ஞாயிறு, 23 மார்ச், 2025

காப்பியங்களில் அறிவியல்

 

காப்பியங்களில் அறிவியல்

வானியல்

பழந்தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் ஆராய்ந்தவர்கள். அவர்களின் அறிவியல் அறிவு அணுவில் தொடங்கி அண்டம் வரை விரிவடைந்துள்ளமை வியப்பிற்குரிய ஒன்று. சூரியன் மிகவும் தொலைவிலும், குறிப்பிட்ட அச்சில் சாய்ந்தும் இருப்பதால் சிதறடிக்கப்படும் நீலநிற ஒளி வேறு திசைக்குச் சென்று விடுகின்றது. கடலின் மேற்பரப்பில் உள்ள காற்றில் காணப்படும் உப்புத் துகள்களால் கடலுக்கு அண்மையில் சூரியன் மறையும்போது சிவப்பு நிறமாகத் தோன்றுகின்றது. சூரியத் தோற்றத்தின்போதும், மறைவின்போதும் சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாகச் செல்கிறது. அந்நேரத்தில் நீல நிறமானது சிதறியிருக்கின்ற காரணத்தினால் சிவப்பு மற்றும் அதைச் சார்ந்த நிறங்களான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் ஒளிரும். இதனை,

விண்ணிய துருவ வீதி மேனின்று மிழிந்து வெய்யோன்

கண்ணியல் விலங்கன் எற்றி கதிரென்னுங் கையினூன்றி

மண்ணியன் மரத்தின் சாகை நுதிபிடித் தவையம் விட்டுப்

பண்ணியல் பிறிதொன்றாகிப் பையவே மறைந்து போனான் (1026)

என்ற சூளாமணிப் பாடல் தெரிவிக்கின்றது. ஐம்பூங்களுக்கும் ஆற்றலைத் தருவது ஞாயிறே என்பதை உணர்ந்தே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்என்று பாடியுள்ளார். கதிரவன் ஓர் ஆண்டில் வடக்கேயும், தெற்கேயும் நகர்வதால் பருவகாலங்கள் தோன்றுகின்றன. கதிரவன் தெற்கு நோக்கிப் பயணம் செய்தால் மழை குறைந்து குளிர் பனிக்காலம் தொடங்கும். இதனை,

விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண்மழை

அரிதின் தோன்றும் அந்திரக் காலையும் (சிலப்பதிகாரம்)

என இளங்கோவடிகள் பாடியுள்ளார். சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்கின்ற காரணத்தால் பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்கள் தோன்றுகின்றன என்பதை,

மாசறு விசும்பின் வெய்யோன்

வடதிசை அயணம் முன்னி (சீவக.851)

என்று சீவக சிந்தாமணி பாடுகின்றது. மேலும், சூரிய கிரகணம் குறித்து, ஊழ்திசை பாம்பு சேர்ந்த ஒளிமிகு பகுதி ஒத்தான்(சீவக.பா.1138) என்றும், சந்திர கிரகணம் குறித்து, சேணிடை அரவு சேர்த்த திங்களை ஒத்தது அன்றே (சீவக.2461) என்றும் கூறுகின்றது. சூரியன் நிலவை மறைக்கும்போது தன் நிலையில் இருந்து மாறும் என்பதை,

வேனல் அம்கிழவனோடு வெங்கதிர் வேந்தன்

தான்நலம் திருகத் தன்மையின் குன்றி

எனச் சிலப்பதிகாரமும் பாடுகின்றது. காந்தருவதத்தையின் முகம் நிலவைப் போன்று இருந்தது என்றும், அவள் காதில் அணிந்திருந்த குண்டலம் நிலவுக்கு அருகில் இருக்கும் வியாழன் போன்று இருந்தது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலவுக்கு அருகே வியாழன் இருக்கின்ற அறிவியல் செய்தியைப் பண்டைத் தமிழ்ப்புலவர்கள் அறிந்துள்ளனர் என்பதை அறியலாம். இவற்றைக் காணும்போது தமிழர்கள் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையினின்று அறிவியலைத் தன் அனுபவத்தால் பெற்றுள்ளனர் என்பது தெரிகின்றது.

