செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்

 

அற்புதத் திருவந்தாதி 

காரைக்காலம்மையார்

நூல் குறிப்பு

அற்புதத் திருவந்தாதி  என்னும் நூல் சைவத்திருமுறைகளில்  பதினோராம் திருமுறைத் தொகுதியில் அமைந்துள்ளது. இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான  காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறதுஇந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு. இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.  இவ் அந்தாதி சைவ நெறி குறித்தும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைக் குறித்தும் கூறுகின்றது. சிவபெருமானின் திருஉருவச் சிறப்பினையும், திருவருட் சிறப்பினையும், இறைவனின் குணத்தையும் விரிவாக இந்நூல் பாடுகிறது.

காரைக்காலம்மையார்

காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு நாள் தன் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டார். உணவு உண்ண வீட்டிற்கு வந்த பரமதத்தன் ஒரு மாம்பழத்தை உண்டுவிட்டு, இன்னொரு மாம்பழத்தினைக் கேட்க, செய்வதறியாது திகைத்த  அம்மையார் இறைவனிடம் வேண்டி ஒரு மாம்பழத்தினைப் பெற்றார்.  அந்நிகழ்வை நேரில் பார்த்த பரமதத்தன் இவர் இறைவன் அருள் பெற்றவர் என்பதை உணர்ந்து அம்மையாரை விட்டு இல்லற வாழ்விலிருந்து நீங்கினார். வேறு நாட்டிற்குச் சென்று மறு திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தையும் பெற்றார். இதனால் மனமுடைந்த அம்மையார் கணவனுக்காகத் தாங்கிய அழகு உருவம் நீங்கிப் பேய் வடிவத்தைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.  அதுமுதற்கொண்டு இறைவனைப் பாடுதல் ஒன்றேயே தன் தொழிலாகக் கொண்டார். முதன்முதலாக இசைத்தமிழால் இறைவனைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. அந்தாதி எனும் இலக்கண முறையை தமிழுக்கு அறிமுகம் செய்தார். அற்புதத் திருவந்தாதிதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

 

அற்புதத்திருவந்தாதி

பாடல் – 1

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்   

விளக்கம்

நஞ்சை உண்டதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானே! நான் இவ்வுலகில் பிறந்து மொழியினைப் பயின்று பேசத் தொடங்கிய காலம் முதல் உன்மீது கொண்ட அன்பினால் உன் திருவடிகளையே என் மனம், மொழி, மெய்களால் இடைவிடாது எண்ணிப் போற்றி வழிபடுகின்றேன். என் பிறவித் துன்பத்தைத் தீர்த்து எனக்கு எப்போது அருள் செய்வாய்!

பாடல் – 2

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு               

விளக்கம்

இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது.

பாடல் – 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் - பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

விளக்கம்

ஏழு பிறவியிலும் சிவபெருமான் ஒருவரையே வணங்குவோம். இன்பம் வந்தபோதிலும், துன்பம் வந்தபோதிலும் அவருக்கே அன்பு செய்வோம். கொடிபோல் விரிந்து படர்ந்த சடையின்மேல் பிறை சூடிய அந்த சிவபெருமானைத் தவிர வேறொருவருக்கும் ஆட்பட மாட்டோம்.

பாடல் – 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை

விளக்கம்

நீண்டு உயர்ந்த திருமேனி முழுவதும் செந்நிறமும், திருமிடறு மட்டும் நீல நிறம் பெற்று எங்களை ஆட்கொண்ட இறைவனே! உம் திருவடித் தொண்டு செய்யும் அடியவர்களாகிய நாங்கள் எங்கள் துன்பத்தை எடுத்துக் கூறி முறையிட்டால் அம்முறையீட்டை உம் திருச்செவியிற் கோளாமல் போனது ஏன்? எங்களை உன் உறவாக ஏற்றுக் கொள்ளாததும் ஏன்?

பாடல் – 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்.

விளக்கம்

எப்பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் இறைவனே எல்லா உயிர்களுக்கும் உடல், கருவி, உலகில் வாழ்வதற்கான நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்தளிக்கும் வல்லமை பெற்றவன். தன்னால் தோற்றம் பெற்ற யாவற்றையும் மீண்டும் ஒடுக்கி ஆட்சி செய்பவனும் அவ்விறைவனே! எமது தந்தையே என அன்பினால் வேண்டும் எங்கள்மேல் கொடிய துன்பங்கள் வந்து வருந்தும்போது, அவற்றை அறவே நீக்கி எங்களை வாழ்விப்பவனும், முழு முதல்வனாகிய சிவபெருமானே ஆவான்.

 

 

 

        

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக