ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

 

பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம்

தமிழின் தொன்மைக்கும், தமிழரின் மேன்மைக்கும் சான்றாக விளங்குவது தொல்காப்பியம். ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல்கள் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்திருக்க, வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியது தொல்காப்பியம். இதை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவர் பாயிரம் பாடியுள்ளார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு.

 

எழுத்ததிகாரம்

சொல்லதிகாரம்

பொருளதிகாரம்

1

நூல் மரபு

கிளவியாக்கம்

அகத்திணையியல்

2

மொழிமரபு

வேற்றுமையியல்

புறத்திணையியல்

3

பிறப்பியல்

வேற்றுமை மயங்கியல்

களவியல்

4

புணரியல்

விளி மரபு

கற்பியல்

5

தொகை மரபு

பெயரியல்

பொருளியல்

6

உருபியல்

வினையியல்

செய்யுளியல்

7

உயிர் மயங்கியல்

இடையியல்

உவமவியல்

8

புள்ளி மயங்கியல்

உரியியல்

மெய்ப்பாட்டியல்

9

குற்றியலுகரப் புணரியல்

எச்சவியல்

மரபியல்

 தொல்காப்பியர் – குறிப்பு

          தொன்மை வாய்ந்த காப்பியக் குடியில் தோன்றியமையால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்று இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். இவர் அகத்தியரின் மாணவர். அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூலை முதன்மையாகக் கொண்டே தொல்காப்பியத்தை இயற்றினார் என்பதை அவருடைய தொல்காப்பிய நூற்பாக்கள் சான்று கூறுகின்றன. இவர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன எனினும், கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்ற கருத்துப் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இறையனார் களவியல் உரை

தமிழர்களின் அக வாழ்க்கையைப் பற்றிய இலக்கணநூல். இறையனார் அகப்பொருள் என்றும் கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுந்த நூல். இதனை இயற்றியவர் நக்கீரர். காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு.

நம்பியகப் பொருள்

இந்நூலை இயற்றியவர் நாற்கவிராசநம்பி. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். புளியங்குடியில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்தில் காணப்படும் அகப்பொருள் கருத்துகளைக் காலத்திற்குப் பொருந்திய வகையில் இந்நூல் விரிவாக விளக்குகின்றது. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை என்றும் நூலின் 400 பாடல்களும் நம்பியகப் பொருளின் சான்று பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்பர். இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல் கற்பியல், ஒழிபியல் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.

புறப்பொருள் வெண்பா மாலை

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஐயனாரிதனார் என்பரால் இயற்றப்பட்டது. புறப்பொருளைப் பற்றிக் கூறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை பெருந்திணை  ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. 19 சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையும் ஈரடி நூற்பா ஒன்றால் விளக்கப்படுகிறது. இதனை இதன் உரையாசிரியர் கொளு என்று குறிப்பிடுகிறார். இந்நூலில் 342 கொளுக்கள் உள்ளன.

நன்னூல்

நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இருபெரும் பிரிவுகளை உடையது. ஒவ்வோர் அதிகாரமும் ஐந்து இயல்களைப் பெற்றுள்ளன. 462 நூற்பாக்களை உடையது. இந்நூலுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவர் மயிலைநாதர். சிவஞான முனிவர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர் ஆகியோரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.

எழுத்ததிகாரம் – இயல்கள்

சொல்லதிகாரம் - இயல்கள்

எழுத்தியல்

பெயரியல்

பதவியல்

வினையியல்

உயிரீற்றுப் புணரியல்

பொதுவியல்

மெய்யீற்றுப் புணரியல்

இடையியல்

உருபு புணரியல்

உரியியல்

தண்டியலங்காரம்

    தண்டி என்பவர் வடமாழியில் எழுதிய காவ்யதர்ஸம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பே தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் ஆகும். இது அணி இலக்கணம் பற்றியது. 125 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. இந்நூலின் ஆசிரியர் காஞ்சிபுரத்தில் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியில் வாழ்ந்தவர். இந்நூலின் உரையாசிரியர் குணசாகரர். ஐந்திலக்கணங்களுள் யாப்பிலக்கணம் பற்றி கூறுகின்றது. காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம். “காரிகைக் கற்றுக் கவி பாடுவதைவிட பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது இந்நூலுக்குக் கூறப்படும் பழமொழி ஆகும்.

 

புதன், 11 அக்டோபர், 2023

சமயக் காப்பியங்கள்

சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர். அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார். இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்

4.இயேசு காவியம்

இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப் படைத்தார் என்பர். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறித்துவ இறையியல் அறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய இக்காவியத்தை இயற்றினார். 1982ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் வெளியிடப்பட்டபோது, அன்றைய தமிழக முதல்வர் திரு எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது.

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.  சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 

  ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம் முதலான காப்பியங்களையும், ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை முதலான சிறுகதைகளையும், அரங்கமும் அந்தரங்கமும், கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி முதலான உரைநடை நூல்களையும் இயற்றியவர். இவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற இந்து சமய நூல் மிகவும் புகழ்ப் பெற்றது.

 5.இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

புலவர் குழந்தை

இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார். 

 

 

 

 

 


சனி, 7 அக்டோபர், 2023

தீக்குச்சி

 

 தீக்குச்சி

கவிஞர் அப்துல் ரகுமான்

 

தீக்குச்சி   

விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 

கீழே எறியப்பட்ட 

தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய்?”

என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட

ஏற்றி வைத்தது

உயர்ந்ததல்லவா என்றான்.

அவன் மேலும் சொன்னான்

தீக்குச்சிதான் பிரசவிக்கிறது

விளக்கோ வெறும் காகிதம்!

தீக்குச்சி பிச்சை போடுகிறது

விளக்கோ வெறும் பிச்சைப் பாத்திரம்

தீக்குச்சி

ஒரே வார்த்தையில் பேசிவிடுகின்றது

விளக்கோ வளவளக்கிறது!

விளக்கம்

தீக்குச்சி விளக்கை ஏற்றியது. அனைவரும் தீபத்தை வணங்கினர். பித்தன் மட்டும் தீபத்தை ஏற்றுவதற்கு மூலகாரணமாகிய தீக்குச்சியை வணங்கினான். தீபத்தை வணங்குவதை விட்டு தீக்குச்சியை ஏன் வணங்கினாய் என்று கேட்டதற்கு, “ஏற்றப்பட்டதை விட ஏற்றியது உயர்வானது” என்று பித்தன் பதில் கூறுகின்றான். மேலும், “தீக்குச்சி நெருப்பை உருவாக்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் நெருப்பைப் பிச்சையிடுகின்றது. விளக்கு நெருப்பைப் பெறுகின்ற பிச்சைப் பாத்திரமாகின்றது. தீக்குச்சி சில நிமிடங்கள் வாழ்ந்து தன் ஒளி என்னும் மொழியால் பேசி அளவாகப் பேசுகின்றது. விளக்கோ தன் அறியாமையால், அரைகுறை அறிவால் பேசிக்கொண்டே நேரத்தை வீணடிக்கின்றது” என்று கூறுகின்றான்.

    இக்கவிதை பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்பவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைகின்றது.