வியாழன், 4 ஜனவரி, 2024

கலிங்கத்துப் பரணி

 

கலிங்கத்துப் பரணி

பாடல் எண் 1

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்

பருந்தினமுங் கழுகினமும் தாமே உண்ணப்

பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். (478)

விளக்கம்

விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட மேன்மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அதுபோல பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள், தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருப்பதைக் காணுங்கள்.

பாடல் எண் 2

சாம் அளவும் பிறர்க்கு உதவா தவரை நச்சிச்

சாருநர்போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி

போம் அளவும் அவர் அருகே இருந்து விட்டுப்

போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். (479)

விளக்கம்

பிறர்க்கு எதையும் கொடுத்து உதவாதவர் இறக்கும் வரையில் அவரைச் சுற்றிக் காத்திருந்து, அவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் அருகிலேயே இருந்து விட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்ற நரிக்கூட்டத்தைப் பாருங்கள்.

பாடல் எண் 3

மாமழைபோல் பொழிகின்ற தான வாரி

மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்

பூமழைபோல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு

பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின். (480)

விளக்கம்

யானைகள் உயிருடன் இருந்தவரை, அதன் மதநீரை உண்ட வண்டுகள் மதயானைகள் இறந்ததும், அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட்டு, வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பூ மழை பொழிய, அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண வண்டுகள் எல்லாம் மேலே பறந்து சென்று விட்டன. இது பொருள் உள்ளவரை ஒருவருடன் கூடி இருந்து விட்டு அவன் பொருள் எல்லாம் தீர்ந்தவுடன் அவனை விட்டு நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது. அதையும் காணுங்கள்.

பாடல் 4

சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து

தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்

காந்தருடன் கனல் அமளி தன்மேல் வைகும்

கற்புடைமாதரை த்தல் காண்மின் காண்மின்.(481)

விளக்கம்

போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன், மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கின்றன. இக்காட்சி உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது. அதையும் காணுங்கள்

பாடல் 5

ம் கணவருடன் தாமும் போக என்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

ம் கணவர் கிடந்த ம் எங்கே ன்று என்று

டாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.(482)

விளக்கம்

கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் தாமும் வீர சொர்க்கம் போக வேண்டும் என்று எண்ணி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தம் கைகளால் தேடவித் தேடுவர். தேடியும் காணா முடியாத நிலையில் பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே என்று  கேட்பதைக் காணுங்கள்.

 

 

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

முக்கூடற்பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை

 

முக்கூடற்பள்ளு

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

          போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே.

விளக்கம்

  • நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கு உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னலும், தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும், சூழ வளைத்து மின்னுகின்றன;
  • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றிக் காற்று அடிக்கின்றது;
  • கிணற்று நீரிலே இருக்கின்ற கசொறித்தவளைகள் கூப்பிடுகின்றன; சேற்றிலே வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாதபடி சேற்றினால் வளை வாயில்களை அடைக்கின்றன;
  • நீர்த்துளியை உண்ண ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் ஒரு மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றன;
  • உலகமெல்லாம் போற்றும் திருமாலாகிய அழகருக்குப் பெரியபபண்ணையைச் சேர்ந்த சேரியிலுள்ள பள்ளர் வகையினரெல்லாம் மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோம் வாருங்கள்!

 

 

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

தாய்மொழிப்படலம் - இராவண காவியம்

 

இராவண காவியம்

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம்

பாடல் 1

ஏடுகை யில்லார் இல்லை இயலிசை கல்லார் இல்லை

பாடுகை யில்லார் இல்லை பள்ளியோ செல்லா ரில்லை

ஆடுகை யில்லார் இல்லை அதன்பயன் கொள்ளார் இல்லை

நாடுகை யில்லார் இல்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

விளக்கம்

         இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.

பாடல் 2

தமிழெனது ருகட் பார்வை தமிழெனது உருவப் போர்வை

தமிழெனது உயிரின் காப்புத் தமிழெனது உளவே மாப்புத்

தமிழெனது உடைமைப் பெட்டி தமிழெனது உயா்வுப் பட்டி

தமிழெனது உரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.

விளக்கம்

அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.

பாடல் - 3

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்

பாடெலாந் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமிழ் அகத்து மாதோ.

விளக்கம்

அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.

பாடல் - 4

உண்டியை உண்ணார் பொன்பட் டுடையினை எண்ணார் கன்னற்

கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்

செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்

தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.

விளக்கம்

தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.

பாடல் - 5

பாடுபவ ருக்கும் உரை பண்ணுபவ ருக்கும்

ஏடதுவி ரித்துஉரை யிசைப்பவர் தமக்கும்

நாடுநக ரோடு அவர் நயப்பவை கொடுத்தும்

தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.

விளக்கம்

தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.