சனி, 28 செப்டம்பர், 2024

கட்டிடக்கலை

 

கட்டிடக்கலை

ஓர் இனத்தின் நாகரிகச் செழுமையினை எடுத்துக்கட்டும் சின்னங்களில் ஒன்று கட்டிடக்கலையாகும். தமிழக மக்களின் கட்டிடக் கலை ஆர்வமானது பல்வேறு காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்று உயர்ந்துள்ளது. அவை மக்களின் அழகியல் உணர்வினை வெளிப்படுத்துகின்றன.

சங்க காலத்தில்….

சங்க காலத்தில் தெய்வங்களுக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் மண், செங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் ஆனவை. “சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்என்று அவை குறிக்கப் பெறுகின்றன. இறைவன் வீற்றிருக்கும் இடத்திற்கும், மன்னன் வீற்றிருக்கும் இடத்திற்கும் கோயில் என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது. அக்கோயில்களைக் கட்டுகின்ற கலை வல்லுநர்கள்நூலறிப் புலவர்கள்எனப்பட்டனர்.

இந்நூலறிப் புலவர்கள் நாள், திசை ஆகியவற்றைக் குறித்து, அவற்றில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி அமைக்கப்பட்டன என்பதையும், அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் உயர்ந்தவையாக, அழகிய வேலைப்பாடு கொண்டவையாக, அவற்றின் மீது செஞ்சாந்து கொண்டு பூங்கொடிகள் எழுதப்பட்டதாக அமைந்திருந்தன என்பதையும் நெடுநல்வாடையின் வரிகள் காட்டுகின்றன.

சிலப்பதிகார காலத்தில் அரசனின் அரண்மனைச் சோதிடன், கட்டிடத்தொழில் நிபுணர் ஆகியோருடன் சிற்பக்கலை அறிஞரும் சென்று கண்ணகிக்குக் கோயில் அமைத்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் பொன்மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மண்டபம் மகத நாட்டு பொற்கொல்லராலும், அவந்தி நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுத் தச்சராலும், தமிழகத்துக் கட்டட வல்லுநராலும் அமைக்கப்பட்டது. மண்டபத்தூண்கள் பவளத்தால் இழைக்கப்பட்டன.

மதுரை மாநரகம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தது என்று பரிபாடல் கூறுகின்றது. கோவிலை நடுநாயகமாக வைத்து அதைச் சுற்றியுள்ள தெருக்கள் ஏறத்தாழ வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.

பல்லவர் காலத்தில்….

கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அழியாத கற்கோயிலைக் கடவுளுக்குக் கட்டினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயில்கள் அனைத்தும் உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிருந்தன. உயர்ந்த மேடைகளின் மீது சில கோயில்கள் கட்டப்பட்டன. அவை பெருங்கோயில்கள் எனப்பட்டன. சில கோயில்களில் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றும் அமைக்கப்பட்டன. திருச்சாய்க்காடு, மேலைக்கடம்பூர், திருவதிகை முதலிய கோயில்கள் இத்தகைய அமைப்புடன் காணப்படுகின்றன.

பல்லவர் காலத்தில் மிகுந்த சிறப்புடையது குடைவரைக்கோயில்கள் ஆகும். குடைவரைக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் அமைகின்றது. இங்கே அமைந்துள்ள ஒவ்வோர் இரதமும் ஒற்றைக் கற்கோயில் ஆகும். ஒவ்வொரு வகைக் கோவிலும் ஒருவகை விமான அமைப்புடையது. ஒரே பாறையில் குடைந்து கோயில்கள் அமைக்கும் சிற்ப மரபானது தமிகத்தில் முதன்முதலாக பல்லவ மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  திருச்சி, பல்லாவரம், செங்கற்பட்டுக்கு அண்மையில் உள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர், சீய மங்கலம், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் பல்லவர் கட்டியக் குகைக் கோயில்கள் காணப்படுகின்றன.

சோழர்காலத்தில்….

சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியைத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திரிபுவனக்கோயில் ஆகிய கோயில்கள் சோழர்காலக் கட்டிடக் கலையின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.

பாண்டியர் காலத்தில்….

