வியாழன், 13 பிப்ரவரி, 2025

கண்ணன் என் சேவகன்

 

பாரதியார்

கண்ணன் என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:

வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;

'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்

பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;

ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;

எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;

சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;

மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;

சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;

காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்

சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே

சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;

கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!

ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்

என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்

ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்.

கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்

ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,

மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;

கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;

நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்

ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள

காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.

பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே

கண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,

நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்

பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ..

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்

வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;

தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;

மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்

ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்

பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து

நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,

எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ...

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்

எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்

செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,

கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ...

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்

ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!

கண்ணனை நான்ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்!

கண்ணன் எனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

பாடல் விளக்கம்

கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பில் அமைந்த இப்பாடல் இறைவனுக்கும், மனித உயிருக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்கும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது.

சேவகரால் பாரதி பட்ட துன்பங்கள்

சேவகர்கள் சிறிய செயலைச் செய்தாலும் அதிகமான கூலியைக் கேட்பார்கள். நாம் முன்பு அவர்களுக்குக் கொடுத்ததை எல்லாம் மறந்து போவார்கள். நம் வீட்டில் வேலை மிகுதியாக இருக்கும் என்று தெரிந்தால் அன்றைக்கு வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டிலேயே தங்கிவிடுவர். மறுநாள் அவர்களிடம் ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை என்று கேட்டால், பானையில் இருந்த தேள் பல்லால் கடித்து விட்டது என்றும், வீட்டில் மனைவி மேல் பூதம் வந்த்து என்றும், பாட்டி இறந்த பன்னிரண்டாம் நாள் என்றும் ஏதாவது பொய்களைச் சொல்வர். நாம் ஒன்றைச் செய்யச் சொன்னால் வேறு ஒன்றைச் செய்வர். நமக்கு வேண்டாதவர்களோடு தனியிடத்தில் மறைவாகப் போய் பேசுவர். நம் வீட்டுக்குள் இருக்க வேண்டிய மறைவான செய்திகளைப் பலரும் அறியச் சொல்லி விடுவர். எள் முதலிய சிறு பொருள் வீட்டில் இல்லை என்றால், அவ் இல்லாமையை எல்லோர்க்கும் வெளிப்படுத்துவர். இவ்வாறு சேவகர்களால் படுகின்ற துன்பங்கள் பல உண்டு. எனினும், அவர்கள் இல்லை என்றால் நமக்கு வேலைகள் நடப்பதில்லை என்று பாரதி சேவகரால் பட்ட துன்பங்களை எடுத்துக் கூறுகின்றார்.

கண்ணனுக்கும் பாரதிக்கும் நடைபெற்ற உரையாடல்

வேலைக்காரர்களால் பாரதி துன்பம் மிகுந்து வருந்தும்போது, எங்கிருந்தோ வந்த ஒருவன், “ஐயா, நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன். மாடு கன்றுகள் மேய்ப்பேன். பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். வீட்டைப் பெருக்கி விளக்கேற்றுவேன். நீங்கள் சொன்ன வேலைகளை அப்படியே செய்வேன். துணிமணிகளைப் பாதுகாப்பேன். குழந்தைகளுக்கு இசையும் நடனமும் நிகழ்த்தி அவர்களை அழாதபடி பார்த்துக் கொள்வேன். என் உடல் வருத்தத்தைப் பார்க்காமல் இரவும் பகலும் காட்டு வழியிலும், திருடர் கூட்டத்து நடுவிலும் தங்களுக்குத் துணையாக வருவேன். தங்களுக்கு ஒரு துன்பமும் வராதபடி பார்த்துக் கொள்வேன். நான் கல்வி கற்காதவன். காட்டு மனிதன் என்றாலும் சிலம்பம், குத்துச் சண்டை, மற்போர் ஆகியவற்றைக் கற்றிருக்கிறேன். உங்களுக்குச் சற்றும் துரோகம் செய்ய மாட்டேன்” என்று பலவாறு கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட பாரதி அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று வினவியபோது, அவன், “எனக்குப் பெயர் என ஒன்று தனியே இல்லை. ஆயினும் ஊரில் உள்ளோர் என்னைக் கண்ணன் என்று அழைப்பர்” என்று கூறினான்.