காப்பியங்களும் வானூர்தியும்

பறவைகள் இறகின் துணை கொண்டும், காற்றின் துணை கொண்டும் பறக்கின்றன என்பதை நன்குணர்ந்த காப்பியப் புலவர்கள், தங்கள் காப்பியங்களில் அதனை மயிற்பொறி, புட்பக விமானம், வானூர்தி என விவரித்துக் கூறியுள்ளனர். சிலப்பதிகார மதுரைக் காண்டத்தில் மலைக்குறவர் தங்கள் கண்ணெதிரே வானிலிருந்து வந்திறங்கிய விமானத்தில் கண்ணகி சென்ற காட்சியை,

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு

அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்

கோநகர் பிழைத்த கோவலன்தன்னொடு

வானஊர்தி ஏறினள் (சிலப்.23-196-199)

என்ற பாடல் தெரிவிக்கின்றது. வானூர்தி செய்யப்பட்ட முறையை,

பல கிழியும் பயினுந் துகில் நூலொடு

நல்லரக்கும் மெழுகும் நலஞ்சான்றன

வல்லனவும் அமைத் தாங்கெழு நாளிடைச்

செல்வதோர் மாமயில் செய்தனன்றே (சீவக.235)

என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. பல சீலைகள், வெள்ளிய நூல், நல்ல அரக்கு மற்றும் மெழுகால், ஏழு நாட்கள் வரை வானிலே பறந்து திரியக்கூடிய ஒரு வானூர்தியைத் தச்சன் செய்தான் என்பது அதன் விளக்கம் ஆகும். இதைப் போன்றே உதயணக் குமார காவியத்தில் உதயணன் தேரினைக் கொண்டு வானில் பறந்தான் என்றும், கம்பராமாயணத்தில் இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிச் சென்றபோது விமானத்தின் சக்கரச் சுவடுகள் தெரிவதைக் கண்டனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ அறிவியல்

கண்ணப்ப நாயனார் இறைவன் கண்ணில் குருதி வருவதைக் கண்டதும் தன் கண்ணைப் பெயர்த்து அப்பினார் என்பதை,

உள்ள நோய் தீர்ப்பது ஊனுக்கு

ஊன் உன்னும் உரைமுன் கண்டார்

என பெரிய புராணம் பாடுகின்றது. இதனை உறுப்பு மாற்ற சிகிச்சையாகக் கொள்ள முடிகின்றது. கம்பராமாயணத்தில், கட்டியை வைத்து அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று மருந்து வைத்தனர் என்பதை,

உடலடைத் தோன்றிற்று ஒன்றை

அறுத்து அதன் உதிரம் ஊற்றி

சுடலுறச் சுட்டு வேறோர்

மருந்தினால் துயரம் தீர்ப்பர் (கம்ப.7417)

என்ற பாடல் தெரிவிக்கின்றது. சிலப்பதிகாரத்தில், கீரந்தையின் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டதால் பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான் என்பதை,

நாடு விளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்

ஆடுமழைத் தடக்கை அறுத்து முறை செய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

என்பதால் அறியலாம். இதனால் உறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சையை அறிமுகம் செய்தவர்கள் தமிழரே என்பதில் பெருமை கொள்ளலாம்.

வேதியியல்

சிலப்பதிகாரத்தில் வேதியியல் கூறுகள் கொண்ட பாடல்கள் காணப்படுகின்றன. மணிகள் ஒளிவிடும் தன்மையினால் வேறு வேறு பெயர்களைப் பெற்றுள்ளன என்பதை,

ஒருமைத் தோற்றத்தை – வேறு வனப்பின்

இலங்குகதிர் வடூஉம் நலங்கெழு மணிகளும் (சிலம்.191-192)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

நம் முன்னோர்கள் அறிவியல் சிந்தனைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை மேற்குறித்த செய்திகள் மெய்ப்பிக்கின்றன. காப்பியப்புலவர்கள் தங்கள் விரிந்து பரந்த அறிவுத் திறனைக் காப்பியங்களில் வெளிப்படுத்தியுள்ளமை தமிழுக்குக் கிடைத்த பெருமையாகும்.

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

 

சிற்றிலக்கியங்களில் அறிவியல்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களுள் எவையேனும் ஒன்றையோ அல்லது இரண்டையோ பற்றிக் கூறும் இலக்கியம் சிற்றிலக்கியம் எனப் பெயர் பெற்றது. அச்சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழ், அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பெறுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவியல் செய்திகளைப் பின்வருமாறு காணலாம்.

வானியல் அறிவு

உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளர்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. காற்று வருகின்ற திசையையும், மண்ணின் தரத்தை அறிந்து பயிரிடும் முறையையும் நன்கு அறிந்தவர்கள் பள்ளர்கள்.