பாண்டியர்கள் கோயில் பிரகாரங்களை அழகுபடுத்தினர். மதிற்சுவர்களில் கண்ணைக் கவரும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். சிதம்பரம் கிழக்குக் கோபுரமும், திருவானைக்காவில் உள்ள சுந்தரபாண்டியன் கோபுரமும் பாண்டியர் கலைக்குச் சான்று பகர்கின்றன.

விசயநகரத்தார் காலத்தில்…..

விசயநகர காலத்தில் புதிய மண்டபங்களும், துணைக்காயில்களும் எழுந்தன. இவர்கள் உருவாக்கியதில் கல்யாண மண்டபங்களும், ஆயிரங்கால் மண்டபங்களும் குறிப்பிடத்தக்கவை. வேலூர், காஞ்சி, திருவரங்கம், கடந்தை ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இவர்களுடைய கட்டிடக் கலையின் சிறப்பினை அறியலாம்.

நாயக்கர் காலத்தில்…..

மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, திருவாரூர், இராமேசுவரம், சிதம்பரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற நாயக்கர்கால கட்டிடங்கள் அவர்தம் கலை ஆர்வத்தைக் காட்டுகின்றன.

முடிவு

பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த கட்டிடக்கலை அரசியல், சமூகநிலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் தொய்வு நிலையை எட்டியது. தற்போது அந்தக் கலைச்சின்னங்களை அழியாமல் பார்த்துக் கொள்வேதே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

சேரர்கள்

 

சேரர்கள்

மூவேந்தர்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுபவர்கள். சேரல் மலை நாட்டை ஆண்டமையால் சேரர்கள் எனப்பட்டனர்.  இவர்கள் மேலைக் கடற்கரை வெளியை ஆண்டனர். இவர்களின் தலைநகரம் வஞ்சி மற்றும் கரூர். துறைமுகம் தொண்டி. வில் கொடியைத் தனது சின்னமாகப் பெற்றவர்கள்.

இலக்கியச் சான்றுகள்

சேரர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தும், பிற சங்க நூல்களும் கூறுகின்றன. மூவேந்தர்களுள் சேரர்களுக்குத் தனி இலக்கியப் பாடல்கள் உள்ளன. சேர நாட்டினைச் சேரலாதன் மரபினரும், பொறையர் மரபினரும் ஆண்டனர். பொறையர் ஆதிக்கம் சேர நாட்டில் வடக்கில் அதிகமாக இருந்தது. பொறையர் மரபினர் கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டனர். மலை நாட்டுப் பகுதியில் இவர்கள் வாழந்த்தால் வேட்டைத் தொழிலில் நாட்டமும், அம்பு எய்துவதில் தேர்ச்சியும் உடையவர்களாக விளங்கினர்.

உதியன் சேரலாதன்

சேரநாட்டை விரிவு படுத்திய பெருமை உதியன் சேரலாதன் என்ற மன்னனையே சாரும் முன்னோர் நினைவால் தனது படையினருக்குப் பெருஞ்சோறு அளித்தான் என்று அகநானூற்றுப்பாடல் 65 தெரிவிக்கின்றது. மாமூலனாரால் பாடப்பட்டவன். பதிற்றுப்பத்தின் முதல் பாட்டுடைத் தலைவனும் இவனேயாவான். இவன் காலத்தில் இறந்தவர் நினைவால் பெரும்பிடி, பெருஞ்சோறு போன்ற படையல்கள் நடத்தும் வழக்கம் தமிழகத்தில் மிகுதியாக இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

உதியன் சேரலாதனுக்குப்பின் அவருடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்டான். பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் தலைவனாக வைத்துப் பாடப்பட்டவன். இம்மன்னனை மாமூலனாரும் பரணரும் பாடியுள்ளனர். இமயம் வரை வென்றதால், மயத்தில் வில் கொடி பொறித்தவன் என்று பாராட்டப்படுகின்றார். வட இந்தியா வரை படை செலுத்தியவன் என்ற பொருளில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற பெயரைப் பெற்றான். யவனர்களுடன் போரிட்டு வென்றார். சோழர்களுடன் நடந்த போரில் இறந்துபட்டான். இவன் காலத்தில் தமிழகத்துக்கும் பிற நாடுகளுக்கும் தொடர்பு இருந்தன என்பதை இவருடைய போர்கள் விளக்குகின்ற.