அவனுடைய வலிமை மிக்க உடலையும், அவன் கண்ணில் தோன்றிய நல்ல குணத்தையும், அன்போடு அவன் பேசுகின்ற திறனையும் கண்ட பாரதியார், இவன் நமக்கு ஏற்றவனே என்று மனதில் மகிழ்ச்சி கொள்கின்றார். அவனிடம், “மிகுதியான சொற்களைச் சொல்லி பெருமைகள் பல பேசுகின்றாய். நீ விரும்பும் கூலி என்ன?” என்று வினவுகின்றார். அவனோ, “ஐயனே! நான் ஒற்றை ஆள். எனக்கு மனைவி மக்கள் இல்லை. நரை தோன்றாவிட்டாலும் எனக்கு வயது அதிகம். என்னை நீங்கள் அன்போடு ஆதரித்தால் போதும். உங்கள் அன்பு மட்டுமே பெரிது. காசும் பணமும் பொருளும் பெரிதல்ல” என்று கூறினான். அதைக் கேட்ட பாரதி, பழங்காலத்தைச் சேர்ந்த கள்ளம் கபடமற்ற மனிதன் இவன் என்று உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் அவனைத் தம் சேவகனாக ஏற்றுக் கொண்டார்.

கண்ணன் பாரதிக்குச் செய்த தொண்டுகள்

கண்ணனுடைய ஒவ்வொரு செயலாலும் பாரதி ஈர்க்கப்படுகின்றார். அவன் மீது நாளாக நாளாக அவருக்குப் பற்று அதிகமாகின்றது. அவனால் செய்கின்ற தொண்டை எண்ணி மகிழ்கின்றார். கண்ணன், 

  • கண்ணை இமைகள் காப்பதுபோல் என் குடும்பத்தைக் கருத்துடன் காக்கின்றான்.
  • முணுமுணுத்துச் சலித்துக் கொள்ளும் பழக்கம் அவனிடத்தில் இல்லை.
  • தெருவைக் கூட்டுகின்றான். வீட்டைச் சுத்தம் செய்கின்றான்.
  • பிற சேவகர்கள் செய்யும் குற்றங்களை அதட்டி அடக்குகின்றான்.
  • பிள்ளைகளுக்கு ஆசிரியனாகவும், செவிலித்தாயாகவும், மருத்துவனாகவும் விளங்கி நன்மைகள் பல புரிகின்றான்.
  • குறைவற்ற முறையில் பொருட்களைச் சேர்த்து பால், மோர் முதலியவற்றை வாங்குகின்றான்.
  • குடும்பத்தில் பெண்களைத் தாய் போல் தாங்குகின்றான்.
  • உற்று உதவும் நண்பனாகவும், நல்லது கூறும் அமைச்சனாகவும், அறிவு ஊட்டும் ஆசிரியனாகவும், பண்புடைத் தெய்வமாகவும் விளங்குகின்றான்.

ஆனால் பார்வைக்கு மட்டும் சேவகனாகவே காட்சியளிக்கின்றான் என்று கூறி மகிழ்கின்றார்.

கண்ணனால் பாரதி பெற்ற சிறப்புகள்

கண்ணனால் நன்மைகளை பல பெற்ற பாரதி, “எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்று கூறினான். இவனை நான் பெற என்ன தவம் செய்தேனோ” என்று வியப்பு கொள்கின்றார். “கண்ணன் என் இல்லத்தில் அடியடுத்து வைத்த நாள் முதலாக கவலை எனக்கு இல்லை. என்னுடைய எண்ணம், சிந்தனை எதுவும் அவன் பொறுப்பாக இருக்கிறது. செல்வம், பெருமை, அழகு, சிறப்பு, புகழ், கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே உருவான மெய்யறிவு, எப்போதும் ஒளி குறையாத நன்மைகள் முதலிய அனைத்தும் என் இல்லத்தில் நிறைந்து வருகின்றன. கண்ணனை நான் சேவகனாகக் கொண்டதால் ஞானக் கண் பெற்றவனாகவே என்னைக் கருதுகிறேன். அவனைச் சேவகனாகப் பெற முற்பிறப்பில் செய்த தவம், நல்வினை, தானம் முதலியனவே காரணங்களாக இருக்க வேண்டும்” என கண்ணனால் தாம் பெற்ற சிறப்புகளைக் கூறுகின்றார் பாரதியார்.