நூல்களை உடனுக்குடன் வலைதளத்தில் படிக்க முடிகின்றது. பாடம் தொடர்பான ஐயங்களை வலைதளம் மூலமாகத் தீர்த்துக் கொள்வதும், பாடக் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து அறிவைப் பெருக்கிக் கொள்வதும் மிக எளிதாகி விட்டன. வலைதளங்கள், வலையொளிகள், வலைப்பூக்கள், காணொளிகள், இணைய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி கற்றலையும், கற்பித்தலையும் எளிதாக்கியுள்ளன.

மருத்துவத் துறை

இறைவனுக்கு அடுத்து மக்கள் நம்பிக்கைக் கொள்கின்ற இடம் மருத்துவமனை. மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால், நோய்கள் தடுக்கப்படுகின்றன. கடும் நோய்கள் களையப்படுகின்றன. உயிர்கள் காக்கப்படுகின்றன. இறப்பு விகிதம் குறைகின்றன. எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் முதலிய தொழில்நுட்பங்களால் உடலுக்குள் விளைகின்ற மாற்றங்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் செய்யப்படுகின்றது. லேசர் கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சைகள் கத்தியின்றி இரத்தமின்றி நடத்தப்படுகின்றன. புதிய மாத்திரைகளின் கண்டுபிடிப்புகள் நோய்களை விரட்டுகின்றன. உடல் உறுப்புகளை இழந்தாலும், செயற்கை உடல் உறுப்புகளால் மனிதன் நிம்மதியாக நடமாட முடிகின்றது.

முடிவுரை

இன்னும் இது போன்ற பல துறைகளில் தொழில்நுட்பங்கள் தோன்றி, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளால் பல நன்மைகள் ஒரு புறம் இருப்பினும், சில தீமைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் மக்களின் மிகப் பெரும் தேவைகளுள் ஒன்றாகி விட்டன. இனி வரும் காலங்களில் மனிதனின் அறிவாற்றலால் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.


திங்கள், 4 நவம்பர், 2024

நிறுத்தற்குறிகள்

 

நிறுத்தற்குறிகள்

பேசுகின்றபோது சில சொற்களுக்குப் பின் இடைவெளி விடுதல், வேறு சில இடங்களில் அதிக இடைவெளி விடுதல், சொற்களையும் தொடர்களையும் ஏற்றஇறக்கத்தோடு ஒலித்தல் போன்ற முறைகளால் செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எழுதும்போது பேச்சில் பயன்படுத்தும் மேற்கூறிய முறைகளைப் போன்று கால்புள்ளி [,], முற்றுப்புள்ளி [.], உணர்ச்சிக்குறி [!], கேள்விக்குறி [?] போன்ற குறிகளைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் நிறுத்தக்குறிகள்’ என்று கூறப்படுகின்றன. அவை பின்வருமாறு.

1.கால்புள்ளி (,)

2.அரைப்புள்ளி (;)

3.முக்கால்புள்ளி (:)

4.முற்றுப்புள்ளி (.)

5.முப்புள்ளி(...)

6. கேள்விக்குறி (?)

7. உணர்ச்சிக்குறி (!)

8. இரட்டை மேற்கோள்குறி (“ “)

9.ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)

10. தனி மேற்கோள்குறி ( ‘ )

11. மேற்படிக்குறி (“)

12. பிறை அடைப்பு ( )

13. சதுர அடைப்பு [ ]

14. இணைப்புக்கோடு (வு)

15. இணைப்புச் சிறுகோடு (-)

16. சாய்கோடு (/)

17. அடிக்கோடு (_)

18. உடுக்குறி (*)

காற்புள்ளி

பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
 சான்று - ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.

விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - ஆருயிர்த் தந்தையே, வணக்கம்.

வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கம் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.

 இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.

சான்று மேலோர், கீழோர், அரசன் என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.

ஆனால், ஆயின், ஆகையால், எனவே போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி இட வேண்டும்.
சான்று - கந்தன் மிக நல்லவன்; ஆனால், அவன் படிப்பில் குறைந்தவன்.

அரைப்புள்ளி

பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
சான்று - கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள்மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.

 முக்காற் புள்ளி

சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

முற்றுப்புள்ளி

சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

சான்று - அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.

வினாக்குறி

வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

சான்று – திருக்குறளை இயற்றியவர் யார்?

உணர்ச்சிக்குறி

மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - போட்டியில் எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)

இடையீட்டுக் குறி     (      )   ]

ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
சான்று - பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

 இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும் போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

 ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘, , உ’  –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

 

நன்றி

https://thamizhkalanchiyam360.blogspot.com/2021/10/50-kalaichol-in-tamil.html

https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=6