இன்று நாளை வெள்ளம்வரத் தென்றல் வீசுதுவிண்ணில்

இந்திரவில்லும் இட்டதுகார் வந்து விட்டது

குன்றிலே ஒழுங்காய்மஞ்சு சென்றிறங்குதுகொல்லம்

கொங்குமின்னல் எங்கும் மின்னி குதூகலிக்குது

அன்றில் தேரை தாலம் நீரில் சென்று அலறுதுசேல்வந்து

ஆர்ப்பு அரவம் செய்யுது

என்று திருப்புடை மருதூர்ப் பள்ளு பாடுகின்றது. இதைப் போன்றே, தென்மேற்குத் திசையிலும், தென் கிழக்குத் திசையிலும் மின்னல் வீசும், மரக்கொம்புகளைச் சுற்றி காற்று அடிக்கும். கிணற்றில் தவளைகள் கூச்சல் போடும். நண்டுகள் தம் வளைக்குள் மழைநீர் புகுந்துவிடாதபடி பாதுகாக்கும். மழை நீரைத் தேடி வானம்பாடிப் பறவைகள் பறக்கும் என்று மழை வருவதற்கான அறிகுறிகளை முக்கூடற்பள்ளு இலக்கியம் காட்டுகின்றது. இதனை,

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி

மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே

கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுதே

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே 

மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே

என்ற பாடல் காட்டுகின்றது. இதன் மூலம் அக்கால மக்கள் வானிலை குறித்த அறிவினை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

வேளாண்மை அறிவியல்

முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்ட நூல் ஆதலின், வேளாண் அறிவியல் குறித்த பல செய்திகளை இந்நூலில் காணலாம். கோதுமைச் சம்பா, ஆனைக் கொம்புச் சம்பா, மூங்கிற் சம்பா. காடைக் ழுத்தன், சித்திரக்காலி, சிறை மீட்டான், மணல்வாரி, கருஞ்சுரை, சீரகச் சம்பா, முத்து விளங்கி, மலைமுண்டன், நெடுமூக்கன் உள்ளிட்ட 150 வகையான நெல் வகைகளை முக்கூடற்பள்ளு காட்டுகின்றது.

அண்ட அறிவியல்

இதுபோன்றே அண்டங்கள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் இயல்பு உடையது என்பது அறிவியல் கண்ட உண்மை. அதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சியில்,

சாட்டி நிற்கும் அண்டமெலாம்

சாட்டையிலாப் பம்பரம்போல்

ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார்

என்று திரிகூட இராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். சாட்டைத் துணை ஏதும் இல்லாமல் அண்டங்களைப் பம்பரத்தைப் போல ஆட்டி வைப்பது இறைவனே என்பது இதன் பொருள்.

இயற்பியல்

ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்பது விஞ்ஞானி கலிலியோ அவர்கள் கண்டறிந்த உண்மை. இதனை,

மகரக்குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம்ஆட்டஅவ்வூசலில்

பாய்ந்திலது இவ்வூசல் எனநனிஆட்டுதோறும்

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்

திங்கள் சாய.. (அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்)

பாடுகின்றது. ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தமிழர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியது.

வளியியல்

காற்று குறித்த அறிவியலைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று தங்கும் இடம் உந்தி என வரையறுக்கின்றது தமிழ்விடுதூது. அக்காற்றே ஒலி எழுப்பி எழுத்துகளை உண்டாக்குகின்றது என்பதை,

புண்ணயஞ் சேர் உந்தி பலத்தே வளி தரித்துக்

கண்ணிய வாக்கங் கருப்பமாய் – நண்ணி

தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம்

உலைவிலா வண்ணத் துருவாய் (தமிழ்விடுதூது)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. எழுத்துகள் பிறப்பதையே அறிவியல் தன்மையோடு விளக்கிய பெருமை தமிழர்களுக்கு உண்டு என்பதை இதனால் அறிய முடிகின்றது. 

உயிரியல்

உயிர்களில் நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன எனப் பலவகைகள் உண்டு. தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிர்களின் மீது கவனம் செலுத்தியவர்கள் என்பதை,

தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவன நிற்பன

தனித்தனி பறப்பனவுமே

எனத் தில்லைச் சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் கூறுகின்றது.

உளவியல்

சிற்றிலக்கியங்கள் பெரும்பான்மையும் உளவியல் அடிப்படையிலே எழுதப்பட்ட இலக்கியங்களாக அமைகின்றமை சிறப்பு. தலைவன் தலைவிக்கு இடையே நிகழ்கின்ற காதல் நிகழ்வுகளை குற்றாலக் குறவஞ்சி தெற்றனெ விளக்குகின்றது. காதல் துன்பத்தால் தோன்றுகின்ற மனத்துன்பத்தை கோவை இலக்கியங்களும், உலா இலக்கியங்களும் காட்டுகின்றன. பெண்களின் உடல் தன்மையை அறிந்து ஏழு பருவங்களாக வகுத்து அவர்களின் வயதிற்கேற்ற உணர்வுகளை மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற உலா இலக்கியங்கள். தனக்குப் பிடித்த தலைவனையோ அல்லது இறைவனையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவதும் ஓர் உளவியலே.

சிற்றிலக்கியப் புலவர்கள் அறிவியல் பார்வையோடு இலக்கியங்களைப் படைத்துள்ளனர் என்பதை இதுகாறும் கண்ட செய்திகள் மெய்ப்பிக்கின்றன.