பல்யானை செல்கெழுகுட்டுவன்

இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. பாலைக் கௌதமனார் இவரைப் பற்றி மூன்றாம் பத்தில் பாடியுள்ளார். மலை நாட்டுப் பகுதியில் 500 சிற்றூர்கள் அடங்கிய உம்பற்காட்டுப் பிரதேசத்தில் சேரர்களின் ஆதிக்கத்தைப் பரப்பினார்.

களங்காய் கண்ணிநார்முடிச் சேரல்

பல்யானை செல்கெழுகுட்டுவனுக்குப் பிறகு களங்காய் கண்ணி நார் முடிச்சேரல் என்ற மன்னன் சேர நாட்டை ஆண்டான். பூழி நாட்டின் மீது படையெடுத்து வாகைப் பெருந்துறையில் வெற்றி கண்டான். காப்பியாற்றுக் காப்பியனார் இவரைப் பாடியுள்ளார்.

சேரன்வெல்கெழு குட்டுவன்

மேற்குக் கடலில் கடற்கொள்ளையர்கள் வணிகர்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டுத் தீவுகளில் பதுங்கிக் கொண்டனர். அக்கடற் கொள்ளைக்கூட்டத்தினை அழித்த பெருமை இம் மன்னனுக்கு உண்டு. மோகூர் என்ற நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பழையன் என்னும் மன்னனை வெற்றி கொண்டான். இவர் காலத்தில் சேர நாட்டில் மக்கள் ஆடல் பாடல்களுக்குப் பெரிதும் மதிப்பளித்திருந்தனர். இவருடைய மகன் ஆட்டனத்தி, ஆடல் பாடல்களில் வல்லவன்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆட்டனத்தி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் சேர நாட்டை ஆண்டான். கலையார்வம் மிக்க இம்மன்னன் அன்பும், அறனும், அருளும் கொண்டவனாக விளங்கினான். வறுமையில் வாடும் மக்களின் கண்ணீரைக் காணப் பெறாதவனாக ஆட்சி செய்தான். காக்கைப்டிபாடினியாரும், நச்செள்ளையாரும் இவனைப் பாடியுள்ளனர்.

செல்வக்கடுங்கோ வாழியாதன்

பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தில் தலைவனாக விளங்கிய இவர் காலத்தில் தமிகத்தில் பௌத்த சமயம் பரவியுள்ளது. துறவிகளுக்குச் செல்வர்கள் படுக்கைள் செய்து கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது.

பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் இவன். இவன் அதியர் குலத்து அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டு வென்றான். அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் இவரைப் பாடியுள்ளனர்.

இளஞ்சேரல் இரும்பொறை

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அடுத்து இளஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். இம்மன்னன் பாண்டியர்கள், சோழர்கள், குறுநில மன்னர்களின் எதிர்ப்பைச் சந்தித்தான்.

மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுப்பத்தில் பத்தாவது பாடலின் தலைவன். தொண்டியில் சேரர்களின் ஆதிக்கத்தைச் செலுத்தியவன். இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டை  ஆண்டவன் தலையாலங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். பாண்டியருடன் போரிட்ட இவன் பாண்டியர் சிறையில் அடைக்கபட்டிருந்தான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். கல்வியில் விருப்பம் உடைய இம்மன்னன் புலவர்களை ஆதரித்தான்.

இவருக்குப்பின், குட்டுவன் கோதை, திருக்குட்டுவன், கோக்கோதை மார்பன் போன்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். சேரநாடு வலிமை இழந்தது.

சேரன் செங்குட்டுவன்

கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் சேரலாதன் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய மகனே சேரன் செங்குட்டுவன் ஆவான். சேர நாடு இவன் காலத்தில் மீண்டும் வலிமை பெற்று எழுந்தது. இம்மன்னனின் வரலாற்றைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வட இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வெற்றி கண்டவன் என்று கூறப்படுகின்றது. இவனுக்குப் பின் சேரர் ஆட்சி வலிமை குன்றியது.

-----------------------------------------------------------------------------------------------